Friday, July 16, 2010

கடற் புறா - 1

பொழுது போகாத தருணங்களில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொன்று செய்து கொண்டிருந்தேன் . பொழுது போக்க ஒரு விஷயத்தை கண்டுபிடித்தால் அதையே சில காலத்திற்கு தொடர்ந்து செய்து கொண்டிருப்பது என்னுடைய பாணி. சில காலங்கள் நண்பர்களுடன் தொடர்ந்தது அலைபேசியில் பேசுவது, சில காலத்திற்கு தொலைக்காட்ச்சி பார்ப்பது, இன்னும் சில காலம் புத்தகம் படிப்பது என்று தொடர்ந்ததது. இப்படித்தான் ஒரு காலத்தில் discovery channel , NGC, மற்றும் Animal Planet என்று தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அத்தகைய சமயங்களில் விலங்குகளைப் பற்றி அதிகம் எழுதினேன்.

இப்பொழுது புத்தகம் படிப்பது என்னுடைய வழக்கம் ஆகிவிட்டது. இந்த வருட புத்தக கண்காட்ச்சியில் நிறைய புத்தகங்கள் வாங்கினோம். அவற்றில் பெரும்பான்மை இதிகாசங்களாகவோ, சரித்திரம் பற்றிய புத்தகங்களாகவோ அல்லது சரித்திர நாவல்களாகவோ இருந்தன. அப்படி வாங்கிய புத்தகம்தான் சாண்டில்யனின் கடல் புறா. ஏற்க்கனவே நான் சாண்டில்யனின் யவன ராணியும், கல்கியின் பொன்னியின் செல்வனும் படித்திருந்ததால் சரித்திர நாவல்களின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்ப்பட்டிருந்த்தது. அத்தகைய நோக்கிலேயே இந்த கடல் புறாவையும் வாங்கினேன்.

சாண்டில்யனின் நாவல்களில் கற்பனை வளமும் கதாப்பாத்திரங்கள் குறித்த வர்ணனையும் அதிகம் இருக்கும். கடல் புறாவும் அதற்க்கு குறைந்தது அல்ல. இந்நாவல் குலோத்துங்கச் சோழன் காலத்தில் நடக்கிறது. அதாவது 1063 க்கும் 1070 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நிகழ்ந்தது .சரித்திர நாவல்களில் ஏன் மிக முக்கியமான கதாப்பாத்திரங்கள் தவிர்த்து பிற கதாப்பாத்திரங்கள் கதாநாயகர்களாக வலம் வருகின்றன என்பது ஒரு புரியாத புதிராக உள்ளது. யவன ராணியில் முதலாம் கரிகார்ச்சோழன் இருந்தாலும் இளஞ்செழியனும், பொன்னியின் செல்வனில் ராஜராஜ சோழன் இருந்தாலும் வந்தியத்தேவனும் கதாநாயகர்களாக வலம் வந்தார்கள். அது போலவே கடல் புறாவில் முதலாம் குலோத்துங்கச் சோழன் இருந்தாலும் கதையின் நாயகன் இளைய பல்லவன் என்னும் கருணாகரப் பல்லவன்தான்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் சில அரசுகள் பேரரசுகளாகவும் மற்ற அரசுகள் அவற்றிக்குட்பட்ட சிற்றரசுகளாகவும் இருந்திருக்கின்றன. அப்படித்தான் பல்லவர்கள் பேரரசுகளாக இருந்த காலகட்டத்தில் சோழர்கள் அவற்றிக்குட்பட்ட சிற்றரசாகவும் , பிற்காலத்தில் விஜயாலச் சோழன் காலம் முதல் சோழர்கள் பேரரசாக ஆன பிறகு பல்லவர்கள் சோழர்களுக்குட்பட்ட சிற்றரசாகவும் இருந்தனர். அப்படித்தான் இந்த இளைய பல்லவன் சோழர்களின் கீழ் ஒரு உபதளபதியாக இருந்து சோழர்களின் சார்பாக கலிங்க நாட்டிற்கு ஒரு தூதுவனாகச் செல்வதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது.

கதை கலிங்க நாட்டின் (இன்றைய ஒரிசா) கோதாவரியின் முகத்துவாரத்தில் இருக்கும் பாலூர்ப் பெருந்துறை என்னும் துறைமுகத்திலிருந்து தொடங்குகிறது. அக்காலத்தில் சொர்ண பூமி என்னும் இன்றைய மலேயா, சுமத்தரா, பாலிக்கு கடல் மார்க்கமாக செல்ல பாலூர்ப்பெருந்துறையே மிகச் சிறந்த துறைமுகம். ஏனெனில் காற்றானது பாலூர்ப்பெருந்துறையிலிருந்து தென் கிழக்காக சொர்ண பூமியை நோக்கிச் சிறப்பாக வீசுகிறது. அக்காலத்தில் சொர்ண பூமியுடன் வர்த்தகம் புரிவதற்கு அனைத்து நாடுகளும் பெரும் ஆர்வம் காட்டின. ஏனெனில் சொர்ண பூமியில் தண்ணீரில் மண்ணைப் போட்டாலே தங்கம் பிரியும் அளவிற்கு தங்கம் அதிகமாகக் கிடைத்ததாம். அந்த தங்கத்திற்கு ஆசைப்பட்டே உலகில் அதிக நாடுகள் சொர்ண பூமியுடன் வர்த்தகம் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டன. அன்றைய சொர்ண பூமி, ஸ்ரீவிஜய பேரரசு என்றழைக்கப்பட்டது. அத்தகைய சொர்ண பூமியுடன் வர்த்தகம் செய்வதற்கு சோழப் பேரரசின் புகாரை விட பாலூர்ப்பெருந்துறையே சிறந்த இடமாக விளங்கியதால், வீர ராஜேந்திரச் சோழன் தலைமையிலான சோழப் பேரரசிற்கு பாலூர்ப் பெருந்துறையின் மீது ஒரு கண் இருந்த்தது. அத்தகைய பலூர்ப் பெருந்துறை துறைமுகத்துடன் மேலும் சில துறைமுகங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்க்காக சோழப் பேரரசின் தூதுவனாக இளைய பல்லவன் வந்தான்.

இத்தகைய ஆதிக்கத்தை பீமன் அரசாண்ட தென் கலிங்கமும் மேலும் வட கலிங்கமும் விரும்பவில்லை. இத்தகைய ஆதிக்கத்தை அவர்கள் சோழப் பேரரசின் நாடு பிடிக்கும் ஆசையாகவே கருதினர். ஆக நம் இளைய பல்லவன் வந்து இறங்கிய தருணம் நலமாக இல்லை. அவன் பாலூர்ப் பெருந்துறை வந்து இறங்கிய தருணத்தில் பீமன் பாலூர்ப் பெருந்துறையில், தான் சோழ ஒற்றர்கள் என்று எண்ணிய அத்தனைத் தமிழர்களையும் சிறை பிடித்தான். அத்தகைய தருணத்திலயே பாலூர்ப் பெருந்துறையில் இருந்த அநபாயச் சோழன் எனவும் பிற் காலத்தில் முதலாம் குலோத்துங்கச் சோழன் எனப் பெரும் புகழ் பெற்ற கருணாகரப் பல்லவனின் உயிர்த்தோழனையே சிறைப் பிடித்தான். இத்தகைய தருணத்திலயே நம் கதாநாயகன் இளைய பல்லவன் பாலூர் பெருந்துறை வந்து இறங்குகிறான்.

அங்கு அவன் ஒரு தமிழனாகிய சுங்கச் சாவடி அதிகாரியைச் சந்திக்கிறான். அங்கே அவன் மூலம் அநபாயச் சோழன் கைது செய்யப்பட்டதை அறிந்து சினம் கொள்கிறான். அப்பொழுது அவனைச் சிறை பிடிக்க காவலர்கள் நெருங்குகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி அவன் ஒரு மாட மாளிகையில் ஒளிகிறான். அங்குதான் கதையின் முக்கியமான கதாப் பத்திரமான காஞ்சனா தேவியைச் சந்திக்கிறான். அங்கு அவள் தந்தை குண வர்மனையும் சந்திக்கிறான். இந்த குண வர்மன் ஸ்ரீ விஜய பேரரசின் இளவரசன். அவனே ஸ்ரீ விஜய பேரரசை ஆள வேண்டியது . ஆனால் அவன் தம்பி ஸ்ரீ விஜய பேரரசை ஆண்டு கொண்டிருப்பான். இந்த குணவர்மன், தான் ஸ்ரீ விஜய பேரரசின் ஆட்சியைப் பெற சோழப் பேரரசின் உதவியை நாடி வந்திருப்பான். ஆக சோழப் பேரரசின் உதவியை நாடி வந்ததாலையே அவனையும் சிறை பிடிக்க பீமன் எண்ணுவான். இவ்வாறாக கதை ஆரம்பிக்கும்.

இந்த புத்தகத்தின் முதல் பாகத்தில் அநபாயச் சோழனுக்கும் இளைய பல்லவனுக்கும் சமமான பங்கிருக்கும். ஆரம்பத்தில் இளைய பல்லவனை சற்று முன் கோபியாகவும் சீக்கிரம் நிதானம் இழப்பவனாகச் சித்தரித்திருப்பார் சாண்டில்யன். முதாலம் பாகத்திலிருக்கும் இளைய பல்லவனுக்கும் இரண்டாம் பாகத்தில் சொர்ண பூமியில் இருக்கும் இளைய பல்லவனுக்கும் நிறைய வேறுபாடு இருக்கும் . சொர்ண பூமியில் இருக்கும் இளைய பல்லவன் நிதானம் உடையவனாகவும் எளிதில் உணர்ச்சி வசப்படாதவனாகவும் மனிதர்களை எளிதில் எடை காணக் கூடியவனாகவும் இருப்பான். இரண்டாம் பாதியில் இளைய பல்லவனிடம் ஒரு முதிர்ச்சி தெரியும். அதற்க்கு ஒரு முக்கிய காரணம் முதல் பாகத்தில் அறிமுகமாகிருக்கும் அகுதா என்னும் சீன மாலுமி.

இளைய பல்லவன் பாலூர் இறங்கிய அன்றே பீமனிடம் அகப்படுவான். அவனை ஏற்க்கனவே சிறையிலிருந்து மீண்ட அநபாயச் சோழன் மீட்க்கும் இடம் சிறப்பாக அமையும். அவனுக்கு உதவியாக காஞ்சனா தேவியும் வில் ஏற்கும் இடம் சிறப்பாக இருக்கும். இந்த இடமும் இளைய பல்லவனுடன் அறிமுகமாகிருக்கும் இடத்தில் காஞ்சனா தேவி வாள் ஏந்தும் இடமும் அவளின் வீரத்திற்கு சான்றாக அமையும். இவ்வாறு தப்பிய காஞ்ச்ச்சனா தேவியும் , அநபாயச் சோழனும் , குண வர்மனும் மேலும் இளைய பல்லவனும் பாலூரிளிருந்து தப்புவதே முதல் காரியமாக இருக்கும் .
முதல் பாகம் முழுவதும் இளைய பல்லவனுக்கும் காஞ்சனா தேவிக்கும் இடையே ஏற்ப்படும் காதலும்
, பாலூரிலிருந்து தப்புவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளுமே ஆக்கிரமிக்கும்.

தொடரும் ....

1 comment:

JDK said...

சூப்பர் மாப்ள , நல்லா இருக்கு, சீக்கிரமா புத்தகத்தை வாங்கிவிடுகிறேன்.