Wednesday, February 10, 2010

உலகில் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!

சென்ற வாரம் நாங்கள் எங்கள் ஒன்ற விட்ட பாட்டிக்கு உடல் நிலை சரியில்லையென்று,அவரைப் பார்க்க எங்கள் சொந்த ஊருக்கு அருகிலிருக்கும் கிராமத்திற்குச் சென்றிருந்தோம். நாங்கள் பேருந்தில் போய் இறங்கிய இடம் அந்த ஊரின் விலக்கு. அந்த விலக்கிலிருந்து ஊருக்குள் செல்ல அந்த நேரத்தில் பேருந்து கிடையாது. 1.5 km நடந்துதான் செல்லவேண்டும். நாங்கள் ஒரு பத்து பேர் சென்றிருந்தோம். இந்த மட்ட மத்தியானத்தில் எப்படியடா வெயிலில் செல்வது என்று மலைத்திருந்த போது, அந்த இடத்திலிருந்த கிராமத்தாள் ஒருவர் வந்து எங்கு செல்ல வேண்டும் என்று விசாரித்தார். எங்கள் சித்தப்பா பெயரைச் சொன்னவுடன்,ஒ அவர் வீட்டுக்கா என்று சொல்லி வாங்க நான் கொண்டு போய் பைக்கில் கொண்டு போய் விடுகிறேன் என்றார். இன்னும் ஒருத்தர் இந்தாங்க பைக் சாவி, நீங்கள் ஊருக்குள் ஓட்டிச் செல்லுங்கள் என்றார். இன்னும் கொஞ்ச நேரத்தில் இன்னும் இரண்டு பேர் ஊர்க்குள்ளிருந்து பைக்கில், எங்களை அழைத்துச் செல்ல வந்தனர். இப்படியாக நாங்கள் அனைவரும் நடக்காமல் சொகுசாக பைக்கில் சென்றோம். அப்பொழுது ஏனோ, சென்னையில் எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருப்போரின் பெயர் என்னவென்று தோன்றியது. கடைசிவரை அவர் பெயர் தெரியவில்லை. எங்களை பைக்கில் அழைத்துச் சென்ற கிராமத்தார்கள் பெயரும் எனக்குத் தெரியாதுதான் . இருந்தாலும் இந்த இரண்டு தெரியாதுகளுக்கிடையே உள்ள இடைவெளி மிகப் பெரியது.

இன்னவொரு சம்பவம், நான், மது, எங்கள் அம்மா மற்றும் எங்கள் சித்தப்பா நால்வரும் எங்கள் குல சாமியைக் கும்பிட்டுவிட்டு பார்த்திபனூரில் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். காத்துக்கொண்டிருந்த இடைவெளியில் எங்கள் அம்மா டீக் கடையில் ஒரு காபி சொல்லச் சொன்னார். காபி சொல்லிவிட்டு காத்துக் கொண்டிருந்த போது எங்கள் ஊருக்குச் செல்லும் பேருந்து வந்துவிட்டது. எங்கள் அம்மா காபி குடிக்க நேரமில்லை, பேசாம காபிக்கு காசு கொடுத்துவிட்டு வா, பேருந்துக்குச் செல்வோம் என்றார். மது காபிக்கு காசு கொடுத்து விட்டு, பேருந்து வந்துவிட்டது அதனால் காபி வேண்டாம் என்று சொல்லியவுடன், அந்த கடைக்காரர் காசு வாங்கமறுத்துவிட்டு
நீங்கள் பேருந்து ஏறச் செல்லுங்கள் என்றார். அந்த பேருந்து நிறுத்தத்தில் இது போன்ற பல வேண்டாம்களை அவர் கேட்டிருப்பார். அவ்வளவு வேண்டாம்களுக்கும் அவர் காசு வேண்டாம் என்றால் அது அவருக்கு மிகப் பெரிய நட்டம்தான். இருந்தாலும் போட்ட காபிக்கு காசு வேண்டாம் என்று சொல்லுவது அவருடைய பெரிய மனதுதான்.

உலகில் இத்தகைய நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!

2 comments:

Devaraj Rajagopalan said...

இந்த மாதிரி நல்லவங்களை எல்லாம் இப்போயெல்லாம் கிராமத்துல தான் பாக்க முடியுது.
நானும் ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு கிராமத்துக்கு சென்று இருந்தேன்.. அந்த கிராமத்து ரயில் நிலையத்தில் இருந்து நிறய தூரம்
நடந்து சென்றால் தான் நான் பார்க்க வேண்டியவர் வீடு வரும். பாதி வழியில் அவர் வீட்டிற்கு செல்லும் வழி எனக்கு மறந்து விட்டது.
என்னை ஒரே ஒரு முறை தான் அவர் ரயில் நிலயத்தில் இருந்து வீட்டிருக்கு அழைத்து சென்று இருக்கிறார் அதை நினைவில் வைத்து இந்த முறை நான் சென்று விடலாம் என்று செல்ல ஆரம்பித்த எனக்கு சிறிது தூரம் சென்றவுடன் வழி மறந்து விட்டது. அப்பொழுது ஒருவர் ஒரு புளிய மரத்தருகில் புளியம்பழங்களை சேகரித்து கொண்டு இருந்தார், அவர்களுக்கு நாற்பது வயது இருக்கும். நான் அவர்களிடம் நான் சந்திக்க சென்றவரின் பெயரை சொல்லி அவர் வீட்டிற்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டேன். முதலில் அவர்க்கு நான் சொல்பவரை தெரிந்து இருக்கவில்லை பின் நான் அவருடைய முழு பெயரை ( அவருடைய ஜாதி பெயருடன் ) சொனேன். பின்னர் அவருக்கு நான் பார்க்க சென்றவரை தெரிந்து இருந்தது. அவர் என்னக்கு எப்படி செல்ல வேண்டும் என்று வழி சொன்னார். நான் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அவர் சேகரித்து வைத்து இருந்த புளியம்பழத்தில் ஒன்று கேட்டேன். என் மனதிற்குள், என்னடா இது இவர் கஷ்ட பட்டு இத சேகரித்து கடைகளுக்கு விற்பவர் இவரிடம் நாம் காசு கொடுக்காமல் கேட்கலாமா என்று நினைத்து, பின்னர் நாம ஒன்னே ஒன்னு தான கேகறோம் அதற்கு அவர் இல்லை என்ன்று சொன்னால், எவளவோ காசு கேகரரோ அதா குடுத்துட்டு ஒரு கால் கிலோ வாங்கிட்டு போலாம் வீட்டுக்கு என்று நினைதேன். ஆனால அவரோ இந்தாங்க தம்பி சாப்பிடுங்க என்று தன்னுடைய கை நிறைய வாரி கொடுத்தார்.. பின்னர் தம்பி பேர் என்ன என்று என்னை விசாரித்து ஊருகு புதுசா என்ன்றும் கேட்டு தெரிந்து கொண்டார்.. இப்படி பட்டவர்களை நாம் நகரத்தில் பார்க்க முடியுமா என்ன்று தெரியவில்லை.

Shankar.Nash said...

Surprised to know that these kinda souls still exist!!!