Friday, October 11, 2013

சச்சின் !

அன்று அந்த சின்னப் பையன் பாகிஸ்தான் மண்ணில் காலெடி எடுத்து வைத்த போது அவன் இந்த கிரிக்கெட்டில்  காலாகாலத்திற்கும் நிலைத்திருக்கக்கூடிய  பல சாதனைகளைப் படைத்து இந்த உலகில் கிரிக்கெட்டின் போக்கையே மாற்றப் போகிறான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை . சச்சினின் 200* டெஸ்ட் போட்டி , அதிக ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றது, ஒரு நாள் போட்டியில் முதல் 200 ரன்கள், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், 100 சதங்கள் போன்ற சாதனைகள், பிராட்மேனின் 99.94, ஜிம்னாஸ்டிக்கில் perfect 10 போன்று சாகா வரம் பெற்றவை.
இவற்றிலெல்லாம் சச்சினின் ஆகப் பெரிய சாதனை என்னவென்றால் கடைக்கோடி ரசிகனிலிருந்து கிரிக்கெட் விமர்சகர் வரை அனைவராலும் விரும்பப்பட்டதுதான்.  சச்சினின் அந்த straight drive பவுண்டரியைத் தாண்டும்போது அதில் இருக்கும் மின்னல் வேகம் கடைக்கோடி ரசிகனைக் கவரும் போது, அதே நேரத்தில் அதில் இருக்கும் அந்த நேர்த்தி அந்த விமர்சகரை கவர்ந்தது. இப்படி அந்த கடைக்கோடி ரசிகனிலிருந்து அந்த விமர்சகர் வரை அனைத்து ரசிகர்களுக்கும் கொடுப்பதற்கு சச்சினிடம் ஏதாவது ஒன்றாவது இருந்தது.

இந்த விளையாட்டு உலகில் முகமது அலி, ரோஜர் பெடரர், டைகர் உட்ஸ், டான் ப்ராட்மான், பீலே, மைக்கேல் ஜோர்டன், கார்ல் லீவிஸ் போன்ற மிகச் சிலரே அனைத்து காலகட்டத்திலும் சிறந்தவர்களாக விளங்கி உள்ளார்கள். அந்த வரிசையில் சச்சினுக்கும் இடம் இருக்கிறது என்று நினைக்கும் போது இனம் புரியாத பேருவகை  உண்டாகிறது. சச்சினால் front foot,back foot, off side, on side, இப்படி அனைத்து வித முறைகளிலும் ஆட முடியும். எப்படி spin bowling அ சமாளித்து ஆட முடியுமோ அதே அளவிற்கு fast bowling லிலும் ஆட முடியும். டெஸ்ட் , ஒரு நாள் போட்டி, T20 என்று கிரிக்கெட்டின் அனைத்து பரிமாணங்களிலும் பரிமளிக்க முடியும். சச்சினின் விளையாட்டில் எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது. ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர். சச்சினைப் பற்றி விவியன் ரிச்சர்டர்ஸ் கூறியது சாலப் பொருந்தும் . 'I think he is marvellous. I think he will fit in whatever category of Cricket that has been played or will be played, from the first ball that has ever been bowled to the last ball that's going to be. He can play in any era and at any level. I would say he's 99.5% perfect'  - Viv Richards.

சச்சின் அனைவராலும் பாராட்டப்படுவதற்கு காரணம் அவரின் திறமை மட்டுமல்ல கிரிக்கெட்டின் மீதான அவரின் ஈடுபாடு மற்றும் அர்பணிப்பு உணர்வு . இந்த உலகில் ஒருவர் தன்னுடைய திறமையை மட்டுமே வைத்து முன்னேறி விடமுடியாது. திறமை மட்டுமே கொண்டிருந்த பலரும் இந்த உலகில் எரி நட்ச்சத்திரங்கள் போல சிறிது காலம் மட்டுமே மின்னி மறைந்து போய்விட்டார்கள். அர்பணிப்பு உணர்வும் தீர்மானமும் தான் ஒருவரை சூரியன் போல பல ஆண்டுகள் பிரகாசிக்கச் செய்யும். நல்ல காலகட்டங்களில்தான் ஒருவரின் திறமை வெற்றிக்கு வழி வகுக்கும், ஆனால் ஒருவரின் வாழ்நாளின் மோசமான தருணங்களில் அவரின் ஈடுபாடும், அர்பணிப்பு உணர்வும், மன உறுதியும், வெற்றி பெறவேண்டும் என்ற தீர்மானமும்தான் அவரின் வெற்றிக்கு வழி வகுக்கும். இவை அனைத்தும் சச்சினிடம் அதிகம்.

சச்சின் முழங்கை மூட்டுப் பிரச்சனையால் தன்னுடைய form ஐ இழந்து தவித்த போது, சச்சின் இனி அவ்வளவுதான் என்று கூறியவர்களுக்கு தன்னுடைய அர்பணிப்பு உணர்வாலும் தீர்மானத்தாலும் மிகுந்த பயிற்சி எடுத்து தன்னுடைய விளையாட்டு முறையையே மாற்றி தான் இழந்த form ஐ மீட்டு, அவர்களுக்கு பதில் கூறினார். என்னைப் பொருத்தவரை அவர் தன்னுடைய முழங்கை மூட்டுப் பிரச்சினையால் form ஐ இழந்து தவித்ததற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்வேன். இல்லையென்றால் பிற்காலத்தில் வரும் சந்ததிகள், கடவுளின் அருளால் சச்சின் பிறக்கும்போதே அனைத்து திறமைகளையும் கொண்டிருந்தார், கடவுளின் அருள் பெற்றவர் செய்யும் சாதனைகளில் என்ன சிறப்பு இருக்கப் போகிறது என்று கூறி இருப்பார்கள். அந்த முழங்கை மூட்டுப் பிரச்சினைதான், இல்லை, சச்சின் ஒன்றும் கடவுளின் அருளால் தன்னுடைய திறமையைப் பெறவில்லை, அவரின் திறமை அனைத்தும் அவரே தானே கஷ்டப்பட்டு வளர்த்துக் கொண்டது என்பதை நிலைநிறுத்தியது.

சச்சின் அளவிற்கு இந்த கிரிக்கெட்டில் வேறு எந்த ஒரு வீரரும் இவ்வளவு அழுத்தத்தைச் சந்தித்திருக்கமாட்டார்கள். 90 களில் இந்தியா முழுக்க முழுக்க சச்சினை மட்டுமே நம்பி இருந்தது. சச்சின் ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் அவரின் நூறு கோடி ரசிகர்கள் அவரிடம் இருந்து சதத்திற்கு குறைவாக வேறு எதையும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. சச்சின் 20 ரன்களில் அவுட் ஆனால் கூட சச்சின் இன்னைக்கு சதத்தை தவறவிட்டுட்டாண்டா என்றுதான் கூறினார்கள். இத்தனை அழுத்தத்திற்கு இடையிலும் சச்சின் 100 சதங்களை எட்டியதுதான் அவரின் சாதனை. இதுதான் சச்சினின் சாதனைகளை மற்றவர்களின் சாதனைகளிலிருந்து வேறுபடுத்திக்காட்டியது.  அவரின் இந்தச் சாதனையும், அர்பணிப்பு உணர்வும், கிரிக்கெட்டை அவர் தொழுததும்தான் அவரின் கோடானுகோடி ரசிகர்களை அவரைத் தொழச் செய்தது. இதுதான், மாத்யூவ் ஹைடனை 'I have seen God, he bats at no. 4 for India' என்று கூற வைத்தது. 

சச்சினை பற்றிப் பல பிரபலங்களும் வியந்து கூறி இருக்கிறார்கள். அவற்றில்
Peter Roebuck கூறியது , இந்தியாவில் சச்சின் என்ற ஒரு தனி மனிதன் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பதைத் தெளிவாகக் காட்டும். 'On a train from Shimla to Delhi, there was a halt in one of the stations. The train stopped by for few minutes as usual. Sachin was nearing century, batting on 98.The passengers, railway officials, everyone on the train waited for Sachin to complete the century. This Genius can stop time in India!!' - Peter Roebuck 

 பிற்கால சந்ததிகள் சச்சின் என்ற ஒரு கிரிக்கெட் வீரர் இருந்தார், அவர் இந்த அளவிற்கு இந்தியாவில் தாக்கத்தை கொண்டிருந்தார், அவர் காலத்தில் என்னைப் போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களும் வாழ்ந்தார்கள் என்பதை நம்ப மறுப்பார்கள்.

என் தம்பி மது கூறியது போல என்னுடைய கிரிக்கெட் சச்சினிடம் தொடங்கி சச்சினிடமே முடிந்து விட்டது. சச்சின் இல்லாத கிரிக்கெட்டை நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் சச்சின், என்னைப் போன்ற கோடானு கோடி ரசிகர்களுக்கு நீ கொடுக்கவேண்டியது எல்லாம் கொடுத்துவிட்டாய். இதற்கு மேலும் நாங்கள் உன்னிடம் இருந்து வேறு எதுவும் எதிர்பார்க்கவில்லை. Its enough. Take rest.

Monday, September 30, 2013

உயிரினங்களுக்கான உலகம் - 2

அன்று பத்திரிகை படித்துக் கொண்டு இருந்தேன். அப்பொழுது அதில் பிரிட்டிஷ் தேனீக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. கிட்டத்தட்ட அவை அழிவின் விளிம்பில் உள்ளன என்று எழுதி இருந்தார்கள். மேலும் அதில் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்தால் அவற்றால் நடக்கும் மகரந்த சேர்க்கை குறைந்துவிடும், பின் விவசாயிகள் மகரந்த சேர்க்கைக்கு இதை விட அதிக செலவாகும் மாற்று முறைகளை நாட வேண்டி வரும், அதற்கு இத்தனை கோடி செலவாகும் என்று எழுதி இருந்தனர். இந்த உலகம் எதிர்கொள்ளும் பல இயற்கை பேரழிவுக்களுக்கு என்ன காரணம் என்று பல நேரங்களில் யோசிப்பேன். தேனீக்கள் அழிந்தால், தான் உண்ணும் உணவு உற்பத்திக்குத் தேவையான மகரந்த சேர்க்கை பாதிக்கப்பட்டுவிடும், அதனால் அதை ஈடு செய்ய செய்யப்படும் மற்ற மகரந்த சேர்க்கை முறைகளுக்கு அதிகம் செலவாகும் என்று தன்னை மட்டுமே எண்ணி வாழ்கிறான் மனிதன். இப்படி அனைத்தையுமே பணம் மற்றும் மனிதன் என்று தன்னை மட்டுமே எண்ணி இருப்பதுதான் இந்த பூமியின் இந்த நிலைக்குக் காரணம் என்று தோன்றுகிறது. எப்படி இவர்களால் இந்த உலகில் அனைத்தையும் அளவிட்டுவிட/மதிப்பிட்டுவிட முடியும் என்று எண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. மனிதன் அறிந்ததே மிகக் குறைவுதான். அதை வைத்துக் கொண்டு அவன் அனைத்தையும் அளவிட, மதிப்பிட முயல்கிறான்.

தேனீ, வண்ணத்துப் பூச்சி போன்ற பூச்சி இனங்கள் அழிந்தால் உண்மையில் மனிதன் நினைத்துப் பார்க்கவே முடியாத பேரழிவு ஏற்படும். இந்த உலகில் நடக்கும் மகரந்த சேர்க்கையில் கிட்டத்தட்ட 35 விழுக்காடு தேனீ மற்றும் வண்ணத்துப் பூச்சி போன்ற உயிரினங்களால் நடக்கிறது. அதில் பெரும் பகுதி தேனீக்களால்தான் நடக்கிறது. இப்படிப்பட்ட தேனீக்கள் அழிந்தால் எப்படிப்பட்ட பேரழிவு ஏற்படும்  என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஐன்ஸ்டீன் ஒரு தடவை , இந்த உலகில் தேனீக்கள் அழிந்த நான்காவது ஆண்டில் மனிதன் இந்த உலகிலிருந்து அழிந்து விடுவான் என்று கூறி இருந்தார். ஏற்கனவே சீனா தேனீக்களின் அழிவின் உக்கிரத்தை உணர ஆரம்பித்துவிட்டது. சீனாவின் சிச்சுவான் பகுதியிலிருந்து தேனீக்கள் அழிந்துவிட்டன. இப்பொழுது அங்கு விவசாயிகள் கைகளால் செய்யும் மகரந்த சேர்க்கை முறையைத் தான் நாடுகிறார்கள். ஓவ்வொரு செடியில், மரத்தில், கொடியில் இருக்கும் பூக்களை கைகளால் பிடித்து ஒன்றை ஒன்று உரசவைத்து மகரந்த சேர்க்கை செய்வதை நினைத்துப் பாருங்கள். கொடுமை .

சரி, இப்படி ஏதோ ஒரு வகையில் தன்னுடைய உணவு உற்பத்திக்கு மாற்று வழிகளை கண்டுபிடித்துவிட்டாலும் மற்ற உயிரினங்களின் வாழ்விற்கு என்ன செய்வது?. இந்த உலகம் இயங்குவதே இனவிருத்தியினால்தான். அதிலும் தாவரங்களே அனைத்து உயிரினங்களின் உணவிற்கும் அடிப்படை என்பதால் அவற்றின் இனவிருத்தியான மகரந்த சேர்க்கை இந்த உலகின் இயக்கத்திற்கு அடிப்படை. ஆனால் மனிதனோ தன்னுடைய உணவு உற்பத்திக்கு தேவையான மகரந்த சேர்க்கை மட்டும் நடந்துவிட்டால் போதும் என்று நினைக்கிறான். மனிதன் ஒன்றை முற்றிலும் மறந்துவிடுகிறான், உணவுச் சங்கிலியில் எந்த ஒரு இடத்திலும் ஒரு தொடர்பு அறுந்துவிட்டாலும் ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியின் சமநிலையும் பாதிக்கப்படும். மனிதன் தன்னுடைய உணவை தானே உற்பத்தி செய்துவிட்டாலும், அவனால் நிச்சயம் தனித்து வாழ முடியாது. அவனின் இயல்பான வாழ்விற்கு யார் யார், எந்த எந்த இயக்கம் வழி செய்கிறது என்பதே அவனுக்குத் தெரியாது.

உணவுச்சங்கிலியின் உச்சியில் இருக்கும் புலி முதல் உணவுச்சங்கிலியின் அடியில் இருக்கும் தாவரம் வரை அனைத்து உயிரினங்களுக்கும் இந்த உலகின் இயக்கத்தில் பங்கிருக்கு, மனிதன் உட்பட. உணவுச் சங்கிலி அறுபடாமல் இருக்க ஓவ்வொரு உயிரினமும் இந்த உலகில் தேவை. இந்த உலகம் மனிதனுக்கானது மட்டுமே அல்ல. இந்த உலகில் நமக்குத் தெரிந்து இருக்கும் 87 லட்சம் வகை உயரினங்களில் மனிதன் ஒரு வகை உயிரினம் தான். இந்த உலகில் இருக்கும் லட்சக்கணக்கான கோடி உயிரினங்களில் 700 கோடி மனிதர்கள் என்பது மிகச் சிறு எண்ணிக்கை. ஆனால் அந்த சிறு எண்ணிக்கைக்கு, ஏதோ இந்த பூமி தனக்கே தனக்காக மட்டுமே படைக்கப்பட்டதாக நினைப்பு.

இந்த தேனீக்கள் அழிவதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இதற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று என்று கருதப்படுகிறது. இதனாலையே பல ஐரோப்பிய நாடுகள் இன்று பல பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தடை செய்துவிட்டன. தேனீக்களின் உணவான தேனீ மற்றும் மகரந்தத்திற்காக பல காட்டுச் செடிகளை வளர்க்க ஊக்குவிக்க ஆரம்பித்துள்ளன. இந்தியா உட்பட மற்ற நாடுகளும் சீக்கிரமே விழித்துக் கொண்டால் நல்லது, இல்லையேல் இன்று சீனாவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்ப்பட்ட நிலையே, நாளை அவர்களுக்கும் ஏற்படும்.

மனிதன் இந்த பூமிக்கு மாற்று தேடி அவ்வளவு சிரம்மப்பட்டு இந்த ஆண்ட சராசரம் முழுவதும் பிற கோள்களைத் தேடும் செய்திகளைப் படிக்கும் போது எனக்குப் சில நேரங்களில் சிரிப்பாகவும் பல நேரங்களில் எரிச்சலாகவும் கோவமாகவும் இருக்கும். இந்த பூமிக்கு மாற்று எதுவும் கிடையாது. பிற கோள்களில் இருக்க இடம் தேடி அலைவதில் இவர்கள் காட்டும் சிரமத்தில் சிறு அளவேனும் இந்த பூமியை காக்க காட்டினால் இந்த பூமியை விட சொர்க்கம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால் அதை மனிதன் இந்த பூமியை அழித்துவிட்டுத்தான் உணருவான் என்று தோன்றுகிறது :(.

Image Courtesy : http://www.benzruizphotography.com/2013/05/07/flower-and-bee-in-dahilayan/flower-and-bee-in-dahilayan/

Saturday, September 21, 2013

London Titbits - 2

  • புதிதாக லண்டன் வருபவர்களுக்கு லண்டன் நிச்சயம் ஆச்சரியம் கொடுக்கும். சில பேருக்கு அதிர்ச்சியே கொடுக்கும் . NewYork போன்ற நகரத்தை எதிபார்த்து வந்தால் லண்டன்  நிச்சயம் அதிர்ச்சிதான். ஏனெனில் இங்கு நீங்கள் மிக உயர்ந்த கட்டிடங்களை அதிகம் காண முடியாது. சிறிது காலத்திற்கு முன்பிருந்துதான் உயரமான கட்டிடங்கள் வர ஆரம்பித்துள்ளன. அதேபோல பல முக்கிய சாலைகள் கூட two lane சாலைகள்தான். இரண்டு பஸ்கள் எதிரெதிரே வரும்போது மிக நெருக்கமாகச் செல்லும். நம்ம ஊரில் கூட நீங்கள் இங்கு இருப்பதை விட பெரிய சாலைகளைக் காண முடியும். அதே போல பல வீடுகளில் கார் பார்க்கிங் இருக்காது. அவர்களின் கார்களை சாலையின் இருபுறங்களில்தான் நிறுத்தியிருப்பார்கள். அது அவர்களுக்கு என அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இடம் தான் . அவற்றிற்கிடையே இருக்கும் அந்த ஒரு லேனில் பஸ்ஸு செல்வதே ஆச்சரியமாக இருக்கும். 
  • இங்கிலாந்துகாரர்கள் பழமையை போற்றுபவர்கள் . பாரில் கூட ரொம்ப பழமையான பாரில்தான் அதிக கூட்டம் இருக்கும் . எங்க அலுவலகத்துக்கு முன்னாடி இருக்கும் ஒரு பார் 1615 இல் கட்டப்பட்டது. அந்த பாரில் அவ்வளவு கூட்டம் இருக்கும் . அதே போல் பல வீடுகளில் பெருமையாக 1600, 1700 ,1800 களில் கட்டப்பட்டது என்று குறிப்பிட்டுருப்பார்கள். இங்கு கவுன்சில் அலுவலகங்களில் நீங்கள் குடி இருக்கும் வீட்டில் இதுவரை யார், யார்  குடி இருந்தார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.   இங்கிலாந்துகாரர்கள் எந்த அளவிற்கு பழமை விரும்பிகள் என்றால் , அந்த காலங்களில் பஸ்ஸில் போகும்போது ஒரு இடத்தில் இறங்க வேண்டும் என்றால் , அந்த பஸ்ஸில் கட்டி இருக்கும் ஒரு மணியைப் பிடித்து இழுப்பார்கள் , டிரைவர் பஸ்ஸை நிறுத்துவார். அதே போல் இப்பொழுதும் பஸ்ஸை நிறுத்த அழுத்தும் சுவிட்ச்சில் இருந்து மணியோசைதான் வரும் :).  இங்கிலாந்தின் பழமையைப் பாதுகாக்க அதிக முனைப்பு காட்டுவார்கள் . அதனால் ஒரு வீடு கட்டும்போது அந்த வீட்டின் செங்கலின் நிறத்தைக்கூட அந்தந்த பகுதி கவுன்சில்கள்தான் தீர்மானிக்கும். எனவே ஒரு வீடு மற்றொரு வீட்டிலிருந்து வெளிப்புற தோற்றத்தில் பெரிதாக மாறுபடாது.
  • எனக்கு இவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் ரொம்ப பிடிக்கும் . நிச்சயம் சரிவிகித உணவுகளை உண்ணுகிறார்கள். காலையில் காய்கறி அல்லது பழ சாலடையும் , சூப்பும் அதிகம் சாப்பிடுகிறார்கள். உணவிற்குப் பின் நிச்சயம் ஒரு பழம் எடுக்கிறார்கள். அதேபோல் உடற்பயிற்சியில் இவர்களின் ஈடுபாடும் ஆச்சரியம்  அளிக்கிறது.   காலையும் மாலையும் ஜாக்கிங் செல்பவர்களை அதிகம் பார்க்க முடியும் . முடிந்த அளவு சைக்கிளில் அதிகம் செல்ல நினைக்கிறார்கள் . வெயில் காலம் ஆரம்பித்துவிட்டாலே நீங்கள் அதிகம் சைக்கிளைப் பார்க்கலாம். இத்தகைய பழக்க வழக்கங்கள் நிச்சயம் மற்ற மேற்கு உலக நாடுகளிலும் இருக்கலாம் ஆனால் நேரில் பார்க்கும்போது நன்றாக இருக்கிறது. இங்கு உடற்பயிற்சி எடுக்க அரசாங்கம் அதிகம் ஊக்குவிக்கிறது. ஊரின்  ஒவ்வொரு மூலையிலும் பூங்காவை நீங்கள் அதிகம் காண முடியும். அது சிட்டியின் மிக மத்தியப் பகுதிகளாக இருந்தாலும் அவ்வளவு பெரிய பூங்காவை நீங்கள் காண முடியும். இப்படி  மூலைக்கு மூலை பூங்கா இருந்தால் ஏன்தான் எந்த நாடும் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் பெறாது. இதைப் பார்க்கும்போது சைக்கிள் கற்றுக் கொள்வதற்குக் கூட பூங்கா இல்லாமல் தெருவில் ஓட்டி மற்றவர்களின் மீது மோதி திட்டு வாங்கும் நம் ஊர் சிறுவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
  • இங்கிலாந்தின் மீது இவர்கள் காட்டும் ஈடுபாடு நிச்சயம் ஆச்சரியம் . இந்த வருட ஆ ஷஸ் போட்டியின் போது எங்கும் எப்படி இங்கிலாந்து கிரிக்கெட் fever இருந்ததோ அதேபோன்று விம்பிள்டனில் ஆன்டி முர்ரே ஜெயித்த போது எங்கும் முர்ரே fever தான் . இந்த தடவை final இல் ஆண்டி முர்ரே விளையாடியாதால் , டிக்கெட்டின் விலை 83,000 GBP. அதாவது நம்ம ஊர் மதிப்பில் 83 லட்சம் ரூபாய்!.  இது அதன் முகமதிப்பான 260 GBP ஐ விட 322 மடங்கு அதிகம் . அதேபோன்று supermarket லாம் போனால் British meat, British Milk , British Potato என்று பிரிட்டிஷ் பொருட்களுக்கு என்று தனி விளம்பரமும் மதிப்பும் கொடுப்பார்கள். அதே போன்று பிரிட்டிஷ் கார்களுக்கு என்று எப்பொழுதுமே தனி மதிப்பு கொடுப்பார்கள். இந்த உணர்வு அனைத்து நாடுகளுக்குமே பொருந்தும் என்றாலும் இதை மற்றொரு நாட்டில் நேரில் பார்க்கும் போது ஏதோ இனம் புரியாத ஆச்சரியம் ஏற்படுகிறது .
  • அதே போன்று இங்கிலாந்து அரச குடும்பத்தின் மீது இவர்களின் பற்றும் இவர்கள் காட்டும் மதிப்பும் ஆச்சரியம் . இங்கிலாந்து அரச குடும்பம் பற்றி ஒரு செய்தி அல்லது புகைப்படமாவது இல்லாமல் ஒரு நாளும் இங்கு உள்ள பத்திரிகைகள் வராது . வில்லியமிற்கு அரச வாரிசு ஜார்ஜ் பிறந்தபோது பத்திரிகைகள் எங்கும் அதே செய்தி. ஊரே குதூகலமாக இருந்தது.
  • பல நாட்டவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இங்கிலாந்து முக்கிய இடம் வகிக்கிறது. அமெரிக்காவிற்கும் இதில் முக்கிய இடம் இருந்தாலும் சதவிகித அடிப்படையில் பார்த்தால் நிச்சயம் இங்கிலாந்து அமெரிக்காவை விட முன்னில் இருக்கும் என்று தோன்றுகிறது. நான் மற்றயதொரு பதிவில் சொன்னமாதிரி லண்டனில் இருக்கும் 33 borough க்களில், 30 borough க்களில் குறைந்தது 100 மொழி பேசுகிறார்கள் . இத்தகைய காரணங்களினால்தான் ICC எப்பொழுதும் இங்கிலாந்திலேயே உலக கோப்பை கிரிக்கெட் நடத்த விரும்பும் . அப்போழுதுதான் அனைத்து நாடுகளின் போட்டிகளுக்கும்  கூட்டம் வரும் என்பதற்காக. ICC இத்தகைய காரணத்தை விரும்பும்போது அதை வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். இங்கிலாந்து இந்தியாவிற்கு இடையே நடைபெற்ற Champions Trophy கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து அணியைவிட இந்திய அணிக்கே அதிக கூட்டம் சேர்ந்தது. பல நேரங்களில் போட்டி மும்பையில் நடக்கிறதா இல்லை லண்டனில் நடக்கிறதா என்றே தெரியாதது மாதிரி இருந்தது . இதனாலையே அதை வெறுத்து , மற்ற நாடுகளில் இருந்து குடியேறிய முதல் தலைமுறையினர், தான் பிறந்த நாட்டின் அணியை ஆதரிக்கட்டும் ஆனால் அவர்களின் தலைமுறையினர் இங்கிலாந்து அணியையே ஆதரிக்க வேண்டும் என்று எழுதியவர்களும் உண்டு. 
  • நம்ம நாட்டை விட இங்கு அதிகம் இரட்டைக் குழந்தைகளைக் காணுவதாக எனக்குத் தோன்றுகிறது. அதிலும் ஒரே trolly யில் இரண்டு அடுக்கு வைத்துக் கொண்டு இரட்டைக் குழந்தைகளை அழைத்துச் செல்பவர்களை அதிகம் காண முடியும்.
Photo Courtesy : http://www.coachcalorie.com/benefits-of-outdoor-exercise/

Saturday, September 7, 2013

உலகமயமாக்கலிலிருந்து உள்ளூர்மயமாக்கல்


சற்று நாட்களுக்கு முன்பு Isle of Wight டூர் போயிருந்தோம் . அங்கு போனபிறகு, சாப்பாட்டிற்கு என்ன வழி என்று திணறியபொழுது கண்ணில் McDee பட்டபிறகுதான் அனைவருக்கும் நிம்மதி. எப்படியும் ரெண்டு நாட்களை McDee யை வைத்து ஓட்டிவிடலாம் என்று தோன்றியது. அப்புறம் சுற்றிப் பார்த்தால் எங்கும் Costa, StarBucks, McDee, Dominoz என்று எங்கும் தெரிந்த உணவுக் கடைகள். உலகமயமாக்களின் (Globalization) னின் ஆகச் சிறந்த மாற்றம் இதுதான். இன்று இந்த உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் நிச்சயம் உங்கள் ஊரில் இருக்கும் அதே கடைகளை, பொருட்களை, உணவுகளை அங்கே நீங்கள் பார்க்க முடியும். அதனால் உங்களை பெரிதாக மாற்றிக்கொள்ளாமல் அல்லது மாற்றுவதற்கு அதிக கஷ்டப்படாமல் அங்கு நீங்கள் வாழ முடியும். ஆனால் எனக்கோ இதுதான் globalization னின் மிகப் மோசமான மாற்றமாகத் தோன்றுகிறது.

முன்பெல்லாம் நம்ம ஊரில் , நம்ம அம்மா அப்பா வெளியூருக்குப் போய் வந்தால் அந்த ஊரில் என்ன ஸ்பெசலோ அது நிச்சயம் வாங்கி வருவார்கள். திருநெல்வேலி அல்வா , மதுரை கலர் பூந்தி இப்படி பல. ஆனால் இப்பொழுது நீங்கள் திருநெல்வேலி போகாமலையே உங்க ஊரிலேயே திருநெல்வேலி அல்வா வாங்கிவிட முடியும். இதுதான் உலகமயமாக்கலின் மாற்றம்.

அன்னைக்கு என் friend கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது , நீ எனக்கு என்ன வாங்கிட்டு வருவன்னு கேட்டா, அதுக்கு நான் , 'என்ன வேணும்னு சொல்லுனு' சொன்னேன். அதுக்கு அவ 'அங்க என்ன special லோ அத வாங்கிட்டு வா' னு சொன்னா. எனக்கு என்ன வாங்கணும்னே தோணல . லண்டன்ல என்ன ஸ்பெசல்னு யோசிச்சுப் பாத்தா எனக்கு எதுவுமே தோணல . இங்க கிடைக்குற எல்லாமே அங்க கிடைக்குது . அப்புறம் என்ன ஸ்பெசல். உலகம் முழுசா கிடைக்குற திருநெல்வேலி அல்வால என்ன ஸ்பெசல் இருக்கப் போகுது.

இந்த உலகமயமாக்கலினால் அனைத்து ஊர்களும்  தங்களோட அடையாளத்தை இழந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. இப்படி திருநெல்வேலி போன்ற ஊர்கள் தங்களுடைய அடையாளங்களை ஏற்றுமதி செய்து அடையாளங்களை இழக்கும் பொழுது உலகமயமாக்கலால் இறக்குமதி செய்யப்பட்ட வெளியூர் அடையாளங்களினால் தங்களின் உள்ளூர் அடையாளங்களை தொலைத்துவிட்டு இருக்கும் ஊர்கள் ஏராளம். இந்த கலாச்சார மறத்தல் உலக அளவில் நடக்கிறது ஆனால் அது உள்ளூர் அளவில்தான் தொடங்குகிறது. என் பாட்டி காலத்தில் இருந்த பருத்திப்பாலும், பதனியும் எங்க அம்மா காலத்தில் வந்த காப்பியால் மறக்கடிக்கப்பட்டது. அந்த காப்பி இப்பொழுது என் காலத்தில் உள்ள coke ஆல் மறக்கடிக்கப்படுகிறது.

இந்த உலகில் இருந்த நூற்றுக்கணக்கான மொழிகள் ஆங்கிலம், பிரஞ்சு , ஸ்பானிஷ் , ஹிந்தி போன்ற மிக பிரபலமான மொழிகளாலும் பிரதியீடப்படுகின்றன(replace). அந்தந்த வட்டார மொழிகள் மாநில மொழிகளாலும் , மாநில மொழிகள் தேசிய மொழிகளாலும் , தேசிய மொழிகள் சர்வதேச மொழிகளாலும் பிரதியீடப்படுகின்றன. ஒரு மொழி என்பது வெறுமனே மொழி மட்டுமே அல்ல அது ஒரு இனத்தின் கலாச்சராம் , பண்பாடு , பாரம்பரியம் இப்படி பன்முகத்தன்மை கொண்ட ஒரு தகவல் களஞ்சியம் . ஒரு மொழி அழியும் போது நூற்றுக்கணக்கான வருடங்களால் ஒரு இனத்தால் அரும்பாடுபாடு சேர்க்கப்பட்ட தகவல்களும் சேர்ந்து அழிகிறது.

உடை என்று வரும்பொழுது அது உலகமயமாக்கலின் உச்சம். இன்று ஆண்களுக்கு சட்டை , பேன்ட் என்பதை தவிர வேறு உடையே உலகில் இல்லை என்று ஆகிவிட்டது. என்ன ஒரு கொடுமை. நம்ம ஊரில் ஆண்களுக்கு வேட்டி என்று இருப்பது/இருந்தது  போல உலகில் அனைத்து நாகரீகங்களும் அவர்களுக்கு என்று தனித்த பாரம்பரியம் கொண்ட உடைகளை கொண்டிருக்கின்றன . ஆனால் அவை எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

சிறிய வட்டங்கள் பெரிய வட்டங்களால் விழுங்கப்பட்டு அந்த பெரிய வட்டம் அதை விட பெரிய வட்டத்தால் விழுங்கப்பட்டு கடைசியில் ஒரே ஒரு வட்டம் மட்டுமே எஞ்சி இருப்பது போன்ற நிலைதான் உண்டாகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது . Atlast only one choice would be leftover for human :( . 

நான் இங்கு வணிகப் போட்டியைப் பற்றி கூறவரவில்லை. எனக்கு மக்களின் ரசனைகள் அனைத்தும் ஒரே மாதிரி ஆகிவிட்டன என்றே பயம். சிறிது நினைத்துப் பாருங்கள் உலகின் அனைத்து மக்களும் Dominoz பீசாவையோ, Indian Curry யோ மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு,Costa காபியையோ அல்லது Coke யோ மட்டுமே குடித்துக்கொண்டு , ஏதோ Rock இசையை மட்டுமே கேட்டுக் கொண்டு Cricket அல்லது football யோ மட்டுமே விளையாடிக் கொண்டு, ஹாலிவுட் அல்லது பாலிவுட் படங்களை மட்டுமே பார்த்துக் கொண்டு, ஐயையோ நினைத்துப் பார்க்கவே படுபயங்கரமாக இருக்கிறது . இப்படி அனைவரின் ரசனையும் ஒரே மாதிரி ஆகிவிட்டால் அவர்களின் சிந்தனைகளும் ஒரே மாதிரி ஆகிவிடும் என்றே பயமாக இருக்கிறது. சிறிது நினைத்துப் பார்த்தால் மூன்றாம் கண்ணோட்டம் (third party view) என்பதே இல்லாமல் போகிவிடுமோ என்று தோன்றுகிறது. நான் சொல்லுவது கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றலாம். ஆனால் நான் சொல்லுவதற்கு கொஞ்சம் குறைந்தோ அல்லது குறைந்த வேகத்திலோ ஆனால் நான் பயப்படும் திசையில் இந்த உலகம் செல்லுவதாகவே தோன்றுகிறது. இதில் இந்த நாடு அந்த நாடு , இவர் அவர் என்றில்லை. பிறரின் எதோ ஒரு அடையாளம் நம்முடைய அடையாளத்தை அழிக்கும்போது நம்முடைய எதோ ஒரு அடையாளம் பிறரின் அடையாளத்தை அழிக்கிறது .

உலகமயமாக்கல் என்பதற்கு ஒரு காலம் உண்டானபொழுது உள்ளூர்மயமாக்கல் (localization) என்பதற்கு ஒரு காலம் வரவேண்டும். குறைந்தபட்சம் உலகமயமாக்களுக்குள் உள்ளூர்மயமாக்கல் என்பதாவது  உருவாகவேண்டும் (localization within globalization).நான், மற்ற பகுதி மக்கள் சார்ந்த விசயங்களை ஒருவர் பின்பற்றக் கூடாது என்று சொல்லவில்லை, ஆனால் நமக்கு சவுகரியமான மற்றவர்களின் விசயங்களைப் பின்பற்றும்போது நாம் சார்ந்த விசயங்களை மறந்துவிடக்கூடாது என்றே தோன்றுகிறது .

எனக்குத் தெரிந்து மற்ற உயிரினங்களைக் காட்டிலும் மனிதர்களிடையே தான் பன்முகத்தன்மை (diversity) அதிகம் என்று தோன்றுகிறது. உணவு , உடை , உறைவிடம் , பொழுதுபோக்கு , ரசனை, கலாச்சாரம், மொழி, கடவுள்(!) இப்படி தான் சார்ந்த அனைத்து விசயங்களிலும் இத்தனை வித்தியாசங்கள் கொண்ட உயிரினம் எனக்குத் தெரிந்து உலகில் இல்லை. மனித வாழ்க்கையில் சுவாரசியத்திற்கு மிக முக்கிய அடிப்படையே  இந்த பன்முகத்தன்மை தான் . மனிதன் தங்களுக்குள்ளே உள்ள வேறுபாடுகளை மறந்து வாழ வேண்டும் ஆனால் அதே சமயம் தான் கொண்ட பன்முகத்தன்மை மறைந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இல்லையென்றால் வாழ்க்கை சுவாரசியமற்றுப் போவதோடு இல்லாமல் அனைவரின் சிந்தனைகளும் ஒன்றாகி உலகில் ஒரே ஒரு கண்ணோட்டம் என்பதே உருவாகிவிடும் :( .

பின்குறிப்பு :
இங்கு கலாச்சாரம் என்று நான் கூறுவது உணவு , உடை , உறைவிடம் , பொழுதுபோக்கு இப்படி மனிதன் சார்ந்த அனைத்து விசயங்களையும் குறிக்கும் .

Image Courtesy: shutterstock.com

Tuesday, August 27, 2013

Black Hole - ஒளியும் தப்பாது !



இந்த அண்ட சராசரத்தில் இருக்கும் மிக ஆச்சரியத்தக்க விசயங்களில் ஒன்று 'Black Hole'.

இந்த அண்டமானது 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெரு வெடிப்பிலிருந்து(Big Bang theory) உண்டானதாக கருதப்படுகிறது. அப்படி உண்டாகியபொழுது அது லித்தியத்தை விட கடினமான தனிமங்களைக் கொண்டிருக்கவில்லை . லித்தியமானது தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜன், ஹீலியத்திற்கு அடுத்து 3 வது இடத்தில் உள்ளது. இந்த வாயுக்களில் ஹைட்ரஜனே மிக அதிக அளவில் இருந்தது . இப்படி உண்டான அண்டத்தில் இந்த வாயுக்கள் ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டிருந்தன. இந்த சுழற்சியால் ஒரு ஈர்ப்பு விசை உருவானது. அந்த ஈர்ப்பு விசையால் மேலும் மேலும் அதிக வாயுக்கள் ஈர்க்கப்பட்டன. இந்த அதிகப்படியான வாயுக்களால் மேலும் அதிக ஈர்ப்பு விசை உருவானது. இத்தகைய தொடர் வினையால் வாயுக்கள் ஈர்க்கப்பட்டு ஒரு பந்து போன்று உருவானது. அந்த கோளத்திற்கு ஒரு ஈர்ப்பு விசையும் உருவானது. இந்த வாயுக்களால் உண்டான அந்த கோளம் தனக்கான நிறையையும் (Mass) கொண்டிருந்தது. இப்படியாக உண்டான ஈர்ப்பு விசை , நிறையால் அந்த கோளத்தின் மத்தியில் வெப்பம் உண்டானது. இப்படி உண்டான வெப்பத்தால் ஹைட்ரஜன் அணுக்கரு இணைவு நடக்க ஆரம்பித்தது. அதாவது இரண்டு ஹைட்ரஜன் அணுக்கருக்கள் இணைந்து ஹீலியம் அணுக்கரு உண்டானது . அப்பொழுது மேலும் அதிக வெப்பம் உண்டானது . இந்த அதிக வெப்பத்தால் மேலும் அதிக ஹைட்ரஜன் அணுக்கரு நடைபெற்றது . இப்படி தனக்கான நிறை, ஈர்ப்பு விசை, வெப்பம் இவற்றைக் கொண்டிருந்த இந்தக் கோளங்களே நட்சத்திரங்கள் (Star) ஆகும் . இப்படி நட்சத்திரத்தின் மையத்தில் உண்டான வெப்பமானது நட்சத்திரத்தின் வெளி நோக்கிச் சென்று நட்சத்திரத்தின் பரப்பை அடைந்து வெளியேறியது.

இந்த நட்சத்திரங்கள் மிக அதிக ஈர்ப்பு விசை கொண்டிருந்தன. இந்த உள்நோக்கிய ஈர்ப்பு விசையானது அந்த நட்சத்திரங்களில் உண்டாகி வெளி நோக்கிச் செல்லும் வெப்ப ஆற்றலால் ஈடுசெய்யப்பட்டது. இதனாலையே இந்த நட்சத்திரங்கள் அதனுடைய ஈர்ப்பு விசையாலையே ஈர்க்கப்பட்டு உருக்குலையாமல் உள்ளன.

நட்சத்திரங்களில் நடக்கும் அணுக்கரு இணைவானது அதனுடைய மைய்யத்திலேயே ஆரம்பிக்கின்றன. ஏனெனில் அதனின் மையம்தான் மற்ற எல்லாப்பகுதிகளைக் காட்டிலும் அதிக வெப்பம் மற்றும் அழுத்தம்  கொண்டிருக்கும். அணுக்கரு நிகழ்வு நடக்க மிக அதிக வெப்பம் தேவை. இப்படி நட்சத்திரத்தின் மையத்தில் ஆரம்பித்த அணுக்கரு நிகழ்வு அப்படியே வெளி நோக்கி நடக்கும். இப்படியான அணுக்கரு இணைவால் நட்சத்திரத்தின் மையத்தில்  தேவையான அளவு ஹீலியம் சேகரமாகி இருக்கும். அதோடு தேவையான அளவு வெப்பமும் உருவாகி இருக்கும். இப்பொழுது ஹீலியம் அணுக்கள் இணைந்து ஆக்சிசன் உருவாக ஆரம்பிக்கும். இப்படி ஆக்சிசன் உருவானவுடன் அதற்கடுத்து ஆக்சிசன் அணுக்கள் இணைந்து கார்பன் அணுக்கள் உருவாகும் . இது ஒரு தொடர் வினையாகும் .

ஒரு நட்சத்திரத்தின் வாழ்நாளின் பெரும் பகுதிகளில் ஹைட்ரஜன் அணுக்கரு இணைவே நடைபெறும். ஹைட்ரஜன் எரிபொருள் தீரும் நிலையில்தான் மற்ற அணுக்கரு இணைவு நடக்க ஆரம்பிக்கும். ஒரு வயது முதிர்ந்த நட்சத்திரத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் (layer) ஒவ்வொரு அணுக்கரு இணைவு நடக்கும் . அதனுடைய மையத்தில் மிக அதிக கனமான தனிமத்தின் அணுக்கரு நிகழ்வும் அதற்கடுத்து அதைவிட  லேசான தனிமத்தின் அணுக்களின் நிகழ்வும் அதற்கடுத்து அதை விட லேசான தனிமம் என்று கடைசியில் அதன் வெளிப்புறத்தில் ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் உருவாகும். ஒரு நட்சத்திரத்தின் மையத்தில் எப்பொழுதுமே மிக கனமான தனிமத்தின் அணுக்கரு நிகழ்வு நடக்கக் காரணம் எப்பொழுதுமே மைய்யத்தில்தான் நட்சத்திரத்திலேயே மிக கனமான தனிமம் உருவாகி இருக்கும் மேலும் கனமான தனிமங்களின் அணுக்கரு நிகழ்வு நடக்கத் தேவையான அளவு அதிக வெப்பமும், அழுத்தமும் இருக்கும்.

இப்படியாக ஒரு நட்சத்திரத்தில் இரும்பு வரை கடினமான தனிமங்கள் உருவாகும். இப்படியாக கடைசியாக உருவான இரும்பில் கடைசியாக அணுக்கரு இணைந்து தங்கம், பாதரசம் , டைட்டானியம் , யுரேனியம் போன்ற கனமான தனிமங்கள் உருவாகும். இந்த நிலையில் அந்த நட்சத்திரம் சூப்பர்நோவாவாக வெடித்து அண்ட வெளியில் தனிமங்களை இரைக்கும் . கடைசியாக எஞ்சி இருக்கும் அந்த மையம் நியூட்ரான் நட்சத்திரம் என்று அழைக்கப்படும் . இந்த நியூட்ரான் நட்ச்சத்திரங்கள் மிகச் சிறியதாக இருந்தாலும் இவை மிக அதிக நிறை கொண்டிருக்கும். அந்த நிறையே அதற்கு மிக அதிக ஈர்ப்பு சக்தியைக் கொடுக்கும். இத்துடன் கிட்டத்தட்ட நட்சத்திரம் என்ற நிலை முடிந்து விடும்.

இத்தகைய மிக அதிக ஈர்ப்பு சக்தி கொண்ட இரண்டு நியூட்ரான் நட்ச்சத்திரங்கள் நெருங்கும் பொழுது அவை ஒன்றை ஒன்று ஈர்த்து ஒன்றை ஒன்று சுற்றி சுழல ஆரம்பிக்கும். இப்படி சுழலும் பொழுது அவற்றின் சுழற்சி வேகம் அதிகரிக்கும் மற்றும் அவற்றிற்கிடையேயான தூரம் குறைய ஆரம்பிக்கும். அவற்றின் சுழற்சி வேகம் கிட்டத்தட்ட 67 மில்லியன் mph ஐ அடையும் . அத்தகைய தருணத்தில் அவை ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குழையும். இப்பொழுது அவற்றின் இரண்டின் நிறையும் இணைந்து மிக அதிகப்படியான நிறை உருவாகும் . இப்படி உருவான நிறை மிகப் பிரமாண்ட அளவிலான ஈர்ப்பு விசையைக் கொண்டிருக்கும் . அது எத்தகைய அளவிலான ஈர்ப்பு விசை என்றால் அதன் ஈர்ப்பிலிருந்து ஒளி கூட தப்பிக்க முடியாது . ஆம் அதுதான் Black Hole .

இதே போன்று மிகப் பெரிய நட்சத்திரங்களில் எரிபொருள் தீர்ந்து போகும்போது , அந்த நட்சத்திரத்தின் உள்நோக்கிய மைய ஈர்ப்பு விசையை ஈடு செய்யக்கூடிய அளவிற்கு அதன் வெளி நோக்கிச் செல்லும்  அணுக்கரு இணைவால் உருவாகக் கூடிய ஆற்றல் இருக்காது . இதனால் அந்த நட்சத்திரத்தின் மைய ஈர்ப்புவிசையால் அந்த நட்ச்சத்திரமே ஈர்க்கப்பட்டு , அதன் நிறையானது மிகக் குறைந்த இடத்தில் மிக அதிக நிறை குறுக்கப்படும். அது மேலும் மிக அதிக ஈர்ப்பு விசையை உருவாக்கும் அது மேலும் மிக அதிக நிறையை ஈர்த்து மிகக் குறைந்த இடத்தில் மிக அதிக நிறையைக் குவிக்கும் . Black Hole இன் மிக அடிப்படையே அதனின் மிகப் பிரமாண்டமான ஈர்ப்பு விசையாகும். அந்த பிரமாண்ட ஈர்ப்பு விசையானது மிகக் குறைந்த இடத்தில் மிக அதிக நிறையைக் குவிப்பதால் உருவாகிறது. எடுத்துக்காட்டாக பூமியின் நிறை கொண்ட ஒரு Black Hole 9mm அளவிலேயே இருக்கும் . அதாவது 5.9736×1024 kg நிறையானது 9mm இடத்தில் குவிக்கப்பட்டிருக்கும்!. இன்னும் விரிவாகச் சொன்னால் 12,742 km விட்டம் (diameter) கொண்ட பூமியின் நிறையானது 9mm இடத்தில் குவிக்கப்பட்டால் அது ஒரு Black Hole!. இப்படி மிகப் பெரிய நட்சத்திரங்கள் தமது வாழ்நாளின் முடிவில் Black Hole ஆக உருமாறும்.


இப்படி உருவான Black Hole தன்னைச் சுற்றிலும் உள்ள பொருட்களை ( மற்ற நட்சத்திரங்கள் உட்பட !) ஈர்த்து விழுங்க ஆரம்பிக்கும். இப்படி மற்ற பொருட்களை ஈர்ப்பதால் அதனுடைய நிறை அதிகரிக்க ஆரம்பிக்கும் . இதனால் அதனுடைய ஈர்ப்பு விசை மேலும் அதிகரிக்க ஆரம்பிக்கும் . அது மேலும் பொருட்களை ஈர்க்க ஆரம்பிக்கும். இப்படி Black Hole பெரிதாக ஆரம்பிக்கும் . மேலும் இரண்டு Black Hole ஒன்றை ஒன்று ஈர்த்து இணையும் பொழுது அது மேலும் மிகப் பெரிய Black Hole ஆக உருமாறும்.
இப்பேரண்டமானது தன்னகத்தே மிகப் பிரமாண்ட அளவிலான Black Hole களைக் கொண்டிருக்கிறது. இப்பேரண்டத்திலுள்ள பெரும்பாலான galaxy களும் தன்னுடைய மையத்தில் மிகப் பிரம்மாண்டமான Black Hole களைக் கொண்டிருக்கிறது. நம்முடைய சூரியன் அமைந்திருக்கும் பால் வெளி மண்டலமும் (Milkyway Galaxy) தன்னுடைய மையத்தில் மிகப் பெரிய Black Hole யைக் கொண்டிருக்கிறது. இந்த Black Hole கள் அதனுடைய நிறையைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சூரியனின் நிறையை ப் போன்று 1,00,000 மடங்கு முதல் ஆயிரம் கோடி வரை நிறை கொண்ட Black Hole கள் Supermassive Black Hole கள் என்றழைக்கப்படுகின்றன . இவை இவ்வளவு நிறை கொண்டிருந்தாலும் இவற்றின் அளவு சில மில்லி AU லிருந்து 400 AU வரைதான் இருக்கும் ( AU - Austronomical Unit என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் ஆகும் . அதாவது 149,597,870.700  km ஆகும் ) . இவ்வளவு பெரிய Black Hole களுடன் மிகச் சிறிய Black Hole களும் உள்ளன. நமது நிலாவின் அளவிற்கு நிறை கொண்ட Black Hole கள் Micro Black Hole கள் என்றழைக்கப்படுகின்றன. அவற்றின் அளவு 0.1 mm ஆகும்!.

ஒரு Black Hole ஐப் பார்த்தால் ஒரு கருப்பு வட்டம் போன்று இருக்கும். Black Hole இன் விளிம்புப் பகுதி. Event Horizon எனப்படும் . ஒரு Black Hole ஐச் சுற்றி வாயுக்களும் , தூசு உள்ளிட்ட மற்றப் பொருட்களும் சுற்றி வரும் (Spinning around the black hole). இந்தப் பகுதி Accretion Disc எனப்படும் . வாயுக்களும் , தூசுகளும் இந்த Accretion Disc இல் இருக்கும் வரை தப்பிப்பதற்கான வாய்ப்பாவது இருக்கும். எப்பொழுது ஒரு பொருள் Event Horizon ஐ அடைகிறதோ அப்பொழுது அது மீளவே முடியாத Black Hole இல் விழுந்து விடும். அதாவது அந்தப் பொருளிலிருந்து வெளியேறும் ஒளி கூட Black Hole லிலிருந்து வெளியேற முடியாது . ஏனெனில் Black Hole இன் ஈர்ப்பு விசையானது ஒளியின் வேகத்தை விட அதிகம் . அதனால்தான் ஒளிகூட Black Hole லிலிருந்து தப்ப முடியாது. இது Event Horizon என்று அழைக்கப்படுவதற்கு காரணம் அதில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வும் (Event) வெளியிளிருப்பவற்கு தெரியவே தெரிய வராது.

இப்படி ஈர்க்கப்படும் பொருளானது , Black Hole இன் மையத்தை அடையும் . இந்த மையமே Singularity எனப்படும். இந்த Singularity யிலேயே Black Hole இன் மொத்த நிறையும் குவிந்திருக்கும். இந்த Singularity அளவற்றது. அதாவது அளவே இல்லாதது , Zero Volume. ஆம் Black Hole இன் முழு நிறையும் ஒரு புள்ளியில் குவிக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்தப் புள்ளி அளவற்றது. இப்படி ஒரு புள்ளியில் மொத்த நிறையும் குவிக்கப்பட்டிருப்பதாலையே அது அளவற்ற ஈர்ப்பு விசையைக் கொண்டிருக்கிறது . இதுவரை நாம் கூறிய Black hole இன் அளவு ( 0.1 mm முதல் 400 AU) என்பது அந்த Event Horizon னின் (ஆரம்) அளவே ஆகும் .

Black Hole ஐப் பற்றிய ஆச்சரியப்படத்தக்க விசயங்களில் ஒன்று, Black Hole நேரத்தை வளைக்கக் கூடியது. Black Hole இன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தில் நேரம் மாறக்கூடியது. அதாவது Event Horizon இல் இருக்கும் நேரத்தை விட Singularity க்கு அருகில் இருக்கும் பகுதியில் நேரம் மெதுவாக ஓடும். இது எப்படி சாத்தியம் என்றால், அதிக ஈர்ப்பு விசை இருக்கும் இடத்தில் நேரமானது குறைவான ஈர்ப்பு விசை இருக்கும் இடத்தை விட மெதுவாகச் செல்லும் . ஆகாயத்தில் விமானத்தில் வைக்கப்பட்ட கடிகாரமானது (Automic Clock), பூமியில் வைக்கப்பட்ட கடிகாரத்தை விட வேகமாகச் செல்லும். இப்பேரண்டத்தில்  ஒரு இடத்திற்கும் மற்றொரு இடத்திற்கும் இடையாயான ஈர்ப்புவிசை வித்தியாசம் அதிகம் கிடையாது. அதனால் அதை பெரிதாக உணர முடியாது. ஆனால் Black Hole இல் ஒரு இடத்தில் இருக்கும் ஈர்ப்பு விசைக்கும் மற்றொரு இடத்தில் இருக்கும் ஈர்ப்பு விசைக்கும் இடையேயான வித்தியாசம் மிக அதிகம். அது எந்த அளவிற்கு என்றால் ஒருவர் ஒரு Black Hole இல் விழுந்தால் அவரின் தலையில் உணரப்படும் ஈர்ப்பு விசையை விட காலில் உணரப்படும் ஈர்ப்பு விசை மிக அதிகமாக இருக்கும் . இத்தகைய ஈர்ப்பு விசை வேறுபாட்டால் அவர் பிய்த்து எறியப்படுவார். இப்படி மிக அதிக ஈர்ப்பு விசை வித்தியாசம் இருப்பதால் , Black Hole இன் Singularity பகுதியில் நேரமானது infinity slow ஆகும். அதாவது கிட்டத்தட்ட நேரமானது ஓடாது!.

Black Hole - size zero, infinite density, infinite temperature, and infinite space-time curvature !.

Image Courtesy:
http://resources1.news.com.au/images/2013/04/03/1226611/300617-black-holes.jpg
http://i.space.com/images/i/000/013/577/i02/sygnux-black-hole.jpg?1322519885

Saturday, August 24, 2013

Cricket - Beauty in Diversity

அன்னைக்கு espncricinfo பார்த்துகிட்டு இருந்தேன். அதோட home page ல ஒரு Test match, ஒரு ODI மற்றும் ஒரு T20 live scoring ஓடிக்கிட்டு இருந்துச்சு, அப்பதான், கிரிக்கெட் மாதிரி மூணு format கொண்ட விளையாட்டு வேறு ஏதாவது இருக்கானு தோணுச்சு.

எனக்குத் தெரிந்து ஒரே காலகட்டத்தில் ஒரே விளையாட்டில் வெவ்வேறு வகை (format) கொண்ட விளையாட்டு கிரிக்கெட் தவிர வேறு எதுவும் உலகில் இல்லை. ஐந்து நாள் ஆட்டம் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் அதற்கு முற்றிலும் மாறான 50 ஓவர் கொண்ட One Day Format அதற்கும் மாறான T20 . இதுல என்ன விசேசம்னா இவை அனைத்தும் ஒரே காலகட்டத்தில் விளையாடப்படுகின்றன.

ஒரு format இல் ஐந்து மணி நேரத்தில் யார் வெற்றியாளர் என்று தெரிந்து விடும்போது அதே விளையாட்டில் மற்றொரு  format இல் ஐந்து நாள் ஆனாலும் விடை தெரியாது. சரி போகட்டும், ஒரே format டிலும் இந்த விளையாட்டு எல்லா காலகட்டத்திலும் ஒரே மாதிரி விளையாடப்பட்டு இருந்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இன்று ஐந்து நாள் விளையாட்டாக விளையாடப்படும் டெஸ்ட் match ஒரு காலகட்டத்தில் வெற்றியாளர் யார் என்று தெரியும் வரை விளையாடப்பட்டது. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு இடையே 1939 இல் நடைபெற்ற டெஸ்ட் match 9 நாள் நடந்தது. அப்படியும் யார் வெற்றியாளர் என்று தீர்மானிக்க முடியவில்லை. ஏனென்றால் அன்று இங்கிலாந்து அணி செல்வதற்கான கப்பலிற்கு நேரமாகியதால் அந்த போட்டி முடிவு காணாமலையே கைவிடப்பட்டது.

இதற்கு அடுத்து ஆடப்பட்ட ஒரு நாள் விளையாட்டுப் போட்டியிலும் அது ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து இன்று வரை பல மாற்றங்கள்.  முதலில் 60 ஓவர் கொண்ட விளையாட்டாக விளையாடப்பட்டது பிறகு 50 ஓவர் கொண்டதாக குறைக்கப்பட்டது.  இது போதாது என்று இதில் விறுவிறுப்பைக் கூட்ட முதல் பதினைந்து ஓவருக்கு fielding restriction கொண்டு வரப்பட்டது. பின்னர் அது இருபது ஓவராக கூட்டப்பட்டது . முதலில் முதல் இருபது ஓவருக்கு என்று இருந்தது பின்னர் அது 10, 5, 5 ஓவராக மாற்றப்பட்டது.

ஒரு நாள் போட்டியில் ஒருவர் அதிகபட்சம் 10 ஓவர் தான் போட முடியும் என்கிற போது டெஸ்ட் மாட்சில் ஒருவர் எத்தனை ஓவர் வேண்டுமானாலும் போடலாம்.

விளையாடுற பால்லே சிவப்பு பந்து , வெள்ளைப் பந்துனு ரெண்டு வகை. ஒவ்வொரு பாலும் ஒவ்வொரு மாதிரி behave பண்ணும். முதலில் ஒரு இன்னிங்சுக்கு ஒரு பந்துன்னு இருந்தது போய் இப்ப ஒரு இன்னிங்சுல ரெண்டு பந்து வச்சு விளையாடுறாங்க.

இதுக்கப்புறம் T20 வேற .

வேறு எந்த ஒரு விளையாட்டிலும் இத்தனை மாற்றங்கள் இருக்கிறதா அல்லது ஏற்பட்டிருக்கிறதா  என்று எனக்குத் தெரியவில்லை. சரி மேற்சொன்ன மாற்றங்கள் , பல்வேறு விதமான format , வெவ்வேறு விதிமுறைகள் அனைத்தும் கிரிக்கெட்டின் ஒரு அங்கம் என்று வேண்டுமானாலும் கொள்ளலாம் ஆனால் ஒரே format இல் அதுவும் ஒரே காலகட்டத்தில் வெவ்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை என்னவென்று சொல்ல. கிரிக்கெட்டில் பின்பற்றப்படும் DRS விதிமுறை அனைத்து நாடுகள் பங்கேற்கும் போட்டிகளிலும் பின்பற்றப்படும் ஆனால் இந்தியா விளையாடும் போட்டியில் மட்டும் பின்பற்றப்படாது. என்ன ஒரு விசித்திரம்!.

கிரிக்கெட்டே ஒரு சமநிலைத் தன்மையுடன் விளையாடப்படுகிறதா என்பதே ஒரு கேள்விக்குறிதான். பல நேரங்களில் ஐந்து நாட்கள் விளையாடப்படும் விளையாட்டின் முடிவை 5 நொடிகளில் போடப்படும் toss யே தீர்மானித்துவிடுகிறது. அன்று Cricinfo வில் கிரிக்கெட் ரசிகரான டென்னிஸ் வீரர் ஒருவர் கூறியது  ' I always like to loose toss in tennis. I don't like to waste my energy in taking useless decision. But in cricket many times the toss itself decides who is the winner even before match starts' . இந்த ஒரு கூற்றே கிரிக்கெட்,  விளையாட்டுகளின் மிக அடிப்படை விதியான ' போட்டியானது அதில் பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் சம வாய்ப்பையும் , சம சூழ்நிலையையும் ஏற்படுத்தித் தரவேண்டும் ' என்பதையே மீறுவதை கூறும். காத்து அடிச்சா குத்தம் , மழை தூறுனா குத்தம் , வெயிலடிச்சா குத்தம் , இப்படி சூழ்நிலையில் ஏற்படும் சிறு மாற்றமே கிரிக்கெட்டில் ஒரு அணியின் வெற்றி தோல்வியையே தீர்மானித்துவிடும். Outdoor இல் விளையாடப்படும் வேறு எந்த ஒரு விளையாட்டுமே சுற்றுப்புறத்தில் ஏற்படும் சிறு மாற்றத்தாலும் இந்த அளவிற்கு பாதிக்கப்படுமா என்று தெரியவில்லை .

இப்படி ஒரே விளையாட்டில் இத்துனை முரண்பாடுகள் அல்லது வேறுபாடுகள் இருப்பதால் இந்த விளையாட்டில் ஒரு விளையாட்டு வீரரை மற்றொரு வீரருடனோ அல்லது ஒருவர் நிகழ்த்தும் சாதனையை மற்றொருவரின் சாதனையுடனோ ஒப்பிடுவது கடினம். ஒப்பிட்டாலும் அது பெரும்பாலும் அபத்தமாகவே முடியும் .

மைக்கேல் பெவன் , டான் பிராட்மான் இருவரில் எவர் சிறந்த batsman யார் என்று கேட்டால், Don't compare apple and orange என்றுதான் சொல்ல முடியும். கிரிக்கெட் தெரியாத ஒருவர், ஏன் இருவரும் வெவ்வேறு விளையாட்டைச் சேர்ந்தவர்களா? என்று கேட்டால் நிச்சயம் ஒரு கிரிக்கெட் ரசிகனுக்கு தர்ம சங்கடமான நிலைதான் தோன்றும். சிறிது நினைத்துப் பார்த்தால் கிரிக்கெட்டில் நடந்த சாதனைகள் அனைத்தும் காலத்தால் அழியாதவையே. ஏனெனில் ஒரு சாதனையை மற்றொரு சாதனையுடன் ஒப்பிடவே முடியாது அப்புறம் எப்படி அதை முறியடிப்பது. சச்சின் சதத்தை கேரி சோபர்ஸின் சதங்களுடன் ஒப்பிடவே முடியாது. ஏனெனில் இரண்டும் வெவ்வேறு விதிமுறைகள் இருந்த காலகட்டங்களில் நிகழ்த்தப்பட்டவை.

ஆனால் இத்துனை முரண்பாடுகள் அல்லது வேறுபாடுகள் இருந்தாலும் இதுதான் கிரிக்கெட்டின் அழகு. இந்தியாவைப் பற்றி நாம் Unity in Diversity என்று பெருமையாக சொல்லிக் கொள்வோமே அதுபோல, கிரிக்கெட்டை beauty in diversity னு சொல்லலாம் :) .

Monday, June 10, 2013

உயரம் தொட்ட சிகரம் !


File:Everest North Face toward Base Camp Tibet Luca Galuzzi 2006.jpg

1802 ஏப்ரலில் சில பிரிட்டிஷார் பரங்கி மலை மற்றும் பெரும்பாக்கம் குன்றின் உயரத்தை அளந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தெரியும் இது உலகின் உயரத்தை அளப்பதற்கான தொடக்கம் என்று.  Great Trigonometric Survey என்று அழைக்கப்பட்ட அந்த சர்வே உலகின் உயரமான சிகரங்களின் உயரத்தை துல்லியமாக அளப்பதற்காக தொடங்கப்பட்டது. இந்தக் குன்றுகளை அடிப்படையாக வைத்து அளக்கப்படும் அளவே baseline ஆகக் கொள்ளப்பட்டது . எனவே இதில் ஏற்படும் மிகச் சில மில்லிமீட்டர் பிழையும் உலகின் மிக உயரமான சிகரத்தின் உயரத்தை அளப்பதில் பல நூறு மீட்டர் பிழையை ஏற்படுத்திவிடும். ஏனவே அதில் மிக அதிக கவனம் கொள்ளப்பட்டது. இப்படியாக பிரிட்டிஷார் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒவ்வொரு குன்றுகளின் உயரத்தை அளந்து சென்று இமயமலையின் அடிவாரத்தை அடைந்தனர். அப்பொழுதே வருடம் 1830 கள் ஆகிவிட்டது. ஐந்து வருடங்களில் முடிக்கப்பட்டுவிடும் என்று எண்ணிய சர்வே இத்தனை வருடங்கள் ஆகியும் உலகின் உயரமான சிகரங்களில் ஒன்றைக் கூட அளக்க ஆரம்பிக்கவில்லை.

அப்பொழுது நேபாளம் வெளிநாட்டவர்கள் உள்ளே நுழைய அனுமதி மறுத்திருந்தது. சிகரங்களின் உயரத்தை அளப்பதற்குக்கூட அது அனுமதிக்கவில்லை. அதனால் 1847 களில் பிரிட்டிஷார் நேபாளத்திற்கு வெளியிலிருந்து அதாவது உயரமான சிகரங்களுக்கு கிட்டத்தட்ட 250 km தொலைவு அப்பாலிருந்து அவற்றை அளந்தனர். அந்த காலகட்டங்களில் இந்தியாவிலிருக்கும் கஞ்சன்ஜங்காவே உலகின் உயரமான சிகரமாக கருதப்பட்டது. ஜான் ஆம்ஸ்ட்ராங் என்ற பிரிட்டிஷார் கஞ்சன்ஜங்காவிற்கு தொலைவிலிருந்த ஒரு சிகரம் கஞ்சன்ஜங்காவை விட உயரமாக இருக்கும் என்று எண்ணினார். அதற்கு அவர் 'b' என்று பெயரிட்டார். அதற்கடுத்து நிக்கோல்சன் என்பவர் சிகரம் 'b' இன் உயரத்தை அளக்க அனுப்பப்பட்டார். சிகரம் 'b' க்கு 170 km தூரம் இருந்து அளந்த அவரின் அளவீடுகள் சிகரம் 'b' நிச்சயம் கஞ்சன்ஜங்காவை விட உயரமானது என்பதைக் காட்டியது.  இவர்களின் மூலம் பெறப்பட்ட அளவீடுகளிளிருந்து மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு இந்தியர் 1852 ஆம் ஆண்டு சிகரம் 'b' திட்டவட்டமாக உலகின் உயரமான சிகரம் என்று கண்டறிந்தார். இருந்தபோதிலும் சிகரம் 'b' (இதற்க்கு இப்பொழுது சிகரம் XV என்று பெயரிடப்பட்டிருந்தது) உலகின் உயரமான சிகரம் என்று அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது . இதற்கு காரணம் அவர்கள் இதில் எந்த ஒரு தவறும் ஏற்படக்கூடாது என்பதால் திரும்ப திரும்ப தாங்கள் மேற்கொண்ட அளவீடுகளை சரிபார்த்துக் கொண்டிருந்தனர். இறுதியாக அவர்களின் அளவீட்டில் சிகரம் XV இன் உயரம் மிகச் சரியாக 29000 அடி. ஆனால் 29000 அடி என்று சொன்னால் மக்கள் அதை ஏதோ ரவுண்ட் figure ஆக சொல்லிவிட்டார்கள் என்று எண்ணுவார்கள் என்று எண்ணி 29,002 அடி உயரம் என்று குறித்தனர் .

அடுத்து சிகரம் XV க்கு பெயர் வைக்க வேண்டும் . அப்பொழுது இந்தியாவில் சர்வேயர் ஜெனரலாக இருந்தவர் ஆண்ட்ரு  வாக்ஹ் . அவருடைய குருநாதர் சிகரங்களுக்கு பெயர் வைக்கும்பொழுது உள்ளூர் மொழியிலேயே பெயர் வைக்கவேண்டும் என்று அறிவித்திருந்தார். ஆனால் அச்சிகரம் இருந்த நேபாளமும் , திபெத்தும் வெளிநாட்டவருக்கு அனுமதி மறுத்திருந்தது. அதனால் அதன் பெயர் யாருக்கும் தெரியவில்லை . அதனால் வாக்ஹ் தன்னுடைய குருநாதரின் பெயரையே வைத்துவிட்டார். எவரெஸ்ட் ! .

1856 இல் உலகின் உயரமான சிகரம் என்று அறிவிக்கப்பட்ட எவரெஸ்ட்டில் ஏறுவதற்கு அன்று முதல் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை பெரும்பாலும் பல உயிர்பலிகளுடன் தோல்வியில் முடிந்தன. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 1953 இல் நியூஜிலாந்தின் எட்மண்ட் ஹிலாரியும் நேபாளத்தை  சேர்ந்த செர்பாவான டென்சிங் நார்கேவும் முதலில் சிகரம் தொட்டனர். இருவரில் எவர் முதலில் சிகரம் தொட்டனர் என்பது அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த ரகசியம். இருவரில் டென்சிங் நார்கே மட்டுமே சிகரத்தை அடைந்தார் , எட்மண்ட் ஹிலாரி அதை தொடவே இல்லை என்று கூறுவோரும் உண்டு. அதற்கு அவர்கள் சான்றாகக் கூறுவது டென்சிங் நார்கே மட்டுமே எவரெஸ்டில் இருப்பது போன்று புகைப்படம் உள்ளது , எட்மண்ட் ஹிலாரி இருப்பது போன்று புகைப்படம் இல்லை என்றனர். அதற்கு எட்மண்ட் , டென்சிங்கிற்கு புகைப்படம் எடுக்கத் தெரியாததால் , நான் எடுத்த அவர் நிற்கும் புகைப்படம் மட்டுமே எங்களிடம் உள்ளது என்றார். அவர்களின் சிகரம் தொட்ட அந்தப் பயணம் வெற்றிகரமாக அமைந்ததற்கு முக்கிய காரணம் அந்தப் பயணத்தில் அது வரை இல்லாத அளவு பயன்படுத்தப்பட்ட அதிகப்படியான  ஆக்சிஜன் ஆகும் .

இருவர் சிகரம் தொட்ட அந்த பயணத்திற்கு 400 பேர் உதவினர் .  நேபாளிகளான ஷெர்பாக்களின் மலை ஏறும் ஆற்றல்  அளப்பெரியது. இன்றும் அவர்களின் உதவி இன்றி இமயமலை சிகரங்கள் அடையமுடியாது . 400 பேர் கொண்ட அந்த குழுவிற்கு தலைமை ஏற்றிருந்த ஜான் ஹன்ட் , எவரெஸ்ட் சிகரம் தொட இரண்டு பேர் இரண்டு பேர் கொண்ட இரண்டு குழுக்களை தேர்ந்தெடுத்திருந்தார். முதல் குழுவைச் சேர்ந்த டோம் போர்டில்லன் மற்றும் சார்லஸ் ஈவான்ஸ் தங்கள் பயணத்தில் சிகரம் தொட முடியாமல் திரும்பிய பொழுது அவர்களுக்கு முன்னே எவரெஸ்ட் 300 அடி தூரத்தில் இருந்தது ! .  முன்னூறு அடி தூரத்தில் உலகம் அவர்களின் பெயரை மறந்துவிட்டது . அவர்கள் திரும்பிய இரண்டு நாட்களில் எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங் நார்கேயும் தங்கள் பயணத்தை தொடங்கினர். டென்சிங் நார்கேயும் எட்மண்ட் ஹிலாரியும் இணைந்தது உணர்ச்சிகரமானது. ஒரு முறை எட்மண்ட் ஹிலாரி தன்னுடைய மலையேற்றத்தில் அதல பாதாளத்தை நோக்கி விழுந்த போது டென்சிங் நார்கேயின் துரித நடவடிக்கையால் காப்பாற்றப்பட்டார் . அன்றிலிருந்து எட்மண்ட் ஹிலாரி தன்னுடைய பிற்கால பயணங்களுக்கு டென்சிங் நார்கேயை சேர்த்துக் கொண்டார் .

உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் பூமியின் தொலைவான பகுதி கிடையாது. பூமியானது தன்னுடைய பூமத்திய  ரேகை பகுதியில் பருத்துக் காணப்படும். அதனால் பூமியின் மையத்திலிருந்து அளக்கும்போழுது எவரெஸ்ட் சிகரமானது பூமியின் ஐந்தாவது தொலைவான பகுதியே (tallest/farthest point of the earth) ஆகும். முதல் இடத்தை வகிப்பது ஈக்குவடாரில் இருக்கும் சிம்போரசோ ஆகும் . சொல்லபோனால் முதல் நான்கு இடத்தை வகிப்பதும் பூமத்திய ரேகை பகுதியைச் சேர்ந்த சிகரங்களே ஆகும் .கடல் மட்டத்திலிருந்து பார்த்தால் சிம்போரசோ 20,565 அடியே ஆகும் ஆனால் எவரெஸ்ட்டோ 29,029 அடி :).

இன்று சீனா எவரெஸ்ட்டை எவரெஸ்ட் என்று கூறாமல் திபத்திய பெயரான சொமோலுங்க்மா  (Holy Mother) என்றே அழைக்க வேண்டும் என்று கூறுகிறது. ஏனெனில் எவரெஸ்ட்டானது உலகம் அறிவதற்கு முன்பே திபெத்தியர்களால் பல காலம் அறியப்பட்டிருந்தது. அதனால் திபெத்திய பெயராலேயே அது அறியப்பட வேண்டும் என்று கூறுகிறது. இன்று பல நாடுகள் எவரெஸ்ட் என்ற சொமோலுங்க்மா என்று உலகின் மிக உயரமான சிகரத்தை அழைக்க ஆரம்பித்துவிட்டன. ஆனால் திபெத் போன்றே நேபாளிகளால் பல காலம் அறியப்பட்ட அந்த சிகரத்தின் நேபாள பெயரான சகர்மதாவை பலரும் மறந்தது சீனாவின் வல்லரசு ஆற்றலைக் காட்டுகிறது !

Titpits:

1. கடந்த மே 29, 2013 வுடன் எவரெஸ்ட் என்ற சொமோலுங்க்மா என்ற சகர்மதா சிகரம் தொட்டு 60 வருடங்கள் ஆகின்றன .
 2. நாம் அறிந்தவரை மிக உயரமான சிகரம் ஒலிம்பஸ் மோன்ஸ். அமைந்திருப்பது செவ்வாய் கிரகத்தில் . அதன் உயரம் 22 km. நம்முடைய எவரெஸ்டின் உயரம் 8.8 km :(
3. 29029 அடி உயர எவரெஸ்ட் சிகரத்தை 29 ஆம் தேதி முதல் முறையாக அடைந்தார்கள் என்பது இன்னொரு titpits :)