Sunday, December 20, 2009

சங்க காலச் சோழர்கள்

இப்பதிவு நான் முன்னர் எழுதிய சோழர்கள் பதிவின் தொடர்ச்சியே ஆகும்

சங்ககாலச் சோழர்களின் காலம், கிறிஸ்து ஆண்டின் முதற்ச் சில நூற்றாண்டுகள். சங்ககாலச் சோழர்களைப் பற்றி அறிய சங்ககால நூல்கள் தான் வழி கோல்கின்றன. இக்காலச் சோழர்களைப் பற்றி அறிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிகக் குறைவே. சங்ககாலச் சோழர்களில் கரிகார்ச் சோழன் அளவிற்கு ஒப்பாரும் மிக்காரும் இலர். கரிகார்ச் சோழனின் காலத்தில் சோழர்களின் நிலப்பரப்பு தற்போதைய திருச்சி,தஞ்சை மாவட்டங்களையும் புதுக்கோட்டையின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. சோழர்கள் ராஜேந்திர சோழன் காலத்தில் உச்சத்தில் இருந்த போது இருந்த நிலப்பரப்பை விட இது மிகவும் சிறியதே. ராஜேந்திர சோழன் காலத்தில் தென்னகம் முழுவதும் சோழர்களின் ஆட்சியில் இருந்தது. மேலும் ஒரிசா, வங்காளம், பர்மா, மலேசியா,தாய்லாந்து, இந்தோனேசியா வரை சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.

சங்க காலத்தில் மிகப் புகழ் பெற்றிருந்த சோழர்கள் கரிகார்ச் சோழன் மற்றும் கோச்செங்கணன். கரிகார்ச் சோழன் என்பதற்கு கரிய காலை உடையவன் என்று பொருள். பிற்காலத்தில் வட மொழி ஆதிக்கம் ஏற்ப்பட்ட பிறகு இதற்க்கு கரி - யானை, காலன் - எமன் என்று யானைகளுக்கு எமனானவன் என்று பொருள் ஏற்ப்பட்டது. சங்ககாலத்தில் ஒரே நேரத்தில் பல சோழ அரசுகள் இருந்தன மேலும் அவற்றிற்கிடையே பகையும் இருந்தது.

சோழர்கள் தங்களை சூரியனின் வழி வந்தோர் என்று கூறிக் கொண்டனர். அதேபோல் கன்றை இழந்த தாய்ப் பசுவின் துயர் தீர்க்க தன் மகனை தேர் ஏற்றிக் கொன்ற மனு நீதிச் சோழன் மற்றும் புறாவுக்கு தன் கறி கொடுத்த சிபிச் சக்ரவர்த்தியின் வம்சத்தவர்கள் தாங்கள் என்று கூறிக் கொள்வதிலும் பெருமை கொண்டனர். இதில் மனு நீதிச் சோழன் தமிழகத்தில் வாழ்ந்த மன்னன் அல்லன். அவன் இலங்கையை ஆட்சி செய்தவன் என்பது ஒரு ஆச்சரியமான தகவல்.

கரிகார்ச் சோழன் மிகப் புகழ் பெற்றவன். அவன் வெண்ணி என்னும் இடத்தில் வைத்து சேரன், பாண்டியன் மற்றும் பதினோரு குறுநில மன்னர்களையும் தோற்கடித்தான். அதன் பிறகுதான் நிலையான ஆட்சி அமைந்தது.இவனுடைய காலத்திலேயே காவிரிப் பூம்பட்டினம் சிறப்புற்றது. கரிகார்ச் சோழனுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. கரிகார்ச் சோழன் நாட்டிலும் பல மாற்றங்களை ஏற்ப்படுத்தினான். அவன் காலத்தில் வாணிகம், தொழிர்த் துறை, விவசாயம் போன்றவை செழித்து விளங்கின.

ஒரே நேரத்தில் பல சோழ மன்னர்கள் இருந்தார்கள். புகார் எனும் காவிரிப் பூம்பட்டினத்தை தலைநகராகக் கொண்டு நலங்கிள்ளியும் உறையூரிலிருந்து நெடுங்கிள்ளியும் அரசாண்டனர். அவர்களுக்கிடையே பகையும் இருந்தது. இவர்களுக்கிடையே காரியாற்றில் நடந்த போரில் நெடுங்கிள்ளி கொல்லப்பட்டதிலிருந்து சோழர்களுக்கிடையேயான போர் முடிவிற்கு வந்தது எனலாம். நாம் கூட பள்ளி பருவத்தில் நலங்கிள்ளி நெடுங்கிள்ளிக்கிடையேயான போரைப் பற்றி படித்திருக்கிறோம்.

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி காலத்தில் வாழ்ந்த மற்றொரு முக்கியமான் மன்னன் கிள்ளிவளவன். இவன் சேரர்களின் தலைநகரான கரூரைக் கைப்பற்றினான்.
இந்தக் கரூரும் தற்பொழுது இருக்கும் கரூரும் ஒன்றா என்று எனக்குத் தெரியவில்லை .

இதே போல் நாம் பள்ளிப் பருவத்தில் படித்த மற்ற சில முக்கியமானவர்கள் கோப்பெருன்சோழரும் பிசிராந்தையாரும். பிசிராந்தையார் பாண்டிய நாட்டைச் சார்ந்தவர். அவர் பாண்டிய மன்னனுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு நெருக்கம் கொண்டவர். கோப்பெருன்சோழன் தன் பிள்ளைகளுக்கிடையே ஏற்ப்பட்ட வேறுபாடுகளைக் களைய முடியாமல் வடக்கிருந்து உயிர் துறக்க எண்ணினான். இதைப் பாண்டிய நாட்டில் கேள்விப்பட்ட பிசிராந்தையார் மன்னனுக்குத் துணையாக தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.


பின் குறிப்பு:
1. சங்க காலச் சோழர்களை பற்றி எழுதவே அதிகம் உள்ளது. இவர்களைப் பற்றி பின் வரும் பதிவுகளில் மேலும் அதிகம் எழுதுகிறேன்.
2. நாளை சோழர்கள் ஆண்ட நிலப் பகுதிகளின் வரை படத்தை அளிக்கிறேன்.
3. இப்புத்தகத்தில் சங்க காலச் சோழர்களைப் பற்றிய காலக் குறிப்புகள் தெளிவாக இல்லை. அதனால் யார் முன்னர் ஆண்டனர், யார் பின்னர் ஆண்டனர் போன்ற குறிப்புகள் அளிக்க முடியவில்லை.

Saturday, December 12, 2009

கனவு, மழை மற்றும் நான்

இன்று பகல் பொழுது ஒரு நல்ல தூக்கம். கனவில் முதலை வந்த ஒரு கெட்ட கனவு வந்தது. நாங்கள் ஒரு முதலைப் பண்ணைக்கு செல்வது போலவும் அவற்றுடன் போக்கு காட்டிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தபொழுது அம்முதலை எங்களுக்கு முன்னாடி சென்றவரைக் கடிப்பதாகவும் கனவு வந்தது. எனக்கு முதலை ஒரு பிடிக்காத உயிரினம். எனக்குத் தெரிந்து அதுதான் மனிதனுடன் பழகாத உயிரினம். அக்கனவின் முடிவில், அது ஒரு கனவு தான் என்ற புரிதல் ஏற்ப்படவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சி அருமையானது. கெட்ட கனவின் முடிவில் ஏற்ப்படும் மகிழ்ச்சி எத்தகையது? நல்லவேளை, இது வெறும் கனவு என்ற புரிதல் தரும் மகிழ்ச்சி மட்டும்தானா?. எனக்கு அதையும் தாண்டி ஏதோ ஒன்று இருப்பது போலேயே தோன்றுகிறது. ஒர் உண்மையான திகில் அனுபவத்தை எந்த ஒரு இழப்பும் இல்லாமல் அனுபவித்த உணர்வு தான் அது என்று தோன்றுகிறது.

கனவானது எத்தகையது? . சில நேரங்களில் கனவானது ஒரு நாளின் இயக்கத்தையே தீர்மானிக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. ஒரு நல்ல கனவு அந்த நாளையே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உள்ளதாக்கும் அதேபோல் கெட்ட கனவிற்கும் ஒரு நாளைத் தீர்மானிக்கும் சக்தி உண்டு.

கனவானது வித்யாசமானது. கனவில் வரும் நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதே நேரத்தில் அவை முரண்பட்டதாகவும் இருக்கும். இந்த கனவில் காசு கொடுக்காமல் கிரிக்கெட்டும் பார்த்தேன் ;-). இன்று உண்மையில் ஸ்ரீலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே T20 ஆட்டம் இருந்தது. இந்த கனவில் சேவக் ஸ்ரீலங்காவிற்க்காக விளையாடினார். நேஹரா இந்தியாவிற்காக விளையாடி 30 ஓட்டங்கள் பெற்றிருந்தார் என்பதிலிருந்து கனவு எந்த அளவு முரண்பட்டது என்பதை அறியலாம் :-). கனவுகள் சில சமயம் நடக்கப் போவதை முன் கூட்டியே அறிவுக்கும் சக்தி கொண்டது என்று சொல்வார்கள். கனவின் பலன்களைக் கூற கனவு சாஸ்திரமெல்லாம் உண்டு. என்னுடைய கனவிற்கும் நடக்கப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் ஆற்றல் உண்டா இல்லையா என்று தெரியவில்லை . ஆனால் தூங்கி எழுந்து பார்க்கும் பொழுது என் கனவில் கண்டபடி 4 விக்கெட்டுகள் உண்மையில் விழுந்திருந்தன. என்ன என் கனவில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆனால் உண்மையில் ஸ்ரீலங்கா 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது ;-). சரி விக்கெட்டுகள் என்ற அளவில் என் கனவு பலித்திருந்தது என்று சந்தோசப்பட்டுக் கொண்டேன்.

கனவுகள் முன் கூட்டியே அறிவிக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறதா இல்லையா என்பதோடு மட்டுமல்லாமல், பல செயல்களுக்கும் கண்டுபிடிப்பிற்கும் காரணமாயிருக்கின்றன. தையல் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் கிட்டத்தட்ட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டாராம். ஆனால் தைக்கும் ஊசிக்கு எங்கு துளை வைக்கவேன்றும் என்று தெரியவில்லையாம். ஒரு நாள் கனவில் அவரை ஆதிவாசிகள் சூழ்ந்து கொண்டு அவரை ஈட்டியால் குத்த வந்தார்களாம். அப்பொழுதுதான் அவர் கவனித்தாராம் அந்த ஈட்டிகளின் முனையில் துளை இருந்ததாம். அதிலிருந்துதான் தைய்யல் இயந்திரங்களின் ஊசியின் முனையில் துளை வைத்தாராம்.

சரி தூக்கம் முடிந்து எழுந்து வந்தால் சரியான மழை பிடித்துக் கொண்டது. அப்பொழுது ஏனோ s.ராமகிருஷ்ணன் எழுதிய "மழை என்ன செய்யும்" என்ற கட்டுரை நினைவிற்கு வந்தது. அவர் கட்டுரையில் இருந்தபடியே நல்ல மழை ஆனால் அது சிறிது நேரமே நீடித்தது. அவர் கூறியபடி நான் கதவைத் திறந்து மழையை வரவேற்க்கவில்லை. மழையில் நனையப் பிடிக்கும் தான் ஆனால் ஏனோ அன்று மனம் மழையை வரவேற்கவில்லை. குளிரவேற செய்தது.

twitter இல் சுருதி ஹாசனும் அஹமத்- ம் இந்த குளிரில் ஹாட் சாக்லேட் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று கூறியது நினைவிற்கு வந்தது. எனக்கும் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்றுதான் தோன்றியது. அதனால் pizza corner ஐ அழைத்து ஹாட் சாக்லேட் தருவிக்கலாம் என்று நினைத்தால், ஹாட் சாக்லேட் இல்லையாம். சரி அன்று இரவு pizza உடன் முடிந்தது .

இவ்வாறாக கனவில் ஆரம்பித்து மழையில் நனைந்து pizza வில் முடித்த மனதின் கோர்வையை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது.

Wednesday, December 9, 2009

விருப்பு வெறுப்புகள், ரசிப்புத் திறன் மூலம் ஒருவரை அடையாளப்படுத்துவது சரியா?

பொதுவாக ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குப் பிடித்தவர்கள் என்று பல பேர் இருப்பார்கள். அவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களாகவோ அல்லது தூரத்தில் இருக்கும் நட்சத்திரமாகவோ இருக்கலாம். தனிமனிதருக்கும், அவருக்கு பிடித்தமானவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை என்னவென்று சொல்வது, அரசியல் என்றால் தலைவர் - தொண்டர், கலைத்துறை என்றால் கலைஞன் - ரசிகன். சில நேரங்களில் பொதுவான வார்த்தையாக விசிறி. தொண்டன், ரசிகன் போன்ற வார்த்தைகள் அவற்றிற்க்கான இயல்பான அர்த்தத்தை இழந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. தற்காலங்களில் ஒரு தலைவருக்குத் தொண்டன் என்றோ அல்லாத ஒரு கலைஞனுக்குத் ரசிகன் என்று கூறினாலே அவன் ஏதோ, தவறான செயலை செய்பவனாகவோ அல்லது இன்னும் கூடுதலாகச் சொல்லப்போனால் ஒரு படிக்காத காட்டுமிராண்டி என்றோ எண்ணத் தோன்றும். தன்னை முகம் தெரியாத, தனக்குப் பழக்கமே இல்லாத மூன்றாம் மனிதரிடம் முழுவதுமாக ஒப்படைப்பதை பிறகு என்னவென்று சொல்லுவது?. எனக்கும் ஒருவருக்கு கண்மூடித்தனமான ரசிகனாகவோ அல்லது ஒரு தொண்டனாகவோ இருப்பதில் விருப்பம் இல்லை. ரசிகன் என்ற சொல்லை விட தொண்டன் என்ற சொல் எனக்கு மிகவும் அருவருப்பான சொல்லாகத் தோன்றுகிறது. அதற்க்கு இக்கால அரசியல் தலைவர்கள் காரணமாக இருக்கலாம்.

நான் ஒருதடவை அலுவலகத்தில் என் குழுவில் இருந்தவருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சுவாரசியமான விவாதம் நடந்தது. அப்பொழுது அவர் சொன்னார், ஒருவனின் ரசிக்கும் தன்மையை வைத்தோ அல்லது அவன் யாரை ரசிக்கிறான் என்பதை வைத்தோ அவனையோ அல்லது அவன் நடத்தையையோ தீர்மானிக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அதுவும் ஒரு வகைத் தீண்டாமைதான் என்றார். அப்படிப் பார்த்தால் பீட்சா சாப்பிடுபவன் உயர்ந்தவனாகவும் இட்லி சாப்பிடுபவன் தாழ்ந்தவனாகவும் ஆகும், அதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? என்றார். அவருக்கு நிச்சயமாக என்ன பதில் சொல்லுவது என்று எனக்குத் தெரிந்துருக்கவில்லை. ஒரு நாகரீக சமூகத்தில் ஒருவன், தான் ஒசாமா பின் லேடனுக்கு ரசிகன் என்று கூறினால் அவன் எப்படி பார்க்கப்படுவான் என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரே ஆளைப் பற்றி இருவரிடம், உங்களுக்கு ஏன் அவரைப் பிடித்திருக்கிறது என்று கேட்டால், நிச்சயமாக இருவரும் வெவ்வேறு காரணங்களைச் சொல்வார்கள். ஒருவரை, ஒவ்வொருவரும் பார்க்கும் கோணங்களும் மற்றும் அவரைப் பற்றி ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் தகவல்களும் வேறுபடும். மேலும் பார்க்கும் ஒவ்வொருவரின் குணாதீசியங்களும் அவரின் ரசிக்கும் திறனை மாற்றியமைக்கும் இயல்பு கொண்டவை. இத்தகைய காரணங்களாலே ஒருத்தருக்கு ஒருவர் மிகப் பிடித்தவராகவும் மற்றொருவருக்கு பிடிக்காதவராகவும் ஆகிவிடுவார்.


மற்றொரு முக்கியமான அம்சம் ஒரு தனிமனிதர் அல்லது ஒரு குழுமம் எந்த வகையில் முன்னிறுத்தப்படுகிறார்/கிறது என்பதைப் பொருத்தும் அமையும். எடுத்துக்காட்டாக வால்மீகி ராமாயணத்தில், ராவணன் மிகக் கொடூரவனாகவும், மிகக் கொடியவனாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பான். ஆனால் கம்ப ராமாயணத்தில், ராவணன் மிகச் சிறந்த சிவ பக்தனாகவும், கலைத்தாயின் தலைமகனாகவும், மிகச் சிறந்த ஆட்சியாளனாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பான். அவன் செய்த ஒரே பாவச் செயல் பிறன் மனை நோக்கியதுதான் என்று கம்ப ராமாயணம் வாதிடும். கம்ப ராமாயணத்தைப் படித்தவர்களுக்கு ராவணன் கொடூரமானவனாகத் தெரியமாட்டான். ஏன், தமிழிலே ராவண காவியம் என்று ராவணனைப் பற்றி ஒரு காவியமே உள்ளது .

ஒரு சிலருக்கு ஒருவரைப் ஏதோ ஒரு சில காரணத்திற்க்காகப் பிடித்துவிட்டால், பின் அவருடைய எந்த செயலும், ஏன் தவறான செயல்கள் கூட கண்ணுக்குத் தெரியாது, காதலில் இருப்பதைப் போல! அதனால்தான் வரலாற்றில் கொடியவர்களாக இருந்தவர்களுக்கு கூட உண்மையான காதலிகள் இருந்தார்கள்.

எனக்குத் தெரிந்து பல நேரங்களில் தீமையே நன்மையை விட பராக்கிரமசாலியாகவும, தந்திரம் மிகுந்ததாகவும் இருக்கும். தீமையே பெரும்பாலும் ரசிக்கும்படியாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். வில்லன்களே அதிக சக்தி உடையவர்களாக இருப்பார்கள். அதனாலேயே வில்லன்களுக்கும் ரசிகர்கள் அதிகம் உண்டு. ஹிட்லர் எனக்குத் தெரிந்து இதற்க்கு மிகச் சிறந்த உதாரணம். இரண்டாம் உலகப் போரின்போது சுற்றி இருக்கும் அனைத்து நாடுகளின் மீதும் போர் தொடுக்கும் தைரியமும் திறமையும் ஜெர்மனி கொண்டிருந்ததது. அக்காலங்களில் பொறியியல் உள்ளிட்ட பல துறைகளில் ஜெர்மனி மிகச் சிறந்து விளங்கியது. அதற்க்கு மிக முக்கியக் காரணம், ஹிட்லர்.

ஹிட்லர் மிகத் திறமைசாலி. அவர் ஒரு மிகச் சிறந்த தலைவராகவும் , தன் பேச்சால் ஜெர்மனி மக்களை கட்டிப் போடும் திறமையைக் கொண்டிருந்தார். ஆனால் இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் ஹிட்லரைப் பற்றி பேசுவது என்பதே மிகக் கொடிய குற்றம் செய்ததாகக் கருதப்பட்டது . முதலாம் உலகப் போரின்போது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் பெயரே மாற்றப்பட்டு அல்சேசன் என்று அழைக்கப்பட்டது. அந்த அளவிற்கு ஜெர்மனியின் மீதான வெறுப்பு இருந்தது. 1977 ஆம் ஆண்டுதான் திரும்பவும் ஜெர்மன் ஷெப்பர்ட் என்று பெயர் மாற்றப்பட்டது.

விருப்பு வெறுப்புகள் காலத்திற்கு காலம் , ஆளுக்கு ஆள் வேறுபடும். மேற்க்கூறிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயே அதற்க்கு ஒரு உதாரணம். உலகப் போரின் தாக்கம் வரை அந்நாய் அல்சேசன் என்று அழைக்கப்பட்டது. அதே நாய் உலகப் போர்களின் தாக்கம் முடிந்த பிறகு திரும்பவும் ஜெர்மன் ஷெப்பர்ட் என்று மாற்றப்பட்டு, உலகம் முழுவதும்
அதிகமாக விரும்பப்படும் நாயாக உள்ளது.

ஆக ஒருவர் மற்றொருவரின் மீது கொண்ட விருப்பு வெறுப்புகள் ,ரசிக்கும் தன்மை ஆகியவற்றை கொண்டு ஒருவரை அடையாளப்படுத்துவது
சரியா?

Saturday, December 5, 2009

ஒரு வழியாக ஷேக் ஹசினாவிற்கு நீதி கிடைத்தது

பங்கபந்து என்று அழைக்கப்படுபவர் பங்களாதேஷின் தந்தை முஜிபுர் ரஹ்மான். பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷின் விடுதலைக்கு போராடி இந்தியாவின் உதவியுடன் விடுதலைப் பெற்றுத் தந்தவர். இதற்குப் பின் பங்களாதேஷின் முதல் குடியரசுத் தலைவரானார். 1975 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் முஜிபுர் ரஹ்மானும் அவருடைய குடும்பத்தாரும் பங்களாதேஷின் ராணுவத்தைச் சேர்ந்தவர்களால் குடியரசுத் தலைவர் இல்லத்தில் வைத்தே படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையிலிருந்து வெளிநாட்டிலிருந்த அவருடைய இரு மகள்கள் மட்டுமே தப்பினர். அதற்குப் பின் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது மற்றும் முஜிபுர் ரஹ்மானின் படுகொலைக்கு காரணமானவர்களை தப்பிப்பதற்க்கும் வழிகோலியது . இதற்குப் பின் அவருடைய மகள்களில் ஒருவரான ஷேக் ஹசினா, வெளிநாட்டிலிருந்த படியே முஜிபுர் ரஹ்மானின் கட்சியான அவாமி லீகின் தலைவரானார். 1980 ஆம் ஆண்டு நாடு திரும்பி ராணுவத்துக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினார். 1996 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதம மந்திரி ஆனார். இதற்குப் பிறகே முஜிபுர் ரஹ்மானின் படுகொலைக்குக் காரணமானவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்கடுத்த தேர்தலில் எதிர்க் கட்சியைச் சேர்ந்த கலிதா ஜியா பிரதம மந்திரி ஆனார். முஜிபுர் ரஹ்மானின் படுகொலை வழக்கும் கிடப்பில் போடப்பட்டது. அதற்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தது. பின் 2008 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திரும்பவும் ஷேக் ஹசினா வெற்றி பெற்றார். அதற்குப் பிறகுதான் முஜிபுர் ரஹ்மானின் வழக்கு சூடு பிடித்தது. ஒரு வழியாக முஜிபுர் ரஹ்மான் படுகொலை மீதான வழக்கில் சென்ற நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இப்படுகொலைக்கு காரணமானவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. முஜிபுர் ரஹ்மான் படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படும் வரை ரத்தக் கரை படிந்த தன் வீட்டிற்கு ஷேக் ஹசினா வெள்ளை அடிக்கமாட்டேன் என்று சபதம் ஏற்றிருந்ததாகக் கூட நான் கேள்விப்பட்டேன். ஒரு வழியாக கிட்டத்தட்ட 34 வருட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பின் குறிப்பு :
ஷேக் ஹசினா பல நிலைகளில் தான் இந்தியாவிற்கு ஆதரவானவர் என்று நிரூபித்துள்ளார். அதுவே இப்பதிவு எழுதுவதற்கு ஒரு முக்கியக் காரணம்.

Wednesday, December 2, 2009

குடியேறிகள்

ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பையனை கபடி விளையாடக் கூப்பிட்டேன் . அவன் கபடினா என்ன? என்று கேட்டான். பிறகு அவனிடம் எப்படிச் சொல்லுவது இந்தியா கபடில தங்கப்பதக்கம்லாம் வாங்கிருக்குனு. சரி கிட்டினாவது என்னான்னு தெரியுமா என்றேன். அதற்க்கு அவன் கிரிக்கெட் பேட்டையும், பந்தையும் கொண்டு வந்தான். பரவாயில்ல கிட்டிக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தம் உண்டுன்னு ஓரளவுக்கு சமாதானம் அடைந்தேன். ஒரு நாள் தொலைக்காட்சி செய்தியில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பற்றிக் காட்டினார்கள். நான் பக்கத்து வீட்டுப் பையனிடம் எப்படி கொம்பு பிடித்து காளையை அடக்குகிறார்கள் பார் என்றேன். அதற்க்கு அவன் கொம்ப வச்சு பந்தல் தான் போடுவாங்க, மாடு எப்படி பிடிப்பாங்க என்றான் மாட்டுக் கொம்புக்கும், கழிக்கும் (கம்பு) வித்தியாசம் தெரியாத பையன் .

இது கூட பரவாயில்லை, எங்களின் கல்லூரிப் படிப்பின் மூன்றாம் ஆண்டு சுற்றுலா சென்றார்கள். சென்னை சென்ட்ரலிலிருந்து கோவா செல்வதாக ஏற்ப்பாடு. எங்கள் நண்பர்களில் ஒருவன் "சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எப்படிடா போகணும்னு கேட்டான் ". நம்புங்கள் அவன் 22 வருடமாக கோடம்பாக்கத்தில் பிறந்து வளர்ந்தவன் !

பொதுவாக மாநகரங்களில் வசிக்கும் பிள்ளைகளின் தேவைகள் அனைத்தும் அம்மாநகரத்திலேயே நிறைவேற்றப்பட்டு விடுவதால் அவர்களுக்கு பிற இடங்களைத் தேடி அலையவேண்டிய தேவை இல்லை. அதனால் மாநகர வாழ்க்கையைத் தவிர வேறொன்றும் தெரிவதுமில்லை. சென்னையில் வாழும் பல பேர்கள், தமிழ்நாடு முழுவதும் ஓடும் அனைத்துப் பேருந்துகளின் பெயரும் "பல்லவன்" தான் என்று நினைத்து கொண்டிருந்தார்கள். ஓவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊர்களில் புகழ் வாய்ந்த அரசர்களின் (சேரன், சோழன்,பாண்டியன் ...) பெயரில் பேருந்துகள் இயங்கின என்பதோ , பின்னர் ஜாதிக் கலவரங்களின் பொழுது எதிர் ஜாதிக்கார மன்னரின் பெயரைத் தாங்கிய பேருந்துகள் தாக்கப்பட்டன என்பதால் அனைத்துப் பேருந்துகளின் பெயர்களும் மாற்றப்பட்டு, அந்தந்த பேருந்துகள் இயங்கிய கோட்டங்களின் பெயரில் அழைக்கப்பட்டன என்பதோ தெரிந்திருக்கவில்லை.

பெரிய மாநகரங்களிலிருந்து சிறிய ஊர்களுக்குச் செல்வோருக்கு ஏற்ப்படும் ஆச்சரியங்கள் போலவே , புதிதாக மாநகரங்களுக்குச் செல்பவர்களுக்கும் (பெரும்பாலும் ஏமாற்றமே) ஏற்ப்படும். எனக்குத் தெரிந்து சென்னையைத் தவிர்த்து மற்ற ஊர்களிலெல்லாம் பேருந்துகளில் பயணச்சீட்டு பயணிகளைத் தேடி வரும். நம்புங்கள், அதிக பேருந்து வசதி இல்லாத ஊர்களிலெல்லாம், சின்னப் பசங்களும், ஆண்களும் பேருந்தின் மேல் (Top) ஏறிக்கொள்வார்கள். இங்கு stage போடுவதைப் போல, அங்கும் stage போட்டு நடத்துனர் பேருந்தின் மீது ஏறி பயணச்சீட்டுத் தருவார். ஆனால் இங்கு சென்னையிலோ காலியாக இருக்கும் பேருந்தில் கூட நாம்தான் சென்று பயணச்சீட்டு வாங்க வேண்டும். என்னை ரொம்ப சங்கடப்படுத்தும் இன்னொன்று, எங்கள் ஊரில் "நீங்கள் " விளையாடும் இடங்களிலெல்லாம் இங்கு வயது வித்யாசமின்றி "நீ " விளையாடுகிறது.

பொதுவாக எல்லா ஊர்களும் அவற்றிற்கே உரிய திருவிழாக்களைக் கொண்டிருக்கும். அந்த திருவிழாக்களின் பின்னே சரித்திரங்களும், பல புனைக் கதைகளும் பின்னப் பட்டிருக்கும். அந்த புனைக் கதைகள் உண்மையோ அல்லது பொய்யோ, யாருக்கும் தெரியாது. இருந்தாலும் அவற்றை பாட்டிமார்கள் சொல்லச் சொல்ல ஆனந்தமாக இருக்கும் .மதுரையின் சித்திரைத் திருவிழா மிகச் சிறப்பாக ஒன்று. அத்திருவிழவுக்கான கதைகளும் அருமையாக இருக்கும். சித்திரைத் திருவிழாக் காலம் முடிந்த பிறகு ஒரு குருவி "அக்காாாா அக்காாாா" என்று கத்தும். அதன் பெயரே அக்கா குருவி. இதற்க்கு ஒரு கதை சொல்லுவார்கள். திருவிழாக் கூட்டத்தில் இந்தக் குருவி தன்னுடைய அக்காவைத் தொலைத்துவிடுமாம். அதை தேடிக் கொண்டு அக்கா அக்கா என்று அலையுமாம். அடுத்து வரும் ஒரு திருவிழாவில்தான் அவைகள் ஒன்று சேருமாம். அதுவரை இப்படியேதான் கூவிக் கொண்டு அலையும் என்று கதை சொல்லுவார்கள். அப்பொழுதெல்லாம் திருப்பி கேட்கத் தோன்றவில்லை, ஏன் தங்கச்சிக் குருவி மட்டும் தான் "அக்கா அக்கா " என்று தேடுமா? ஏன் அக்கா குருவி "தங்கச்சி தங்கச்சி " என்று தேடாதா? என்று. இருந்தாலும் அந்த புனைக் கதைகள் சுவாரசியமாகத்தான் இருந்தன. மாநகரங்களில் வசித்த பிள்ளைகள் இப்படிப்பட்ட கதைகளைக் கேட்டிருப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்து சென்னையில் நடக்கும் திருவிழாவில் முக்கியமானது, மயிலையில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஊர்வலம். ஆனால் அது மதுரை சித்திரைத் திருவிழாப் போல் ஊரே கூடி கொண்டாடும் திருவிழா என்று கூற முடியாது.

மார்கழி மாதக் குளிரில் அதிகாலையில் எழுந்து படிப்பதென்பது சற்றுக் கடினம் தான், இருந்தாலும் அதனையும் சுவாரசியமாக்கியவை, வெகு தூரத்தில் உள்ள சிறு கோயிலிருந்து ஒலிக்கும் L.R.ஈஸ்வரியின் அம்மன் பாடல்களும், ஐய்யப்பன் பாடல்களும்தான். கஷ்டப்பட்டு அதிகாலை 4 மணியிலிருந்து 5 மணிவரைப் படித்த பின் பார்த்தால், தெருவே களை கட்டத் தொடங்கிவிடும் . ஓவ்வொரு வீட்டிலிருந்தும் பெரிய பெரிய கோலங்கள் போட ஆரம்பிப்பார்கள். நாங்களும், அலுவலகப் பணி முடித்து அசதியாகத் தூங்கிகொண்டிருக்கும் எங்கள் அம்மாவை எழுப்பி பெரிய கோலம் போடச் சொல்லுவோம். எங்கள் அம்மா சில நேரம் சிறிய கோலமாகப் போட்டுவிடுவார்கள். அப்பொழுதெல்லாம் நாங்கள் எங்கள் மாடி வீட்டு அக்காவிடம் தஞ்சம் அடைந்துவிடுவோம், எங்கள் வீட்டு வாசலில் பெரிய கோலம் போடச் சொல்லி. பின்னர் அவற்றிற்கு வர்ணப் பொடி கொண்டு வண்ணம் தீட்டுவோம். விடிந்தவுடன் சிறுவர்களுக்கிடையே யார் வீட்டு கோலம் பெரிது என்று பெரிய போட்டியே நடக்கும். ஆனால் சென்னையிலோ மார்கழிக் கோலங்கள் இரவில் ஆரம்பித்து நடுச்சாம நாய்களின் குரைப்புடன் முடிந்துவிடுகின்றன.


எனக்கு எப்பொழுதும், சென்னைத் தவிர மற்ற சிறு நகரங்களிலும், ஊர்களிலும் இருக்கும் வீடுகள் பெரிதாகவேத் தோன்றுகின்றன. அதற்க்குக் காரணம் மனமா? அல்லது (வாடகைப்)பணமா? என்று தெரியவில்லை. எனக்கு என்னவோ சென்னைக் குடிமக்கள், குருவிகள் கூட கூடு கட்டத் தயங்கும் குறைந்த சதுர அடி வீட்டில்தான் குடியிருப்பதாகத் தோன்றுகிறது.

இப்படி குடியேறிய ஊரைப் பற்றி குறைகள் கூறக் கூடாதுதான், இருந்தாலும் மழைக்காலத்தில் தண்ணீர் தீவுகள் தேடும் காலடித் தடங்கள் போல மனமானது, குடியேறிய ஊரின் ஓவ்வொரு நடத்தையிலும் சொந்த ஊரின் சாயலைத் தேடுகிறது.

Tuesday, December 1, 2009

Over Night இல் உலக வல்லரசு !

இந்தியப் பிரதமர், அரசு முறைப் பயணமாக அமெரிக்க சென்றிருந்தார்( அல்லது சென்றிருக்கிறார்). ஒபாமா, அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின் ஒரு வெளிநாட்டுத் தலைவரை அமெரிக்காவில் சந்திப்பது இதுவே முதல் முறை. ஒபாமாவும் சீனா உட்பட கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று விட்டு இப்பொழுதுதான் திரும்பியுள்ளார். அதனால் அவர் சீனாவுடன் தான் பேசிய விசயங்களை நமது பிரதமருடன் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இச்சந்திப்பின் போது அமெரிக்கா, இந்தியாவை ஒரு "World Power" ஆக அங்கீகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.இதன் மூலம் UN Security counsel - இல் இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்க பெரும் வாய்ப்பாக இருக்கும். அந்த நிரந்தர இடம் கிடைப்பது Veto power உடனா அல்லது Veto power இல்லாமலா என்பதை அடுத்து பார்த்துக் கொள்ளலாம் . அப்படி ஏதாவது அமெரிக்கா, இந்தியாவை அங்கீகரித்ததா? கடந்த 5, 6 நாட்களாக நான் இந்த உலகத்திலேயே இல்லை. ஒரே காய்ச்சல். அதனால் தயவு செய்து என்ன நடந்தது என்று கூறுங்கள். இந்தியா over night ல உலக வல்லரசாக ஆயிடுச்சா? யாராவது சொல்லுங்கப்பா :)