Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Monday, June 10, 2013

உயரம் தொட்ட சிகரம் !


File:Everest North Face toward Base Camp Tibet Luca Galuzzi 2006.jpg

1802 ஏப்ரலில் சில பிரிட்டிஷார் பரங்கி மலை மற்றும் பெரும்பாக்கம் குன்றின் உயரத்தை அளந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தெரியும் இது உலகின் உயரத்தை அளப்பதற்கான தொடக்கம் என்று.  Great Trigonometric Survey என்று அழைக்கப்பட்ட அந்த சர்வே உலகின் உயரமான சிகரங்களின் உயரத்தை துல்லியமாக அளப்பதற்காக தொடங்கப்பட்டது. இந்தக் குன்றுகளை அடிப்படையாக வைத்து அளக்கப்படும் அளவே baseline ஆகக் கொள்ளப்பட்டது . எனவே இதில் ஏற்படும் மிகச் சில மில்லிமீட்டர் பிழையும் உலகின் மிக உயரமான சிகரத்தின் உயரத்தை அளப்பதில் பல நூறு மீட்டர் பிழையை ஏற்படுத்திவிடும். ஏனவே அதில் மிக அதிக கவனம் கொள்ளப்பட்டது. இப்படியாக பிரிட்டிஷார் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒவ்வொரு குன்றுகளின் உயரத்தை அளந்து சென்று இமயமலையின் அடிவாரத்தை அடைந்தனர். அப்பொழுதே வருடம் 1830 கள் ஆகிவிட்டது. ஐந்து வருடங்களில் முடிக்கப்பட்டுவிடும் என்று எண்ணிய சர்வே இத்தனை வருடங்கள் ஆகியும் உலகின் உயரமான சிகரங்களில் ஒன்றைக் கூட அளக்க ஆரம்பிக்கவில்லை.

அப்பொழுது நேபாளம் வெளிநாட்டவர்கள் உள்ளே நுழைய அனுமதி மறுத்திருந்தது. சிகரங்களின் உயரத்தை அளப்பதற்குக்கூட அது அனுமதிக்கவில்லை. அதனால் 1847 களில் பிரிட்டிஷார் நேபாளத்திற்கு வெளியிலிருந்து அதாவது உயரமான சிகரங்களுக்கு கிட்டத்தட்ட 250 km தொலைவு அப்பாலிருந்து அவற்றை அளந்தனர். அந்த காலகட்டங்களில் இந்தியாவிலிருக்கும் கஞ்சன்ஜங்காவே உலகின் உயரமான சிகரமாக கருதப்பட்டது. ஜான் ஆம்ஸ்ட்ராங் என்ற பிரிட்டிஷார் கஞ்சன்ஜங்காவிற்கு தொலைவிலிருந்த ஒரு சிகரம் கஞ்சன்ஜங்காவை விட உயரமாக இருக்கும் என்று எண்ணினார். அதற்கு அவர் 'b' என்று பெயரிட்டார். அதற்கடுத்து நிக்கோல்சன் என்பவர் சிகரம் 'b' இன் உயரத்தை அளக்க அனுப்பப்பட்டார். சிகரம் 'b' க்கு 170 km தூரம் இருந்து அளந்த அவரின் அளவீடுகள் சிகரம் 'b' நிச்சயம் கஞ்சன்ஜங்காவை விட உயரமானது என்பதைக் காட்டியது.  இவர்களின் மூலம் பெறப்பட்ட அளவீடுகளிளிருந்து மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு இந்தியர் 1852 ஆம் ஆண்டு சிகரம் 'b' திட்டவட்டமாக உலகின் உயரமான சிகரம் என்று கண்டறிந்தார். இருந்தபோதிலும் சிகரம் 'b' (இதற்க்கு இப்பொழுது சிகரம் XV என்று பெயரிடப்பட்டிருந்தது) உலகின் உயரமான சிகரம் என்று அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது . இதற்கு காரணம் அவர்கள் இதில் எந்த ஒரு தவறும் ஏற்படக்கூடாது என்பதால் திரும்ப திரும்ப தாங்கள் மேற்கொண்ட அளவீடுகளை சரிபார்த்துக் கொண்டிருந்தனர். இறுதியாக அவர்களின் அளவீட்டில் சிகரம் XV இன் உயரம் மிகச் சரியாக 29000 அடி. ஆனால் 29000 அடி என்று சொன்னால் மக்கள் அதை ஏதோ ரவுண்ட் figure ஆக சொல்லிவிட்டார்கள் என்று எண்ணுவார்கள் என்று எண்ணி 29,002 அடி உயரம் என்று குறித்தனர் .

அடுத்து சிகரம் XV க்கு பெயர் வைக்க வேண்டும் . அப்பொழுது இந்தியாவில் சர்வேயர் ஜெனரலாக இருந்தவர் ஆண்ட்ரு  வாக்ஹ் . அவருடைய குருநாதர் சிகரங்களுக்கு பெயர் வைக்கும்பொழுது உள்ளூர் மொழியிலேயே பெயர் வைக்கவேண்டும் என்று அறிவித்திருந்தார். ஆனால் அச்சிகரம் இருந்த நேபாளமும் , திபெத்தும் வெளிநாட்டவருக்கு அனுமதி மறுத்திருந்தது. அதனால் அதன் பெயர் யாருக்கும் தெரியவில்லை . அதனால் வாக்ஹ் தன்னுடைய குருநாதரின் பெயரையே வைத்துவிட்டார். எவரெஸ்ட் ! .

1856 இல் உலகின் உயரமான சிகரம் என்று அறிவிக்கப்பட்ட எவரெஸ்ட்டில் ஏறுவதற்கு அன்று முதல் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை பெரும்பாலும் பல உயிர்பலிகளுடன் தோல்வியில் முடிந்தன. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 1953 இல் நியூஜிலாந்தின் எட்மண்ட் ஹிலாரியும் நேபாளத்தை  சேர்ந்த செர்பாவான டென்சிங் நார்கேவும் முதலில் சிகரம் தொட்டனர். இருவரில் எவர் முதலில் சிகரம் தொட்டனர் என்பது அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த ரகசியம். இருவரில் டென்சிங் நார்கே மட்டுமே சிகரத்தை அடைந்தார் , எட்மண்ட் ஹிலாரி அதை தொடவே இல்லை என்று கூறுவோரும் உண்டு. அதற்கு அவர்கள் சான்றாகக் கூறுவது டென்சிங் நார்கே மட்டுமே எவரெஸ்டில் இருப்பது போன்று புகைப்படம் உள்ளது , எட்மண்ட் ஹிலாரி இருப்பது போன்று புகைப்படம் இல்லை என்றனர். அதற்கு எட்மண்ட் , டென்சிங்கிற்கு புகைப்படம் எடுக்கத் தெரியாததால் , நான் எடுத்த அவர் நிற்கும் புகைப்படம் மட்டுமே எங்களிடம் உள்ளது என்றார். அவர்களின் சிகரம் தொட்ட அந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்ததற்கு முக்கிய காரணம் அந்தப் பயணத்தில் அது வரை இல்லாத அளவு பயன்படுத்தப்பட்ட அதிகப்படியான  ஆக்சிஜன் ஆகும் .

இருவர் சிகரம் தொட்ட அந்த பயணத்திற்கு 400 பேர் உதவினர் .  நேபாளிகளான ஷெர்பாக்களின் மலை ஏறும் ஆற்றல்  அளப்பெரியது. இன்றும் அவர்களின் உதவி இன்றி இமயமலை சிகரங்கள் அடையமுடியாது . 400 பேர் கொண்ட அந்த குழுவிற்கு தலைமை ஏற்றிருந்த ஜான் ஹன்ட் , எவரெஸ்ட் சிகரம் தொட இரண்டு பேர் இரண்டு பேர் கொண்ட இரண்டு குழுக்களை தேர்ந்தெடுத்திருந்தார். முதல் குழுவைச் சேர்ந்த டோம் போர்டில்லன் மற்றும் சார்லஸ் ஈவான்ஸ் தங்கள் பயணத்தில் சிகரம் தொட முடியாமல் திரும்பிய பொழுது அவர்களுக்கு முன்னே எவரெஸ்ட் 300 அடி தூரத்தில் இருந்தது ! .  முன்னூறு அடி தூரத்தில் உலகம் அவர்களின் பெயரை மறந்துவிட்டது . அவர்கள் திரும்பிய இரண்டு நாட்களில் எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங் நார்கேயும் தங்கள் பயணத்தை தொடங்கினர். டென்சிங் நார்கேயும் எட்மண்ட் ஹிலாரியும் இணைந்தது உணர்ச்சிகரமானது. ஒரு முறை எட்மண்ட் ஹிலாரி தன்னுடைய மலையேற்றத்தில் அதல பாதாளத்தை நோக்கி விழுந்த போது டென்சிங் நார்கேயின் துரித நடவடிக்கையால் காப்பாற்றப்பட்டார் . அன்றிலிருந்து எட்மண்ட் ஹிலாரி தன்னுடைய பிற்கால பயணங்களுக்கு டென்சிங் நார்கேயை சேர்த்துக் கொண்டார் .

உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் பூமியின் தொலைவான பகுதி கிடையாது. பூமியானது தன்னுடைய பூமத்திய  ரேகை பகுதியில் பருத்துக் காணப்படும். அதனால் பூமியின் மையத்திலிருந்து அளக்கும்போழுது எவரெஸ்ட் சிகரமானது பூமியின் ஐந்தாவது தொலைவான பகுதியே (tallest/farthest point of the earth) ஆகும். முதல் இடத்தை வகிப்பது ஈக்குவடாரில் இருக்கும் சிம்போரசோ ஆகும் . சொல்லபோனால் முதல் நான்கு இடத்தை வகிப்பதும் பூமத்திய ரேகை பகுதியைச் சேர்ந்த சிகரங்களே ஆகும் .கடல் மட்டத்திலிருந்து பார்த்தால் சிம்போரசோ 20,565 அடியே ஆகும் ஆனால் எவரெஸ்ட்டோ 29,029 அடி :).

இன்று சீனா எவரெஸ்ட்டை எவரெஸ்ட் என்று கூறாமல் திபத்திய பெயரான சொமோலுங்க்மா  (Holy Mother) என்றே அழைக்க வேண்டும் என்று கூறுகிறது. ஏனெனில் எவரெஸ்ட்டானது உலகம் அறிவதற்கு முன்பே திபெத்தியர்களால் பல காலம் அறியப்பட்டிருந்தது. அதனால் திபெத்திய பெயராலேயே அது அறியப்பட வேண்டும் என்று கூறுகிறது. இன்று பல நாடுகள் எவரெஸ்ட் என்ற சொமோலுங்க்மா என்று உலகின் மிக உயரமான சிகரத்தை அழைக்க ஆரம்பித்துவிட்டன. ஆனால் திபெத் போன்றே நேபாளிகளால் பல காலம் அறியப்பட்ட அந்த சிகரத்தின் நேபாள பெயரான சகர்மதாவை பலரும் மறந்தது சீனாவின் வல்லரசு ஆற்றலைக் காட்டுகிறது !

Titpits:

1. கடந்த மே 29, 2013 வுடன் எவரெஸ்ட் என்ற சொமோலுங்க்மா என்ற சகர்மதா சிகரம் தொட்டு 60 வருடங்கள் ஆகின்றன .
 2. நாம் அறிந்தவரை மிக உயரமான சிகரம் ஒலிம்பஸ் மோன்ஸ். அமைந்திருப்பது செவ்வாய் கிரகத்தில் . அதன் உயரம் 22 km. நம்முடைய எவரெஸ்டின் உயரம் 8.8 km :(
3. 29029 அடி உயர எவரெஸ்ட் சிகரத்தை 29 ஆம் தேதி முதல் முறையாக அடைந்தார்கள் என்பது இன்னொரு titpits :) 

Monday, April 15, 2013

இரும்புப் பெண்மணி : மார்கரெட் தாட்சர்

Photograph 

இதுவரை இருந்த ஆங்கிலேய பிரதம மந்திரிகளில் (கிட்டத்தட்ட 1721 களிலிருந்து ) நம்மில் பெரிதும் அறியப்பட்டவர்கள் இரண்டே பேர் . ஒருவர் இரண்டாம் உலகப் போர் புகழ் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றொருவர் மார்கரெட் தாட்சர் . இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த அட்லி பிரபு கூட நம்மில் பலருக்குத் தெரியாது. வின்ஸ்டன் சர்ச்சில் கூட இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பிரதமராக இருந்ததால் அதிகம் அறியப்பட்டார் என்பதில் அதிகம் ஆச்சரியம் இல்லை. ஆனால் மார்கரெட் தாட்சர் நம்மில் அதிகம் அறியப்பட்ட பிரதமர் என்பது ஆச்சரியம்தான்.

வின்ஸ்டன் சர்ச்சில் என்றால் எப்படி நமக்கு அவருடைய சுருட்டு ஞாபகம் வருதோ அதேபோல் மார்கரெட் தாட்சர் என்றதும் 'இரும்புப் பெண்மணி' என்று அவர் அழைக்கப்பட்டதுதான் ஞாபகம் வரும். அந்த அளவிற்கு அவர் பல துணிச்சலான முடிவுகள் எடுத்தார்.

மார்கரெட் தாட்சரையும் இந்திரா காந்தியையும் பல விதங்களில் ஒப்பிடத் தோன்றுகிறது . இந்திரா காந்தி எப்படி இந்தியாவின் முதல் பெண் பிரதம மந்திரி ஆகவும் இதுவரை இந்தியா கண்ட ஒரே பெண் பிரதம மந்திரியாக இருந்தாரோ அதே போல் லேடி தாட்சரும் இங்கிலாந்தின் முதல் மற்றும் இங்கிலாந்தின் கிட்டத்தட்ட முன்னூறு வருட கால பிரத மந்திரிகளின் சரித்திரத்தில் ஒரே பெண் பிரதம மந்திரி . இரண்டு பேருமே இரும்புப் பெண்மணிகள் என்று அறியப்பட்டவர்கள் . இரண்டு பேருமே கிட்டத்தட்ட சமகாலத்தில் ஆண்டவர்கள் . இரண்டு பேருமே போர்க்காலங்களில் பிரதம மந்திரிகளாக இருந்தனர். இந்திராகாந்தி எப்படி பாகிஸ்தானுடன் போரில் ஈடுபட்டாரோ அதேபோல் லேடி தாட்சர் அர்ஜென்டினாவுடன் போரில் ஈடுபட்டார். இரண்டு பேருமே அவர்கள் நாட்டை அதிக காலம் ஆண்டவர்களில் ஒருவர். இரண்டு பேருமே எதற்குமே compromise செய்து கொள்ளாதவர்கள். தாங்கள் எடுத்த முடிவுகளில் உறுதியாக இருந்தவர்கள் . அதனாலையே அவர்கள் இரண்டு பேரும் controversy களிலும் அதிகம் சிக்கினர் என்பதும் வேதனையான உண்மை. இரண்டு பேரைப் பற்றி பேச்சு வரும்போது அவர்களை கடுமையாக எதிர்ப்பவர்கள் அல்லது முழுமையாக ஆதரிப்பவர்கள் என்று இரண்டு சாராரே உண்டு. நடுப்பட்டவர்கள் என்று யாருமே இல்லை. 
 
இந்திராகாந்தி இந்தியர்களாலையே கொல்லப்பட்டபோது லேடி தாட்சரின் மரணத்தை பார்ட்டி வைத்து கொண்டாடுவோரும்  பிரிட்டனில் உண்டு ( 'Ding-Dong . The witch is dead ' என்று சிலர் மார்கரெட் தாட்சரின் மரணத்தைக் கொண்டாடுகின்றனர். லேடி தாட்சரின் இறந்த தினத்தன்று பிறந்த தினம் கொண்ட, ஒரு யூனியனில் தலைவராக இருந்த ஒருவர் இன்றுதான் எனக்கு மிகச் சிறந்த பிறந்தநாள் பரிசு கிடைத்துள்ளது என்றார். லண்டனில் இருந்த ஒரு borough லேடி தாட்சரின் இறப்பிற்கு துக்கம் அனுஷ்டிக்க மறுத்து பிரிட்டிஷ் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட மறுத்துவிட்டது. மரியாதைக்கு பெரிதும் அறியப்பட்ட பிரிட்டிஷாரே,  இப்படி அவரின் மரணத்தை கொண்டாடியது ஆச்சரியத்திற்குரியது மற்றும் வேதனையானது ).

எனக்கு என்னவோ இந்திராகாந்தியைப் போல் மார்கரெட் தாட்சரும் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்டதாலையே அவர் இந்தியர்களால் அதிகம் அறியப்பட்டார் என்று தோன்றுகிறது. ஆனால் மார்கரெட் தாட்சருக்கு அந்த பட்டத்தை கொடுத்தது பிரிட்டன் அல்ல. அவரால் அதிகம் வெறுக்கப்பட்ட அவரை அதிகம் வெறுத்த ரஷ்யா ஆகும். அதுவும் அது அவர் பிரதமராக ஆவதற்கு முன் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோதே அவ்வாறு அழைத்தது.

 எனக்கு என்னவோ மார்கரெட் தாட்சர் விமர்சனங்களாலையே  அதிகம் அறியப்படுவதாகவே தோன்றுகிறது. லேடி தாட்சரைப் பற்றி கூறும் 'Mrs Thatcher, Milk Snatcher ' சொலவடை சுவாரசியமானது . 1970 களில் அவர் கல்வித்துறை மந்திரியாக இருந்தபோது நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி பள்ளிகளில் வழங்கப்பட்ட இலவச பாலை நிறுத்தியதால் அவர் அவ்வாறு அறியப்பட்டார்.

பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கினார் .  அவருடைய காலங்களில் தனியார் மயமாக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களில் முக்கியமானவை British Rails, British Telecom, British Airways. அவருடைய காலங்களில் தொழிற்சாலைகளில் இருந்த யூனியன்களின் பலத்தை வெகுவாக ஒடுக்கினார். அதனால் பல வேலை நிறுத்தங்கள் அவர் காலத்தில் நடந்தன.

அவருடைய காலத்தில் அர்ஜென்டினா , British Overseas Territory ஆக இருந்த ஃபாக்லாந்து தீவை ஆக்கிரமித்தபோது பிரிட்டிஷ் படைகளை அனுப்பி அதனை மீட்டார் . ஆனால் இப்படி போரை ஏற்படுத்தாமல் பேச்சுவார்த்தைகளின் மூலமாகவே அப்பிரச்சினையை தீர்த்திருக்கலாம் என்று அதற்கு குற்றம் சாற்றப்பட்டார்.
அவரின் மீது கூறப்படும் மற்றொரு குற்றச்சாட்டு பிரிட்டனின் Manufacturing Industry ஐ வளரவிடாமல் தடுத்துவிட்டார் என்பது.
அவர் பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உலக அளவில் அறியப்பட்டாலும் அவர் பெண்ணியவாதிகளால் அதிகம் வெறுக்கப்பட்டார். அதற்கு அவர் பெண்ணியத்தை வெறுத்ததும் ஒரு காரணம்! . ஒரு பெண்ணாக இருந்தபோதிலும் அவர் பெண்களுக்காக பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்று குற்றம் சாற்றப்பட்டார். 

இப்படி அவர் மீது விமர்சனங்கள் வைத்தாலும் அவருடைய ஆதரவாளர்கள் , அமெரிக்காவைப் போல் பிரிட்டனும் பொருளாதார பெருமந்தத்திற்கு தலைப்பட்ட அக்காலத்தில் அவர் எடுத்த நடவடிக்கைகளே பிரிட்டனைக் காப்பாற்றின என்கின்றனர். அவர்கள் கூறுவது உண்மை என்று நிரூபிப்பது போல் அவரும் தொடர்ந்து மூன்று முறை மக்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . மேலும் பிரிட்டனை அதிக காலம் ஆண்ட பிரதமர்களில் அவரும் ஒருவர். அவரின் நடவடிக்கைகளாலேயே பிரிட்டனும் உலக அரங்கில் நிதித் தலைமையகம் என்ற தன்னுடைய இடத்தை தக்க வைத்துக்கொண்டது .
அவர் பிரிட்டனில் மட்டுமல்லாது உலக அளவில் மாற்றங்களுக்கு காரணமாக இருந்தார். அவருடைய காலத்தில் அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் மற்றும் சோவியத் யூனியனின் அதிபராக இருந்த கோர்பச்சேவுடனான அவரின் நெருக்கம் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனிற்கிடையேயான பனிப் போரை முடிவுக்கு கொண்டு வர உதவியது.

உலக  அரசியல் அரங்கில் பிரபலமடைந்த அனைத்து தலைவர்களைப் போலும் மார்கரெட் தாட்சரைச் சுற்றிலும் சர்ச்சைகள் சுற்றின. ஆன போதிலும் உலக அரங்கில் பெரிதும் அறியப்பட்ட பெண்களில் மார்கரெட் தாட்சர் முக்கியமானவர் என்றால் அது உண்மை .

Sunday, October 14, 2012

அகம்,புறம்,அந்தப்புரம் - விமர்சனம் - 3



லக்ஷ்மி  விலாஸ் அரண்மனை
அரண்மனை:
ஒவ்வொரு ராஜாவும் தங்கள் மனப்போக்குப் படி அரண்மனை அமைத்துக்கொண்டனர் . கொல்கட்டா போன்ற நகரங்களில் இருந்த அலங்காரக் கடைகள் இந்த மகாராஜாக்களை நம்பியே இருந்தன. பரோடாவின் அரண்மனை லக்ஷ்மி விலாசின் மதிப்பு இன்றைய நிலையில் 4000 கோடி ரூபாய். அது பங்கின்காம் அரண்மனையைப் போல மூன்று மடங்கு பெரியது !.

ராஜாக்கள் என்றாலே ஊதாரித்தனமாகத்தான் இருக்கவேண்டுமா என்ன?. கஞ்சத் திலகங்களும் இருக்கத்தான் செய்தனர். ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலிகான். மகா கஞ்சத் திலகம். தான் நிஜாம் ஆனதும் தன்னுடைய அப்பாவின் ஆசை நாயகிகளை , எதற்கு செலவு என்று விற்றுவிட்டார் . சில பேரை சில மூட்டை மாங்காய்க்களுக்கு !. நம் நிஜாம் எந்தப் பொருளையும் வீணாக்கமாட்டார்.ஒரு தடவை அவருடைய கைத்தடி உடைந்துவிட்டது. அதை ஒட்டுப்  போட்டுப் பயன்படுத்தினார். ஒரு முறை வைசிராய் ஹைதராபாத் வந்திருந்தபோது அதைப் பார்த்து விட்டு புது கைத்தடி ஒன்றை நிஜாமுக்கு பரிசாகத் தந்தார் . அதையும் நம் நிஜாம் மறுக்காமல் வாங்கிக் கொண்டார். ஒரு முறை இந்தியாவின் உள்துறைச் செயலாளராக இருந்த V.P. மேனன் அவரைச் சந்தித்தார். அப்பொழுது இருவரும் புகைப் பிடிக்கத் தொடங்கினர். நம் நிஜாம் ஊரிலேயே மிக மலிவான சார்மினார் சிகரட்டை பிடித்துக் கொண்டிருந்தார். மேனனோ காஸ்ட்லியான சிகரெட். மேனன் ஒரு courtesy க்காக  நிஜாமிடம் தன்னுடைய சிகரெட் பெட்டியை நீட்டினார். நம் நிஜாமும் மறுக்காமல் அதிலிருந்து நான்கைந்து சிகரெட் எடுத்து தன்னுடைய சிகரெட் பெட்டியில் வைத்துக் கொண்டார் . அடுத்து இரண்டு நாள் கழித்து மேனன் நிஜாமை திரும்ப சந்தித்த போது நிஜாமின்  சிகரெட் பெட்டியில் மேனன் கொடுத்த அதே சிகரெட்கள் அப்படியே இருந்தன !.

இதுதான் வழி என்று இல்லை நம் நிஜாம் பல வழிகளில் சொத்து சேர்த்தார். ஊரில் ஏதாவது புது காரைப் பார்த்துவிட்டால் மறுநாள் அந்தக் கார் நிஜாம் வீட்டில் இருக்கும் . தள்ளிக்கொண்டுவந்துவிடுவார் !. அவரிடம் இப்படி 50 க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கார்கள் இருந்தன . ஆனால் அவர் தன் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தியது ஒரு ஓட்டை உடைசலான காரைத்தான் !. ஊரில் இருக்கும் யாராவது அவர்கள் வீட்டில் நடக்கும் கல்யாணத்திற்கு கூப்பிட்டால் மறுக்காமல் கலந்து கொள்வார் . வரும்பொழுது கல்யாணப் பெண் அணிந்திருக்கும் விலை உயர்ந்த நகையைக் கொண்டுவந்துவிடுவார். ஏதேனும் விசேசங்களில் நிஜாம் அனைவருக்கும் முன்  சிலருக்கு தன் கையாலேயே மது நிரப்பிக்கொடுப்பார். அவர்களுக்கு பெருமை பிடிபடாது .ஆனால் நிஜாம் அதற்கு முன்பே அவர்களிடம் இதற்கு இவ்வளவு ரேட் என்று பேசி வாங்கிவிடுவார்.  இப்படி எல்லாவற்றிர்க்கும் ஒரு ரேட். இப்படிப்பட்ட நிஜாமின் புகைப்படத்தை ஒரு தடவை TIME பத்திரிகை தன் அட்டைப்படமாக வெளியிட்டது. ஏனென்றால் அன்றைய நிலையில் அவர்தான் உலகின் முதல் பெரும் பணக்காரர் !.

நம் மகாராஜாக்கள் பொழுதுபோக்கிற்கு அதிகம் விரும்பியது போலோ மற்றும் கிரிக்கெட். நம் பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங் BCCI உருவாக முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர். அவர் ஆதரித்தவர்களில் முக்கியமானவர் லாலா அமநாத்.

மகாராஜா பெண்ணு(களு)டன் அந்தப்புரத்தில் அந்தரங்கமாக இருக்கும்போது திரைக்குப் பின் ஒருவர் சத்தமாக கதை சொல்லிக் கொண்டிருப்பார் . காமக் கதை!. ராஜாவுக்கு mood வரணும்ல அதுக்குத்தான் !. ஒவ்வொரு மகாராஜாவும் அந்தப்புரம் வைத்திருந்தனர் . மகாராஜா என்றில்லை . ஊரின் பெரிய பணக்காரர்கள் , அமைச்சர்கள் தங்கள் அந்தஸ்திற்கேற்ப அந்தப்புரம் வைத்திருந்தனர். ஒரு அந்தப்புரத்தில் 300 பெண்கள் வரை கூட இருந்தனர், மகாராணி , ராணி முதல் ஆசைநாயகிகள் வரை !. ஓவ்வொரு பெண்ணிற்கும் அந்தப் பெண்ணின் அந்தஸ்திற்கேற்ப அவர்கள் அந்தப்புரத்தில் நடத்தப்பட்டனர். மகாராணிக்கு பெரிய ரூம், தங்கத்தட்டில்  30 , 40 வகை பதார்த்த உணவுகள். அடுத்து ராணிகளுக்கு சிறிய ரூம் , வெள்ளித்தட்டில் 15 , 20 பதார்த்த உணவுகள். ஆசை நாயகிகளுக்கு சாதாரணத் தட்டில் 10 பதார்த்த உணவுகள் , இப்படி. அந்தப்புரத்தில் மகாராணிதான் தலைவி. அவர் சொல்படிதான் அனைவரும் கேட்கவேண்டும்.  அந்தப்புரத்தில் ஆண்களுக்கு அனுமதி இல்லை. காவலுக்குக் கூட திருநங்கைகள்தான். மருத்துவர்கள் கூட அந்தப்புரப் பெண்களை பார்க்கக்கூடாது. அந்தப்புரப் பெண்களுக்கு முடியவில்லை என்றால் திரைக்கு பின்னால் உள்ள அவர்களின் கையில் ஒரு நூல் கட்டப்படும் . அந்த நூலைப் பிடித்து நாடி பார்த்து மருத்துவர் மருந்து கொடுப்பார்!. இப்படி முன்னூறு வரைக்கும் அந்தப்புரத்தில் பெண்கள் இருந்ததால் , மகாராஜாவால் பல பெண்களுடன் வருடத்திற்கு ஒரு முறை கூட அவர்களுடன் இருக்க முடியாது . ஏன் பல பெண்களுடன் மகாராஜா வாழ்நாளில் ஒரு முறைதான் கூட இருந்திருப்பார் . இப்படி இருக்கும் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் அவர்கள் அந்தப்புரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அது மட்டுமல்ல பழைய ராஜா போய் அவர் மகன் புதிய ராஜாவாக வந்தவுடன் பழைய ஆசை நாயகிகள் வெளியேற்றப்பட்டார்கள். ராணிகளுக்கு மட்டும் பென்ஷன் வழங்கப்பட்டது.

மேலே சொன்ன அனைத்து விசயங்களும் அனைத்து சமஸ்தான ராஜாக்களுக்கும் பொருந்துவதில்லை. இந்தியாவில் அன்று 565 சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றில் இந்தியாவை ஆண்ட UK க்கு  இணையான நிலப்பரப்பு கொண்ட ஜம்மு காஷ்மீர் முதல் சில கிராமங்களையே உள்ளடக்கிய சமஸ்தானம் வரை இருந்தன.அதனால் மேற்கூறிய அனைத்து விசயங்களும் சமஸ்தானத்தின்  சமூக பொருளாதார நிலையையும் தனிப்பட்ட ராஜாக்களின் மனநிலையையும் பொறுத்து அமைந்தன.

இந்த புத்தகத்தில் இந்தியாவில் இருந்த முக்கியமான சமஸ்தானங்கள் பற்றி தனித்தனி அத்தியாயங்களில் இருக்கும். இந்த அத்தியாயங்கள் அந்த சமஸ்தானத்தில், முக்கியமாக அங்கிருந்த மகாராஜாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகள் பற்றி ஆரம்பிப்பதாக இருக்கும். அடுத்து அந்த சமஸ்தானம் எப்படி உருவானது , அதைத் தோற்றுவித்தவர் யார் என்ற சிறு அறிமுகத்துடன் அதை ஆண்ட மகாராஜாக்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி இருக்கும். அடுத்து அந்த சமஸ்தானத்தைப் பற்றிய சமூக , பொருளாதார நிலை , ராஜாக்கள் செய்த நல்ல , கெட்ட காரியங்கள் பற்றி இருக்கும். கடைசியில் அந்த சமஸ்தானம் இந்திய சுதந்திரத்துடன் இந்தியாவில் இணைவதுடன் முடியும். இந்த புத்தகத்தின் நோக்கமே ராஜாக்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி விவரிப்பதுதான். இருந்தாலும் அந்த காலத்தில் நடந்த முக்கிய செய்திகளைப் பற்றியும் இருக்கும். எ. கா : ரோல்ஸ் ராய்ஸ் கார்கள். அந்த கார் எப்படி உருவானது , அது எந்த அளவிருக்கு சமூக அந்தஸ்தாக  விளங்கியது என்று முக்கியமான, நமக்கு அதிகம் தெரியாத விசயங்கள் இருக்கிறது. எனக்கு ராஜாக்களின் சமையலறை நடவடிக்கைகளையும் , அந்தப்புர hierarchy பற்றிச் சொல்லியதும் ரொம்ப பிடித்திருந்தது. இவை நாம் அறியாத விசயங்கள். அதோடு அந்தந்த காலகட்டத்தில் இருந்த பிரிட்டிஷ் கிங் மற்றும் ராணிகளை பற்றியும் வைசிராயகளைப் பற்றியும் நாம் தெரியாத விசயங்கள் உள்ளன . 

எனக்குத் தெரிந்து பிரிட்டிஷ் காலத்தில் வாழ்ந்த இந்த மகாராஜாக்கள் வாழ்க்கையை அதற்கு முன் வாழ்ந்த மற்ற மகாராஜாக்கள் அனுபவித்திருப்பார்களா என்பது  சந்தேகமே. இவர்களுக்கு தங்களின் மீது பிற ராஜாக்கள் படையெடுத்து வருவார்கள் இல்லை  தங்களுக்கு எதிரான புரட்சி பற்றியோ அல்லது ஆட்சிக்கவிழ்ப்பு நடக்கும் என்ற கவலையோ இல்லை. பிரிட்டிஷ் அரசிற்கு விசுவாசமாக நடந்துகொண்டால் போதும் அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள், என்ன கொஞ்சம் செலவாகும் என்ற நம்பிக்கை இருந்ததால் அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. அதனால் ஒரே ஜாலி ஜிம்கானாதான் :).

ஆனால் மகாராஜாக்களின் வாழ்க்கையும் அவர்களின் நடவடிக்கையும் அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களைப் பொறுத்தே அமைந்திருக்கின்றன. ராஜாக்களுக்கே உரிய உல்லாசம், டாம்பீகம் போன்ற குணங்கள் பெரும்பாலும்  common ஆக இருந்தாலும் அது ஒவ்வொரு ராஜாவைப் பொறுத்து மாறியது. சமஸ்தான வருமானத்தில் தன்னுடைய அழகான குதிரைப்படைக்கே 40% செலவழித்த ராஜாக்கள் மத்தியில்தான் மக்களின் நலனே முக்கியம் என்று வாழ்ந்த ராஜாக்களும் இருந்தனர். அந்தப்புரத்தில் 300 ஆசைநாயகிகள்  வைத்துக்கொண்ட மகாராஜாக்கள் இருந்த காலத்தில்தான் ஏகபத்தினி விரதனாக இருந்த ராஜாக்களும் இருந்தனர். வேட்டையில் ஆயிரம் புலிகளைக் கொன்ற ராஜாக்கள்  இருந்தபோது வைசிராயே வந்து தன் சமஸ்தானத்தில் இருந்த சிங்கங்களை வேட்டை ஆட அனுமதி கேட்டபோதும்  அதை மறுத்த மன்னர்களும் இருந்தனர். இப்படி அனைத்திலும் அனைவரும் தனிப்பட்டு விளங்கினர்.

இப்படி இவர்கள் எவ்வளவு உல்லாசமாக இருந்தாலும் அவர்களால் முழு சுதந்திரத்தோடு இருக்க முடிந்ததில்லை.  ராஜாக்கள் தான் விரும்பியபடி எல்லாம்  இருக்க முடிந்திருக்கவில்லை. எல்லாவற்றிக்கும் அவர்கள் பிரிட்டிஷின் அனுமதி அல்லது அங்கீகாரம் பெறவேண்டி இருந்தது . ஓவ்வொரு சமஸ்தானமும் அப்பகுதிக்கு என நியமிக்கப்பட்ட பிரிட்டிஷ் அதிகாரி ரெசிடென்ட் என்பவரால் கண்காணிக்கப்பட்டது . அவர் சமஸ்தானத்தில் நடந்த அனைத்து விசயங்களையும் வைசிராய்க்கு செய்திகளாக அனுப்பிக்கொண்டிருந்தார். இவர்கள் உல்லாசப்பயணமாக ஐரோப்பா போவதென்றாலும், தான் விரும்பிய பெண்ணை ராணி என்ற அந்தஸ்துடன் கட்டிகொள்வதற்கும், தன் மகனை அதிகாரப்பூர்வ வாரிசாக அறிவிப்பதற்கும் ரெசிட்டென்ட்டின் அனுமதி வேண்டும். அவர்கள் என்னதான் தலைகீழாக இருந்து தண்ணி குடித்தாலும் தான் விரும்பிய ஐரோப்பிய பெண்ணை ராணியாக அறிவிக்க முடியவில்லை. அந்த ஐரோப்பிய ராணிகளுக்கு பிறந்த பிள்ளைகளுக்கும் அங்கீகாரம் இல்லை.
ஐரோப்பிய பெண்களை  ஆசைநாயகிகளாக மட்டுமே வைத்துக்கொள்ளமுடியும். இப்படி எல்லா இடத்திலும் அவர்களுக்கு ஒரு செக் இருந்தது.

இருந்தாலும் மகாராஜாக்கள் உல்லாச வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கின்றனர். அதனால்தான் Air India , தன் பயணிகளைத் தான் மகராஜாக்களைப் போல் கவனித்துக் கொள்வேன் என்று காட்ட  தன் நிறுவனத்திற்கு 'Maharaja' symbol வைத்தது.

நிச்சயம் இந்த புத்தகம் நாம் அறியாத மகாராஜாக்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் , சமஸ்தானத்தில் நடந்த முக்கிய நிகழ்சிகளையும் பற்றி அருமையாக கூறுகிறது . வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் நல்ல புத்தகம்.

எனக்கு பிரிட்டிஷ் கால மகாராஜாக்களை விட அதற்கும் முந்தய காலகட்டத்து ராஜாக்களின் தனிப்பட்ட வாழக்கை, அப்பொழுது இருந்த சமூக , பொருளாதார நிலையைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசை. அது சற்றுக் கடினம் என்றாலும் குறைந்த பட்சம் medival காலத்து  ராஜாக்களைப்  பற்றியாவது  தெரிந்து கொள்ள ஆசை .

முற்றும்.

Friday, October 5, 2012

அகம்,புறம்,அந்தப்புரம் - விமர்சனம் - 2



சில ராஜாக்களின் உல்லாசம் அளவுக்கு மீறி சென்றது. சில சிறுபிள்ளைத்தனமானது. அப்படித்தான் பரத்பூர் மகாராஜா கிஷன்சிங். ஒரு நாள் அவர் தன்னுடைய கட்டிட எஞ்சினியர்களை கூப்பிட்டார். ஒரு புது நீச்சல் குளம் கட்ட வேண்டும் என்பது கட்டளை. நீச்சல் குளம் பற்றிய design எல்லாம் அவரே போட்டார். நீச்சல் குளத்தின் ஆழம் ரெண்டு அடி இருக்கவேண்டும் என்று கட்டளை இடப்பட்டது. கட்டி முடித்ததும் அதைச் சுற்றி மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. அதற்கு சந்தன படிக்கட்டுகள். பின்னர்  நாற்பது அழகான பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். படிக்கு இரு பதுமையாக நின்ற அவர்களின் கையில் விளக்குகள் கொடுக்கப்பட்டன. ராஜா குளத்தில் இறங்கியவுடன் பெண்களும் இறங்கினர். ராஜா ஒவ்வொருவரின் மேல் தண்ணீர் ஊற்றி விளையாடத் தொடங்கினார். எந்தப்  பெண் கடைசியாக தன் கையில் ஏந்திய விளக்கு அணையாமல் பாதுகாக்கிறாளோ அவளே வெற்றி பெற்றவள் . அவளுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது அத்துடன் அன்று ராஜாவின் படுக்கையறையை அலங்கரிப்பதும் அவளே !.

அன்று ராஜாக்கள் , என்றும் உற்சாகம் எங்கும் உல்லாசம் என்று இருந்துருக்கிறார்கள். உற்சாகத்துக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த மற்றொரு வழி  வேட்டை . ஆனா ஊனாவென்றால் வேட்டைதான். அவர்களின் சமஸ்தானத்தில் இருக்கும் மிருகங்களுக்கு ஏற்ப அவர்களின் வேட்டை விலங்குகள் வேறுபடும். புலி, மான், காண்டாமிருகம், காட்டுப் பன்றி இப்படிப் பல. புலிதான் பிரதானம். அதுவே அவர்களுக்குக் கவுரவம். இவர்கள் தாங்கள் வேட்டை ஆடுவதோடு அல்லாமல் வேட்டைத் திருவிழாவையும் நடத்துவார்கள். அதில் அருகிலிருக்கும் சமஸ்தான அரசர்கள் , பிரிட்டிஷ் அதிகாரிகள் அனைவருக்கும் அழைப்பு உண்டு.

பிரிட்டிஷ் அதிகாரிகளை குஷிப்படுத்த அவர்கள் அவ்வப்போது வேட்டைத் திருவிழா நடத்துவார்கள். தங்கள் நாட்டில் வெறும் ஓநாயையும், காட்டுப் பன்றியையும் வேட்டையாடியவர்களுக்கு புலி வேட்டையாட கசக்குமா என்ன?. வைசிராயிலிருந்து உள்ளூர் பிரிட்டிஷ் அதிகாரி வரை, பெரிய மகராஜா முதல் சிறிய ராஜா வரை அனைவரும் புலி  வேட்டையாடினார்கள். ஒரு புலியையாவது தங்கள் அரண்மனையில் பாடம் செய்து வைப்பது அவர்களுக்குப் பெருமை. புலி வேட்டை முடிந்ததும் தன் துணைவியுடன் புலி மேல் காலை வைத்து மறக்காமல் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். கூச் பிகார் மகாராஜா நிருபேந்திர நாராயணன் தன் வாழ்நாளில் 365 புலிகள், 438 காட்டெருமைகள் , 207 காண்டாமிருகங்கள் , 311 சிறுத்தைகளை வேட்டையாடினார். சர்குஜா மகாராஜா ஆயிரம் புலிகளுக்கு மேல் வேட்டையாடினார்.

புலி போன்ற பெரிய விலங்குகள் மட்டும் அல்ல . மற்றொரு முக்கியமான வேட்டை வாத்து. ஒரு குளத்தில் ஆயிரக்கணக்கான வாத்துகள் விடப்படும். வந்திருக்கும் விருந்தினர்கள் எல்லாம் டுமீல், டுமீல் என்று சுடுவார்கள். எத்தனை வாத்துகள் என்பது போட்டி.

Hunting in India - Tiger hunt with elephants
 இப்படி புலி வேட்டை ஆடியவர்களின் வாழ்நாள் கனவு ஒன்று இருந்தது அது சிங்க வேட்டை . ஆசியாவிலேயே ஒரே ஒரு இடத்தில்தான் சிங்கம் இருந்தது. அது ஜுனாகத்(கிர் காடுகள்). நாம் பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் படித்திருப்போமே, இந்தியாவுடன் சேர மறுத்து பாகிஸ்தானுடன் சேர கையொப்பமிட்ட சமஸ்தானம் ஜுனாகத் என்று. அதே சமஸ்தானம்தான். பிரிட்டிஷ் அதிகாரிகள் , மகாராஜாக்கள் என்று அனைவரும் சிங்க வேட்டை என்றால் ஜுனாகத்துக்கு கிளம்பி விடுவார்கள். ஒரு கட்டத்தில் ஜுனாகத்தில் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துவிட்டது . அதற்கடுத்து ஜுனாகத்தின் மகாராஜாக்கள் சிங்க வேட்டைக்குத் தடை விதித்தார்கள். வைசிராயக்குக் கூட அனுமதி இல்லை. இன்று அவர்களால்தான் ஆசியாவிலேயே கிர் காட்டில் மட்டும் இருக்கும் சிங்கங்களின் எண்ணிக்கை  300 .

ஒரு ராஜாவின் சமயலறையில் உள்ளூர் சமையல் முதல் உலக சமையல் வரை சமைக்கப்பட்டது. குறிப்பாக இந்திய முகலாய சமையல் . ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின் ஐரோப்பிய பாணி சமையலும் செய்யப்பட்டது. இதற்கென்று தனி chef கள் இந்தியாவெங்கும் இருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் வரவழைக்கப்பட்டனர். காலை, மதியம், இரவு உணவு தயாரிக்க என்று தனித் தனிக் குழுக்கள். அதேபோல் சிறப்பு உணவுக்கு என்று தனிக்குழு. சிறப்பு விருந்துகளில் 100 வகை பதார்த்தங்கள் வரை செய்யப்பட்டன .

 ராம்பூர் நவாப் ஹமித் அலிகான் சாப்பாட்டு பிரியர். அவருடைய சமயலறையில் முன்னூறு சமயல்காரர்கள் இருந்தனர். அவர் அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு விட்டு ஆற அமர நிறை குறைகளை கூறுவார்.

ஹமித் அலிகான் சாப்பாட்டுப் பிரியர் என்றால் செயலானா சமஸ்தான மகாராஜா துலிப் சிங் , நளபாகன். அவர் இந்தியாவில் எங்கும் சமைக்கப்பட்ட அனைத்து உணவுகளின் செய்முறையையும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார். அவரை மற்ற ராஜாக்கள் தங்களின் சமையல்கட்டு வரை சென்று வர அனுமதித்தனர். அவர் மற்ற சமஸ்தான சமயல்காரர்களிடம் பக்குவம் பற்றி விசாரிப்பார். கேட்பது ராஜாவாகவே இருந்தாலும் தொழில் ரகசியத்தை சொல்லி விடுவார்களா என்ன?. எதையாவது சொல்லி ஒப்பேற்றுவார்கள். ஆனா நம்ம மகாராஜா தில்லாலங்கடி. அவர் கையோடு கொண்டு சென்ற அஞ்சறைப் பெட்டி போன்ற ஒரு மசாலாப் பெட்டியில் இருக்கும் மசாலாப் பொருள்களைக் கொண்டு சமையல் செய்யச் சொல்லிவிட்டு வெளியே போய் விடுவார். அந்த மசாலாப் பெட்டியில் உள்ள பொருட்கள் எல்லாம் முன்னரே துல்லியமாக எடை போடப்பட்டவை. அதில் குறைவதை வைத்து அவர் உண்மையான பக்குவம் கண்டுபிடித்துவிடுவார் !.

அடுத்து ராஜபுத்திர இளவரசிகள் சமையலறைக்குள் நுழைய அனுமதி கிடையாது. ஏனென்றால் அவர்கள் பிறந்த வீட்டின் சமையலைத் தெரிந்து கொண்டாள் புகுந்த வீட்டின் சமையல் பக்குவத்தை மாற்றிவிடுவார்கள் என்பதால் !.



மகாராஜாக்களின் உல்லாசத்திற்கு அளவே இல்லாமல் இருந்திருக்கிறது. தங்களுடைய செல்வாக்கையும் டாம்பீகத்தையும் காட்ட அவர்கள் எவ்வளவு வேண்டுமென்றாலும் செலவழித்தார்கள் . அதில் முக்கியமான ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்கள். அந்தகாலத்தில் அவை மிகப் பெரிய தகுதிச் சின்னங்கள். ஒவ்வொரு ராஜாவும் போட்டிப் போட்டுக்கொண்டு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கினார்கள். அதிலும் அந்தகார்கள் அவர்களுக்கென்று தனித்துவமாக வடிவமைக்கப்பட்டன. உள்வடிவமைப்பு முதல் அந்த கார்களின் நிறம் வரை மகாராஜாக்களுக்காக  பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டன. ஒரு மகாராஜா தன் ராணியின் பிங்க் நிற செருப்பை அனுப்பி அந்த நிறத்தில் கார் வேண்டுமென்றார். சிலர் கார் முழுவதும் வெள்ளியால் செய்து வாங்கிக்கொண்டனர். மற்றவர்கள் எல்லாம் கார்களில் தங்கள் அந்தஸ்தைக் காட்ட நம் பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங் சொந்த விமானம் வாங்கி தன் அந்தஸ்தை உயர்த்திக்காட்டினார். ஆசியாவிலேயே முதல் விமானம் வாங்கியவர் அவர்தான்!.இந்த பூபிந்தர் சிங்கைப் பற்றி கதை கதையா உள்ளது. அதை புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் . ஒரு கொசுறு : இந்த பூபிந்தரின் பேரன்தான் அமரிந்தர் சிங் . பஞ்சாப்பின் முன்னாள் முதல்வர் !.

தொடரும் ...

Photo Courtesy :

www.columbia.edu
ebay
http://www.logoi.com
http://desibbrg.com
bbc.com

Sunday, September 30, 2012

அகம்,புறம்,அந்தப்புரம் - விமர்சனம் - 1


அகம், புறம், அந்தப்புரம்

நான் அன்னைக்கு ஊரிலிருந்து வந்துகிட்டு இருந்தேன். எப்பயும் போல கைல ஒரு புக் வச்சு படிச்சுகிட்டு இருந்தேன். பக்கத்திலிருந்தவர் , சார் என்ன புக்கு சார் படிக்கிறீங்கன்னு கேட்டாரு. புத்தகத்தின் அட்டைய திருப்பிக் காட்டினேன்.  அட்டையில் கருப்பு வெள்ளை புகைப்படத்தில் ஒரு பெண் நிறைய நகைகளுடனும், அலங்காரத்துடனும் ஒரு ராஜா காலத்து கட்டிலில் ஒய்யாரமாக ஒருக்களித்துப் படுத்திருந்தாள். அட்டையில் 'அகம், புறம் , அந்தப்புரம்' என்றிருந்தது. படித்தவர் சிரித்துவிட்டு, நல்லாத்தான் இருக்கும் சார் என்றார். நான் சிரித்துவிட்டு சார், நீங்க நினைக்குற மாதிரிலாம் இருக்காது என்றேன்.

நம்மவர்க்கு எப்பொழுதுமே அந்தப்புரம் என்ற வார்த்தையில் ஒரு சிலிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது :) .  எப்பொழுதுமே பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களும் எப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் , வாழ்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம்.


'அகம்,புறம், அந்தப்புரம்'  - குமுதம் ரிப்போட்டரில் இரண்டு வருடங்கள் தொடராக வந்தது. எழுதியவர் முகில் . நானும் இந்த புத்தகத்தை வாங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டாலும் இப்பொழுதான் படிக்க நேரம் கிடைத்தது. நமக்கு எப்பொழுதுமே ராஜா கதைகள் என்றாலே ஒரு ஈர்ப்பு உண்டு. பாட்டி சொல்லும் ராஜா கதைகள் வீரதீர சாகச கதைகளாகவோ அல்லது நீதிக் கதைகளாகவோ இருக்கும். பத்தாம் வகுப்பு பாடத்தில் statistics ஆகவும், அசோகர்  மரம் நட்டார் , குளம் வெட்டினார் என்றும்  இருக்கும். அதையும் தாண்டி ராஜாக்களை பற்றி நாம் அறிய முடிந்ததில்லை. அவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருந்தது அதில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று பெரும்பாலும் நாம் அறிய முடிந்ததில்லை. அதை இந்த புத்தகம் தீர்த்து வைக்கிறது. இந்த புத்தகம் ஒரு ராஜாவின் அரண்மனையின்  அடுப்படியிலிருந்து அனுமதி மறுக்கப்பட்ட அந்தப்புரம் வரை அனைத்துப் பகுதிகளுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறது.

இந்த புத்தகத்துக்கான தலைப்பை நான் நிச்சயம் பாராட்டுவேன். ஆயிரம் பக்கத்து புத்தகத்தின் உள்ளடக்கத்தை மூன்றே வார்த்தைகளில் சொல்லிவிடுகிறது 'அகம்,புறம்,அந்தப்புரம்'. அகத்துக்கும் அந்தப்புரத்துக்கும் 66% மும் புறத்துக்கு 33% மும் கச்சிதமாகக் கொண்டிருக்கிறது. புத்தகத்தின் நடை - எதார்த்தமான நடை. எளிய புரிதல் உண்டு. ரொம்பவே ஜனரஞ்சகமானது. ஆனால் சில நேரங்களில் அந்த ஜனரஞ்சகமே இது எந்த அளவிற்கு உண்மை, எவ்வளவு கற்பனை என்பதை புரிந்து கொள்வதற்கு கஷ்டமாகிறது. எனக்கு எந்த ஒரு வரலாற்றுத் தகவலும் உண்மைக்கு மிக அருகில் இருக்க வேண்டும். ஜனரஞ்சகம் என்பதற்காகக் கூட நான் அதை சமரசத்திற்கு உள்ளாக்கமாட்டேன். இந்த புத்தகத்தில் வரும் வசனங்கள் எந்த அளவிற்கு உண்மையாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. இருந்தாலும் வரலாற்றின் மீது சாமானியர்க்கும் ஈர்ப்பை ஏற்ப்படுத்த  இது எல்லாம் தேவைப்படுகிறது.

இந்த புத்தக்கத்தைப் பற்றிப் பார்பதற்கு முன் அது நடந்த காலகட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இந்த புத்தகம் சமஸ்தானத்து மகாராஜாக்களைப் பற்றியது. அதாவது பிரிட்டாஷிரின் ஆட்சியின் கீழ் சுமார் 1800 முதல் 1950 வரை இருந்த மகாராஜாக்களைப் பற்றியது. இந்தியாவில் அப்பொழுது மொத்தம் 536 சமஸ்தானங்கள்  இருந்தன. அவை அனைத்தும் பிரிட்டிசாருக்கு கட்டுப்பட்டே இருந்தன.

இனி புத்தகத்திலிருந்து -

நம்முடைய மகாராஜாக்களை காலையில் பள்ளி அறையிலிந்து எழுப்பி விட, அவர்களை குளிப்பாட்டி விட அவர்களுக்கு டிரஸ் மாட்டி விட இப்படி எல்லாத்திற்கும் பெண்கள். போனால் போகட்டும் என்று கால் கழுவிட மட்டும் ஆண்கள். அடுத்து சாப்பாடு, போரடித்தால் வேட்டை. இன்னும் போரடித்தால் போலோ, கிரிக்கெட்போன்ற விளையாட்டுக்கள். பிறகு மது. மாதுவிற்கு சொல்லவே வேண்டாம். சில மகாராஜாக்கள் பெண்களை கூட்டி வருவதற்கு என்றே தனி 'அமைச்சர்கள்' வைத்திருந்தார்களாம். பிறகு தூங்கச் செல்லுபோது ராகம் பாடி தூங்க வைக்க தனி ஆட்கள். நடுவில் என்றோ ஒருநாள் ஏதோ கொஞ்சம் மனசாட்சி இருந்து உறுத்தினால் மக்கள் பணி !.

இப்படித்தான் எல்லாம் மகாராஜாக்களும் வாழ்ந்திருக்கவில்லை. எல்லாரும் தனிப்பட்ட முறையில் அவர்களுடைய பழக்க வழக்கத்திற்கேற்ப வாழ்க்கை வாழ்ந்தார்கள் . மேற்சொன்ன பழக்க வழக்கத்தில் சில பேரின் பழக்க வழக்கங்கள் சில கூடும் குறையும் அல்லது அவை இல்லாமலேயே இருக்கும். ஆனால் மகாராஜாக்கள் என்றால் என்றால் மக்கள் நலன் கருதாத உல்லாச ஊதாரிகள் என்ற பொதுப் பிம்பம் மட்டும் உருவாகிவிட்டது. இந்த புத்தகத்தை படிக்கும்போது அந்த பிம்பம் ஒன்றும் தவறில்லை என்றே தோன்ற வைக்கிறது.
File:Baroda king on great sowari*.jpg
எல்லா மகாராஜாக்களுக்கும் முதல் திருமணம் நாடு போற்ற பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் நடக்கும். அடுத்த ராஜாவைப் பெற்றெடுக்கப் போகும் பெண்ணல்லவா அதனால் குலம் கோத்திரம் பார்த்தே பெண் பார்த்தார்கள். அதற்கடுத்து ராஜாவின் விருப்பதிற்கேற்ப பல பெண்கள். பெரும்பாலும் ஒரே மதத்தில் ஒரே குலத்தில்தான் எடுப்பார்கள். இவர்கள் அனைவரும் ராணி அந்தஸ்துப் பெரும் பெண்கள். ஆசைநாயகிகள் தனி. இதைத் தவிர ஐரோப்பிய பெண்கள். ஆம் அன்றைய நாளில் பல ராஜாக்கள் ஐரோப்பிய பித்து பிடித்து அலைந்தார்கள்.

பல இளவரசர்கள் படித்தது ஐரோப்பாவில், அதோட பலரும் மறக்காமல் வருடத்திற்கு ஒருமுறையாவது ஐரோப்பிய டூர் போனார்கள். அங்கு அழகான பெண்களைக் கண்டதும் காதல்தான். அடுத்து திருமணம். இவர்களை எந்த ஒரு ஐரோப்பிய இளவரசிகளும் கட்டிக் கொள்ளவில்லை. இவர்கள் கட்டிக் கொண்டதெல்லாம் சாதாரண பெண்கள் . பெரும்பாலும் பாரில் பார்த்த பெண்கள் , பாரில் நடனமாடிய பெண்கள் , நாடகத்தில் நடித்த பெண்கள் இப்படி அனைத்து ஐரோப்பிய பெண்களும் சாதாரணமானவர்கள்.
பெரும்பாலான ஐரோப்பிய பெண்கள் மகாராஜாக்ககளை பணத்திற்காக மட்டுமே திருமணம் செய்திருப்பதாக தெரிகிறது. அந்தப் பெண்களுக்கு 18 ,20 வயசு இருக்கும் . நம் மகாராஜாக்களுக்கோ 40 , 50 வயது இருக்கும் . கபுர்தலா மகாராஜா ஜெகத்சிங் தன்னுடைய ஐரோப்பிய காதலி Eugine மணந்து கொண்ட  போது அவருக்கு வயது 60.  அப்புறம் எப்படி இருக்கும். கபூர்தலா மகாராஜா ஜெகத் சிங் கட்டிய இரண்டு ஐரோப்பிய பெண்களும் அவருக்கு துரோகம் இழைத்தனர். ஆனால் எல்லா ஐரோப்பிய பெண்களும் அப்படி இல்லை. உண்மையாகவே மகாராஜாக்களை காதலித்து அவர்களுக்கு விசுவாசமாக இருந்த பெண்களும் இருந்திருக்கத்தான் செய்கிறார்கள். இந்தூர் மகாராஜா துகொஜி ராவ் கோல்கரின் ஐரோப்பிய மனைவி நான்சி அப்படிப்பட்ட பெண்தான். அவள்தான் மற்ற மகாராணிகளையும்  அவர்களின் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டாள். துகொஜியின் மரணப்படுக்கையில் அவருக்கு செவிலித்தாயாக இருந்து பார்த்துக்கொண்டாள். தன்னுடைய இறுதிக்காலத்திலும் தன் சொந்த நாட்டுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே இருந்து 1998 இல் இறந்தார். இப்படிப்பட்ட ஐரோப்பிய பெண்களும் இருந்திற்குக்கத்தான் செய்தனர்.

மகாராஜாக்களுக்கு காதல் வந்தால் இந்தியப் பெண்ணாக இருந்தால் பெரும்பாலும் தூக்கி வந்து திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் சிலமகாராஜாக்கள் தான் விரும்பிய பெண்ணை அவள் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசை. மாகாராஜாவாக இருந்தால் என்ன , அவர் காதலித்தால் உடனே அந்தப் பெண்ணும் காதலிக்க வேண்டுமா என்ன ? .  மகாராஜாக்களின் காதலை நிராகரித்த பெண்களும் உண்டு. நம்ம நபா சமஸ்தானத்தின் மகாராஜா ரிபுதாமன் சிங் அப்படிப்பட்டவர்தான். அவருக்கு ஒரு பெண்ணைப் பார்த்ததும் காதல் பீரிட்டு வந்துவிட்டது. ஆனால் அந்தப் பெண் மறுத்துவிட்டாள். நம் மகாராஜா எவ்வளவோ தூது விட்டப் பார்த்தார். அந்தப் பெண் மசியவில்லை. இவர் தொல்லை தாங்காமல் அந்தப் பெண் ஊரை விட்டு குடும்பத்துடன் ஓடப் பார்த்தபோது அவளைக் கைது செய்து சிறை வைத்துவிட்டார். பிறகு அந்த சிறைக்கு ஒரு அன்பான சிறை அதிகாரி வந்தார். அந்தப் பெண்ணை cover செய்து காதல் செய்து கல்யாணம் செய்து கொண்டார். பார்த்தால் அவர்தான் நம் நபா மகாராஜா. பெண்ணிற்கு ஆனந்த கண்ணீர். தன்னை ஒரு மகாராஜா இந்த அளவிற்கு காதலிக்கிறாரே என்று ஆனந்தம். ஆனால் மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என்பது போல இது கொஞ்ச காலம்தான்.  ஆனால்  இந்த காதல் எல்லாம் சில காலம்தான். அடுத்து வேறு பெண். வேறு வேடம். வேறு நடிப்பு.

பொதுவாக இளவரசர்களின் முதல் திருமணத்திற்கு முன்பு 'அந்த' விசயத்தில் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். ஆமாம் வருகிற பெண் காறித் துப்பிவிட்டாள் அவமானம் அல்லவா :). இதற்கு என்று அதற்கான சிறப்புப் பெண்கள் நியமிக்கப்பட்டார்கள். கபுர்தலா பட்டத்து இளவரசர் ஜெகத்சிங். ஜெகத்சிங் படு குண்டு. அவருடைய எடையைக் குறைக்க பலரும் படாதபாடுபட்டார்கள். கல்யாணத்திற்குப் பிறகு அந்த விசயத்தில் அவர் சிரமப்படுவார் என்று பல பெண்களை வைத்து சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டது :).

தொடரும் ...

Friday, February 24, 2012

மறக்கப்பட்ட மாபெரும் சாம்ராஜ்ஜியம்

உலகின் மாபெரும் சாம்ராஜ்ஜியங்கள் இந்த உலகையே மாற்றி அமைத்திருக்கின்றன. அது வரலாற்றின் பக்கங்களின் நினைவு தெரிந்து கி.மு 1850களில்  அமைந்த உலகின் முதல் மாபெரும்  பேரரசான எகிப்து பேரரசு முதல் கடைசியாக அமைந்த பிரிட்டிஷ் பேரரசு வரை வரலாற்றையே மாற்றி அமைத்தன. கி.மு 1850 முதல் இன்று வரை கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட மாபெரும் பேரரசுகள் இந்த உலகை ஆண்டன. ஆனால் அவற்றில் பெரிதும் நினைவில் நிற்பவை எகிப்து,ரோம்,அசோகர் தலைமையிலான மௌரிய, முகலாய, சீனாவின்  மிங், ஸ்பானிய, பிரிட்டிஷ் என மிகச் சில சாம்ராஜ்ஜியங்களே . இதில் பெரிதும் மறக்கப்பட்ட சாம்ராஜ்ஜியம் என்றால் அது மங்கோல் சாம்ராஜ்ஜியமாகும். இந்த சாம்ராஜ்ஜியம் உலகில் இதுவரை அமைந்த சாம்ராஜ்ஜியங்களில் பிரிட்டிஷிற்கு அடுத்து உலகின் மிக அதிக நிலப்பரப்பை ஆண்ட சாம்ராஜ்ஜியம் ஆகும். அதன் உச்சபட்ச காலகட்டத்தில் அது 2.4 கோடி சகிமீ ஆண்டது . அதாவது உலகின் நிலப்பரப்பில் 16% ஆகும். பிரிட்டிஷ்ஷார் ஆண்டது 3.3  கோடி சகிமீ அதாவது  உலகின் நிலப்பரப்பில் 22% ஆகும். அதிலும் மங்கோல் சாம்ராஜ்ஜியம் ஆண்டது உலகின் தொடர்ச்சியான நிலப்பரப்பாகும். அந்த வகையில் அதுவே உலகின் மிகப் பெரியது. இதிலும் பிரிட்டிஷ்ஷார் ஆண்டது பழைய உலகம் மற்றும் புதிய உலகம் எனப்படும் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவையும் சேர்த்து. ஆனால் மங்கோல் ஆண்டது அவர்கள் காலத்தில் அறியப்பட்டஒரே உலகமான  பழைய உலகம் எனப்படும் ஆசியா,ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவில் ஆகும். அதாவது அன்றைய உலகில் 35% ஆகும்.  இந்த வகையில் பார்த்தால் அது எவ்வளவு பெரியது என்பது தெரிய வரும். ஆனால் அந்த மாபெரும் சாம்ராஜ்ஜியம் முற்றிலும் மறக்கப்பட்டது. அதற்கு ஒரே காரணம் செங்கிஸ்கான். ஆமாம் அந்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை அமைத்தது செங்கிஸ்கான்தான். 

இந்த உலகின் வரலாற்றில் அதிகம் நினைவு கூறப்படும் தலைவர்களில் மிக முக்கியமானவர்கள் என்றால் அது அலெக்சாண்டரும் , செங்கிஸ்கானும் ஆவர். ஆனால் அலேக்சாண்டரால் அதிகம் நினைவு கூறப்படும் ரோம் சாம்ராஜ்ஜியம் அளவிற்கு செங்கிஸ்கானின் மங்கோல் சாம்ராஜ்ஜியம் நினைவு கூறப்படுவதில்லை. அதற்கும் முக்கிய காரணம் செங்கிஸ்கான்தான். ஆமாம் இந்த உலகம் அலெக்சாண்டரை மாபெரும் பேரரசர் என்று எண்ணும் அதே சமயம் அது  செங்கிஸ்கானை வெறும் காட்டுமிராண்டித்தனமான ஒரு மாபெரும் கொள்ளைகூட்டத் தலைவன் போன்றே எண்ணுகிறது. 

 ஏனென்றால் அலெக்சாண்டர் நாடு பிடிக்கும் வெறி கொண்ட ஒரு நாட்டின் அரசராக பார்க்கப்படவில்லை. அதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு தன்னிடம் தோற்ற இந்திய மன்னனான போரஸை அவர் நடத்திய விதம். போரில் தோற்ற போரஸ் தன்னை ஒரு மன்னனுக்குரிய அந்தஸ்துடன் நடத்த வேண்டும் என்று அலெக்சாண்டரிடம் கூறிய பொழுது அவர் அவனின் வீரத்தைப் பாராட்டி அவனை தன்னுடன் இணைத்துக் கொண்டார். ஆனால் செங்கிஸ்கான் பெயரைக் கேட்டாலே இந்த உலகம் நடுங்கியது. பெர்சிய(இன்றைய ஈரான்)*1  படையெடுப்பின் போது செங்கிஸ்கானின் 50,000 வீரர்கள் இணைந்து கொன்ற மக்களின் எண்ணிக்கை 12 லட்சம். அதாவது ஈரான் சமவெளியில் இருந்த மக்களில் 3/4 பங்கு. இப்படி எங்கு படையெடுத்தாலும் பேரழிவு. மங்கோல் பேரரசு தான் ஆண்ட 270 வருடங்களில் கொன்ற மக்களின் மொத்த எண்ணிக்கை 3 லிருந்து 6 கோடி. அதாவது அன்றைய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 7 லிலிருந்து 17 % ஆகும். 

இப்படி செங்கிஸ்கான், வெறி கொண்ட காட்டுமிராண்டித்தனமான ஒரு தலைவனாகவே பார்கப்பட்டான். ஏன் செங்கிஸ்கானின் வழி வந்த முகலாயர்களே தங்களை செங்கிஸ்கானின் வழித் தோன்றலாக கூறிக் கொள்ளாமல் , தங்களை துருக்கிய தலைவனான தைமூரின்*2 வழித் தோன்றலாக கூறிக் கொண்டனர் 

  மங்கோலியர்களின் வாழ்க்கை கிட்டத்தட்ட குதிரையிலேயே பிறந்து , குதிரையிலேயே வளர்ந்து , குதிரையிலேயே முடிந்தது. அவர்கள் அளவிற்கு சிறந்த குதிரை வீரர்கள் கிடையாது. அங்கு சிறுவர்களை 4 , 5 வயதிலேயே குதிரையில் ஏற்றிவிடுவார்கள். மங்கோலியாவின் கடினமான காலநிலை அவர்களை முரடர்களாக ஆக்கியது. அந்த முரட்டுத்தனத்தின் மீதான பயம்தான் சீனாவை மங்கோலியாவிலிருந்து பிரிக்க மிகப் பெரிய சீனப் பெரும் சுவரை கட்ட வைத்தது . 

செங்கிஸ்கானிற்கு முன் மங்கோலியர்கள் பல இனக் குழுக்களாக பிரிந்து தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொண்டார்கள். செங்கிஸ்கான்தான் அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து அவர்களின் தலைவனாகி மாபெரும் மங்கோல் பேரரசை அமைத்தான்.அப்பொழுதுதான், அதிகபட்சம் சீனா வரை அறியப்பட்ட அவர்கள், உலகம் முழுவதும் தெரிந்தார்கள்.

 கான் என்று முடிவதாலேயே அதிகம் பேர் செங்கிஸ்கானை ஒரு முஸ்லிம் என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் அவன் முஸ்லிம் இல்லை . சொல்லப் போனால் செங்கிஸ்கான் , இஸ்லாமின் பொற்காலம் எனப்படும் காலிபாக்களின் ஆட்சியை  முடிவுக்குக் கொண்டு வந்தவன். அவன்  மங்கோலியாவைச் சார்ந்த ஒரு உள்ளூர் மதத்தைச் சார்ந்தவன். அவன் அதிக சமய சகிப்புத் தன்மை கொண்டவனாக இருந்தான். அதனாலையே அவன்  இந்த நாடு அந்த நாடு என்றில்லாமல் அனைத்து நாடுகளின் மீதும் படையெடுத்தான்.

மங்கோல் சாம்ராஜ்ஜியம் மேற்கே போலந்திலிருந்து கிழக்கே பசிபிக் பெருங்கல்டல் வரையிலும் , வடக்கே சைபீரியாவிலிருந்து தென் கிழக்கே தாய்லாந்த் வரையிலும் , தென் மேற்கே மத்திய கிழக்கு நாடுகள் வரையிலும் பரவியிருந்தது.  செங்கிஸ்கானிற்கு பின் மங்கோல் சாம்ராஜ்ஜியம் 4  சாம்ரஜ்ஜியங்களாக  பிரிந்தது. 

 உலகம் செங்கிஸ்கானை ஒரு கொடூரக் கொலைகாரனாக பார்த்த போது, மங்கோலியா அவனை தங்களின் இணையற்ற தலைவனாக பார்த்தது. அதற்கு அவர்கள் கூறும் காரணம், இந்த வரலாற்றை எல்லாம் எழுதுபவர்கள் எல்லாம் மேற்கு உலகத்தவர்கள். அதனால் அவர்கள் அலெக்சாண்டரை மாபெரும் பேரரசராகக் காட்ட செங்கிஸ்கானை ஒரு கொடூரக் கொலைகாரனாக சித்தரிக்கிறார்கள், மேலும் இந்த உலகமே மேன்மை அடைந்த பிறகு நடந்த முக்கியமாக மேற்கு  உலக நாடுகளிடையே  நடந்த உலகப் போர்களில்தான் இது வரை இல்லாத பேரழிவாக வெறும் 11 ஆண்டுகளில் 5.5 கோடி முதல் 13.5 கோடி மக்கள் இறந்தார்கள். அப்படி எனும் போது செங்கிஸ்கானை மட்டும் கொலைகாரனாக சித்தரிப்பது தவறு என்பது ஆகும்.  

1. பெர்சிய படையெடுப்பிற்கு முன் செங்கிஸ்கானின் எண்ணத்தில் இருந்தது பெர்சியா மற்றும் இந்தியா. நல்லவேளையாக அவன் தேர்ந்தெடுத்தது பெர்சியா. தப்பியது இந்தியா !
2. செங்கிஸ்கானுக்கு தைமூர் ஒன்றும் குறைந்தவனில்லை, அவனுடைய படையெடுப்பில் டெல்லி மாநகரமே அழிந்தது

Friday, January 28, 2011

கிளியோபட்ரா - 1





இந்த வருட புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் ஒன்று கிழக்கு பதிப்பகத்தின் முகில் எழுதிய கிளியோபட்ரா . உலகை மயக்கிய எகிப்தின் பேரழகி. எனக்கு இந்த புத்தகம் முன்பே அறிமுகம் என்றிருந்தாலும் , முன்பெல்லாம் இதை வாங்க தயங்கினேன். ஏனென்றால் தனி மனிதர்களைப் பற்றி நாம் wikipedia விலேயே எளிதில் படித்துக்கொள்ளலாம் என்று எண்ணி இருந்தேன் . இருந்தாலும் இந்த வருடம் அதிக தடவை புறக்கணித்த புத்தகம் என்பதாலையே இதை வாங்கினேன். கிளியோபட்ரா உலகின் பேரழகியாக இருந்ததோடல்லாமல் உலகின் மிகச் சிறந்த இரண்டு வீரர்களான ஜூலியஸ் சீசர், மார்க் ஆண்டனியை மனதை கவர்ந்தவள் . அதனால் ரோம் சாம்ராஜ்ஜியம் மற்றும் எகிப்தின் வரலாற்றையே மாற்றியவள். கிளியோபட்ரா எகிப்தில் பிறந்ததால் கருப்பழகி என்றும் இல்லை இல்லை ரோம் வம்சத்தில் பிறந்ததால் வெள்ளை அழகியே என்றும் இரு வேறு கருத்து உண்டு. அழகை பற்றிய எண்ணம் காலத்திற்கு காலம் இடத்திற்கு இடம் மாறுபடும் தான். அவளுடைய சிலை மற்றும் அவள் உருவம் பொறித்த நாணயங்கள் அவள் மேல் பெரிய பிரமிப்பை ஏற்படுத்துவதில்லை. அவள் சற்று மூக்கு நீண்டவள்தான். இருந்தாலும் அவள் வாழ்ந்த காலத்தில் அவள் அழகு அனைவரையும் மயக்கியதுதான். ஏன் இன்றும் உலகின் மிகச்சிறந்த பேரழகியாக கருதப்படுபவள்தான். அதே நேரத்தில் அவள் அகந்தை கொண்டவளாகவும் அகங்காரம் கொண்டவளாகவும் தான் நினைத்ததை எப்படியும் சாதிக்கத் தெரிஞ்சவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.

ஆனால் இப்புத்தகம் அவளது கெட்ட குணங்களாக சித்தரிக்கப்படுவதை குறித்து எதுவும் பேசவில்லை. இந்த புத்தகத்தின் மூலம் அவள் மேல் நமக்கு மிகப்பெரிய மதிப்பும் ஒரு பரவச உணர்வும் அதற்கும் மேல் அவள் மேல் நமக்கும் காதல் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அவள் இறக்கும் போது ஐயோ இவ்வளவு பெரிய பேரழகி இப்படி இறக்கிறாளே என்று ஆகப் பெரிய துக்கம் தோன்றுகிறது . இந்த புத்தகத்தின் முக்கிய அம்சம் இது கிளியோபட்ராவை பற்றி மட்டும் பேசாமல் அவள் காலத்தில் நிகழ்ந்த அனைத்து முக்கிய அம்சங்களையும் பற்றி பேசுகிறது. முக்கியமாக ஜூலியஸ் சீசர் மற்றும் மார்க் ஆண்டனி கிளியோபட்ரா மீது காதலில் வீழும் போது அதனால் ரோம் சாம்ராஜ்ஜியத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் அவர்களின் குடும்பங்களில் ஏற்பட்ட குழப்பங்களையும் பற்றி விரிவாக பேசுகிறது.

இந்தப் பதிவின் நோக்கம் பேரழகி கிளியோபட்ராதான். கிளியோபட்ரா பற்றி பேசும் போது அவளை சுற்றி நடந்த சம்பவங்களையும் பேசாமல் இருக்க முடியாது. அதனாலையே கிளியோபட்ரா பற்றிய இந்த பதிவில் அவளைப் பற்றி மட்டுமல்லாமல் மற்றவர்களையும் பற்றி வருகிறது. இது சற்றே பெரிய பதிவு என்பதால் இதை இரண்டாகப் பிரிக்கிறேன். முதல் பாகம் கிளியோபட்ராவின் முதல் காதலன் சீசருடனும் , இரண்டாம் பாகம் கிளியோபட்ராவின் இரண்டாம் காதலன் மார்க் ஆண்டநியுடனும் உள்ளது .

மாவீரர் அலெக்ஸ்சான்டரின் முக்கிய தளபதிகளில் ஒருவர் முதலாம் தாலமி சோடர். அலெக்ஸ்சாண்டர் இறந்தபிறகு அவர் அலெக்ஸ்சாண்டரால் வெற்றி கொள்ளப்பட்ட எகிப்தை ஆள கவர்னராக நியமிக்கப்பட்டார். அங்கு கவர்னராக பொறுப்பேற்றுக்கொண்ட சில காலத்திற்கு பிறகு அவர் மாஸிடோனியாவிற்கு கட்டுப்படாத எகிப்தின் சுதந்திர ஆட்சியாளராக ஆனார். இது நடந்தது கிமு 305. எகிப்தின் புதிய தலைநகரம் அலெக்ஸ்சாண்டிரியா. அலெக்ஸ்சாண்டர் தான் வெற்றி கொண்ட நாட்டிலெல்லாம் ஒரு மிகப்பெரிய நகரை உருவாக்கி அதற்கு அலெக்ஸ்சாண்டிரியா என்று பெயரிட்டார். அப்படி உருவான நகரம்தான் இந்த அலெக்ஸ்சாண்டிரியா. இது நைல் நதியின் மேற்கு முகத்துவாரத்தில் அமைக்கப்பட்ட அழகான துறைமுக நகரம். தால்மி அலெக்ஸ்சாண்டிர்யாவில் மேலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி அதை உலகின் உன்னதமான நகரங்களில் ஒன்றாக மாற்றினார். தால்மி எகிப்தியர்களை கவர எகிப்திய பெண்ணை மணம் முடித்தார். எகிப்திய கடவுள்களை வணங்கினார். எகிப்திய கலாச்சாரத்தை போற்றினார் . தால்மிக்குப் பிறகு தால்மியின் வம்சத்தினர் அடுத்த 253 ஆண்டுகளுக்கு எகிப்தை ஆண்டனர். அந்த பரம்பரையில் வந்த கடைசி ஆட்சியாளர் ஏழாம் கிளியோபட்ரா. நம் பேரழகி கிளியோபட்ரா.

கிமு 58. எகிப்தின் அரசர் 12 ஆம் தால்மி. நம் கிளியோபட்ராவின் தந்தை. 12 ஆம் தால்மிக்கு எதிராக எகிப்தில் வன்முறை. பார்த்தார் ரோமுக்கு தப்பியோடிவிட்டார். அவருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். ஆறாம் கிளியோபட்ரா , நான்காம் பெரினைஸ் , ஏழாம் கிளியோபட்ரா , நான்காம் அர்சினோ , 13 ஆம் தால்மி , 14 ஆம் தால்மி . நான்காம் பெரினைஸ் தந்தைக்குப் பிறகு ஆட்சியை கைபற்ற எண்ணினார். அப்பொழுது மகன்களான 13 ஆம் தால்மி , 14 ஆம் தால்மி சிறுவர்கள். அப்பொழுது எகிப்தில் அரசன் அரசியாக இருந்தால் மட்டுமே எகிப்தை ஆள முடியும் . அப்பொழுது எகிப்தில் சகோதரனும் சகோதரியும் திருமணம் செய்து கொள்வது வழக்கம். காரணம் எகிப்தியர்களின் கடவுளின் தாயான ஐசிஸ் தன் சொந்த சகோதரனான ஆஸிரிஸை திருமணம் செய்து கொண்டாள். பார்த்தாள் பெரினைஸ் சிறுவர்களான தன் சகோதர்களை திருமணம் செய்து கொள்ள முடியாது . வெளியிலிருந்து மாப்பிளை தேடி திருமணம் செய்துகொண்டாள். ரோம் தப்பிச் சென்ற 12 ஆம் தால்மி ரோமானியர்களின் உதவியைப் பெற்றார். ஒரு பெரிய ரோமானிய படை எகிப்தின் மீது படையெடுத்து அதை கைபற்றியது . மீண்டும் 12 ஆம் தால்மி அரசரானார். மகள் பெரினைஸ் கொல்லப்பட்டாள். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் எகிப்தை கைபற்றிய ரோமானிய படைகளின் துணைத்தளபதி மார்க் ஆண்டனி !.

12 ஆம் தால்மிக்கு வயதாகிவிட்டது. அவர் தனக்குப் பிறகு இருந்தவர்களில் மூத்தவளான நம் கிளியோபட்ராவுக்கு முடிசூட்ட எண்ணினார் . எகிப்தில் அரச அரசிதான் அரசாள முடியுமே அதனால் தன் மகன் 11 வயது 13 ஆம் தால்மிக்கும் 18 வயது மகள் நம் கிளியோபட்ராவுக்கும் மணம் முடித்தார். கிளியோபட்ரா அரசியானார். 12 ஆம் தால்மியின் நெருங்கிய நண்பராக போதினஸ் என்னும் திருநங்கை இருந்தார். அவருக்கு நம் கிளியோபட்ரா அரசியானது பிடிக்கவில்லை. அதனால் 13 ஆம் தால்மியை தூண்டி கலகத்தை ஏற்படுத்தினார். உயிருக்கு பயந்த நம் கிளியோபட்ரா அங்கிருந்து தப்பினார்.

நம் பேரழகி கிளியோபட்ரா தினமும் குளிப்பது கழுதைப் பாலில்தான் . தினமும் ஆலிவ் எண்ணெய் தேய்த்து குளிப்பார். தன் அழகை மெருகூட்ட மருதாணியைப் பயன்படுத்தினார். முகத்துக்கு இயற்கை க்ரீம் , கண்ணுக்கு மை , உதட்டுக்குச் சாயம் , முகப் பொலிவுக்கு பூச்சுகள் , வாசனைக்கு திரவியங்கள் இப்படி எல்லாமே உபயோகப்படுத்தினாள். அவளுக்கு நகைகள் மீது மிகப் பெரிய பிரியம் . கை , கால் , கழுத்து அனைத்துக்கும் தங்க நகைகள். உடை ரோம் கிரேக்க ராஜ குடும்ப பாணியில் . பட்டுத்துணியால் ஆன உள் அங்கி , பின் இடுப்புக் கயிறு, அதற்கு மேல் பெரிய ஆளுயர அங்கி. அவை பல வண்ணங்களில் இருந்தன. கிளியோபட்ராவுக்கு தான் உயரம் குறைவானவள் என்று எண்ணம் . அரண்மனைக்குள் வெறும் காலுடன் நடக்கும் நம் பேரழகி வெளியில் செல்லும் போது குதிங்கால் உயர்ந்த செருப்புகளை அணிந்தாள். தால்மி தன் பெண் மக்கள் உட்பட அனைவரையும் படிக்க வைத்தார். நம் கிளியோபட்ராவுக்கு தத்துவம் , கணிதம் , மருத்துவம் ,கலை, இலக்கியம் , இசை சம்பந்தப்பட்ட பாடங்களில் அதிக ஈடுபாடு . அவளுக்கு எகிப்தியன், அரமைக், எத்தியோபியன்,கிரீக், ஹீப்ரு மற்றும் லத்தீன் ஆகிய ஆறு மொழிகள் தெரியும் .இந்த அழகும் அறிவும் ஒருவருக்காக காத்திருந்தன. அது மாவீரர் ஜூலியஸ் சீசர் !.


அப்பொழுது ரோம் சாம்ராஜ்ஜியம் குடியரசு. அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செனட் சபை இருந்தது. அப்பொழுது ரோமில் இரண்டு பேர் அதிகாரம் மிகுந்தவர்கள் . ஒருவர் ஜூலியஸ் சீசர் . மற்றொருவர் போம்பே . போம்பே சீசரின் மருமகன் தான் . ஆனால் இருவருக்கும் அதிகாரப்போட்டி. சீசர் பல போர்களில் பங்கேற்று போர் பயிற்சி பெற்றவர். ஆனால் போம்பேவோ செனட்டில் அதிகாரம் மிகுந்தவர். இருவருக்கும் ஏற்பட்ட போரில் போம்பே தப்பி 13 ஆம் தால்மியிடம் சரணடைந்தார் . அங்கு அவர் போதினேஸ்ஸால் படுகொலை செய்யபட்டார். காரணம் சீசரின் ஆதரவைப் பெறுவது. இது அறியாமல் அலெக்ஸ்சாண்டிரியா அடைந்த சீசரிடம் பரிசாக போம்பேயின் தலை ஒப்படைக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த சீசர் அவர் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்யச் சொன்னார்.

தப்பிச் சென்ற நம் பேரழகி சீசரின் உதவியைப் பெற்றால் தான் மீண்டும் அரசியாக முடியும் என்று எண்ணி அலெக்ஸ்சாண்டிரியாவை ரகசியமாக அடைந்தார். கிளியோபட்ராவின் உதவியாளன் ஒரு போர்வையில் சுற்றிய பரிசுடன் சீசரை தனிமையில் சந்தித்தான். சீசர் அது என்ன என்று கேட்ட போது அவன் அதை உருட்டி விட்டான் . உருண்டு வந்தது நம் பேரழகி, நிர்வாணமாக !. நீள் வட்ட முகம் , நீள நீல கண்கள் , வளமான புருவம் , வளைவில் மிளிரும் நாசி , வில்வடிவ மேலுதடு , விளைந்த கனியாக கன்னங்கள் , இளமை மிதக்கும் பார்வை , செதுக்கிய கரங்கள் , சிற்றிடை வளைவுகள் , செழுமை கொண்ட அங்கங்கள் , மினுமினுக்கும் சருமம் , மிதமிஞ்சிய பேரழகு. நம் பேரழகியின் அழகில் சீசர் விக்கித்துதான் போய் விட்டார். கீழே விழுந்த பெண்ணை கை பிடித்து தூக்கக் கூடாதா என்று நம் பேரழகி கேட்டவுடன்தான் சீசருக்கு நினைவு திரும்பியது. அதுவரை போதிநேச்சை ஆதரித்த சீசர் நம் பேரழகியின் வலையில் விழுந்து விட்டார் . அந்த கணமே கிளியோபட்ராவுக்காக எதையும் செய்ய துணிந்தார்.


போதிநேச்சுக்கு சீசர் கிளியோபட்ரா பக்கம் சாய்ந்துவிட்டார் என்பது தெரிந்துவிட்டது. ஆகவே சீசரை அலெக்ஸ்சாண்டிரியாவிலேயே வைத்து கொன்றோ அல்லது கைது செய்தோ விடவேண்டும் என்று போதினேஸ் படை திரட்ட ஆரம்பித்தார். இதையடுத்து போதினேஸ் கொல்லப்பட்டார். சீசரிடமும் படை பெரிய அளவில் இல்லை. 13 ஆம் தால்மியிடமும் படை பெரிய அளவில் இல்லை. எகிப்திய படைகள் வெகு தொலைவில் இருந்தன. அந்த படைகள் போதினேசின் துணை தளபதி அக்கிலிஸ் தலைமையில் இருந்தது. போதினேஸ் கொல்லப்பட்டபிறகு 13 ஆம் தால்மியும், அர்சினோவும் வெளியேறி அக்கிலிசிடம் அடைந்தனர். இப்படை பிறகு சீசரால் வீழ்த்தப்பட்டது. சீசர் தன் காதலியின் காலடியில் எகிப்தை வைத்தார். சீக்கிரத்திலேயே கிளியோபட்ரா நல்ல செய்தி சொன்னாள். சீசருக்கும் கிளியோபட்ராவுக்கும் ஆண் குழந்தை பிறந்தது. பெயர் 15 ஆம் தால்மி சீசர். செல்லமாக சீசரியன் (Little Caesar).

சீசருக்கு சீசரியன் தவிர வேற ஆண் வாரிசு இல்லை . கிளியோபட்ராவுக்கு சீசரியனை சீசர் தன் வாரிசாக அறிவிக்க வேண்டும் என்று ஆசை. சீசருக்கும் ஆசைதான். ஆனால் கிளியோபட்ரா சீசரின் காதலியாக இருப்பதற்கே ரோமில் எதிர்ப்பு கிளம்பியிருந்தது . மேலும் எகிப்தியர்களுக்கும் சீசர் கிளியோபட்ரா உறவு பிடிக்கவில்லை. மேலும் ரோமிலிருந்து சீசரை தேடி ஆள் மேல் ஆள் வந்து கொண்டிருந்தார்கள். சீசருக்கு ரோம் கிளம்பவேண்டிய கட்டாயம். கிளியோபட்ராவுக்கு விருப்பமே இல்லை. அழுது அடம் பிடித்தாள். சீசருக்கு அவளை சமாதானப்படுத்துவதே பெரும்பாடாக இருந்தது. ஒருவழியாக சீசர் ரோம் கிளம்பினார்.

சீசருக்கு ரோம் சாம்ராஜ்ஜியத்தின் பேரரசராகவேண்டும் என்பது பெரும் கனவு. கவனிக்கவும் ரோம் அப்பொழுது குடியரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செனட் நாட்டை ஆண்டது . ரோமை அடைந்த சீசர், தான் பேரரசராக நடவடிக்கைகளை மேற்கொண்டார். செனட்டில் பெரும் எதிர்ப்பு . மேலும் சீசருக்கு கிளியோபட்ராவை பிரிந்திருக்கவும் முடியவில்லை . ஆள் அனுப்பி நம் கிளியோபட்ராவை ரோம் வரவழைத்தார். ரோம் மக்களும் கிளியோபட்ராவின் அழகை பார்த்து வாய் பிளந்தது உண்மை . கிளியோபட்ரா வரும் போது சீசரினையும் கூட்டி வந்திருந்தாள் .

சீசர் அன்று செனட் கிளம்பினார். அன்று அவர் அரசராவது குறித்து செனட்டில் முடிவெடுக்கப்பட இருந்தது . கிளியோபட்ரா ஏதோ கெட்ட சகுனம் கண்டு அவரை செனட் செல்ல வேண்டாம் என்று அழுது அடம்பண்ணினாள். சீசர் அவளை சமாதானம் பண்ணி செனட் கிளம்பினார். செனட்டில் காலடி எடுத்துவைத்தார். ப்ரூட்டசும் (you too brutus புகழ் ) செனட் வந்திருந்தார் . அவரும் செனட் உறுப்பினர். ப்ரூடச்சும் மற்ற செனட் உறுப்பினர்களும் சேர்ந்து தங்கள் அங்கியில் மறைத்து வைத்திருந்த கத்தி கொண்டு சீசரை குத்தினர் . நோக்கம் ரோம் குடியாட்ச்சியை காப்பாற்றுவது. மொத்தம் 23 குத்துகள். சீசர் இறந்தார். கிளியோபட்ராவுக்கு ஆற்ற மாற்றாத துக்கம் . சீசரின் உடலை பார்க்க எண்ணினாள் . இருந்தும் தன் பாதுகாப்பு கருதி தன் மகன் சீசரினுடன் ரோமிலிருந்து வெளியேறினாள். சீசரின் உடல் தகனம் செய்யப்பட்டது. கேள்விப்பட்ட கிளியோபட்ரா தன்னிடம் அவர் உடலை ஒப்படைத்திருந்தால் சீசருக்கு தான் எகிப்தில் ஒரு பிரமிடு கட்டி இருப்பேன் என்றாள்.