Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Sunday, April 22, 2012

தண்ணீர் இல்லா தேசம்


இந்த வெயில் காலத்துல வெளில போனா தண்ணி குடிக்க ஒவ்வொரு பஸ் ஸ்டாப்புளையும் கடை கடையா தண்ணி தேடி ஓட வேண்டியதா இருக்கு. அப்பலாம் தோணும் இப்ப முக்குக்கு முக்கு இருக்குற கடைல தண்ணி பாட்டில் வாங்கி தண்ணி குடிச்சுப்போம். ஆனா அந்த காலத்துல மக்கள் கால்நடையா இந்த உலக சுத்தி வந்தப்ப எங்க தண்ணிக்குப் போயிருப்பாங்கன்னு . ஆனா நிச்சயமா அந்த காலம் இன்று போல் இருந்ததில்ல. அப்பலாம் எந்த ஊருக்குப் போனாலும் எந்த வீட்டிலையும் தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்கும். இல்லனா ஊர் ஊர்ல இருக்கும் ஆறு, குளம்னு எங்கயும் தண்ணி மொண்டு குடிச்சு தாகத்த தீத்துக்குவாங்க . ஆனா இப்ப அப்படியா!. அப்பலாம் தண்ணிய பத்துன பயம் இல்லாம இருந்துச்சு . அய்யயோ தண்ணி நல்லா இல்லையே , இப்படி திறந்த ஏரி , குளத்துல இருக்குற தண்ணிய குடிக்கலாமாங்குற பயம் இல்ல.

இப்பலாம்  எங்கயும் திறந்த வெளியா இருக்குற ஆறு , குளத்துல யாரும் தண்ணி மொண்டு அப்படியே குடிக்கிற மாதிரி பாக்க முடியல. ஆனா அது எல்லாம் இந்த கொஞ்ச காலமாதாங்க. எனக்குத் தெரிஞ்சு பதினஞ்சு, இருபது வருசத்துக்கு முன்னாடி கூட இப்படி இல்ல .  ஒரு பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி எங்க அப்பா எங்கள குடும்பத்தோட வட இந்தியா டூர் கூட்டிட்டுப் போனாங்க. 23 நாள் டூர் , அதுவும் ப்புல்லா பஸ்ல!. ஒரே பஸ்ல எங்களோட இன்னும் 45 பேர் வந்தாங்கா. திருநெல்வேலில  ஆரம்பிச்சு , சிம்லா வரைக்கும் போய் திரும்பி அதே பஸ்ல திருநெல்வேலி திரும்புனோம்!. அப்ப நாங்க குடிச்சதெல்லாம் வெறும் ஆத்துத் தண்ணி. போற வழி எல்லாம் இருக்குற ஆறுகள்ள இருந்த தண்ணி . அப்பலாம்  திறந்த தண்ணி , அசுத்தம் , புது தண்ணினு எந்த பயமும் கிடையாது. ஆனா இப்ப நம்ம வீட்டுக் குழாய்ல வர்ற தண்ணியையே குடிக்க பயப்படுறோம். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நான் திருப்பியும் வட இந்தியா  போயிருந்தேன். அப்ப நான் குடிச்சதெல்லாம் 1 லிட்டர்  ரூபி 15 , 20 ங்குற பாட்டில் தண்ணிதான். 90 கள்ள நாங்க போன அந்த டூர்ல ஒரு விஷயம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நோர்த் இந்தியா ரொம்ப hot ங்குறதால குளிர்ச்சியான தண்ணிக்காக  தோல்ல செஞ்ச ஒரு பையில தண்ணி ரொப்பி அத பஸ்ல ஜன்னலுக்கு வெளில தொங்கப் போட்டுருப்பாங்க. பஸ் போறப்ப வீசுற காத்துல அந்த பை குளுந்து ஜில்லுனு ஆயிரும் . அந்த தண்ணிய எடுத்துக் குடிப்பாங்க. ஆனா அந்த மாதிரி ஒரு அடையாளத்தையே இந்த தடவை அங்க பாக்க முடியல . எங்கயும் பாட்டில் தண்ணிதான். 

நாங்க முத முதலா எப்ப காசு குடுத்து குடிக்க தண்ணி வாங்குநோம்னு எனக்கு இப்பயும் நல்லா ஞாபகம் இருக்கு. அதுவும் பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடிதான். அப்ப நாங்க இருந்த புதுக்கோட்டை மாவட்டத்துல இருந்து , ராமநாதபுரம் மாவட்டுதுல இருக்குற முதுகுளத்தூருக்கு வந்தோம். அப்ப நாங்க முதுகுளத்தூருக்கு கிளம்புனப்ப எங்க பக்கத்து வீட்டுக்காரங்கலாம் கேட்டாங்க , ஏங்க புது ஊர்லலாம் குடிக்க தண்ணி எப்படிங்கனு? . அப்ப எங்க அம்மா  , குடிக்க ஒரு குடம் 50 காசுனு வாங்கனும்மாம்னு சொன்னாங்க. அங்க இருக்குறவங்கலாம் , அடி ஆத்தீ, என்னது  குடிக்கிற தண்ணிய காசு குடுத்து வாங்கனுமாம்லன்னு! அவ்ளோ ஆச்சரியப்பட்டாங்க. பாத்துக்குங்க அப்பா  நாங்க வாங்குனது ஒரு குடம் 50 பைசா, இப்ப நாங்க குடிக்கிற தண்ணி 20 ltr 80 ரூபா !. நிச்சயமா சொல்றேன், குடி தண்ணிக்கு காசானு கேட்ட அதே ஊர் இன்னைக்கு காசு கொடுத்து கேன் தண்ணி வாங்கித்தான் குடிப்பாங்க.

இப்ப நாம குடிச்சிட்டு போடுற 1 ltr தண்ணி பாட்டிலலாம், அப்ப பழைய பேப்பர் வண்டிக்காரங்கலாம் கொண்டு வருவாங்க . அந்த ஒரு காலி பாட்டில் 2 ரூபா. அப்ப உங்களுக்கு எப்படிங்க இந்த பாட்டிலலாம் கிடைக்குதுன்னு கேட்டா அவங்க , இதலாம் பணக்காரங்க 15 ரூபா , 20 ரூபான்னு வாங்கி குடிக்கிறது . அவங்கட்ட இருந்து இதை நாங்க வாங்கிட்டு வரும்வோம்னு சொல்லும்போது என்னது ஒரு லிட்டர் தண்ணி இருபது ரூபையானு  ஆச்சரியமா இருக்கும் .

ஒரு காலத்துல இந்த பாட்டில் தண்ணி , கேன் தண்ணிலாம் Status symbols.  ஆனா இப்ப அது அத்தியாவசியமா(க்கப்பட்டு)கிவிட்டது.

இந்த தண்ணி business ஒரு பணம் காச்சி மரம். கோடிக்கணக்கா பணம் கொழிக்குது. அதனாலதான் உள்ளூர் குடிசைத் தொழிலுல இருந்து உலகில இருக்குற பெரிய MNC வரைக்கும் இதுல ஈடுபடுறாங்க. இதுல பெரிய தொழில் சூச்சுமமே இருக்கு. எப்பயுமே வருசத்துக்கு ஒரு தடவ விக்கிற ஒரு பொருளுல இருந்து கிடைக்கிற பெரிய லாபத்தவிட , தினமும் யூஸ் பண்ற ஒரு  பொருள விக்கிறதுல கிடைக்குற சின்ன லாபம் பெரிசு. ஏன்னா இந்த சின்ன லாபம் நிலையானது, அதோட volume உம் பெரிசு. அதுல செம லாபம் கிடைக்கும். அதுதான் இந்த குடிக்கிற தண்ணி விசயத்துலயும் நடக்குது.

இப்ப இருக்குற business tactics லாம் ரொம்ப தெளிவானது. இப்பலாம் business ல Status ங்குறத விட அதிகமா முன் வைக்கப்படுவதுனா அது மூனு விஷயம்தான்.
  1. Safety
  2. Security
  3. Health Conscious .
ரொம்ப அழகான ஆனா வலிமையான tactics. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆள் அரவமற்ற  ஒரு மலைப்பாங்கான ஒரு இடத்துக்கு என் friends ஓட போயிருந்தோம். அப்ப அங்க சின்னதா ஒரு ஓடை தெளிவான நீரோட  ஓடிக்கிட்டு இருந்துச்சு. அத பாத்ததும் ஆசையாகி நான் போயி கொஞ்சம் தண்ணி அள்ளிக் குடிச்சேன். அப்ப என் மனைவி, ஏங்க அந்த தண்ணிலாம் குடிக்காதீங்க , அது என்ன தண்ணியோனு சொன்னப்ப நான் அதிர்ந்து போயிட்டேன்.  ஆள் அரவமற்ற இடத்துல இருக்குற  இந்த ஓடத் தண்ணி தெளிவானது, சுத்தமானது ஏன் சொல்லப் போனா கடைல கிடைக்குற பல பாட்டில் தண்ணிலாம் விட ரொம்ப ஆரோக்கியமனதுன்குறது ரொம்ப நல்லாவேத் தெரியும் . ஆனா அதையும் தாண்டி எழுற இந்த Health Conscious இருக்குல, அதுதான் business tactics, இப்படி மக்கள பயப்பட வச்ச அந்த விளைவுதான் அதோட மாபெரும் வெற்றி.


ஆனா இப்படி தயாரிக்குற தண்ணியும் ஆரோக்கியமானதாங்குறதும் விவாததிற்குரியது .


சின்ன வயசுல்லாம்  நினைச்சுக்குவேன், நாமும்  பெரிய பணக்காரனா ஆகி இப்படி தண்ணி பாட்டில்ல தண்ணி வாங்கி குடிக்கனும்னு. ஆனா இப்படி  நாம தினமும் குடிக்கிற அந்த தண்ணியையே காசு குடுத்து வாங்குற இந்த நிலைமை உருவாக்கப்பட்டத நினச்சு வெக்கப்படுறேன்.

லட்சக்கணக்கான வருடங்களா இந்த பூமியில் ஜீவராசிகள் குடிச்சுகிட்டு இருந்த தண்ணிய  நம்மால குடிக்க முடியாம செஞ்ச, அந்த குடி தண்ணியையே காசு குடுத்து வாங்குற மாதிரி செஞ்ச இந்த அதி பயங்கர மாற்றத்த நான் வெறுக்குறேன். இப்படி லட்சக்கணக்கான வருடமா நல்லா இருந்த தண்ணி கேட்டுப் போனது வெறும் 15 , 20 வருசத்துலதான். என்ன கொடும இது .


என்னடா இவன் அந்த காலத்துல (அந்த காலம்னா ரொம்ப காலம் இல்லங்க வெறும் 15,20 வருசம்தான்!), ஆத்துல தண்ணி மொண்டு குடிச்சேன் இப்ப  வேறு வழி இல்லாம பாட்டில்  தண்ணி குடிக்கிறேன்னு புலம்புறான் . சுத்தமான பாட்டில் தண்ணிய வளர்ச்சியோட அடையாளமா ஏத்துக்காத பழம் பிற்போக்குவாதியா இருக்குனான்னு நினைக்காதீங்க. நான் எந்த கவலையும் இல்லாம குடிச்ச அந்த சுத்தமான ஆத்துத் தண்ணிய அசுத்தமாக்குனது, அந்த அசுத்தத சரி பண்ணாம அந்த அசுத்தத்த மூலதனமா வச்சு பணம் பண்ணுறத எதோட அடையாளம்னு முதலில் புரிஞ்சுக்கோங்க .

இப்படி ஒரு மனுஷனுக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்னான தண்ணியையே காசு கொடுத்து வாங்க வச்சதுக்கு நம்ம அரசாங்கம்தான் வெக்கப்படனும். இன்னும் கொஞ்ச நாள் ஆனா உயிர் வாழ அத்தியாவசியத் தேவையான ஆக்சிசனையே காசு கொடுத்து வாங்க வச்சாலும் நாமும் அதையும் எதிர்க்காமல்,  இதலாம் வளர்ச்சியின் கூறுகள்னு சொல்லி ஏத்துகத்தான் போறோம். அந்த காலம் ரொம்ப தூரம் இல்ல. 
Photo Courtesy : http://naturalsociety.com/the-bottled-water-deception/


Sunday, February 19, 2012

இந்தியாவும் அதன் அயலுறவுக் கொள்கைகளும்

சென்ற வாரம் நம்மளுக்கு மிக அருகில் இருக்கும் மாலத்தீவில் பல போராட்டங்களுக்குப் பிறகு அதிபர் பதவி விலகினார் . அதுக்கப்புறம் அவர், என்னைய துப்பாக்கி முனையில்தான் பதவி விலக வைத்தார்கள் என்று சொல்ல, பெரிய பிரச்சினை. இவ்வளவு போராட்டங்களையும் எப்பயும் போல இந்தியா ரொம்ப மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தது. அதுக்கு அப்புறம் அமேரிக்கா இந்த விசயத்துல தலையிட ஆரம்பிச்சதும்தான் இந்தியா கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு தன்னுடைய வெளியுறவுத்துறை செயலாளரை அங்கு அனுப்பி வைத்தது.

பொதுவாக இந்தியா தன்னுடைய ராஜதந்திர ரீதியிலான வெளியுறவுக் கொள்கையில் பெரிதாக எதுவும் சாதித்ததில்லை. அதற்கு என்று பெரிதாக சிறந்த நட்பு நாடுகள் எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அதனுடைய அண்டை வீட்டுக்காரர்களுடனேயே பெரிதாக அதற்கு நல்ல உறவு இல்லை. இதைதான் சீனா " இந்தியா தூரம் இருப்பவர்களுடன் நட்பாகவும் அருகில் இருப்பவர்களுடன் விரோதத்துடனும் உள்ளது " என்று கூறுகிறது. இப்படி பக்கத்தில் உள்ளவர்களுடன் விரோதத்தையும் தூரத்தில் உள்ளவர்களுடன் நட்பையும் கொண்டிருப்பது , இந்தியாவே தேடிக்கொண்டதா இல்லை அதற்கு அப்படி இயல்பாக அமைந்ததா என்பது விவாதத்திற்குரியது. ஆனால் இப்படி ஆனது அதன் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த தோல்வியே ஆகும். சில நேரங்களில் எனக்கு இது நம் மக்கள் எப்பொழுதும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் விரோதத்துடன் இருக்கும் மனோநிலையின் பிரதிபலிப்பாகவே தெரிகிறது ;). ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்தியா தூரத்தில் உள்ளவர்களுடனும் பெரிதாக நட்பு கொண்டிருக்கவில்லை.

இப்படி அமைவதற்கு முக்கிய காரணம் இந்தியா எந்த ஒரு விசயங்களிலும் பெரிதாக ஆக்டிவாக இருந்ததில்லை. எப்படி அடுத்த நாடுகளின் விசயங்களில் அதிகமாக மூக்கை நுழைப்பது தவறோ அதே போல் பக்கத்து நாடு பிரச்சினையில் இருக்கும் போது அதை கண்டும் காணாமல் இருப்பதும் தவறு. சில விசயங்களில் இந்தியா ஆக்டிவாக இருந்திருக்கிறது, இல்லை என்று சொல்ல வில்லை . எடுத்துக்காட்டாக பங்களாதேஷ் பிரிவினையை சொல்லலாம். அந்த பிரிவினையின் போது இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டது ஆனால் அதற்கடுத்து அது பங்களாதேஷுடன் மிகச் சிறப்பான நல்லுறவை மேற்கொள்ளவில்லை. இன்று பங்களாதேஷில் பல பேர் இந்தியாவை எதிரியாகப் பார்க்கிறார்கள். சில நேரங்களில் அது முன்னெடுத்த பல செயல்கள் அதற்கு எதிராகவும் அமைந்திருக்கிறது. எடுத்துக்காட்டு இலங்கைக்கு இந்தியா அனுப்பிய அமைதிப் படை நடவடிக்கை. இந்தியா எந்த நோக்கத்திற்காக அங்கு அமைதிப் படையை அனுப்பியதோ அது நிறைவேறவில்லை. அந்த அமைதிப் படை இந்தியா திரும்பிய போது அது இலங்கை , இலங்கைத் தமிழர்கள் என்ற இரு தரப்பாலும் வெறுக்கப்பட்டே அனுப்பப்பட்டது.

தெற்காசிய நாடுகளுக்கிடையே நட்புறவை ஏற்படுத்த இந்தியா முன்னின்று அமைத்த SAARC கூட்டமைப்பு பெரிதாக எதையுமே சாதிக்கவில்லை. அது யூரோப்பியன் யூனியன் (EU) போலவோ, இல்ல தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டணியான ASEAN போலவோ , இல்லை வர்த்தகத்துக்காக அமைந்த OPEC போலவோ, இல்லை ராணுவ கூட்டணியாக அமைந்த NATO போலவோ வெற்றி பெறவில்லை. இப்படி SAARC பெரிதாக சாதிக்காமல் இருப்பதற்கு அதில் இருக்கும் பெரிய, வலுவான நாடு என்ற முறையில் இந்தியாவிற்குதான் பொறுப்பு அதிகம். இந்திய - பாகிஸ்தான் போர்களின் போதோ, இல்லை இந்திய சீன போரின்போதோ, இல்லை பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த படுகொலைகளின் போதோ , இல்லை இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப் படுகொலைகளை தடுப்பதற்கோ SAARC பெரிதாக எதையும் சாதிக்கவில்லை . சரி நம்மளுக்குள் சண்டை போடும்போதுதான் SAARC எதையும் செய்யவில்லை , குறைந்தபட்சம் சம்பந்தம் இல்லாத வெளிநாடுகளில் நடக்கும் பிரச்சினைகளிலாவது அது ஏதாவது சாதித்தா என்றால், இல்லை.

இந்தியா தன்னுடைய அண்டை வீட்டுக்காரர்களுடன் ஒழுங்கான உறவு பேணாததாலேயே இன்றும் , இனி வரும் காலங்களிலும் அது பெரிய பிரச்சனைகளை சந்திக்கிறது/ சந்திக்கப் போகிறது. இன்று நம்மைச் சுற்றி இருக்கும் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவு , மியான்மர் இப்படி அனைத்து நாடுகளும் இந்தியாவை விட சீனாவிற்கே நட்பு நாடுகள். Pearl Necklace என்ற பதத்தின் பேரில் சீனா, இந்தியாவை சுற்றி வளைக்கிறது. இன்று சீனா, பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவு , பாகிஸ்தான், மியான்மர் இப்படி நம்மை சுற்றி இருக்கும் அனைத்து நாடுகளிலும் அது ஒரு துறைமுகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்த துறைமுகங்களில் சிலவற்றில் தன்னுடைய கடற்படையை நிறுத்துமோ என்ற கவலையையும் தருகிறது . இங்கு கவனிக்கவும் அமெரிக்கா, ரஷ்யாவை விட ரஷ்யாவிற்கு ஏவுகணை தளம் அமைக்க இடம் கொடுத்த தன் அண்டை நாடான கியூபாவைக் கண்டே அதிகம் பயப்பட்டது.

எப்பொழுதும் நம் பக்கத்து நாட்டிற்குள் அடுத்த நாடு நுழைஞ்சா நம்மளுக்குத்தான் பிரச்சினை. இந்த விசயத்தில் அமெரிக்காவும் சீனாவும் அதற்கு இடம் கொடுத்ததில்லை. சமீபத்தில் இந்தியா , வியட்நாமுடன் எண்ணெய் எடுக்க ஒப்பந்தம் செய்த போதே சீனா அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் நம் நாட்டிற்குள் நாம் எங்கோ இருக்கும் அமெரிக்காவையும், சீனாவையும் விடுகிறோம்.

சரி அண்டை நாடுகளுடந்தான் இப்படி, தூர தேசங்குளுடனாவது இந்தியா உறவுகளை மேற்கொள்கிறதா என்றால், இல்லை. இன்று அமெரிக்காவை விட சீனாவே அதிக உறவுகளை மேற்கொள்கிறது. இன்று சீனா நுழையாத நாடே கிடையாது. அது பக்கத்திலுள்ள ASEAN னிலிருந்து அயல்தூரத்தில் இருக்கும் ஆப்ரிக்கா, தென் அமேரிக்கா வரை அனைத்து நாடுகளுடனும் உறவை மேற்கொள்கிறது. அது ஆப்ரிக்காவில் இருக்கும் கனிம வளங்களுக்காகட்டும், இல்லை தென் அமெரிக்காவில் இருக்கும் இயற்கை வளங்களுக்காகட்டும் அது தற்பொழுது இந்தியாவை விட நிறைய உறவுகளைக் கொண்டுள்ளது.

இந்த விசயங்களில் எனக்கு அமெரிக்காவையும் , சீனாவையும் ரொம்ப பிடிக்கும். அவை தங்களுக்கு வேண்டிய நாடுகளை அணி சேர்த்துக் கொண்டும் , வேண்டாத நாடுகளை அண்ட விடாமலும் இருக்கும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது அமேரிக்கா, ரஷ்யா என்ற எந்த ஒரு அணியுடன் சேராமல் இருக்க அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பை அமைத்தது. அது அமெரிக்க, ரஷ்ய அணிகளுக்கு சிறந்த மாற்றாக இருந்திருக்க வேண்டும் . ஆனால் அது நம்ம ஊர் அ.தி.மு.க, தி.மு.க அணிகளுக்கு எதிரான மூன்றாவது அணி போலவே இருந்தது. பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. அந்த அணியில் முக்கிய உறுப்பு நாடாக இருந்த இந்தியாவே கிட்டத்தட்ட ரஷ்ய அணியில்தான் இருந்தது.

இப்படி நம் வெளியுறவுக் கொள்கை நமக்கு பெரிய பலன்களை எதுவும் கொடுக்கவில்லை . சொல்லப் போனால் இந்தியா , தனக்கு உலக அரங்கில் கிடைத்த பல வாய்ப்புகளை வீணடித்துள்ளது. இன்னும் சில நேரங்களில் இந்தியாவின் அயலுறவுக் கொள்கை இந்தியாவிற்கே வினையாகவும் அமைந்துள்ளது.

பிரச்சினை என்னவென்றால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் இன்னும் நேரு காலத்திலேயே இருக்கிறது. அது எதனால் என்றுதான் தெரியவில்லை. நேருவின் கொள்கைகள் சாகா வரம் பெற்றவை, அவை என்றும் வெற்றி பெற்றவை என்று காட்டுவதற்கான அடமா என்று தெரியவில்லை . அதனால் தான் அணியே இல்லாத உலகில் அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு இன்றும் உள்ளது என்றார் பிரணாப் முகர்ஜி. யாருமே இல்லாத கடைல யாருக்குத்தான் டீ ஆத்துராங்களோ தெரியல :(

இப்படி வெற்றியடையாத வெளியுறவுக் கொள்கையுடன் நாம் Global Power என்ற அடைமொழிக்கும், ஐநாவில் Veto அதிகாரத்துடன் கூடிய நிரந்தர அந்தஸ்துக்கும் ஆசைப்படுகிறோம்.

சாணக்கியர் வாழ்ந்த நாடு ஆனால் சுதந்திர இந்தியாவிற்குத்தான் வெளியுறவுக் கொள்கைகளில் ராஜதந்திரி என்னும் நபர் இன்னும் கிடைக்கவில்லை :( .

Thursday, August 11, 2011

என்று தெளியும் இந்த நாடு ?

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் வளங்களைப் பொறுத்தது. இந்த வளங்கள் பெரும்பாலும் இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் குறிக்கும். சில நாடுகள் ( எ.கா தென் அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள்) மிகுந்த இயற்கை வளங்களையும் குறைந்த மனித வளத்தையும் கொண்டும், சில நாடுகள் (எ.கா ஜப்பான்) அதிக மனித வளத்தையும் குறைந்த இயற்கை வளங்களையும் கொண்டும் வளர்கின்றன. மிகக் குறைந்த நாடுகளே சமச்சீரான இயற்கை வளங்களையும் , மனித வளத்தையும் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்று இந்தியா.

இந்தியா அளவிற்கு மனித வளத்தையும் , இயற்கை வளங்களையும் கொண்டுள்ள நாடுகள் மிகச் சிலவே. எ.கா அமெரிக்கா, சீனா போன்றவை மற்ற சில.
ஆனால் அந்த வளங்களை ஒரு நாடு எந்த அளவிற்கு முறையாக பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் தலைமுறை முன்னேற்றம் உள்ளது. அதுவே அதனுடைய முதிர் தன்மையைக் ( Maturity) காட்டும்.

இந்தியாவில் இருக்கும் இயற்கை வளங்களில் கனிம வளங்களும் அடக்கம். ஒரு நாட்டிற்கு கனிம வளங்கள் மிக முக்கியமானது. உலக அளவில் இந்திய நிலக்கரி மற்றும் லிக்னைட் உற்பத்தியில் 3 வது இடமும் , பாரைட் உற்பத்தியில் 2 வது இடமும் , இரும்புத்தாது உற்பத்தியில் 4 வது இடமும், பாக்சைட் மற்றும் crude steel உற்பத்தியில் 5 வது இடமும் , மாங்கனீசு தாது மற்றும் அலுமினியம் உற்பத்தியில் முறையே 7 மற்றும் 8 வது இடமும் வகிக்கிறது.
இவ்வளவு வளங்கள் இந்தியாவில் உள்ளன.

ஆனால் இவ்வளவு வளங்களால் இந்தியாவிற்கு பயனா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்லலாம் . ஏனெனில் இவ்வளங்களில் மிகப் பெரும்பான்மை வெளி நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக இரும்புத் தாதை எடுத்துக்கொள்வோம். உலக அளவில் இரும்புத்தாது அதிக அளவு இருக்கும் நாடுகளிலும் அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளிலும் இந்தியா மிக முக்கியமானது . உலக அளவில் இரும்புத்தாது உற்பத்தியில் இந்தியா 4 வது இடம் வகிக்கிறது. ஆனால் இவற்றில் மிகப் பெரும்பான்மை வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதுவும் முக்கியமாக சீனாவிற்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக அளவில் steel உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. அங்கு இருக்கும் ஆயிரக்கணக்கான steel ஆலைகளுக்கு தீனி போட இந்திய இரும்புத்தாது மிக அவசியம்.

சீனாவிற்கு , ஆஸ்திரேலியா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து அதிகமாக இரும்புத்தாது ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாதான். இத்தனைக்கும் சீனாதான் இரும்புத்தாது உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது. அது ஒரு ஆண்டுக்கு 800 million metric ton தயாரிக்கிறது. அதுவும் பத்தாமல் வருடத்திற்கு 245 mmt தயாரிக்கும் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியா உற்பத்தி செய்யும் இரும்புத்தாதில் 50% மேல் சீனாவிற்கே செல்கிறது.

உலக மார்கெட்டில் ஜூனில் 1 Ton இரும்புத் தாதின் (Iron ore) விலை Rs 7,500. இந்தியாவில் வெட்டி எடுக்கப்படும் இரும்புத் தாதில் மிகப் பெரும்பான்மை வெளிநாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதாவது 1 ton இரும்பு தாதிற்கு தனியார் சுரங்கங்களுக்கு கிடைக்கும் விலை Rs 7,500 . அதற்கு அவை அரசிற்கு செலுத்தும் royalty 1 டன்னிற்கு வெறும் Rs 125 (2009 முன் அது வெறும் Rs 29 :( . மேலும் இந்தியாவில் இருக்கும் இரும்புத்தாது சுரங்கங்கள் உட்பட அனைத்து சுரங்கங்களின் எண்ணிக்கை 2854 .அவற்றில் 755 யே அரசின் வசம் உள்ளது மீதி 2099 சுரங்கங்கள் தனியார் வசம் உள்ளன. ).

பொறுக்கவும் இப்பொழுது ஒன்றை நினைத்து பாருங்கள் ஒரு சாதாரண மனிதன் அவன் நிலத்தில் மண்ணிற்கு கீழே இருந்து இருந்து புதையல் எதுவும் எடுத்தால் அவை அனைத்தும் அரசிற்கே சொந்தம். அதில் அவனுக்கு பங்கு எதுவும் கிடையாது. ஆனால் அதே மண்ணிற்கு கீழே புதையலாக இருக்கும் கனிமங்களை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனங்கள் அரசிற்கு செலுத்தும் royalty வெறும் 1.6% தான் :( .

சரி at least ஏற்றுமதி செய்யும் இரும்புத்தாதை பதப்படுத்தி இரும்பாகவாவது (ஸ்டீல்) ஏற்றுமதி செய்கிறார்களா? அதுவும் கிடையாது. இரும்புத்தாதை இரும்பாக மாற்றினால் அதனால் பல பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் அதில் லாபமும் அதிகம். அதிக வரி மற்றும் அந்நிய செலாவணி கிடைக்கும். அதுவும் நாம் செய்வதில்லை . அனைத்தையும் தாதுகளாகவே ஏற்றுமதி செய்கிறோம்.

பொதுவாக ஒரு நாட்டில் ஒரு கனிம வளம் அதிகமாக கிடைத்தால் பொதுவாக அந்த நாட்டில் அந்த நாட்டு மக்களுக்கு அதன் விலை குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக பெட்ரோலியம் அதிகமாக கிடைக்கும் அரபு நாடுகளிலும் , வெனிசுலா போன்ற நாடுகளிலும் பெட்ரோலின் விலை மிக குறைவு. வெனிசுலாவில் 1ltr பெட்ரோலின் விலை Re 1 தான்! . ஆனால் இந்தியாவில் Rs 70. இந்தியாவில் பெட்ரோலின் விலை மிக அதிகமாக இருக்கக் காரணம் இந்தியாவில் பெட்ரோலியம் அதிகமாக கிடைப்பதில்லை , இந்தியா பெட்ரோலியத்தை மிக அதிகமாக வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. அதனால்தான் உலக மார்கெட்டிற்கு ஏற்றவாறு பெட்ரோலின் விலை மாறுகிறது என்பது இந்திய அரசின் கூற்று.

ஆனால் இரும்பைப் பொறுத்தவரை என்ன நடக்கிறது ? இந்தியா உலகிலேயே இரும்புத்தாது உற்பத்தியில் 4 வதாக இருந்த போதிலும் இந்தியாவில் மக்கள் வாங்கும் இரும்பின் விலை உலக மார்கெட்டில் என்ன விலையோ அதே விலைதான். அதாவது உலக மார்கெட்டில் இருக்கும் ஒரு டன் இரும்பின்( Steel) விலையான அதே Rs 32,000 (May மாதம்)கொடுத்துதான் இந்திய மக்களும் வாங்குகிறார்கள்( இந்த மாதம் இரும்பு விலை டன்னுக்கு Rs 40,000 தாண்டிருச்சு).

இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு தாய் தன் குழந்தையிடம், "வெளி மார்க்கெட்டில் ஒரு லிட்டர் பசும்பாலே 30 ரூபாய் ... நான் உனக்கோ அதைவிட சத்தான தாய்ப்பால் தருகிறேன் .. அதனால் நீ எனக்கு குறைந்தபட்சம் 30 ரூபாயாவது தரவேண்டும்" என்பது போல் உள்ளது. கேட்டால் இதற்குப் பெயர்தான் பொருளாதாரம். இதன் மூலம் வருவதுதான் பொருளாதார முன்னேற்றம் . எவ்வளவு மோசமான செயல் இது ?


கனிம வளங்கள் ஒரு நாட்டிற்கு இன்றியமையாதவை. அதுவும் இரும்பு போன்று தீர்ந்து போகும் கனிம வளங்கள் மிக இன்றியமையாதவை. பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இரும்பை ஏற்றுமதி செய்யலாம். ஏனெனில் அங்கு கனிம வளங்கள் மிக அதிகம் மேலும் அவற்றின் மக்கள் தொகை மற்றும் மக்கள் அடர்த்தி மிக குறைவு ( ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையே 2.2 கோடி தான். அதாவது இந்தியாவில் ஒரு வருடத்திற்கு அதிகரிக்கும் மக்கள்தொகையின் அளவு . ஆனால் அது இந்தியாவைப் போல 2.5 மடங்கு பெரியது). ஆனால் இந்தியா போன்ற மிக அதிக மக்கள்தொகை கொண்ட , இப்பொழுதான் வளர ஆரம்பித்திருக்கும் நாடுகளுக்கு இரும்பின் அவசியம் மிக அதிகம்.

ஒரு அறிக்கையின் படி உலக இரும்புத்தாதின் தேவை வருடத்திற்கு 2% என்று அதிகரித்தால் உலக இரும்பின் இருப்பு இன்னும் 64 வருடங்களில் தீர்ந்து விடும். ஆனால் இன்று இரும்பின் தேவை வருடத்திற்கு 10% அதிகரிக்கிறது. அதாவது அதிகபட்சம் இன்னும் 40 - 50 வருடங்களில் உலக இரும்பு எல்லாம் தீர்ந்து விடும் . அதற்கு அப்புறம் ஈயம் பித்தளைக்கு போட்ட பழைய இரும்பையே திரும்பி புதுபித்து உபயோகப்படுத்த வேண்டும். அதுவும் அப்ப அந்த பழைய இரும்பையும் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும். ஏன்னா நாம்தான் அப்பொழுது எல்லாத்தையும் ஏற்றுமதி செய்திருப்போமே!. இப்படிப்பட்ட நிலையில் நாம் நம் இயற்கை வளங்களை கணக்கு வழக்கில்லாமல் ஏற்றுமதி செய்கிறோம்.

இது மட்டுமல்ல சட்ட விரோதமான சுரங்கங்களின் மதிப்பு இங்கு மிக அதிகம். கர்நாடகா மாநிலத்தில் மட்டும் இதன் மதிப்பு Rs 16,000 கோடி . இந்தியா முழுவதும் என்றால் இதன் மதிப்பு கிட்டத்தட்ட Rs 50,000 கோடி - Rs 60,000 கோடி. மேலும் இந்த சட்ட விரோத சுரங்கங்கள் ஊழலையும், தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கின்றன. மேலும் இவை சுற்று சூழல் மாசு கேட்டிற்கும் காரணமாகின்றன. மேலும் சுரங்கங்கள் அமையும் இடம் பெரும்பாலும் காடுகளாகவே உள்ளன. இதனால் அவை காடுகள் அழிப்பிற்கும், விலங்குகள், தாவரங்கள் அழிவதற்கும் காரணமாகின்றன. மேலும் அந்த இடங்களில் வாழும் பழங்குடி இன மக்களையும் வெளியேற்றி அவர்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கின்றன.

இப்பொழுது சுரங்கங்கள் அமைச்சகத்திற்கும், சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்கும் இடையே லடாய். அதாவது சுரங்கங்கள் அமைய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறவேண்டும் .ஆனால் காடுகள் இருக்கும் இடத்தில் அவற்றை அழித்து விட்டு சுரங்கங்கள் அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தரமாட்டேன் என்கிறது. அதாவது கனிம வளத்தை அழித்து அவற்றை ஏற்றுமதி செய்வதோடு அல்லாமல் காடுகளையும் அழிக்க வேண்டுமாம் :( .

Friday, July 1, 2011

இந்தியாவும் சீனாவும் பிரம்மபுத்ரா நதியும்


சீனா பிரம்மபுத்ரா நதியின் மீது அணை கட்டி வருகிறது. இந்த அணை கட்டுவது சில வருடங்களுக்கு முன் தொடங்கிய போதே இந்தியாவில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. அப்பொழுது மத்திய அரசு இந்த அணை திபெத் மின் தேவைக்காகவே கட்டப்பட்டு வருகிறது, பாசனத்திற்காக அல்ல. அதனால் இந்தியாவிற்கு வரும் பிரம்மபுத்ரா நதியின் நீரின் அளவில் மாற்றம் இருக்காது என்று மழுப்பியது. இப்பொழுது சீனா பிரம்மபுத்ரா நதியின் நீரை தன்னுடைய வறண்ட வட மேற்கு மாகாணங்களுக்கு திருப்பி விட ஆயத்தமாகிறது. அப்படி செய்தால் சத்தியமாக இந்தியாவிற்கு வரும் பிரம்மபுத்ரா நதியின் நீரின் அளவு நிச்சயம் குறையும். இது இந்தியாவிற்கு ஆபத்தானது .

இன்று உலகில் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று குடிநீர் தட்டுப்பாடு. பல தகவல்கள் இனிமேல் உலகில் மூன்றாவது உலகப் போர் வந்தால் அது நீருக்காகத்தான் வரும் என்கிறது. அவ்வளவு முக்கியமானது நீர் இன்று இந்த உலகில் .


கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா மூன்று நதிகளும் இணைந்து வங்கக் கடலில் கொண்டு சேர்க்கும் நீரானது உலகில் அமேசான் ஆறு கடலில் கொண்டு சேர்க்கும் நீருக்கு அடுத்து அதிகம் . உலகில் எந்த நதிகளும் அமேசானுக்கு அடுத்து இவ்வளவு நீரை கடலில் கொண்டு சேர்பதில்லை . சொல்லப் போனால் அமேசான் ஆற்றில் இருக்கும் நீரானது நேரடியாக மனித குலத்தால் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை . அது பெரும்பாலும் அடர்ந்த அமேசான் காடுகளுக்கிடையேயே ஓடுகிறது . ஆனால் கங்கை - பிரம்மபுத்ரா - மேக்னா ஆறுகள் இணைந்து உருவாக்கும் டெல்டாவானது உலகிலேயே மிகப் பெரிய டெல்டாவாகும் . மேலும் உலகிலேயே Arable land எனப்படும் விவசாயத்திற்கு பயன்படும் தரிசு இல்லாத நிலம் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக இந்தியாவில் தான் அதிகம் . மொத்த விவசாய நிலம் அமெரிக்காவில் 16,69,302 சகிமீ இந்தியாவில் 15,35,060 சகிமீ (அதிலும் அமெரிக்கா இந்தியாவைப் போல மூன்று மடங்கு பெரியது . சொல்லப்போனால் உலகிலேயே 7 வது மிகப் பெரிய நாடாக இருக்கும் இந்தியாவின் பரப்பானது இதற்கு முன் 6 ஆவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவை விட கிட்டத்தட்ட இரண்டரையில் ஒரு பங்குதான் :( ). இப்படி ஆயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களும் இந்தியாவை ஆண்ட அரசர்களும் பல ஏரிகளையும் , குளங்களையும் , கால்வாய்களையும் வெட்டி இந்த புண்ணிய பூமியை வளமிக்கதாக மாறினார்கள் . ஆனால் அதற்கு பின் வந்த மத்திய மாநில அரசுகளோ இந்த ஏரிகளையும் , குளங்களையும் , கால்வாய்களையும் பராமரிக்காமல் விட்டு இந்த நிலங்களை பாழ்படுத்தியதோடல்லாமல் இப்பொழுது இயல்பாக ஓடும் நதிகளின் நீரையும் பாதுகாக்காமல் உள்ளது வேதனை .


உலகில் மிக அதிக விவசாயிகளை கொண்ட நாடாகவும் அதிலும் நாட்டு மக்களில் 60% மேல் விவசாயத்தை நம்பி இருக்கும் நாட்டில் நீரானது எவ்வளவு முக்கியம் . அந்த வாழ்வாதார நீரில் கூட இந்திய அரசு இவ்வளவு அலட்சியம் காட்டுவது மிகப் பெரிய கொடுமை .

சீனா பிரம்மபுத்ரா நதியின் நீரை வட மேற்கு மாகாணங்களுக்கு திருப்பி விடுவதை பற்றி கேட்டபோது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருவாளர் S.M. கிருஷ்ணா அப்படி இல்லவே இல்லை என்றார் . பின் சீனாவின் அணையால் இந்தியாவிற்கு "உடனடியாக" பாதிப்பில்லை என்றார். ஆனால் இந்திய உளவுத்துறையான ரா (RA&W) தயாரித்த அறிக்கை சீனாவின் அணை இந்தியாவை நிச்சயம் பாதிக்கும் என்கிறது. இந்த விவகாரம் வெடித்த அடுத்த வாரத்தில் அவர் ஷாங்காய் சென்றார் . சீனாவின் இந்த நடவடிக்கை பற்றி அங்கு விவாதிகப்படுமா என்று கேட்டதற்கு அப்படி இல்லை என்றார் . இதை விட வேறு முக்கியமாக எதை பற்றி அவர் விவாதிக்க சென்றார் என்று தெரியவில்லை . இந்த விவகாரத்தை பற்றி இந்திய அரசு வேறு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை at least ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை . எப்பொழுதும் போல் நம் பாரதப் பிரதமர் மௌன விரதம் கடைபிடிக்கிறார். சீனாவும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை


உண்மையில் இந்திய அரசு (மக்கள் அல்ல) கங்கை , பிரம்மபுத்ரா நதிகளை கொஞ்சம் கூட பயன்படுதிக்கொள்ளவில்லை . கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா ஆறுகள் மூலமாக 2,00,000 - 2,50,000 MW மின்சாரம் தயாரிக்க முடியும். குறைந்தபட்சம் அதில் பாதியாவது எளிதாக தயாரிக்க முடியும். ஆனால் 1999 கணக்கின்படி கங்கை நதியின் மூலம் தயாரிக்க முடிகிற மின்சாரத்தில் 12% தான் இந்தியா கங்கை நதி மூலம் தயாரிக்கிறது . இது பிரம்மபுத்ரா நதியின் விசயத்தில் இன்னும் மோசம் . ஏனென்றால் பிரமபுத்ரா நதியின் மூலம் தயாரிக்க முடிகிற மின்சாரத்தில் வெறும் 1% தான் இந்தியா அந்த நதி மூலம் தயாரிக்கிறது . 2010 December கணக்கின்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் மொத்த மின்சாரமே 1,65,000 MW தான் என்றால் கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா ஆறுகளின் ஆற்றல் உங்களுக்குப் புரியும் . பிரம்மபுத்ரா நதியின் ஆற்றலை சீனா உணர்ந்ததாலேயே அது அதன் மீது அணை கட்டுகிறது . அதன் மூலம் அது மொத்த திபெத்திற்கும் மின்சாரம் வழங்க எண்ணியுள்ளது . இதே விஷயத்தை இந்தியா செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்

ஆனால் இதே நேரத்தில் பாகிஸ்தான் ஏதாவது செய்தால் உடனே மிகப் பெரிய கண்டனம் மிகப் பெரிய கத்தல். ஏனென்றால் at least பாகிஸ்தானிடம் மட்டும்தான் நாம் கத்தனாவது முடியும். ஆனால் சீனா சத்தம் இல்லாமல் செய்யும் எந்த விசயத்தையும் இவர்களால் கண்டிக்க கூட முடியவில்லை . ஏனென்றால் உண்மையில் இவர்களுக்கு சீனாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏன் கண்டனம் தெரிவிக்க கூட தைரியம் இல்லை .

Photo Courtesies :

1.http://static.indianexpress.com/m-images/Thu%20Oct%2015%202009,%2014:56%20hrs/M_Id_114567_china.jpg
2.http://www.indianexpress.com/news/china-begins-building-dam-on-its-side-of-the/529244/
3.http://www.treehugger.com/brahmaputra-river-tibet.jpg
4.http://www.travelingbeats.com/images/brahmaputra1.jpg
5.http://www.pilgrimageindia.net/holy_rivers/images/brahmaputra.jpg

Wednesday, April 27, 2011

இந்திய அரசின் வல்லரசு கனவு தகுதியானதா ?

இந்தியத் தலைவர்கள் உலக நாடுகளை எல்லாம் சுற்றி வரும்போது மறக்காமல் அந்த நாடுகளிலிருந்து வாங்கி வரும் உறுதி மொழி நாங்கள் இந்தியா ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக ஆதரவு தருவோம் என்பது . ஆனால் இந்திய அரசு உண்மையிலேயே அதற்கு தகுதியானதா. ஒரு உலக வல்லரசோ அல்லது குறைந்தபட்ச பிராந்திய வல்லரசோ எந்த ஒரு முடிவையும் உறுதியாக எடுக்க வேண்டும் . ஆனால் இந்திய அரசு எந்த ஒரு முடிவையும் உறுதியாக எடுத்ததில்லை. இந்திய அரசு எந்த ஒரு விசயத்திலும் முடிவு எடுக்க முடியாமல் திணறுவதும் முக்கியமாக முடிவு எடுக்க பயப்படுவதும் கண்கூடான விஷயம் .

ஒரு வல்லரசு உலக விசயங்களில் தன்னுடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாக தெரிவிக்க வேண்டும். உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குதான் அமெரிக்கா தான் வல்லரசு என்பதை தெளிவாக தெரிவிக்கிறது. அது செய்வது சரியா தவறா என்பது வேறு விஷயம் . ஆனால் எந்த ஒரு உலக நடவடிக்கையிலும் அது தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்கும். மேலும் தான் எடுத்த நிலைப்பாடு வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். இந்திய அரசு தான் எடுத்த நிலைப்பாடு வெற்றி பெறக்கூட போராட வேண்டாம் . குறைந்தபட்சம் உலக விசயங்களில் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாகவாவது தெரிவிக்க வேண்டும் .

ஆனால் இந்திய அரசு அப்படி நடந்து கொண்டதில்லை . சிறிது காலத்திற்கு முன்பு நடைபெற்ற எகிப்து புரட்சியின்போது கூட இந்திய அரசு கூறிய வார்த்தைகள் "நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்". கடைசி வரை இதையேதான் கூறினார்களே ஒழிய , முபாரக் பதவி விலக வேண்டும் என்றோ அல்லது எகிப்து புரட்சி வெற்றி பெற வேண்டும் என்று தப்பி தவறி கூட கூறவில்லை.

தற்போதைய லிபிய புரட்சியில் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று நம் வெளியுறவு அமைச்சர் திருவாளார் S.M. கிருஷ்ணாவிடம் கேட்ட போது அவர் இப்படி திருவாய் மலரினார் "நாம் இத்தகைய சமயங்களில் எந்த ஒரு நிலைப்பாடும் எடுப்பதில்லை" :( . இதை கூறுவதற்கு ஒரு வெளியுறவு அமைச்சர். மேலும் லிபிய புரட்சியை ஆதரித்து ஐநாவில் லிபியாவின் மீது "No fly zone" தீர்மானம் கொண்டுவந்தபோது கூட இந்திய அரசு எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. இவர்களுக்கு எல்லாம் பயம் எங்கே தாங்கள் ஒருவரை ஆதரிக்க போய் எங்கே மற்றொருவர் வெற்றி பெற்றுவிட்டால் என்ன ஆவது . அதற்க்கு better எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருப்பதுதான் . புரட்சியின் முடிவில் யாராவது ஒருவர் வெற்றி பெறுவார்தானே அப்பொழுது வெற்றி பெற்றவர்க்கு ஒரு பூங்கொத்து அனுப்பிவிட்டால் போயிற்று.

நான் ஒன்றும் இங்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் எகிப்து மக்களின் மீதோ அல்லது லிபிய மக்களின் மீதோ பரிதாபப்பட்டு முபாரக் மீதோ அல்லது கடாபி மீதோ நடவடிக்கை எடுத்தது என்று கூறவில்லை . இதே நாடுகள்தான் முபாரக்கையும் கடாபியையும் சிறிது காலத்திற்கு முன்பு வரை ஆதரித்தவர்கள் . ஆனால் மக்களின் ஆதரவு மாறியவுடன் தாங்களும் மாறிக்கொண்டார்கள். அதற்க்கு மக்களுக்கு தாங்கள் ஆதரவு அளிக்கிறோம் என்று சாயம் வேறு பூசிக்கொண்டார்கள்.

ஆனால் பல நூற்றாண்டுகளாக எதேச்சதிகாரத்திற்கு ஆட்பட்ட இந்தியா மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது எதேச்சதிகாரத்திற்கு எதிராக நடைபெறும் புரட்சிக்கு இயல்பாக ஆதரவு அளிக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் புரட்சி வெற்றி பெற்ற பின் கடைசியாக மக்களுக்கு ஒரு பூங்கொத்து அனுப்பினால் அம்மக்கள் நம்மளை மதிப்பார்களா?. நியாயமான புரட்சியின் போது கஷ்டகாலங்களில் ஆதரவு அளித்தவர்களை மக்கள் நினைத்து பார்பார்களா அல்லது வெற்றி பெற்றபின் கடைசியாக வெற்றியில் பங்கு பெற வருபவர்களை மக்கள் வரவேற்க அவர்கள் என்ன மாக்களா ?

இது உலக விசயங்களை பொறுத்தவரை மட்டுமல்ல , ஏன் இந்தியாவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கூட இவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை . இங்கு அருந்ததிராய் காஷ்மீர் பிரிவினையை ஆதரித்து பேசியபோது ஏன் அவர் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்ட போது அதற்க்கு நம் மாண்புமிகு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்படி அருளினார் , "நடவடிக்கை எடுக்காததே ஒரு நடவடிக்கைதான்" . இதை சொல்லுவதற்கு ஒரு மத்திய அமைச்சர்.

நாங்கள் உலகின் மிகப் பெரிய ஜனநாயக அரசு என்று கூறும் இவர்கள் எந்த நாட்டில் ஜனநாயகம் வெற்றி பெற ஆதரவு அளித்தார்கள் ? . நம் நாட்டிற்கு மிக அருகில் இருக்கும் பர்மாவில் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க இவர்களுக்கு துணிவில்லை. எங்கே அப்படி கொடுத்தால் பர்மா , சீனா பக்கம் போய் விடுமோ என்ற பயம். ஏன் இங்கு இலங்கையில் 1.5 லட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை எதிர்க்க துணிவில்லை . அப்படி செய்தால் எங்கே இலங்கையும் சீனா பக்கம் போய் விடுமோ என்ற பயம் . அந்த சமயம் நம் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் கூறியது என்ன தெரியுமா , "இலங்கை என்ன வேண்டுமென்றாலும் எங்களைத்தான் கேட்க வேண்டும் . பிற நாட்டை நாட கூடாது". எங்கள் மக்களை அழிப்பதாக இருந்தாலும் அது எங்கள் ஆயுதங்களை கொண்டுதான் அழிக்க வேண்டும் சீனாவை நாடக் கூடாது. இதுதான் அவர்களின் நிலைப்பாடு.

ஒரு வல்லரசு உலக நாட்டில் நடைபெறும் அக்கிரமங்களை தீவிரமாக எதிர்க்க வேண்டும் (நான் இன்றைய அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகள் அப்படிதான் நடக்கின்றன என்று கூறவில்லை). ஆனால் இங்கு இந்திய அரசிற்கு தன் மக்களுக்கு எதிராக நடக்கும் அக்கிரமத்தையே தட்டி கேட்க துணிவில்லை. 500 க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதையே இவர்களால் தட்டி கேட்க துணிவில்லை , இவர்கள் எங்கே உலக அக்கிரமங்களை தட்டி கேட்க போகிறார்கள். கேட்டால் மீனவர்கள் எல்லைதாண்டி சென்று விடுகிறார்களே என்ற சப்பை கட்டு வேற. எல்லை தாண்டினாலும் அவர்களை கைது தான் பண்ணலாமே தவிர கொல்ல கூடாது. ஏன் இந்தியாவின் மிகப் பெரிய எதிரி என்று கூறப்படும் பாகிஸ்தான் கூட எல்லை தாண்டும் மீனர்களை கைது தான் செய்துள்ளதே தவிர இதுவரை ஒரு மீனவரை கூட கொன்றதில்லை.

இந்திய அரசு இதுவரை ஆப்ரிக்க நாடுகளில் நடக்கும் அடக்குமுறைக்கு எதிராக ஒருதடவை கூட கொடுத்ததில்லை. எப்படியும் ஒரு காலத்தில் எதேச்சதிகாரம் தோற்கத்தான் போகிறது அப்பொழுது வல்லரசாகும் கனவு கொள்ளும் இந்தியாவை எப்படி எகிப்தியரும், லிபியரும் , பர்மியரும், இலங்கை தமிழரும் , ஆப்ரிக்க மக்களும் ஏனைய மத்திய கிழக்காசிய மக்களும் ஏற்றுகொள்வார்கள் என்று பார்போம். இந்திய அரசின் இத்தகைய முதுகெலும்பற்ற நிலைப்பாட்டால் அம்மக்கள் இந்தியாவையும் இந்திய மக்களையும் அல்லவா தவறாக நினைப்பார்கள்.

இந்திய அரசு உறுதியாக நிலைப்பாடு எடுக்கும் வரை இந்திய அரசின் ஐநா பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர் ஆவது என்ற எண்ணம் கனவுதான். அங்கு போயும் இவர்கள் தீர்மானங்களின் மீது ஒன்று வெளிநடப்பு செய்வார்கள் அல்லது ஓட்டளிப்பதிலிருந்து விலகி நிற்பார்கள் .இதற்கு எதற்கு இவர்களுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அதுவும் வீட்டோ அதிகாரத்துடன் .

இந்த விசயத்தில் இந்திய அரசை பற்றி ஒபாமா இந்திய பாராளுமன்றத்தில் குறிப்பிட்டது மிகச் சரி. "அதிகாரம் வேண்டும் என்பவர்கள் அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதிகாரமும் பொறுப்பும் இணைந்து வருபவை" . இந்திய அரசு பொறுப்பை ஏற்றுக் கொள்ளாதவரை அதற்க்கு அதிகாரமும் அந்தஸ்தும் கிடைக்கப் போவதில்லை.

பின் குறிப்பு : இப்பதிவில் அனைத்து இடங்களிலும் நான் கவனமாக இந்திய அரசு என்றே குறிப்பிட்டுள்ளேன். ஏனெனில் இவை அனைத்தும் இப்பொழுதும் இதுவரை இருந்த முதுகெலும்பற்ற அரசுகளின் தவறே . இவை இந்திய திருநாட்டின் தவறோ அல்லது மக்களின் தவறோ அல்ல.

Sunday, April 3, 2011

We are the Champions



இதை விட மிகச் சிறந்த தருணம் என்ன இருக்கும். என்ன ஒரு அருமையான தருணம் ... இந்த தருணத்திற்காகத்தான் மொத்த இந்தியாவுமே காத்திருந்தது ... இதை வர்ணிக்க வார்த்தைகள் இருக்கா ... என் இந்தியாவை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த இதை விட வேறு என்ன வேண்டும் ...

இந்த உலககோப்பை ஆரம்பித்த பொழுது இந்தியா தான் World Cup favorites னு சொன்னாலும் , இந்த அணியின் சுமாரான சொல்லப் போனால் பலவீனமான பந்துவீச்சை வைத்து எப்படி ஜெயிக்கப் போகிறார்கள் என்று பலருக்கும் சந்தேகம் இருந்தது. அதற்க்கு ஏற்றார் போல் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் 338 ரன் எடுத்தும் இந்தியாவால் அதை defend பண்ண முடியல . மேலும் அடுத்து வந்த ஆட்டங்களில் 50 ஓவரையும் முழுமையாக விளையாட முடியாமல் அனைவரும் ஆட்டம் இழந்தனர் . மேலும் batting powerplay ல மிகச் சிறப்பாக score பண்ண முடியல. தென் ஆப்ரிகாவிற்கு எதிரான போட்டியில் 29 ரன்னுக்கு 9 wicket ஐ இழந்தது . ஆனால் அதற்கடுத்து வந்த காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளில் மிகச் சிறந்த மாற்றங்கள் தெரிந்தது. 50 ஓவர்கள் முழுமையாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. இந்த அணியில் அனைவரும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்தனர் தேர்வாளர் ஸ்ரீகாந்த் உட்பட. League ஆட்டங்களில் இந்திய அணி முழுமையாக 50 ஓவர்கள் விளையாட முடியாதபோது , ஸ்ரீகாந்த் தலையிட்டு யூசுப் பதானுக்கு பதிலாக சுரேஷ் ரெய்னாவை ஆடும் 11 இல் கொண்டுவந்தது தேர்வாளரின் கடமை அணியின் 15 வீரர்களை தேர்வு செய்வதோடு முடிந்து விடுவதில்லை , ஒவ்வொருவருக்கும் இந்திய அணி வெற்றி பெறவேண்டும் எண்ணம் உள்ளதை காட்டியது . தோனியும் ego எதுவும் பார்க்காமல் ரைனாவையும் , அஷ்வினையும் கொண்டுவந்தது அவரின் பிறர் குரலுக்கு மதிப்பு கொடுக்கும் பெருந்தன்மையை காட்டியது . நிச்சயமாக காலிறுதி மற்றும் அரையிறுதியில் இந்தியா மிகப் பெரிய மாற்றங்களை கண்டது . அதை கண்டுதான் இந்தியாவுடன் தோல்வி அடைந்த பாண்டிங்கும் , அப்ரிடியும் இந்தியாதான் கோப்பையை ஜெய்க்கும் என்றார்கள் . மேலும் தோனி சொன்னது போல இந்திய அணி இந்த உலக கோப்பையில் நன்கு பரிசோதிக்கப்பட்டது . chasing ஆனாலும் சரி defending ஆனாலும் சரி நன்கு பரிசோதிக்கப்பட்டது . மேலும் இந்தியாவிற்கான பாதையும் புற்கள் நிறைந்திருக்கவில்லை . உலகின் மிகச்சிறந்த அணிகளை வென்று இறுதி போட்டிக்கு வந்தது . அது ஆஸ்திரேலியாவாக இருக்கட்டும் , இந்த உலக கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தானாக இருக்கட்டும் மிக கடினமான அணிகளையே வென்று வந்தது .


ஆனால் இலங்கைக்கு அப்படி இல்லை . அவர்களின் பாதை மிக சுலபமாக இருந்தது . League ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடனான அவர்கள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது . பாகிஸ்தானுடன் அவர்கள் தோற்று விட்டார்கள் . காலிருதியிலும், அரையிறுதியிலும் அவர்கள் இந்த உலக கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்படாத இங்கிலாந்தையும் ,
நியூஜிலாந்தையும் வென்று வந்தார்கள் . அதுவும் அரையிறுதியில் நியூஜிலாந்துடன் அவர்கள் தடுமாறவே செய்தனர் . அவர்களுக்கு உண்மையான போட்டி இறுதியில் இந்தியாவுடன்தான் இருந்தது . மேலும் அவர்களது lower middle order சோதிக்கப்படவே இல்லை . இது அவர்களின் முன்னாள் வீரர்களை அதிகம் கவலை கொள்ளச் செய்தது .

மேலும் இந்தியாவின் மிகப் பெரிய பலம் தோனி. தோனியின் எந்த முடிவும் மிகத் துணிச்சலானது. போட்டியின் முடிவில் தோனி சொன்னது மிகச் சிறப்பானது. நான் இந்த போட்டியில் இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்தேன் ஒன்று அஷ்வினுக்கு பதிலாக ஸ்ரீசாந்தை எடுத்தது , அடுத்து மிகச் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கும் யுவராஜிற்கு பதிலாக இந்த தொடரில் நன்றாக விளையாடாத நான் 4 வது batsman ஆக இறங்கியது . நாங்கள் இந்த போட்டியை ஜெய்திருக்காவிட்டால் நிச்சயம் அனைவரும் அதை கேள்வி கேட்டிருப்பார்கள்.

மேலும் இந்த அணி 90 கள் மற்றும் 2000 களின் ஆரம்பத்தில் இருந்தது போல் இல்லை . கடைசி வரை போராட வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் இருக்கிறது . இலங்கையின் batting முடிந்தவுடன் பல வரலாறுகள் இந்தியாவிற்கு எதிராக இருந்தன . இதுவரை போட்டியை நடத்தும் அணி கோப்பையை ஜெய்ததில்லை, அதற்க்கு முன் நடந்த 9 உலக கோப்பைகளில் இரண்டாவதாக batting செய்த அணிகளில் 2 அணிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன . உலக கோப்பையின் இறுதி போட்டியில் சதம் அடித்தவர் இருந்த அணி தோல்வி அடைந்ததில்லை , மேலும் இலங்கை அணி முன்பு எதிர்பார்த்ததை விட மிக அதிக ரன்களை இறுதியில் எடுத்தது . மேலும் இலங்கையின் பந்துவீச்சும் மிகச் சிறப்பானது . இப்படி பல . மேலும் இந்த அணி முந்தி இருந்த அணி போல் பதற்றம் கொள்வதில்லை . இந்த தொடரில் மிகச் சிறப்பான தொடக்க ஜோடியான சச்சின் , சேவாக் ரன் எதுவும் எடுக்கும் முன்பே பிரிந்த போதாகட்டும், இந்த இறுதி போட்டியில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 18 ஆட்டம் இழந்து அணி 31/2 க்கு தத்தளித்த போதாகட்டும் இந்த அணி பதற்றம் கொள்ளவில்லை . சச்சின் போன பின் அணியே போய்விட்டது என்று எண்ணும் அணி அல்ல இது . காம்பிர் , கோலி போன்ற இளம் வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தையும் , மிகச் சிறந்த பொறுப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தினர் . தோனி , கேப்டனாக இருந்து Lead in Front ஆக இருந்தது மிகச் சிறப்பான பொறுப்புணர்ச்சி. இறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி இதற்க்கு முந்திய அனைத்து உலா சாம்பியன்களையும் இந்த உலக கோப்பையில் வெற்றி கண்டுள்ளது .



எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் . சச்சின் இந்த தொடரில் மிகச் சிறப்பாக விளையாடினாலும் , தொடரின் இரண்டாவது அதிக ரன் எடுத்தவராக இருந்தாலும் சச்சின் இறுதி போட்டியில் சோபிக்கவில்லை என்பது எனக்கு வருத்தம்தான் . நான் சச்சின் century of century இந்த இறுதி போட்டியில் அடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை , at least சச்சின் 50 ரன்களாவது எடுத்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும் . ஆனால் சச்சினின் பங்களிப்பை யாரும் குறை கூற முடியாது .


சச்சினை சுமக்கும் போது விராட் கோலி கூறியதுதான் சிறப்பு

"He carried the Indian Cricket for 21 years, so we wanted to carry him on our shoulders" - Virat Kholi



‎"I couldn't have asked for anything more than this. Winning the World

Cup is the proudest moment of my life. Thanks to my team-mates. Without

them, nothing would have happened. I couldn't control my tears of joy." - Sachin Tendulkar

This is Sachin :)


இந்தியாவிற்கு கடந்த 28 வருடங்களாகவும் , சச்சினுக்கு கடந்த 5 உலக கோப்பைகளாக கண்ணாம் பூச்சி காட்டிய உலக கோப்பை இறுதியில் இந்திய வசமானது மிகச் சிறப்பான தருணம் . ப்ரையன் லாராவிற்கு கிடைக்காதது , டான் பிராட்மேனுக்கு கிடைக்காத சிறப்பு சச்சினுக்கு கிடைத்துள்ளது . ஆம் சச்சின் இடம்பெற்ற அணி உலக கோப்பையை கைபற்றிவிட்டது . சச்சினின் மகுடத்தில் கிட்டத்தட்ட அனைத்து இறகுகளும் சேர்ந்து விட்டன .

We are the Champions. Yes We are the World .

Saturday, January 1, 2011

உலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் மனிதர்கள் - 3

சச்சின் டெண்டுல்கர் :


சச்சின் டெண்டுல்கருக்கு அறிமுகமே தேவை இல்லை. இந்தியா உருவாக்கிய மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர். உலகம் உருவாக்கிய மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் . ஒரு காலத்தில் சச்சின் அவுட் ஆகிவிட்டால் அனைவரும் டிவியை அணைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். அந்த அளவிற்கு விரும்பப்படுகிறவர். சச்சின் விளையாடும்போதெல்லாம் எங்கே அவுட் ஆகிவிடுவானோ என்று ஒரே பயமாக இருக்கும். இது மற்ற யாரும் விளையாடும் போது ஏற்படுவதில்லை . இதுவே சச்சினின் மீது இருக்கும் ஈடுபாட்டிற்கு சான்றாகும். எனக்கு சச்சினை பிடிக்க காரணம் அவர் வெறுமனே நன்றாக விளையாடுபவர் என்று மட்டுமே அல்ல, சச்சினின் நாட்டுப்பற்றே என்னை சச்சினின் பால் ஈர்ததாகும். சச்சின் தன்னை எப்பொழுதும் ஒரு இந்தியனாகவே முன்னிறுத்தி இருக்கிறார். தான் கிரிக்கெட் விளையாடுவதை விட தன் தாய் நாடாம் இந்தியாவிற்காக விளையாடுவதையே பெருமையாக கருதுவார். தன்னை உத்தவ்தாக்கரே போன்றோர் மராட்டியர் என்று முன்னிறுத்திய போதிலும் தான் இந்தியன் என்றே கூறுபவர். சச்சினுக்கு இணை யாரும் இல்லை. சச்சின் தான் எந்த அளவிற்கு இந்தியாவை நேசிக்கிறார் என்பது அவர் பின் கூறிய விதத்திலிருந்து அறியலாம். மும்பை 26/11 அப்புறம் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சென்சுரி அடித்தார். அப்பொழுது அவரிடம் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்ட போது நாட்டு மக்கள் மன வேதனையில் இருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் மனதில் சிறு அளவேனும் இந்த சென்சுரி மகிழ்ச்சியை கொடுத்தால் அதுவே எனக்குப் போதும் என்றார் . அதுதான் சச்சின். சச்சினுக்கு இந்தியாவின் மிக உயரிய civilian விருதான பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை பல இடங்களிலிருந்தும் எழுகிறது. அதற்க்கு எல்லா விதத்திலும் சச்சின் தகுதியானவர்.

தயான்சந்த் :


உலகின் மிகச் சிறந்த ஹாக்கி வீரர். இந்தியா உருவாக்கிய விளையாட்டு வீரர்களில் மிகச் சிறந்தவர். இவருடைய காலத்தில் இவராலையே இந்தியா ஹாக்கியில் அசைக்க முடியாத அணியாக இருந்தது . இவருடைய விளையாட்டு எப்படி இருக்குமென்றால் இவருடைய விளையாட்டை பார்த்த ஒரு முதியவர் நீ ஹாக்கி மட்டை வைத்திருப்பதால்தான் இப்படி விளையாடுகிறாய் முடிந்தால் என்னுடைய கைத்தடியை வைத்து விளையாட முடியுமா என்று கேட்டாராம் , அப்பொழுது தயான் சந்த் அவருடைய கைத்தடியை வைத்து மிகச் சிறப்பாக விளையாடினாராம். தயான்சந்த் அப்பொழுது இந்திய பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்தார். இவருடைய திறமையை பார்த்த ஹிட்லர் தயான்சந்தை ஜெர்மனி வந்துவிடும்படியும் அவரை ஜெர்மானிய ராணுவத்தில் மிக உயர்ந்த பதவி அளிப்பதாகவும் கூறினார். ஆனால் தயான் சந்த் தான் இந்தியாவிற்காகவே விளையாடுவேன் என்று கூறிவிட்டார். தயான் சந்தின் திறமையை பாராட்டி ஆஸ்திரிய தலைநகரமான வியன்னாவில் தயான்சந்த்தின் நான்கு கைகளில் நான்கு ஹாக்கி மட்டைகள் இருப்பது போன்று சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு இந்தியா அரசு ஸ்டாம்ப் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

கபில் தேவ் :


இந்தியா உருவாக்கிய மிகச் சிறந்த ஆல் ரவுண்டர். அரியானாவிலிருந்து வந்து இந்திய கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றியவர். இவருடைய தலைமையின் கீழயே இந்தியா 1983 இல் கிரிக்கெட் உலக கோப்பையை கைபற்றியது. அன்றைய கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத அணியாக இருந்த மேற்கிந்திய தீவுகள் அணியை உலக கோப்பை இறுதிப் போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்ற காரணமானவர். மேற்கிந்திய தீவுகளுக்கு அடுத்து உலக கோப்பையை கைபற்றிய அணி என்ற பெருமையை ஏற்படுத்தியவர். டெஸ்ட் கிரிக்கெட் உலகில் மிக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்று பெருமையுடன் ஓய்வு பெற்றவர். இன்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளுக்கு மேலாகவும் , 5000 ரன்களுக்கு மேலாகவும் சேர்த்த ஒரே கிரிக்கெட் வீரர் . விஸ்டன் பத்திரிக்கையால் 2002 ஆம் ஆண்டு Indian Cricketer of the Century என்று அறிவிக்கப்பட்டவர். எனக்கு பிடித்த விளையாட்டு வீரர்களில் ஒருவர்.

விஸ்வநாதன் ஆனந்த்:


இந்திய மூளையை உலகறியச் செய்தவர். இந்திய விளையாட்டு உலகம் உருவாக்கிய மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் . இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் . 2000 -2002 FIDE உலக செஸ் சாம்பியன், 2007 முதல் இன்று வரை undisputed World Champion. Knockout, Tournament, Match, Rapid and Blitz என்று பல வகைகளில் உலக சாம்பியன் ஆன ஒரே வீரர். உலக வரலாற்றில் FIDE rating இல் 2800 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 6 வீரர்களில் ஒருவர். கடந்த நவம்பர் மாதம் FIDE rating இல் உலகின் முதல் நிலை வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்தியாவில் விளையாட்டுத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்ற முதல் வீரர், இந்தியாவின் civilian துறையில் வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான பத்மா விபூசன் விருதை பெற்ற முதல் விளையாட்டு வீரர். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாத பெரிய மனிதர். இத்தனை தகுதி இருந்தாலும் எனக்கு இவரிடம் மிகவும் பிடித்தது இவருடைய நாட்டுப்பற்று. இவரின் திறமையை பார்த்து எத்தனையோ பணக்கார நாடுகள் இவரை தங்கள் நாட்டுக் குடியுரிமையைப் பெற்று தங்கள் நாட்டுக்காக விளையாட அழைக்கின்றன. இருந்தபோதிலும் தான் இந்தியாவிற்காகவே விளையாடுவேன் என்று விளையாடுபவர். HatsOff விஸ்வநாதன் ஆனந்த்.

ஜெய் சங்கர்:


தென்னகத்து ஜேம்ஸ் பான்ட். மக்கள் கலைஞன். எனக்கு மிக பிடித்த தமிழ் நடிகர். இவருடைய நடிப்பு இயல்பாக இருக்கும் என்பதைவிட இவர் மேற்கொண்ட மக்கள் பணிகளே என்னை இவர்பால் ஈர்த்தது. திரைத்துறையிலிருந்து மக்கள் பணிகளை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மேற்கொண்டவர். இவருடைய அனைத்து சொந்த விசேசங்களையும் ஆதரவற்றோர் இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் நடத்தியவர். டூப் நடிகர்களின் உயிரும் விலைமதிப்பற்றதுதானே என்று கூறி டூப் இல்லாமல் நடித்த முதல் கதாநாயகன். எந்த ஒரு இமேசிலும் தன்னை பொருத்திக் கொள்ளாதவர். மிகப் பெரிய கதாநாயகனாக நடித்த பிறகு எந்த ஒரு இமேஜை பற்றி கவலைப்படாமல் முரட்டுக்காளையில் வில்லனாக நடித்தார். அதற்கப்புறம் கிட்டத்தட்ட 180 படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகனாகவும் நடித்தார். இவருக்கு அப்புறமே மற்ற பெரிய கதாநாயகர்கள் தங்கள் கடைசி காலத்தில் குணச்சித்திர நடிகர்களாக நடித்தவர். எனக்குப் பிடித்த மக்கள் கலைஞன். என்னைப் பொறுத்தவரையில் இவருக்கும் இந்தியா அரசு ஸ்டாம்ப் வெளியிட வேண்டும்.

சாய்னா நேவால் :


என்னைப் பரவசபடுத்தும் மனிதர்களில் சமீபத்தில் சேர்ந்தவர். இன்றைய இளைய இந்தியாவின் விளையாட்டு முகமாக இருப்பவர். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் முன்னேறியவர். இறகு பந்து போட்டியில் இந்தியர் எவரும் எட்டாத சிகரத்தை எட்டியவர். இறகு பந்து போட்டியின் Grand Slam ஆன நான்கு super serious வென்றவர். அவை Indonesia Super Series 2009, Singapore Super Series 2010, Indonesia Super Series 2010, Hong Kong Super Series 2010 ஆகும். 2010 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றார். தற்போது தரவரிசையில் உலக அளவில் 2 வது இடம் வகிக்கிறார். 2010 ஆம் ஆண்டு commonwealth games இல் தங்கம் வென்று கடைசி நிமிடத்தில் இந்தியா பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடம் பெறக்காரணம் ஆனார். ஒலிம்பிக்கில் காலிறுதி சென்ற ஒரே இந்திய வீரர். நான் தற்போது அதிகம் விரும்பும் மனிதர்களில் ஒருவர்.

P.S :

We do the things at new year day which we like to do through out the year (as far as me through out my life). For that I have spared this blog post to post esp on this new year day. I can proudly say that I get immense pleasure in blogging. I want that to continue in this new year and thorough out my life also :-)...

Wednesday, December 22, 2010

உலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் மனிதர்கள் - 2

பேரரசர் ராஜராஜ சோழன் :

இன்றும் தமிழகத்தை உலக அளவில் பெருமைபடுத்தக்கூடிய பேரரசன் ராஜராஜ சோழனே ஆவான். இவனுடைய ஆட்சி காலத்தில் தமிழகம் பல சிறப்புகளை பெற்றது. ராஜராஜ சோழன் பல படையெடுப்புகளை மேற்கொண்டு சோழப் பேரரசை விஸ்தீகரித்தாலும் என்னை அதிகம் கவர்ந்தது அவனுடைய நிர்வாகத் திறமையே ஆகும். அவன் தன் நாட்டில் நடைபெற்ற சிறு சிறு நடவடிக்கைகளையும் நேரடியாக கண்காணித்தான். உலகிலயே மிகப் பெரிய இந்து சாம்ராஜ்யத்தை இவன் மகன் ராஜேந்திர சோழன் காலத்தில் அமைக்க அடிகோலினான். இவனுடைய ஆட்சி காலத்திலேயே கப்பற் படையின் முக்கியத்துவம் உணரப்பட்டது. ஆசியாவிலேயே மிகச் சிறந்த கப்பற்படையை நிர்மாணித்தான். பொதுவாக மௌரிய,மகத, முகலாயப் பேரரசுகள் இந்தியப் பேரரசை மேற்கே ஆப்கானிஸ்தானிலிருந்து கிழக்கே பர்மாவின் எல்லைவரையே விஸ்தீகரித்தனர் . ஆனால் இவனுடைய ஆட்சி காலத்தில்தான் கடல் கடந்து கிழக்கே இன்றைய மலேயா, இந்தோனேசியா வரை இந்தியப் பேரரசு விரிந்தது. தமிழக கட்டிடக் கலைக்கு சிறந்த சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலை கட்டினான். மேலும் நாடு முழுவதும் பல சிவாலயங்களை கட்டினான் . மேலும் இவனைப் பற்றி அறிய என் ராஜராஜ பெருவேந்தன் என்னும் பதிவைக் காணவும்.

பேரரசர் அக்பர் :


பேரரசர் ஜலாலுதீன் முகம்மது அக்பர். முகலாயப் பேரரசின் மிகச் சிறந்த பேரரசர். நான் இங்கு அக்பரின் படை எடுப்புகளைப் பற்றியோ அல்லது அவரது வெற்றிகளைப் பற்றியோ பேசப் போவதில்லை . எனக்கு அக்பரைப் பிடிக்கக் காரணம் அவருடைய முன்னோர்களான மற்ற இஸ்லாமிய அரசர்களும் , சுல்தான்களும் இஸ்லாம் தவிர்த்த மற்ற மதங்களின் மீது முக்கியமாக இந்து மதத்தின் மீது வெறுப்பும் , அவற்றை அழிக்க வேண்டும் என்றும் , அவற்றின் வழிபாட்டுத்தலங்களை அழித்துக் கொண்டும் இருந்த போது அக்பர் ஒருவர்தான் மற்ற மதங்களின் மீது சகிப்புத்தன்மையை கொண்டிருந்தார். அக்பரும் ஆரம்ப காலத்தில் சில இந்து கோயில்களை அழித்தார், பின் முஸ்லிம் அல்லாதவர்களின் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிஸ்யா வரியை நீக்கினார். பின் சிறிது காலம் கழித்து மீண்டும் ஜிஸ்யா வரியை கொண்டு வந்தார் . பின் கடைசியாக அந்த வரியை நீக்கினார். இப்படி இந்துக்களுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் அவர் பொதுவாக மற்ற சமயங்களின் மீது சகிப்புத்தன்மை கொண்டிரிருந்தார். இந்துக்களுடன் இணைந்து வாழ வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். அவருடைய அரசவையில் மற்ற முஸ்லிம் மன்னர்களைப் போல் அல்லாமல் நிறைய ராஜபுத்திரர்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். மற்ற கொடுங்கோல் முஸ்லிம் பேரரசர்களைப் போல் அல்லாமல் அக்பரின் ஆட்சியில் இந்துக்களும் , முஸ்லிம் அல்லாத மற்ற சமயத்தினரும் அமைதியாகவே வாழ்ந்தனர். இந்துகளில் இருந்த பல மூடத்தனங்களுக்கு தடை விதித்தார். அதில் ஒன்று சதி என்னும் உடன்கட்டை ஏறுதல். அவர் ஒருகட்டத்தில் இந்துவாக மாறி விடுவாரோ என்று மத்த முஸ்லீம்கள் என்னும் வகையில் அவருடைய சகிப்புத்தன்மை இருந்தது. அவர் இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து வாழ தீன்-இலாகி என்னும் புது மதத்தை உருவாக்கினார். ஒரு தடவை மராட்டிய சக்ரவர்த்தி சிவாஜி முகலாயப் பேரரசர் அவ்ரங்கசீப்புக்கு எழுதிய கடிதத்தில் அவ்ரங்கசீப் தன் தாத்தா அக்பர் போன்று சமய சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எழுதி இருந்தார். அந்த அளவிற்கு அக்பர் சமய சகிப்புத்தன்மையுடன் இருந்தார்.

நரசிம்ம ராவ் :

இவர் என்னுடைய பட்டியலில் அமைந்திருப்பது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம். நான் இவரை என்னை பரவசப்படுத்தும் மனிதர் என்று கூறுவது சற்று மிகையாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கிய இடம் அளிக்கப்படவேண்டியவர். இவருக்கான உரிய இடத்தை நாம் அளிக்கவில்லை என்பது என்னுடைய எண்ணமாகும். 14 மொழிகள் தெரிந்த வித்தகர். சிரிக்காத பிரதமர் என்று பெயர் எடுத்தவர். இருந்தபோதிலும் இன்று இந்தியா உலகிலேயே இரண்டாவது வேகமாக வளரக்கூடிய நாடாகவும், உலகில் வளர்ந்து வரும் பேரரசாக இருப்பதிற்கு அடிகோலியவர். 1990 களில் இவருடைய அரசு பெரும்பான்மை பெறாத அரசாகவே இருந்தது. அப்படி இருந்தும் கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பையும் மீறி இந்திய சந்தையை திறந்து விட்டார். சீனா 1970 களின் ஆரம்பத்திலேயே செய்த நடவடிக்கைள் இவராலயே நமக்கு 1990 களில் சாத்தியமானது. இவருடைய பொருளாதார சீர்திருத்தங்களின் பயனையே நாம் இன்று அனுபவிக்கிறோம்.

A.P.J. அப்துல் கலாம் :

மக்களின் ஜனாதிபதி என்று பெயர் எடுத்தவர். ஜனாதிபதிக்கான இலக்கணத்தையே மாற்றியவர். அதுவரை மக்களைப் பார்த்து வெறுமனே கை ஆட்டிச் செல்லும் முந்தய ஜனாதிபதிகளின் வழக்கத்தை மாற்றி மக்களுடன் மக்களாக கலந்தவர். இந்தியாவின் அக்னி ஏவுகணையின் தந்தை. போக்ரான் அணுகுண்டு சோதனைக்கு மூளையாக இருந்தவர். இவர் ஜனாதிபதியாக ஆவதற்கு முன்பே மக்களின் மனதில் இடம் பிடித்தவர். அதனாலையே வாஜ்பாய் தலைமையிலான அரசு இவரை ஜனாதிபதியாக ஆக்கியது. தான் செல்லும் இடங்களிலெல்லாம் மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்கம் ஊட்டியவர். 2020 இல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று கனவு காண்பவர். ஜனாதிபதி பதவியை கொண்டு நாட்டை முன்னேற்ற தன்னால் ஆன அனைத்து காரியங்களை செய்த ஒரே ஜனாதிபதி. அப்பழுக்கற்றவர். இவருடைய நாட்டுப்பற்று குற்றம் குறை கூற முடியாத ஒன்று. ஒரு இந்தியன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர். இந்தியாவின் civilian துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருதை பெற்றவர் . வெளிநாட்டவர்கள் இந்திய பிரதமராகக் கூடாது என்று இவர் கூறியதாலையே சோனியா காந்தி பிரதமராக முடியவில்லை என்று கூறுவோரும் உண்டு.

டாடா
குடும்பம்:


எனக்கு டாடா குடும்பமே ரொம்ப பிடிக்கும். டாடா குடும்பம் நேர்மைக்கு பெயர் பெற்றது. அவர்கள் என்றைக்குமே இந்தியாவையே முன்னிறுத்தியவர்கள். இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடிகள். அவர்கள் என்றுமே குறுக்கு வழியில் செல்லாதவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். சிறிது நாட்களுக்கு முன் கூட ரத்தன் டாடா தாங்கள் மீண்டும் விமான சேவை தொடங்க எண்ணியபோது அப்போது விமானத்துறை அமைச்சராக இருந்தவர் எங்களிடம் 15 கோடி லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாததாலையே நாங்கள் விமான சேவை தொடங்குவதை கைவிட்டோம் என்றார். இவ்வாறு டாடா என்றுமே நேர்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் இந்திய நாட்டுப்பற்று குற்றம் குறை கூற முடியாதது.

மகாகவி
பாரதி :



பாட்டுகொரு பாரதி . தன் தீக்கங்கும் பாடல்களின் மூலம் விடுதலை உணர்வை மூட்டிய மகாகவி. பாரத மாதாவின் மேல் மிகப் பெரிய பற்று கொண்டவர். அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பல இன்னல்களையும் சந்தித்தாலும் தன் சுதந்திர உணர்வில் எந்த ஒரு compromise உம் செய்து கொள்ளாதவர். தன் தாய் மொழியாம் தமிழின் மேல் மிகப் பெரிய பற்று கொண்டவர். தன் தமிழ் மொழி மிகச் சிறந்த மொழி என்று ஆழமாக கருதியவர். தெலுகு, பெங்காலி, ஹிந்தி, சமஸ்கிரதம், கட்சி, பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழி தெரிந்தவர். பல மொழிகளிலிருந்து தமிழுக்கு பல நூல்களை மொழி பெயர்த்தவர். அவர் நாட்டுப்பற்றை மட்டும் ஊட்டியதோடல்லாமல் சமுதாயத்தில் விளங்கிய சீக்குகளையும் சாடினார். மிகச் சிறந்த நாட்டுபற்று பாடல்களையும், சமுதாயப் பாடல்களையும், குழந்தைகளுக்கான பாடல்களையும், கர்நாடக சங்கீதத்திற்கான பாடல்களையும் பாடினார். மக்கள் கவிஞராக இருந்த பாரதியின் இறுதி யாத்திரையில் 14 பேரே கலந்துகொண்டது துரதிஷ்டவசமானது.

பாண்டிய
பேரரசர்கள் :


நான் மதுரைக்காரன் என்பதால் எனக்கு இயல்பாகவே பாண்டியர்கள் மீதும் , மதுரை மண்ணின் மீதும் ஈர்ப்பு உண்டு. தமிழ்நாட்டை ஆண்ட முப்பெரும் வேந்தர்களில் ஒருவர். சங்கம் வைத்து தமிழ் வளர்க்க பாடுபட்டவர்கள். இவர்களின் ஆட்சியில் தமிழ் நன்கு வளர்ந்தது.

Friday, December 17, 2010

உலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் மனிதர்கள் - 1

நான் முன்பே கூறியது போல இந்த உலகில் சில மனிதர்களைப் பற்றி பேசும்போதே எனக்கு பரவசம் பொங்கும். அவர்களைப் பற்றி திரும்ப திரும்ப கேட்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றும். அவர்களைப் பற்றிய சிறிய சிறிய செய்திகளும் பரவசம் தரும். எனக்கு முக்கியமாக ஒருவரைப் பிடித்திருக்க வேண்டுமென்றால் அதுக்கு முக்கிய criteria அவர்கள் இந்தியாவிற்காக நல்லது செய்திருக்க வேண்டும் , தாங்கள் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும். அத்தகையவர்களே எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தியாவில் இருந்துகொண்டே இந்தியாவிற்காக எதுவும் செய்யாமல் முக்கியமாக தங்களை இந்தியர் என்று சொல்வதில் பெருமிதம் கொள்ளாவிட்டால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் ஆனாலும் எனக்குப் பிடிக்காது. அத்தகையோர் பட்டியலே கீழே . இதில் இந்தியர் தவிர வேறு வெளிநாட்டவர் இடம் பெறாததில் வியப்பில்லை. நான் இங்கும் இடும் பட்டியல் வரிசைகிரகமாக இல்லை .

சர்தார் வல்லபாய் படேல் :


இந்தியாவின் இரும்பு மனிதர். தனி மனிதராக இந்தியாவை ஒருங்கிணைத்த மாமனிதர். இவர் இல்லையேல் இந்தியா இன்று துண்டு துண்டாகத்தான் இருந்திருக்கும். இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் , முதல் துணை பிரதமராகவும் இருந்தவர். இந்திய பிரிவினையின் போது கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட தனி ராஜ்ஜியங்கள் இருந்தன. அவற்றில் 565 ராஜ்ஜியங்கள் இந்தியாவில் இருந்தன. அவற்றை எல்லாம் இந்தியாவில் இணைக்க வழிகோலினார். இந்த 565 ராஜ்ஜியங்களில் ஜுனாகத், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர் மட்டும் இந்தியாவில் இணைய மறுத்தன. இவற்றில் ஜுனாகத் பாகிஸ்தானுடன் இணையவும், ஹைதராபாத் தனியாக இருக்கவோ அல்லது பாகிஸ்தானுடன் இணையவோ இருந்தன. காஷ்மீர் தனி சுதந்திரம் பெற்ற நாடாக இருக்க விரும்பியது. இவற்றில் ஜுனாகத் மற்றும் ஹைதராபாத்தில் சுல்தான்கள் முஸ்லீம்களாகவும் மக்களில் 80% க்கும் மேல் இந்துக்களாகவும் இருந்தனர். ஜுனாகத்தும் ஹைதராபாத்தும் பாகிஸ்தானிலிருந்து வெகு தொலைவில் வேற இருந்தன . இருந்தபோதும் அந்த சுல்தான்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினர். பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இந்த தனி ராஜ்ஜியங்களை தங்கள் இஷ்டப்படி பாகிஸ்தானுடனோ , இந்தியாவுடனோ இணையவோ அல்லது தனி சுதந்திரம் பெற்ற நாடாகவோ இருக்க அனுமதித்திருந்தது. இப்படி சட்டம் இந்த சுல்தான்களுக்கு சாதகமாக இருந்தபோதிலும் மக்களின் நலனையும் அவர்களின் ஏகோபித்த ஆதரவையும் கருத்தில் கொண்டு சர்தார் இந்த சுல்தாகளை இந்தியாவுடன் இணைய கோரினார். அவர்கள் மறுத்தபோது ராணுவத்தை அனுப்பி அவர்களை வழிக்கு கொண்டு வந்தார். இத்தகைய தைரியம் நேருவிக்கே கிடையாது. நேரு இத்தகைய ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் தரமாட்டார் என்பதாலையே நேரு ஐரோப்பிய பயணம் மேற்கொண்டிருந்தபோது acting prime minister ஆக இருந்து ஹைதராபாத்திற்கு ராணுவத்தை அனுப்பி அதனை இந்தியாவுடன் இணைத்தார்.

பாகிஸ்தான் காஷ்மீரில் அத்துமீறி நுழைந்தபோது அதனை தடுக்க உடனே ராணுவத்தை அனுப்பவேண்டும் என்று கூறினார். ஆனால் நேருவும் , மவுண்ட்பேட்டனும் காஷ்மீர் மன்னர் இந்தியாவுடன் இணைவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும்வரை காத்திருக்கச் சொன்னார்கள். இந்தியா காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்பிய போது பாகிஸ்தானும் காஷ்மீரின் பாதி பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது. அப்பொழுது நேரு இவ்விசயத்தை ஐநாவிற்கு கொண்டு சென்ற போது படேல் அதனை கடுமையாக எதிர்த்தார். படேல் நம் ராணுவத்தை வைத்தே நாம் முழு காஷ்மீரை கைபற்றிவிடலாம் என்று கூறினார். ஆனால் படேலின் எதிர்ப்பையும் மீறி நேரு இவ்விசயத்தை ஐநாவிற்கு கொண்டு சென்றார். அப்பொழுது ஐநா யார் யார் எவ்வளவு இடத்தை ஆக்கிரமித்துல்லார்களோ அவ்விடங்கள் அவரவருக்கு என்று கூறி விட்டது. அதனால் பாதி காஷ்மீர் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டது. நேரு மட்டும் படேலின் பேச்சை கேட்டிருந்தால் இந்நேரம் முழு காஷ்மீரும் இந்தியாவுடன் இருந்திருக்கும். மேலும் சுதந்திரம் பெற்றபோது இந்திய அரசு பிரிவினைத்தொகையாக 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டி இருந்தது . அத்தொகையை பாகிஸ்தானுக்கு கொடுக்க கூடாது என்று படேல் கடுமையாக எதிர்த்தார் . ஏனென்றால் அப்பணத்தை பாகிஸ்தான் காஷ்மீரில் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தும் என்பதால். ஆனால் அப்பொழுது காந்தி அப்பணத்தை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அதனால் அப்பணத்தை பாகிஸ்தானுக்கு கொடுக்கவேண்டி வந்தது . படேல் சொன்னது போலவே பாகிஸ்தான் அப்பணத்தை இந்தியாவிற்கு எதிராக காஷ்மீரில் பயன்படுத்தியது. இப்படி பல விசயங்களில் படேலின் பேச்சை கேட்காததாலையே இந்தியா இன்றும் கஷ்டப்படுகிறது. படேல் மட்டும் நேருவிற்கு பதிலாக பிரதமராக ஆகி இருந்தால் இந்நேரம் இந்தியா எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். இது நான் மட்டுமே கூறுவது அல்ல இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் மற்றும் J.R.D.டாட்டா போன்றோரும் இதே கருத்தை கொண்டிருந்தனர்.

பீல்ட் மார்ஷல் சாம் மானக்சா :

சாம் பகதூர் என்று அழைக்கப்படும் சாம் மானக்சா பஞ்சாப் அமிர்தசரசில் பார்சி பெற்றோருக்குப் பிறந்தார். தன்னுடைய 40 வருட ராணுவ சேவையில் இரண்டாம் உலகப் போர், 1947 இந்தியா பாகிஸ்தான் போர் , இந்திய சீனப் போர் , 1965 இந்திய பாகிஸ்தான் போர் , 1971 வங்கதேசப் போர் ஆகிய போர்களில் பங்கேற்றவர். இரண்டாம் உலகப் போரில் இவருடைய பணி மிகவும் பாராட்டப்பட்டது. மானக்சா இத்தனை போர்களில் பங்கேற்றாலும் அவர் மிகப் பெரிய புகழ் பெற்றது 1971 வங்கதேசப் போர் ஆகும். வங்கதேசப் போரின் போது மானக்சா இந்தியாவின் எட்டாவது ராணுவத் தளபதியாக இருந்தார். அவருடைய வழிகாட்டுதலின் பேரில் இப்போரில் இந்தியா மிகப் பெரிய வெற்றி பெற்றது. தற்காலங்களில் நடைபெற்ற போரில் இப்போரே மிக குறுகிய காலத்தில் முடிந்த போராகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிக அதிக ராணுவ கைதிகள் சிறைபட்ட போராகும் . கிட்டத்தட்ட 90,000 பாகிஸ்தான் ராணுவத்தினர் சரணடைந்தனர். இவருடைய பணியைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு மிக உயரிய பட்டமான பீல்ட் மார்ஷல் பட்டத்தை அளித்தது . இப்பட்டத்தைப் பெற்றவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒருவர் பீல்ட் மார்ஷல் கரியப்பா. இன்னொருவர் மானக்சா. மானக்சா 1971 போரின் முடிவில் எந்த அளவிற்கு மக்களிடம் புகழ் பெற்றிருந்தார் என்றால் , அப்பொழுது பிரதமராக இருந்த இந்திரா காந்தி எங்கே மானக்சா ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்துவிடுவாரோ என்று பயப்படுமளவுக்கு மானக்சா மக்களிடம் புகழ் பெற்றிருந்தார்.

இந்திரா காந்தி :

இந்தியாவின் அசைக்க முடியாத பிரதமராக இருந்தவர். இந்தியாவின் உறுதியான பிரதமராக இருந்தவர். இந்திரா காந்தி அவருடைய தந்தையான நேருவை விட பல விதங்களில் மாறுபட்டவர். இந்திரா காந்தி நேருவைப் போல் அல்லாமல் பல விசயங்களில் உறுதியான முடிவெடுத்தவர். இந்திரா காந்தியின் பல நடவடிக்கைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்த துணைக்கண்டத்திலேயே மிக ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியது. அவர் பல நடவடிக்கைகளை துணிந்து எடுத்தவர். என்னைப் பொறுத்தவரையில் இந்திய சீனப் போரின் போது நேரு அல்லாமல் இந்திரா காந்தி பிரதமராக இருந்திருந்தால் நிச்சயம் அந்தப் போரின் முடிவு மாறி இருந்திருக்கும் அல்லது இத்தகைய படு தோல்வியை இந்தியா பெற்றிருக்காது. வங்கதேசப் போரில் இந்தியா பங்கெடுக்க வேண்டும் என்று அவர் எடுத்த முடிவு மிகத் துணிச்சலான ஒன்று. நிச்சயம் நேரு இத்தகைய முடிவெடுத்திருக்க மாட்டார். ஏனெனில் அதற்கு முன் நடைபெற்ற இந்திய பாகிஸ்தானியப் போரிற்கும் இப்போரிற்கும் மிக முக்கிய வித்யாசம் உண்டு. அது என்னவென்றால் இப்போரில் பாகிஸ்தான் முதலில் இந்தியாவுடன் நேரடியாக போர் தொடுக்கவில்லை . இப்போர் முதலில் பாகிஸ்தானின் உள்நாட்டுப் போராகவே இருந்தது. மேற்குப் பாகிஸ்தான் , கிழக்குப் பாகிஸ்தானின் மீது போர் தொடுத்தது. போர் என்பதைக்காட்டிலும் அட்டூழியம் பண்ணியது. பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் கிழக்கு பாகிஷ்தானிலிருந்து இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தனர். பிற நாட்டின் பிரிவினை விரும்பாதது இந்தியாவின் கொள்கையாக இருந்த போதிலும் இந்தியா கிழக்குப் பாக்கிஸ்தானிற்கு ஆதரவாக போரில் இறங்கியது மிக முக்கிய நடவடிக்கையாகும். இப்போரில் நிச்சயம் பாகிஸ்தானிற்கு ஆதரவாக அமெரிக்க என்னும் மிகப் பெரிய பேரரசு போரில் இந்தியாவிற்கு எதிராக குதிக்கும் என்று தெரிந்த போதிலும் இந்தியா இப்போரில் குதித்தது. அமெரிக்காவிற்கு எதிராக அப்போதைய சோவியத் பேரரசின் ஆதரவை பெற்றது இந்திரா காந்தியின் அரசியல் ராஜதந்திரத்தை காட்டியது. இதன் மூலம் பாகிஸ்தான் என்னும் நம் எதிரியை இரண்டாகப் பிரித்தார். பங்களாதேஷ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தினார். பங்களாதேஷ் என்னும் நாடு உருவாகியது.

அவர் பிரதமராக இருந்த காலத்தில் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கெதிரான படுகொலைகளை , இனப் படுகொலைகள் என்று வர்ணித்தார். இந்திரா காந்தி மட்டும் இறக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் மலர்ந்திருக்கும். சோவியத் பேரரசுடன் 20 வருட ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். இதன் மூலம் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டார். இதன் மூலம் ராகேஷ் சர்மா விண் வெளிக்குச் சென்றார் . இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்தியாவுடன் இணைய ஒப்புக் கொண்ட தனி ராஜ்ஜிய மன்னர்களுக்கு பென்ஷன் வழங்க ஒப்புக்கொண்டது. இந்திரா காந்தி பிரதமராக ஆன பிறகு வெள்ளை யானைக்கு தீனி போல அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த இந்த பென்சனை நிறுத்தினார்.

அதே போல் இந்திரா காந்தி தீவிரவாதத்திற்கெதிராக மிகத் தீவிர நடவடிக்கை எடுத்தார். அவர் காலத்தில் பஞ்சாப்பை இந்தியாவிலிருந்து தனியாகப் பிரிக்க வேண்டும் என்று காலிஸ்தான் தீவிரவாத இயக்கம் உருவாகியது. அவர்கள் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதுங்கி இருந்தனர். அவர்களை அழிக்க ராணுவத்தை பொற் கோயிலிற்குள் செல்ல உத்தரவிட்டார். இதன் மூலம் காலிஸ்தான் இயக்கம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அவரது உயிருக்கே உலை வைத்தது. என்னைப் பொறுத்தவரை இந்திரா காந்தி இன்று இருந்திருந்தால் காஷ்மீர் பிரச்சினை எல்லாம் எப்பொழுதே முடிந்திருக்கும்.

எல்லாவற்றிக்கும் மேலாக இந்திரா காந்தி 1974 இல் மேற்கொண்ட "புத்தர் சிரித்தார்" என்னும் அணு ஆயுத சோதனையே உலக அளவில் மிக அதிர்ச்சியான விளைவுகளை ஏற்படுத்தியது. அது உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு மேற்கொண்ட அணு ஆயுத சோதனை ஆகும். இத்தகைய சோதனையை செய்ய மிகத் துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் இந்திரா காந்திக்கு மட்டும்தான் இருந்தது . இது எந்த அளவிற்கு துணிச்சலான பெரிய செயல் என்றால் , அப்பொழுது ஐநாவின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருந்த அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனாவிற்கு அடுத்து அணு ஆயுத சோதனை செய்த ஒரே நாடு இந்தியாதான். இது எந்த அளவிற்கு உலகில் விளைவுகளை ஏற்படுத்தியது என்றால், இந்தியாவின் இந்த சோதனைக்கு அடுத்தே அணு தொழில்நுட்பம் வேறு நாடுகளுக்குச் செல்லமால் இருக்க Nuclear Suppliers Group ஆரம்பிக்கப்பட்டது.

இந்திரா காந்தியைப் பற்றி கடும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. அவரைப் பற்றி முக்கியமான கடும் விமர்சனம் அவருடைய emergency நடவடிக்கையாகும். அதேபோல் ரூபாயின் மதிப்பை குறைத்ததும் மிக தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தியது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அவருடைய emergency நடவடிக்கை சரியான ஒன்றுதான். அக்காலங்களில்தான் இந்தியாவில் அனைத்து நடவடிக்கைகளும் ஒழுங்காக நடந்தன. என்னைப் பொறுத்தவரை இந்தியா இதுவரை உருவாக்கிய பிரதமர்களிலே இந்திரா காந்திதான் மிகச் சிறந்தவர்.

பேரரசர் சாம்ராட் அசோகர்:

உலகிலேயே மிகப் பெரிய இந்தியப் பேரரசை அமைத்தவர் . இவருடைய பேரரசு மேற்கே பெர்சியா (இன்றைய ஈரான்) முதல் கிழக்கே அஸ்ஸாம் வரையிலும் , தெற்கே வட கேரளா , வட ஆந்த்ரா வரையிலும் பரவி இருந்தது. பேரரசர் அசோகரின் ஆரம்ப கால வாழ்க்கை முழுவதும் ரத்த சரித்திரமே. தான் ஆட்ச்சிக்கு வர தன் அண்ணன்கள் அனைவரையும் கொன்றார். அவருக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். அவருடைய ராணுவம் தன் நாட்டின் எல்லையை விஸ்தீகரிக்க அண்டை நாடுகளின் மீது மிக பயங்கரமான போர்களைத் தொடுத்தது. அவருடைய வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது கலிங்கப்போர் ஆகும். கலிங்கம் என்பது இன்றைய ஒரிசா ஆகும். அக்காலத்தில் அக்கலிங்கம் மௌரிய சாம்ராஜ்யத்தின் கீழ் வரவில்லை. பேரரசர் சந்திரகுப்த மௌரியராலயே அதை மௌரிய பேரரசின் கீழ் கொண்டு வரமுடியவில்லை . அந்நாட்டின் மீது அசோகர் மிகப் பெரிய போர் தொடுத்தார். அப்போரின் முடிவில் கலிங்கம் தோற்றது. ஆனால் அப்போரின் விளைவுகள் மிகப் பயங்கரமாக இருந்தது. அதனைப் பார்த்து பேரரசர் அசோகர் முற்றிலும் மனம் மாறினார். பௌத்த மதத்தை சார்ந்து அகிம்சாவாதியாக மாறினார். அதற்குப் பின் அவர் இவ்வுலகம் கண்டிராத மிகச் சிறந்த பேரரசராக விளங்கினார். அதற்கடுத்து அவர் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கவில்லை. தன் அண்டை நாடுகளுடன் மிகச் சிறந்த நல்லுறவை பேணினார்.

அகிம்சாவாதியாக மாறிய அவர் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக அடிமைத்தனம்,வேட்டையாடுதல், மீன் பிடித்தல், காடு அழித்தலை தடை செய்தார். அவர் மக்களின் மீது மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களின் மீதும் அன்பு செலுத்தினார். நாடு முழுவதும் மரங்களை நட்டார். உலக வரலாற்றிலேயே முதல் முறையாக தன் நாட்டு மக்களுக்கு மிகச் சிறந்த மருத்துவ வசதிகளை அளித்தார். அவர் பௌத்த மதத்துக்கு மதம் மாறினாலும் பின் வந்த முஸ்லிம் மன்னர்களை போல் அல்லாமல் யாரையும் கட்டாயமாக மதம் மாற்றவில்லை. அனைத்து மதங்களையும் தன் மதத்தைப் போலவே எண்ணினார். பிற மதங்களுக்கு செய்யும் தீங்கு தன் மதத்திற்கே செய்யும் தீங்கு என்று கருதினார். பிற உயிரினங்களுக்கு செய்யும் தீங்கு தனக்கே செய்யும் தீங்கைப் போன்றது என்று எண்ணினார். தன் மக்களை ஒற்றுமையுடனும், அன்புடனும் பிற மத சகிப்புத்தன்மையுடனும் வாழுமாறு அறிவுறுத்தினார் . மனித வரலாற்றிலேயே முதல் முறையாக தன் அண்டை நாடுகளுக்கு மனிதாபிமான முறையிலான உதவிகளை செய்தார். அவை மருத்துவம், பொறியியல், கிணறு வெட்டுதல், மரம் நடுதல் போன்றவையாகும். கல்விக்கு மிக அதிக முக்கியத்துவம் அளித்தார். உலக வரலாற்றிலேயே முதலில் அமைந்த நாலந்தா, தக்சசீல பல்கலைக்கழகங்களை அமைத்தார் . இததகைய பேரரசரை இவ்வுலகம் கண்டதில்லை என்பது போல் இருந்தது அவருடைய ஆட்சி . உலகம் இன்று ஏங்கும் மிகச் சிறந்த பேரரசர் அசோகர் ஆவார்.

Wednesday, December 15, 2010

உலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் இடங்கள்

எனக்கு சில விசயங்களை , சில இடங்களை , சில மனிதர்களைப் பற்றி கேட்கும் போது , பார்க்கும் போது மிக பரவசமான நிலை ஏற்படும். அவற்றைப் பற்றி மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் , பார்க்க வேண்டும் என்று தோன்றும் . அவை, அவர்கள் இந்த உலகில் மிக உன்னதமான நிலை வகிப்பவர்கள் கூட. நான் இங்கு என்னை பரவசப்படுத்தும் இடங்களைப் பற்றி மட்டுமே கூறுகிறேன். என்னைப் பரவசப்படுத்தும் மனிதர்களையும் சம்பவங்களையும் தனிப் பதிவுகளில் கூறுகிறேன். நான் இங்கு கூறும் இடங்கள் வரிசைகிரமாக இல்லை . இப்பகுதியில் உள்ள வெளிநாட்டில் அமைந்த பகுதிகள் இந்தியாவில் அமையாமல் வேறுநாட்டில் அமைந்துள்ளனவே என்று நான் அதிகம் வருத்தப்படும் இடங்கள் ஆகும் .

அமேசான் மழைக் காடுகள் :


அமேசான் மழைக்காடுகள் தென் அமெரிக்காவின் மிக அதிக பரப்பளவை ஆக்கிரமித்த உலகின் மிகப் பெரிய மழைக் காடுகள் ஆகும். நான் அமேசான் மழைக்காடுகள் என்று கூறும் போது அது அமேசான் ஆற்றையும் சேர்த்துதான் . நம்மால் அமேசான் காடுகளையும் , அமேசான் ஆற்றையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்ததுதான். அமேசான் பேசின் எனப்படும் பகுதியானது மொத்தம் 70 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்த பகுதி . இவற்றில் 55 லட்சம் சதுர கிலோமீட்டர் அமேசான் மழைக்காடுகளாகும். இந்தப் பகுதியானது மொத்தம் ஏழு நாடுகளில் பரவியுள்ளது. அவற்றில் 60% மழைக் காடுகள் பிரேசில் நாட்டில் மட்டும் பரவியுள்ளது. உலகில் உள்ள மழைக்காடுகளில் அமேசான் மழைக்காடுகள் மட்டும் பாதி அளவை ஆக்கிரமித்துள்ளன. உலகில் உள்ள உயிரினங்களில் பத்தில் ஒன்று அமேசான் மழைக்காடுகளில் வசிக்கின்றன. உலகில் உள்ள மொத்த பறவை இனங்களில் ஐந்தில் ஒன்று இந்தக் காடுகளில் வசிக்கின்றன. உலகில் உள்ள பூச்சி இனங்களில் மொத்தம் 25 லட்சம் பூச்சி இனங்கள் இங்குதான் வசிக்கின்றன. அமேசான் மழைக் காடுகள் ஆப்ரிக்கா போன்று மிகப் பெரிய பாலூட்டிகளை கொண்டிருப்பதில்லை. ஏனெனில் யானை போன்ற மிகப் பெரிய பாலூட்டிகள் உலாவ மிகப் பரந்த , அதிக நெருக்கமான மரங்கள் அற்ற பகுதி தேவை . மேலும் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலகினங்கள் பாய்ந்து வேட்டையாட மிகப் பெரிய நெருக்கமான மரங்கள் அற்ற பகுதி தேவை . அமேசான் மழைக் காடுகள் அப்படிபட்டவை அல்ல. அவை மிக நெருக்கமான மரங்கள் அடர்ந்த பகுதியாகும். அமேசான் மழைக் காடுகளில் மிகச் சிறிய உயிரினங்களே அதிகம் வசிக்கின்றன. அமேசான் மழைக் காடுகளில் வசிக்கும் மிகப் பெரிய உயிரினங்கள் கருப்பு கைமேன் எனும் முதலை, ஜாகுவார் என்னும் சிறுத்தை போன்ற விலங்கு, கவ்கர் என்னும் சிங்கம் போன்ற விலங்கு , அமேசான் காடுகளுக்கே உரித்தான அனகோண்டா பாம்பு ஆகும். அமேசான் காடுகள் அவற்றிற்கே உரித்தான விஷ தவளைகளையும், பிரான்கா என்னும் பற்களை கொண்ட மீன் இனத்தையும் கொண்டிருக்கின்றன . பிரான்கா பற்றி நிறைய கதைகள் கூறப்படுகின்றன . அதில் ஒன்று அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் பிரேசிலுக்கு பயணம் செய்த போது அவரைக் கவர வேண்டி பிரேசில் மீனவர்கள் ஒரு மாட்டை பிரான்கா நிறைந்த ஆற்றில் தூக்கிப் போட்டார்களாம். கண நேரத்தில் அந்த மாட்டின் எலும்புக் கூடே மிஞ்சியதாம்.

அமேசான் ஆற்றைப் பற்றிக் கூறுவதென்றால் அதுவே உலகின் மிகப் பெரிய ஆறாகும் . உலகின் இரண்டாவது நீளமான ஆறும் கூட. அமேசான் ஆறு வெளியேற்றும் நீரானது , உலகில் அதனை அடுத்துப் பெரிய ஆறு ஆறுகள் வெளியேற்றும் நீரை விட அதிகம். கோடை காலங்களில் அமேசான் ஆற்றின் அகலம் 1.6 km முதல் 10km வரையாகும். மழைக்காலத்தில் இதுவே 48km வரை நீளும் . அமேசான் ஆற்றின் முகத்துவாரம் 240km அகலம் கொண்டதாகும். அதனாலேயே இது ஆற்று கடல் என்று கூறப்படுகிறது. அமேசான் ஆற்றின் எந்தப் பகுதியும் பாலங்களால் கடக்கப்படுவதில்லை. கோடை காலங்களில் 1,10,000 sqkm நிலமானது நீரால் சூழப்படுகிறது. மழைக்காலத்தில் 3,50,000 sqkm நீரால் சூழப்படுகிறது. அட்லாண்டிக் கடலில் அமேசான் வெளியேற்றும் நீரானது மிக அதிக அளவாகும் . ஒரு வினாடிக்கு சராசரியாக 3,00,000 கன மீட்டர் நீரை மழைக்காலங்களில் வெளியேற்றுகிறது . உலகில் உள்ள ஆறுகள் கடலில் கொண்டு சேர்க்கும் நீரில் 20% அமேசான் கொண்டு சேர்க்கிறது.

கோனார்க் சூரிய கோயில் :


கோனார்க் சூரிய கோயில் ஒரிசாவில் அமைந்துள்ள சூரியனுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகும் . இது 13 நூற்றாண்டை சேர்ந்தது. இது கங்கா அரச பரம்பரையை சேர்ந்த முதலாம் நரஷிம்ஹவர்மனால் சூரிய தேவனுக்கு கட்டப்பட்டது. இக்கோயில் ஒரு தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டது. இது சூரிய கதிரில் உள்ள ஏழு வண்ணங்களை குறிக்கும் வகையில் ஏழு குதிரைகளால் இழுக்கப்படுவதாகவும் , மிக அழகிய 12 சக்கரங்களை கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. கோனார்க் சூரிய கோயிலின் மிக அதிக பகுதிகள் வங்காள சுல்தானாக இருந்த சுலைமான் கான் கர்ரானியால் அழிக்கப்பட்டது. அப்படி இருந்தும் இக்கோயில் மிக அழகாக உள்ளது. இது UNESCO ஆல் உலகின் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான் கோனார்க் கோயிலை நேரில் பார்த்துள்ளேன் என்பதில் மிகப் பெருமிதம் அடைகிறேன்.

தஞ்சை பெரிய கோயில் :


தஞ்சை பெரிய கோயில் ராஜராஜனால் 1000 (கிபி 1010) ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது சோழர்களின் கட்டிடக்கலையை காட்டுவதோடு இந்தியாவின் கட்டிடக்கலைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது இதன் வகையில் உள்ள கோயில்களில் உலகிலேயே உயர்ந்த கோயிலாகும். இது UNESCO ஆல் உலகின் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது . இன்றும் தமிழ்நாட்டின் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கோயிலுக்கும் நான் சென்றுள்ளேன்.

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் :


மதுரை எனக்கு சொந்த ஊர் என்பதாலேயே எனக்கு அந்த ஊரின் மீதும் , அதைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் எனக்கு பரவசம் தரும் . மதுரை மாநகரம் 2500 ஆண்டுகள் பழமையானது. முப்பெரும் வேந்தர்களான பாண்டியர்களின் தலை நகரமாக காலம் காலமாக இருந்த நகரமாகும். இக்கோயில் அந்த ஊரில் அமைந்த மிக அழகிய கோயிலாகும். இக்கோயில் மிகப் பழமையானது என்ற போதிலும் இதனுடைய தற்போதைய வடிவம் 1600 இல் கட்டப்பட்டது. உலகில் உள்ள இந்துக்களின் மிக முக்கிய கோயிலாகும் . இதனுடைய மற்றொரு சிறப்புக்குக் காரணம் இங்கு அம்மன் ஆட்சி நடப்பதாகும். இக்கோயிலில் அம்மனுக்கே அதிக முக்கியத்துவம். உலகில் புதிய ஏழு அதிசயங்களில் தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்றபோது அதில் முதல் 21 இடங்களுக்குள் வந்த கோயிலாகும். NDTV நடத்திய இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோயிலாகும். உலகில் அதிக சிலைகள் கொண்ட கோயிலாகும். இக்கோயில் பதினான்கு கோபுரங்களை கொண்டுள்ளது. இக்கோயில் உலகின் பண்பாட்டுச் சின்னமாக UNESCO ஆல் அறிவிக்கப்படப்போகும் நாளை மிக ஆவலாக எதிர்நோக்கி இருக்கிறேன்.

அங்கோர்வாட் :


அங்கோர்வாட் கோயில் கம்போடியாவில் அமைந்துள்ளது. இது இரண்டாம் சூர்யவர்மனால் விஷ்ணுவிற்காக கட்டப்பட்ட கோயிலாகும். இது உலகில் உள்ள சமயம் சார்ந்த மிகப் பெரிய கட்டிடமாகும். இது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். முதலில் இந்துக் கோயிலாக இருந்த இது பின் புத்த விஹாராக மாற்றப்பட்டது. இது UNESCO வின் உலக பண்பாட்டுச் சின்னமாக 1992 இல் அறிவிக்கப்பட்டது. கம்போடிய நாட்டுக் கொடியில் இக்கோயில் இடம்பெற்றுள்ளது. மிக சிதிலமடைந்த நிலையுள்ள இக்கோயிலில் இந்திய அகழ்வாராய்ச்சி துறையானது 1986 முதல் 1992 வரை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டது. இக்கோயிலுக்குச் செல்லவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவாகும்.

காஸிரங்கா தேசியப் பூங்கா :


காஸிரங்கா தேசியப் பூங்கா இந்தியாவின் அமேசான் என்று கூறலாம் . இது அமேசான் போன்று அதிக அடர்த்தியான காடுகளைக் கொண்டிருக்கவில்லை . நான் ஏன் இதை இந்தியாவின் அமேசான் என்று கூறுகின்றேன் என்றால் இது அமேசான் போன்று இந்தியாவிலேயே அதிக வன உயிரினங்களை கொண்டிருக்கிறது. உலகிலே இருக்கும் ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்களில் மூன்றில் இரண்டு இங்குதான் உள்ளது. கிட்டத்தட்ட 1800 க்கும் மேற்பட்ட ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் இங்கு உள்ளன. இதுவே உலகில் மிக அதிக புலிகளை கொண்டுள்ள பகுதியாகும் . கிட்டத்தட்ட 86 புலிகள் இங்கு உள்ளன. கிட்டத்தட்ட 2000 யானைகளும், 1600 க்கு மேற்பட்ட ஆசிய காட்டு நீர் எருமைமாடுகளையும் கொண்டுள்ளது. இப்பூங்கா 1905 ஆம் ஆண்டு வன உயிரியல் சரகமாக அறிவிக்கப்பட்டது. அப்பொழுது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபுவின் மனைவியான மேரி விக்டோரியா உலகின் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்கு பெயர் பெற்ற காஸிரங்காவிற்கு பயணம் செய்த போது அவரால் ஒரு காண்டாமிருகத்தையும் காண முடியவில்லையாம். அவரின் வற்புறுத்தலின் பேரில் கர்சன் பிரபு இப்பூங்காவை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவித்தாராம். அப்பொழுது 12 காண்டாமிருகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பூங்காவில் இப்பொழுது 1800 க்கும் மேற்பட்ட ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன . இந்தியாவின் பல தேசியப் பூங்காக்கள் தங்கள் வன உயிரினங்களை காப்பாற்ற போராடும் போது இந்தப் பூங்காவே இந்தியாவில் வன உயிரினங்களை அதிகரித்த பூங்காவாகும் . இது ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்கள் ,புலி , யானைகளையும் குறிப்பிடும். இத்தனைக்கும் இப்பூங்கா காண்டாமிருகங்கள் மற்றும் புலிகளின் உறுப்புகள் அதிகம் தேவைப்படும் சீனாவிற்கு மிக அருகில் உள்ளது. இப்பூங்கா UNESCO ஆல் உயிரியல் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவிற்குச் செல்ல வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று.

கைலாயம்:


இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் கைலாயம் செல்ல வேண்டும் என்பதே மிகப் புனித கடமையாகும். உலகின் மிக மூத்த மதமான ஹிந்து மதத்தைச் சார்ந்த எனக்கும் மிக அதிக பரவசமூட்டக் கூடிய இடமாகும். கைலாய மலை நான்கு சமயங்களில் மிக முக்கியமாக கருதப்படுகிறது. அவை இந்து, புத்தம், ஜைனம் மற்றும் போன் ஆகும். இம்மலையிலிருந்து உலகின் நான்கு முக்கிய ஆறுகள் புறப்பட்டு உலகை நான்கு பகுதிகளாக பிரிக்கின்றது என்பது ஐதீகம். இம்மலை திபெத்தில் உள்ளது . இம்மலையை வலம் வருவது இந்நான்கு சமயங்களிலும் மிக முக்கியமான கடமையாகும். இந்துக்களும் , புத்தர்களும் இம்மலையை clockwise ஆகவும், ஜைனர்களும், போன் மதத்தைச் சார்ந்தவர்களும் counter clockwise ஆகவும் வலம் வருவார்கள். இந்து சமயத்தில் இம்மலை சிவபெருமான் தன் மனைவி பார்வதியுடன் குடி இருக்கும் இடமாகும்.