Saturday, December 5, 2009

ஒரு வழியாக ஷேக் ஹசினாவிற்கு நீதி கிடைத்தது

பங்கபந்து என்று அழைக்கப்படுபவர் பங்களாதேஷின் தந்தை முஜிபுர் ரஹ்மான். பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷின் விடுதலைக்கு போராடி இந்தியாவின் உதவியுடன் விடுதலைப் பெற்றுத் தந்தவர். இதற்குப் பின் பங்களாதேஷின் முதல் குடியரசுத் தலைவரானார். 1975 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் முஜிபுர் ரஹ்மானும் அவருடைய குடும்பத்தாரும் பங்களாதேஷின் ராணுவத்தைச் சேர்ந்தவர்களால் குடியரசுத் தலைவர் இல்லத்தில் வைத்தே படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையிலிருந்து வெளிநாட்டிலிருந்த அவருடைய இரு மகள்கள் மட்டுமே தப்பினர். அதற்குப் பின் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது மற்றும் முஜிபுர் ரஹ்மானின் படுகொலைக்கு காரணமானவர்களை தப்பிப்பதற்க்கும் வழிகோலியது . இதற்குப் பின் அவருடைய மகள்களில் ஒருவரான ஷேக் ஹசினா, வெளிநாட்டிலிருந்த படியே முஜிபுர் ரஹ்மானின் கட்சியான அவாமி லீகின் தலைவரானார். 1980 ஆம் ஆண்டு நாடு திரும்பி ராணுவத்துக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினார். 1996 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதம மந்திரி ஆனார். இதற்குப் பிறகே முஜிபுர் ரஹ்மானின் படுகொலைக்குக் காரணமானவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்கடுத்த தேர்தலில் எதிர்க் கட்சியைச் சேர்ந்த கலிதா ஜியா பிரதம மந்திரி ஆனார். முஜிபுர் ரஹ்மானின் படுகொலை வழக்கும் கிடப்பில் போடப்பட்டது. அதற்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தது. பின் 2008 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திரும்பவும் ஷேக் ஹசினா வெற்றி பெற்றார். அதற்குப் பிறகுதான் முஜிபுர் ரஹ்மானின் வழக்கு சூடு பிடித்தது. ஒரு வழியாக முஜிபுர் ரஹ்மான் படுகொலை மீதான வழக்கில் சென்ற நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இப்படுகொலைக்கு காரணமானவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. முஜிபுர் ரஹ்மான் படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படும் வரை ரத்தக் கரை படிந்த தன் வீட்டிற்கு ஷேக் ஹசினா வெள்ளை அடிக்கமாட்டேன் என்று சபதம் ஏற்றிருந்ததாகக் கூட நான் கேள்விப்பட்டேன். ஒரு வழியாக கிட்டத்தட்ட 34 வருட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பின் குறிப்பு :
ஷேக் ஹசினா பல நிலைகளில் தான் இந்தியாவிற்கு ஆதரவானவர் என்று நிரூபித்துள்ளார். அதுவே இப்பதிவு எழுதுவதற்கு ஒரு முக்கியக் காரணம்.

No comments: