Monday, October 3, 2022

பொன்னியின் செல்வன் - 1 - எனது பார்வை

ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு படத்தை எதிர்பார்த்து ரொம்ப ஆவலா இருந்தது "பொன்னியின் செல்வன்" படத்துக்குத்தான். இந்த படத்த ரொம்ப எதிர்பார்த்தததுக்கு   காரணம் கல்கியின் பொன்னியின் செல்வனை ஏற்கனவே படிச்சததுலாம் இல்ல . சொல்லப்போனா நான் ரொம்ப காலத்துக்கு முன்ன   என்னோட  முன்னொரு பதிவுல சொன்ன மாதிரி கல்கியின் "பொன்னியின் செல்வனை (PS)" விட எனக்கு ரொம்ப பிடிச்சது சாண்டில்யனின் "யவன ராணி" தான். சொல்லப்போனா என்னப் பொறுத்தவரை  PS நாவல் சில இடங்களுல சலிப்பாதான் இருக்கும். என்னோட அண்ணன் ஆனந்த் சொன்ன மாதிரி இந்த நாவல (அப்படியே ) படமா பாத்தா , அது கொஞ்சம் அசதியாதான்  இருக்கும். ஒரு சரித்திர படத்துக்குத் தேவையான போர் , போர் தந்திரம் மாதிரியான சமாச்சாரம்லாம் ரொம்ப இருக்காது. போரப் பத்தி நாவல்ல சொல்லி இருந்தாலும் கல்கி, சாண்டில்யன் மாதிரி  அத ரொம்ப விவரிச்சுருக்க மாட்டார். என் தம்பி மது சொன்ன மாதிரி , வந்தியத்தேவன் PS ன் முக்கிய கதாபாத்திரங்களை எல்லாம் எதேச்சயாத்தான் சந்திப்பான் அல்லது அந்த சந்தர்ப்பங்கள் ரொம்ப எதேச்சயாத்தான் நடக்கும் . அது அவன் கடம்பூர் சம்புவரையர்  மாளிகைக்கு போகணும்னு தீர்மானிக்கிறதுலருந்து ,  நந்தினி, சேந்தன் அமுதனை சந்திக்கிறத்துலருந்து கடைசிவரைக்கும் பெரும்பாலான சம்பவங்கள் எதேச்சயாதான் நடக்கும். ஒரு மிகச் சிறந்த சரித்திர நாவல்ல இதெல்லாம் கொஞ்சம் அயர்ச்சியா இருக்கும்.


நல்ல பொருட்செலவில் எடுத்தால் PS ஒரு நல்ல webseries  ஆ இருக்குங்கிறதுதான் என்னோட எண்ணமா இருந்துச்சு . So , இந்த அளவுக்கு முன் எண்ணங்கள் இருந்ததால , அந்த சவால்களை எப்படி சரி செஞ்சுருப்பாங்கங்குறத தெரிஞ்சுக்கணும்னு  இந்தப் படத்து மேல எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்துச்சு. 

எல்லாத்துக்கும் மேல தமிழ்ல ரொம்ப வருசத்துக்கு அப்புறம் ஒரு உண்மையான வரலாற்றுப் படம் . அந்தப் படத்துல அந்த காலத்து தமிழகத்தை எப்படி காட்டி இருப்பாங்கங்குறத பாக்கணும்னு ரொம்ப ஆசை ( பாகுபலிலாம் எல்லாம் ரொம்ப மிகைப்படுத்தப்பட்டதா இருக்கும் . இந்த விஷயத்துல மணிரத்னம் மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை அதிகம் . மணிரத்னம் எடுத்தா அது நிச்சயமா எதார்த்தத்துக்குப் பக்கத்துலதான் இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு ) . 

சரி ரொம்ப பெரிய முன்னுரை சொல்லிட்டேன்  . போதும். 

படத்துக்குப் போறதுக்கு வித்யாதான் எனக்கு டிக்கெட் புக் பண்ணது. நண்பர்கள் ரெண்டு பேரோட படம் வெளியான முதல் நாளே படத்துக்குப் போய்ட்டேன் . படம் ஆரம்பம் சிறப்பாவே இருந்துச்சு . விக்ரம் ரகளையா  அறிமுகம் ஆவாரு .  நேரடியாவே போர்க்களத்துல அறிமுகம் இருக்கும் . அதுல இருந்தே  படம் நன்றாகவே செல்லும்.  இந்தப் படத்த நான் பாக்கணும்னு நெனச்சதுக்கு இன்னொரு முக்கிய காரணம் நடிகர்கள் தேர்வு. எனக்குத் தெரிஞ்சு இந்த நடிகர்களை விட வேற யாரும் சிறப்பா இருந்துருப்பாங்கங்குனு நான் நினைக்கல . படம் பாக்குறதுக்கு முன்னயே எனக்கு கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா , ஜெயராம் தேர்வில் ரொம்ப நம்பிக்கை இருந்துச்சு . அது கொஞ்சம் கூட பொய்க்கல .  மூர்க்கத்தனத்துடனும் , அமைதியற்றும் காணப்படும்  ஆதித்ய கரிகாலனா விக்ரம் மிகச்சிறப்பா நடிச்சிருப்பார்.

நாவலோட  ஒப்பிடும்போது , விக்ரமின் ( ஆதித்ய கரிகாலனின்) கதாப்பாத்திரத்தின் விகிதாச்சாரம் படத்துல அதிகமாகவே இருக்கும். ஒரு நாவல அதுவும் ஒரு வரலாற்று நாவலை படமா எடுக்கும் போது , முக்கியமா பாகுபலி மாதிரி action தூக்கலா இருக்குற படத்துக்கு பின்னாடி வரும்போது போர்க்களத்த காட்டாம இருக்க முடியாது. நாவல்ல போர் அல்லது போர் பற்றிய குறிப்புகள்  இருக்கும் , ஆனா போர்க்களம் இருக்காது. படத்துல போர்க்களம் இருக்கும். நாவல்ல , ஒவ்வொரு கதாப்பாத்திரமும் , மற்ற கதாப்பாத்திரங்கள புகழ்ந்தோ, இகழ்ந்தோ சொல்லிக்கிட்டே இருப்பாங்க . அதேமாதிரி படத்துல காட்டமுடியாது. அது ரொம்ப போர் ஆயிடும். அதனால ஆதித்ய கரிகாலனின் வீரத்தை(மூர்க்கத்தனத்தையும்) காட்ட, நாவலில் விவரிக்காத  இந்தப் போர்க்களங்கள் அவசியம். மணிரத்னம் அத சிறப்பா செய்திருப்பார். 

வந்தியத்தேவனா கார்த்தியின் தேர்வு இயற்கையானது . அவரோட பல பேட்டில பாத்தாலே அவரோட அந்த துள்ளல் தெரியும். ( நான் விரும்பிப் பாக்குறவங்களோட பேட்டில கார்த்தியோட பேட்டிகளும் உண்டு. அவ்வளவு இயல்பா , எதார்த்தமா, பந்தா இல்லாம இருக்கும் ). வம்புல இலகுவா மாட்டிக்கிற, பொண்ணுங்கள பாத்தா வழியுற, பயமறியாத வந்தியத்தேவனுக்கு கார்த்திய விட்டா வேற யாரும் இல்ல . chance ஏ இல்ல செமயா நடிச்சிருப்பார். 

அடுத்து த்ரிஷா , ஐஸ்வர்யா ராய் . நான் முன்னயே சொன்ன மாதிரி த்ரிஷாவைத் தவிர்த்து வேற யாரையும் குந்தவை கதாப்பாத்திரத்துல யோசிக்க முடியல. அவ்வளவு மிடுக்கா , கம்பீரமா பழுவேட்டரையர்களையும் (இளவரசியா மரியாதை கலந்த கம்பீரத்துடன் ) , ஆதித்ய கரிகாலனையும் (தங்கையா பாசம் கலந்த உரிமையுடனும் ), வந்தியத்தேவனையும் ( மிடுக்கும் அதே நேரத்துல காதலும் கலந்த இளவரசியா ) , சுந்தர சோழரையும் ( பட்டத்து இளவரசனான அண்ணனும், பிள்ளை போன்று வளர்த்த தம்பியும் தொலை தூரத்துல இருக்கும்போது , சுற்றிலும் சதி வேலைகள் நடக்கும்போது உடல்நலம் சரியில்லாத தன்  தந்தையான சுந்தர சோழருக்கு பக்கபலமா இருக்கும் மகளா , இளவரசியா) சிறப்பா நடிச்சுருப்பார் . ஒரு இளவரசியா செம அழகா இருப்பாங்க .

படம் பாக்குறதுக்கு முன்னாடி , ஏண்டா இதுக்கு இவரப் போட்டாங்கங்குனு நினைச்சது ஐஸ்வர்யா ராய். அம்பது வயதான ஒருத்தர் நந்தினி கதாப்பாத்திரத்தை பண்ண முடியுமான்னு தோணுச்சு. நந்தினியா அவ்வளவு இளமையும் அழகும் வேண்டியிருக்கும் . ஆனா ஐஸ்வர்யா ராய் , அவ்வளவு அழகா , மிடுக்கா , தன்னுடைய உண்மையான எண்ணங்களை மறைத்து , மற்றவர்களை தன் கைக்குள் போட்டு காரியங்களை நிறைவேற்றுவரா சிறப்பா நடிச்சிருப்பார் . என்னுடைய கணிப்பு இவர் விசயத்துல தப்பானதுல எனக்கு மகிழ்ச்சியே. குந்தவை, நந்தினி கதாப்பாத்திரங்களின் அழுத்தத்தை இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் செய்துருக்க முடியுமான்னு தெரியல. 

ஜெயம் ரவி - எனக்குத் தெரிஞ்சு தமிழ் சினிமால ரொம்ப குறைத்து மதிப்பிடப்படுற நடிகர்கள்ல ரவியும் ஒருத்தர். அவரது நடிப்பும் , பொன்னியின் செல்வனா கம்பீரமா அதே நேரத்துல மக்களுடன் நெருங்கிப் பழகும் அடக்கம் பொருந்தியவராவும் நல்லா நடிச்சிருப்பார். 

வந்தியதேவன் மாதிரி நம்பிக்கு இயற்கையான தேர்வு ஜெயராம். நம்பிக்கு வேண்டிய அத்தனை பொருத்தங்களும் கொண்டவரா இருப்பார் . நான் குறைத்து நினைத்து , அதை தவறு என்று மாற்றிய மற்றொரு கதாப்பாத்திரத் தேர்வு சரத்குமார். பூங்குழலிக்கு , இளமையும் , பெரிதும் அறியாத முகமாத்தான் இருக்கணும்னு நான் நினைச்சேன். அதனால கீர்த்தி சுரேஷைவிட பூங்குழலிக்கு பொருத்தமான தேர்வு ஐஸ்வர்யா லக்ஷ்மிதான். ஜெயமோகன் ஒரு பேட்டில , மணிரத்தினத்துக்குப் பூங்குழலி கதாப்பாத்திரத்துல மேல ஒரு obsession னு சொல்லி இருந்தார் . சொல்லப்போனா , PS ஐ இரண்டு பாகங்களா எடுக்குறத்துக்கு பூங்குழலிதான் காரணம்னு சொன்னார் ( ஓரே படமா எடுக்க இருந்தபோது அந்தப்படத்துல பூங்குழலி கிடையாது). அப்படிப்பட்டவர்க்கான அந்த அருமையான பாட்ட editing ல தூக்கி இருக்க வேண்டாம் :(. 


படத்துல நான் ரொம்ப ரசிச்சது இசையும் , நடனமும் . background music superb . சான்ஸே இல்ல . ஏ .ஆர் . ரஹ்மான் , ஏ .ஆர் . ரஹ்மான் தான். அதேமாதிரி நடனம் . அதுவும் அந்த தேவராள ஆட்டமும், குந்தவையும் வந்தியத்தேவனும் சந்திக்கிற போது வர்ற அந்த பாட்டு நடனமும் , செம. பிருந்தா , superb .  

இந்த மாதிரி சரித்திர படத்துக்கு , அதுவும் மணிரத்னம் எதிர்பார்க்கிற மாதிரி உண்மைக்கு நெருக்கமா இருக்குறதுக்கு, மணிரத்தினத்தின்  இயல்பான தேர்வா அமையுறது தோட்டாதரணியா மட்டும்தான் இருக்கும். ஒரு படத்தோட பிரம்மாண்டம் கண்ண  உறுத்தாததா இருக்கணும் , அதே நேரத்துல இயல்பாவும்  இருக்கணும் . settings லாம் அருமையா இருக்கு. நான் எதிர்பார்த்த அதே தமிழக்கத்த கண்ணு முன்னாடி கொண்டு வந்துச்சு. 

இந்த படத்துல எனக்கு பிடிச்ச காட்சிகள்னா , அவை  - ஓடுற யானைல பொன்னியின் செல்வனும் , பூங்குழலியும் போறது ( யானைப்பாகனா இல்லாத யாருக்கும் இது ரொம்ப கஷ்டமும் பயமும் தரக்கூடியது. அதுவும் இது கொஞ்சம் long shot -ஆ வேற இருக்கும்),  நந்தினி மற்றும் குந்தவை சந்திப்பு , வந்தியத்தேவன் பெண்களிடம் வழியிறது ,  

இப்படிப்பட்ட அருமையான படத்துக்கு கலவையான விமர்சனம் வர்றதுக்கு  காரணமா நான் நினைக்கிறது என்னனா , இந்தப் படத்த பாக்க வர்றவங்க ஒன்னு நாவல படிச்சவங்க ,இல்ல நாவல படிக்காதவங்க. படிச்சவங்கள்ல நிறைய பேருக்கு நாவல அப்படியே எடுக்கணும் , இப்படிப்பட்டவங்களுக்கு படம் நாவலுல இருந்து கொஞ்சம் மாறி இருந்தாலோ அல்லது  தங்களுக்கு பிடிச்ச கதாப்பாத்திரம் இல்லனாலோ அல்லது அதுக்கான முக்கியத்துவம் கொஞ்சம் குறஞ்சாலும் ரொம்ப ஏமாற்றமா இருக்கு .  

நாவல்ல படிக்காதவங்கள்ல  நிறைய பேருக்கு, பாகுபலி மாதிரி படம் இருக்கணும்னு எதிர்பார்ப்பு. 

பொன்னியின் செல்வன் மாதிரி ஒரு பெரிய நாவல்ல 5 - 6 மணிநேர படமா எடுக்குறது ரொம்ப கஷ்டம். நாவல்ல மொத்தம் 55 கதாபாத்திரம் அதுலயும் 28 முக்கியமானது, அதுலயும் 18 ரொம்ப ரொம்ப முக்கியமான கதாப்பாத்திரங்கள் . அத்தன கதாப்பாத்திரங்களையுமோ அல்லது அவர்களுக்கான அத்தனை முக்கியத்துவங்களையுமோ அப்படியே படத்துல கொண்டு வர்றது ரொம்ப கஷ்டம் . அப்படி கொண்டுவந்தா அது படமா இருக்காது . அங்கதான் இந்த திரைக்கதை வேளை வருது. நாவல்ல ஒவ்வொரு சம்பவங்களையும் ரொம்ப விளக்கிச் சொல்ல முடியும். ஆனா படத்துல ஒவ்வொரு சம்பவமும் ஒரு dot dot -ஆ தான் இருக்கும் . அதே நேரத்துல படத்தின் நீளம் கருதி பல சம்பவங்களையும் , கதாபாத்திரங்களையும் நீக்கும்போது , இந்த dots ஐ இணைக்கிறது இன்னும் கஷ்டம் .  அதையும் தாண்டி இந்த dots ஐ இணைக்குறதுலதான்  திரைக்கதையாசிரியரின் (யர்களின்) திறமை தெரியும், அதுலதான் ஒரு படத்தின் வெற்றியே இருக்கு . இங்கதான் அவர்களோட improvisation வருது. improvisation -குறது ஒரு கலைஞரின் உரிமை. அந்த உரிமையைப் பயன்படுத்தி இந்தப் படத்தின்  இயக்குனரும்(மணிரத்னம்)  , திரைக்கதாசிரியர்களும்(மணிரத்னம், ஜெயமோகன் , குமரவேல் ) சிறப்பா செஞ்சுருதுக்குறதாவே நான் நினைக்கிறேன் . இந்த improvisation ல நான் ரொம்ப முக்கியமா பாக்குறது , ஒரு சிறிய விஷயம் தான். நாவல்ல நான் ஏற்கனவே சொன்ன மாதிரி , வந்தியத்தேவனுக்கு நடக்குறதுலாம் எதேச்சயாத்தான் நடக்கும். ஆனா படத்துல ஆரம்பத்துலயே, ஆதித்ய கரிகாலன் சம்புவரையர் மாளிகையில் என்ன நடக்கபோதுன்னு அறிந்தேதான் வந்தியத்தேவனை கடம்பூருக்கு அனுப்புவார். இது ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்தது மாதிரி. படத்தில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் எதேச்சை அல்ல , அதே நேரம் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாத அளவிற்கு அரசன்(இளவரசன்) முட்டாள் அல்ல . 

 எனக்கு ரொம்ப நாளா ஒரு கதை எப்படி திரைக்கதையா உருவெடுக்குதுனு தெரிஞ்சுக்கணும்னு ஆசை. அத இந்தப் படத்துலதான் முழுமையா தெரிஞ்சுக்க முடிஞ்சது (நாவல் படிக்காதவங்க , படம் பாத்ததுக்கு அப்புறமாகூட நாவல் படிங்க, நிச்சயமா அது ஒரு வேறு பரிமாணத்தைக் கொடுக்கும் ) . 

அதேமாதிரி , பாகுபலி முற்றிலும் கற்பனையான கதை. அதனால பாகுபலிய  எப்படிப்பட்டதாவும் எடுக்கலாம். படைப்பாளிக்கு இங்கு முழு சுதந்திரம் இருக்கு.  அதனாலதான் அத மிகைப்படுத்தப்பட்ட பிரம்மாண்டமாவும்  எடுக்க வழி கொடுத்தது. ஆனா PS க்கு கல்கி எழுதிய மூலம் இருக்கு, கல்கிக்கு சோழர் வரலாறே மூலமா இருக்கு . அதனால கல்கியோ அல்லது இந்தப் படத்தின் இயக்குனரோ அந்த மூலத்தை விட்டு ரொம்ப விலக முடியாது. இயக்குனரும் விலகல. 

அதனால நாவலைப் படித்தவர்கள் , படத்துல என்ன இல்லனு பாக்காம, படத்துல என்ன இருக்குன்னு பாருங்க . நாவலைப் படிக்காதவங்க உண்மைக்கு நெருக்கமான ஒரு வரலாற்றுப் படம் எப்படி இருக்கும்னு பாருங்க. 

ஒரு சிறந்த வரலாற்றுப் திரைப்படத்தை கொடுத்ததற்காக மணிரத்தினத்திற்கு மிக்க நன்றி. 

P.S : படத்தோட முக்கிய குறையா இருக்குறது . ஒளிப்பதிவு . ஒரு போரின் நடுவுக்குள்ள கேமராவ கொண்டு போய் காட்டணும்னு நினைச்சதுலாம் சரிதான்.ஆனா கேமரா jerk-வோட இருக்குறதுலாம் ஏத்துக்கொள்ளவே முடியாது.  நிறைய நேரங்கள்ல சண்டை/போர்/நகரும் காட்சிகள்லாம் எப்படா முடியும்னு இருந்துச்சு. Sorry ரவி வர்மன் .


Monday, January 7, 2019

என் திரையுலக தேவதைகள்



கால வரிசைப்படி  பாத்தா எனக்கு பிடிச்ச ஹீரோயின்ல முதல்ல நியாபகம் வர்றது தேவிகா. அவருடைய அந்த அழகிய பெரிய கண்கள்தான் அவருடைய பிளஸ்சே . எனக்கு என்னமோ காதல் பாடல்களைவிட சோகப்பாடல்களில்தான் அவர் மிகவும் அழகாக இருப்பதாக தோன்றும். 'எந்தன் பார்வையின் கேள்விக்கு பொருள் என்ன சொல்லடி, ராதா' வைவிட 'சொன்னது நீதானாவில்தான்' அவர் மிகவும் அழகாக இருப்பார். பனியில்லாத மார்கழியாம்  வைவிட 'நினைக்கத் தெரிந்த மனமே' வில்தான் அழகு. எனக்கு என்னமோ அவருடைய கண்களில் எப்பொழுதும் ஒரு சோகம் இழையோடுவதாகத் தோன்றும்

எனக்கு பிடித்த இன்னவொருவர்னா அது , ஜமுனா . இவரைப் பிடிக்க, ஒரே ஒரு பாடலைப் பார்த்தால் போதும். 'குழந்தையும் தெய்வமும்' படத்தில் இருந்து 'அன்புள்ள மான்விழியே' பார்த்தாலே போதும். நிச்சயம் அவருடைய விழிகள், மான் விழிகள்தான். அந்த அழகிய பெரிய கண்களைக்  கொண்டு அந்த ஒரு பாடலில் அத்தனை காதல் உணர்வுகளை  காட்டி இருப்பார்.  நான் பார்த்த மிகச் சிறந்த காதல் பாடல்களில் இதுவும் ஒன்று. அந்த பாடல்  வரிகளும் அவ்வளவு மிகச் சிறப்பாக ஜமுனாக்காகவே எழுதியது போலவே இருக்கும். எனக்குத் தெரிந்து அவர் தமிழில் அதிகப் படங்களில் நடித்திருக்கவில்லை. குழந்தையும் தெய்வமும் படம் பல களங்களில் பயணித்திருக்கும் . அது முழுதாக காதல் படமாகவே இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் .  எனக்கு அவருடைய நடிப்பில் ஒரு முழு நீள காதல் படத்தைக் பாக்கணும்னு ரொம்ப ஆசை. 

சில பேர் Short Bust ஆக வந்து மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார்கள் . அப்படி ஒருத்தர்தான் நதியா. மற்ற பெரிய நடிகைகளுடன் ஒப்பிடும் போது , அவர் நடித்த திரைப்படங்கள் மிகச் சிலதான். ஆனால் இன்றைய காலகட்டம் வரை நதியா என்றாலேயே தமிழ் ரசிகர்களுக்கு ஒரு ஈர்ப்புதான். நதியாவும்  அமலாவும் கிட்டத்தட்ட ஒரே கால கட்டங்களில்தான் அறிமுகம் ஆனார்கள். அமலாவும் சிறந்த அழகிதான். சொல்லப் போனால் நதியாவை விட அழகிதான். ஆனால் நதியாவிடம் ஒரு ஈர்ப்பு இருந்தது. அந்த தெத்துப் பல்லுக்கு ஒரு அழகா கொடுத்ததே நதியாதான் . அதே மாதிரி அவருடைய ட்ரெஸ்ஸிங் சென்சும் ரொம்ப நல்லா இருக்கும். கொஞ்சம் கூட உறுத்தாத மாதிரி மாடர்ன் டிரஸ் போடுறதுல நதியாவ அடிச்சிக்க முடியாது. அவர் அளவுக்கு மாடர்ன் ட்ரெஸ்சும், ட்ரடிஷனல் ட்ரெஸ்ஸும் செட் ஆகுறது ரொம்ப குறைச்ச பேருக்குதான். எனக்கு அவருடைய பாடல்களில் மிகப் பிடித்தது , 'கண்ணா, உனைத் தேடுகிறேன் வா' . இந்தப் பாட்டுல , ஒரு சோகம் இழையோடிய காதல் இருக்கும் . அதுவும் அந்த சுடிதாரில் ரொம்ப அழகா இருப்பார் . நதியாவின் மிகச் சிறந்த காதல் பாடல்னா அது, 'சின்னத் தம்பி பெரிய தம்பி'ல வரும் , 'ஒரு காதல் என்பது'. சான்சே இல்ல , செம அழகா இருப்பார். 

அடுத்து ஜெயஸ்ரீ . எங்க அம்மா , திருப்பி திருப்பி கேட்பாங்க , இவள எப்படிடா உனக்கு பிடிச்சதுனு . எதோ பிடிச்சுருச்சுனு சொல்லுவேன். ஜமுனா, தேவிகா அளவுக்கு இல்லனாலும், பிடிக்கும். ஜெயஸ்ரீ கொஞ்சம் துடுக்கா  திமிரா நடிக்கிறது ரொம்ப பிடிக்கும். ஜெயஸ்ரீ நடிச்ச மத்த படங்கள் இருந்தாலும், எனக்கு என்னவோ ரொம்ப நினைவில் இருப்பது 'திருமதி ஒரு வெகுமதி'. அதுல அவருக்கு ரொம்ப பெரிய கேரக்டர் கிடையாது, இருந்தாலும் அந்த திமிரா நடிக்கிறதுனால பிடிச்சுருக்கோ என்னவோ. இதே அளவு பிடிச்ச மத்த நடிகைகள்னா அது காஞ்சனா, வாணிஸ்ரீ, ஜீவிதா. ஜீவிதா, ரொம்ப அழகிலாம் கிடையாது . சொல்லப் போனா ரொம்ப சாதாரணமா இருப்பார் . பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி . ஆனா ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கும். பொதுவா , பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி இருக்கப் நடிகைகளோடு எப்பயும் சட்டுனு ஒரு connection உருவாகிடும். பொதுவா பசங்களுக்கு , ரொம்ப அழகா இருக்கப் பொண்ணுங்களாம் ரொம்ப தூரம்தான் . நம்மளுக்குலாம் செட் ஆகாதுனு (கிடைக்காதுனு ;) ) . ஜீவிதா அழகா இருக்கப் பாட்டுல ஒண்ணுன்னா அது , 'நான் தேடும் செவ்வந்திப் பூவிது' . 

ஜெயப்ரதா  - இவர பிடிக்காதவங்க யாரும் இருக்க முடியுமான்னு எனக்குத் தெரியல . அவர் தமிழ்ல நடிச்சதே மொத்தமே ஏழே ஏழு படங்கள்தான் . அதுவும் அவரோட peak time ல வந்தது 4 படம்தான். அந்த நாளுல ரெண்டு டப்பிங் படங்க :( . தமிழ் சினிமாக்கு ஏன் இந்த சோதனை :( . அவரோட ,  நினைத்தாலே இனிக்கும் ,சலங்கை ஒலியலாம் யாரால மறக்க முடியும். ஜெயப்ரதா , ஜெயப்ரதா , ஜோடியா தமிழ்ல நடிச்சது ஒருத்தர் கமல், இன்னொருத்தர் விஜயகாந்த் (படம் - ஏழை ஜாதி) :) .

குஷ்பூவோட ஆரம்ப கால படங்களிலாம் ரொம்ப அழகா இருப்பார் . அதுலயும் , வருஷம் 16 ல, சான்சே இல்ல , செமயா இருப்பார் . அந்த படம் முழுசும் ரொம்ப அழகா இருப்பார். அந்த க்ளைமாக்ஸ மட்டும் பாசில் மாத்தி இருந்தாருன்னா, என்றும் மனச விட்டு நீங்காத படமா இருந்திருக்கும் :( . இளமைத் துள்ளலோட இருக்குறதுனா, குஷ்பூவ வருஷம் 16 ல பாத்தா தெரியும். 

அர்ச்சனா - பாலு மகேந்திரா ஒரு பேட்டில சொல்லி இருப்பார் , என்னுடைய ஹீரோயின்ட்ட மண்ணின் மணம் இருக்கணும் . எங்கயோ இருந்து வெள்ளையா ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து என்னால நடிக்க வைக்க முடியாது. அவர் சொன்ன மாதிரி  அவரோட எல்லா ஹீரோயின்ட்டயும் மண்ணின் மனம் இருக்கும், அர்ச்சனாவும் அதில் ஒருத்தர் . அர்ச்சனாவை எனக்கு எப்ப பிடிச்சதுனு தெரியாது , ஆனா , ரொம்ப லேட்டாதான் பிடிச்சது , அந்த மண்ணின் மணத்திற்காக பிடிச்சது .  வீடு படத்துலலாம் அவ்வளவு இயல்பா இருப்பார். அர்ச்சனாவோட அமைதிதான் அழகு . எனக்கு , இன்னும் இருக்க டவுட் , ரெட்டை வால் குருவில பேசுறதுதான் அவரோட உண்மையான குரலா ? .
  
அர்ச்சனா மாதிரி எனக்கு ரொம்ப லேட்டா பிடிச்ச இன்னொரு ஹீரோயினா அது, கஸ்தூரி. சொல்லப்போனா ரொம்பவே லேட்டாதான். கஸ்தூரி அளவுக்கு களையான முகமும் , வடிவமும் கொண்ட நடிகைகள் குறைச்சுதான் . அவருக்கு  இணையா ,அழகான பல்வரிசை கொண்டவங்கனா அது பானுப்ரியாவும் ,K.R. விஜயாவும் தான் . கஸ்தூரியும் , பக்கத்து வீட்டுப் பொண்ணு அழகுதான் . சிட்டி பக்கத்து வீடு ;) .  கட்டுமரக்காரன்லலாம் ரொம்ப அழகா இருப்பார்.  இன்னும் அவர் நிறைய நடிச்சுருக்க வேண்டியது .  ஆனா நம்ம தமிழ் சினிமாக்குத்தான் தமிழ் பொண்ணுங்களே பிடிக்காதே . அதே மாதிரி ஒருத்தவங்க மேல இருக்க மதிப்பு , அவங்களோட அழகையும் தாண்டி அறிவும் ,தைரியமும்தான் கொடுக்கும். அதுக்கு மிகச் சிறந்த உதாரணம் கஸ்தூரி . எத்தனை ஹீரோயின் , Master Mind India லலாம் கலந்துக்கிட்டு மிளிர்ந்தாங்க?.

இப்படி வெவ்வெறு காலகட்டத்துல இந்த லிஸ்ட்ல இருந்தவங்களோட லிஸ்டு ரொம்ப பெரிசு . 

Saturday, February 13, 2016

செல்லங்கள் .....

alt text

சின்ன வயசுல இருந்தே எனக்கு செல்லப் பிராணிகள்னா ரொம்ப பிடிக்கும். ஆனா வீட்டுல அதுக்குலாம் தடா. இருந்தாலும் ரோட்டுல போ நாய்க்குட்டி, பூனைக்குட்டியலாம் பிடிச்சு கொஞ்சிக்கிட்டு இருப்பேன். பொதுவா இந்த லெகான் கோழிப்பண்ணைகளிலாம் பெண் கோழிக்குஞ்சுகளுக்குதான் மதிப்பு. ஏன்னா அதுதான முட்டை போடும். அதுனால இந்த ஆண் கோழிக்குஞ்சுகளலாம் கழிச்சுருவாங்க. அதலாம் சில பேரு போயி வாங்கிட்டு வந்து கலருல முக்கி சின்னப் பசங்கட்ட விப்பாங்க. ஒன்னு, ரெண்டு ரூபா இருக்கும். அப்பலாம் அதிக பசங்கட்ட ரெண்டு ரூபாலாம் இருக்காதுங்குறதால ஒரு சீட்டு இருபது பைசானு , பத்து சீட்டு போட்டு குலுக்கல் முறைல ஒரு கோழிக்குஞ்சு தருவாங்கவீட்டுல மிட்டாய் வாங்க குடுக்குற காச எடுத்துகிட்டு பொட்டிக் கடைக்கு போனா பக்கத்துலேயே இந்த கலர் கோழிக்குஞ்சுகள வச்சுருப்பாங்க. அப்பலாம் சின்னப் பசங்க சங்கமிக்கி இடமா பொட்டிக் கடைகள் இருந்ததாலும் , அங்க வர்ற பசங்ககிட்டதான் காசு இருக்கும்கிற வியாபார வியூகத்தினாலும் பொட்டிக் கடைக்குப் பக்கத்துலதான் இந்த வியாபாரம் நடக்கும் .

என்னதான் வீட்டுல திட்டு கிடைக்கும்னாலும், நானும் மிட்டாய் வாங்கப்  போகும்போது, ஒரு நப்பாசைல சீட்டு வாங்கிருவேன். என் ராசியோ என்னவோ, நான் சீட்டு வாங்கும்போதுலாம் கோழிக்குஞ்சு விழுந்துரும். இத எப்படி வீட்டுக்கு கொண்டு போகுறதுனு யோசன பண்ணிக்கிட்டே நைசா கொண்டு போவேன். ஆனா எப்படியும் இது கத்திக் காட்டிக்கொடுத்துரும். அப்பறம் கெஞ்சிக் கூத்தாடி வச்சிருப்பேன். ஆனா ரெண்டு நாளுதான். அதத் தூக்கி யாராவது பக்கத்து வீட்டுல கொடுத்துருவாங்கஇப்படி அடிக்கடி நடந்ததால, அதுக்கப்புறம் கோழிக்குஞ்சு சீட்டு வாங்க மாட்டேனு ஒபாமா அமெரிக்க தேசிய கீதம் பாடும்போது நெஞ்சுல கை வச்சு சொல்லுற  மாதிரி, உறுதி மொழி எடுத்தாதான் அடுத்து காசே கிடைக்கும்.

எங்க வீட்டுல கொஞ் அதிக நாள் கூட இருந்தது, எங்க அம்மாக்கு தெரிஞ்சவங்க கொடுத்தது கோழிகுஞ்சுதான். அதுக்கு இர போட்டா அது திங்கிறேன் பேர்வழினு, மண்ணக் கீறி இரைய தோண்டுற பழக்க தோசத்துல, இரையக் காலால கீறீ வீடு முழுசும் பரப்பிவிட்டுரும். இப்படி விட்டா அம்மா இதச் சொல்லியே அத மறுபடியும் நாடு சாரி வீடு கடத்திருவாங்கனுநான் கொஞ்சம் என் சிறு மூளையைக் கீறீ, பேஸ்டு அட்ட டப்பால அது தல மட்டும் போற மாதிரி வெட்டி, அதுல இரையைப் போடுவேன்அப்பயும் அது பழக்க தோசத்துல தரையைக் கீறும். அதப் பாத்துட்டு அப்பா , அதுக்கு மண்ணுல திங்கிற பழக்கமே போகப்போதுனு சொல்லுவாங்க. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்ட என்னால், அது பின்புறம் ஒரு குட்டிப்பையைக் கட்டிவிடுவதில்(yes, for that purpose only), வெற்றி வாகைச் சூட முடியவில்லை. அதனால் அது இங்கிங்கெனாதபடி, வீடு முழுசும் தன் முழுநேரக் கடனைக் கழித்தது (காலைக் கடன்லாம் சொல்லுவது லாஜிக்கலி incorrect. அது முழித்திருக்கும் நேரம் எல்லாம் போய்கிட்டு இருந்தது அல்லது அப்படித்தான் எங்க அம்மாவால் சொல்லப்பட்டது). பின் இதைக் காரணம் காட்டியே எங்க அம்மாவால் அது வீடு கடத்தப்பட்டது.

சரி இதுதான் பிரச்சினைனு , இந்தப் பிரச்சினை இல்லாத, கலர் மீனு வாங்கிட்டு வந்து ஒரு பக்கெட்டுல போட்டு வச்சேன். அதுக்கும் சைவ பட்சினியான எங்க வீட்டில் முறைக்கப்பட்டதுஅதைத்தவிர அப்பப்ப சில பல காரணங்களால் மீன்கள் இறந்து போய் வீட்டில் பிரச்சினையைக் கிளப்பியது ( பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி என்பதால், நான் அடிக்கடி தண்ணி மாத்தாதலால்தான் அந்த மச்ச அவதாரங்கள் இறந்தன என்று எங்க அம்மாவால் குற்றம் சாட்டப்பட்டேன் என்பது இங்கு அவசியமில்லை).

இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனா இன்னும் பிற வளர்ப்புப் பிராணிகள் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். ரொம்ப நாளா எனக்கு கிளி வளக்கணும்னு ஆசை. அப்பொழுது என்னுடன் சுந்தர் என்ற நண்பன் படித்துக் கொண்டிருந்தான். கிளி வளக்கணும்கிற ஆசையை அவன்ட ஒரு நாள் சொன்னேன். அதுக்கு அவன் தனக்கு கிளிக்குஞ்சு எடுப்பவர்கள் தெரியும்னும், தான் ஒரு கிளிக்குஞ்சு தர்றதாவும் சொன்னான். அதுக்கு பிரதி உபகாரமா நான், அடுத்து வர்ற பரிச்சைல என் பேப்பர அவன் பாத்து எழுத கொடுக்கணும்கிற தீர்மானம் ஏற்கப்பட்டதுஅடுத்து அந்த அதிசய சம்பவம் ஒரு நாள் மதியப் பொழுதில் நிகழ்ந்தது (ஆம், எங்க வீட்டில் அனைத்து வளர்ப்புப் பிராணிகளும் எங்க அம்மா ஆபீஸ் போயிருக்கும் மதிய நேரங்களிலேயே என்னால் அனுமதிக்கப்படும்). சுந்தர், ஒரு மஞ்சப் பைல நாலஞ்சு கிளிக்குஞ்சுகளோட வந்திருந்தான். அதைப் பார்த்ததும் எனக்கு பக்குனு ஆயிடுச்சு . ஏன்னா அதப் பாத்தா கிளி மாதிரியே இல்ல. கிளிக்கான லட்சணங்களில் அந்த சிவப்பு மூக்கத் தவுத்து வேற ஒன்னுமே இல்ல. கொஞ்சம் கூட முடி இல்லாம கிட்டத்தட்ட ஒரு மாமிச பிண்டம் மாதிரி இருந்துச்சு, அதப் பார்த்ததும் எனக்கு அம்மாட்ட செம அடி வாங்கிருவோமோனு முத தடவ பயம் வந்துருச்சு. ஆனா கண்ணு திறக்காத அதப் பாத்து பாவமாவும் ஆகிருச்சு. சரினு சுந்தர் கொடுத்த ஒன்ன வாங்கி வீட்டுல ஒளிச்சு வச்சுட்டேன். மீதிய அவன் மத்த பிரன்ஸுகிட்ட கொடுக்க கொண்டு போய்ட்டான். இத எப்படியோ கண்டுபிடிச்ச எங்க அம்மாச்சி சாயங்காலம் எங்க அம்மா வந்துதும் சொல்லிட்டாங்க. எங்கடா கிளினு கேட்ட, எங்க அம்மாட்ட அதக் காட்டவும் ஒரே அலரல். அவங்க, இப்படி ரோமமே இல்லாம, கண்ணு தெரியாத ஒன்ன எதிர்பாக்கல. டேய் , இதலாம் பாவம்அதுக்கு ஒன்னு ஆச்சுனா அந்த பாவம் நம்மலதான் சேரும். இப்படி பண்ணிட்டயேனு சொல்லவும், எனக்கே பயம் வந்துருச்சுகண்ணு கூட திறக்காத அத எப்படி வளக்கனும்னு கூட தெரியல. எப்படி சாப்பாடு கொடுக்கணும்னு கூட தெரியல.

அப்ப எங்க வீட்டு பக்கத்துல, ஐடிஐல படிச்சுகிட்டு இருந்த சில அண்ணாக்கள் இருந்தாங்க. அவங்கட்ட கொடுத்து இத கொஞ்ச நாள் வளக்கச் சொல்லுறதுனும்னும், அதுக்கு முடிலாம் முளச்சு தானா சாப்பிட கத்துகிட்டதும் அத வாங்கிக்கிறதுனும்னு எங்க வீட்டில் முடிவு எடுக்கப்பட்டு, அந்த அண்ணாக்களிடம் அடைக்கலமாக திணிக்கப்பட்டது.(திணிக்கப்பட்டது என்பதுதான் சரி, அவர்களிடம் இதைப் பற்றி கேட்கவே இல்ல. அந்த தெருவிலேயே அவர்கள் TV பாக்க அனுமதித்த ஒரே வீடு எங்க வீடுதான் என்பதால், அந்த அதிகாரம் கைக்கொள்ளப்பட்டது). இப்படி அவர்களிடம் திணிக்கப்பட்ட அந்த கிளிக்குஞ்சு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. அது வயதுக்கு வந்த பிறகு (அதாங்க, சாம்பல் கலர் கிளிக்குஞ்சுல இருந்து பச்ச கலர் கிளியா மாறுன பின்னாடி), ஒரு திருநாளில்அம்மாவால் முதன் முதலில் எங்க வீட்டில் ஒரு செல்லப் பிராணி அனுமதிக்கப்பட்டது, அதுவும் அது அசிங்கம் பண்ணா அத நானும் என் தம்பி மதுவும்தான் கிளீன் பண்ணணும்கிற சில பல கண்டிசன்களுடன்.

வீட்டிற்கு வந்த அந்த கிளி ஒரு ஆண் கிளி என்பதால் அதற்கு ராஜூ (ராஜு பாய்லாம் இல்ல. வெறும் ராஜு தான்) என்று பெயரிடப்பட்டது. ராஜூக்காக நானும் மதுவும் ஸ்கூலுல இருந்து மத்தியானம் வந்து சாப்பாடு , தண்ணிலாம் வச்சுட்டு கொஞ்ச நேரம் கூண்டுல இருந்து திறந்துவிட்டு, திரும்பியும் ஸ்கூல் போவோம். கொஞ்ச நாளுலயே ராஜூ எங்க வீட்டுல ஒரு உறுப்பினராகவே ஆயிடுச்சு. அதுவும் நாங்கள் சாப்பிடும் பால், ஃபான்டா, ஐஸ் கிரீம், கரும்பு என அனைத்தும் சாப்பிடும். அதுவும் பால் குக்கர் விசில் சத்தம் கேட்டுட்டாலையே அது குதிச்சு , குதிச்சு கிச்சனுக்கு ஒடும். அது எங்க வீட்டுல ஒரு ஆளா ஆனதை அங்கீகரிக்கும் விதமாக அதற்கு பிறந்தநாள் வைத்துக் கொண்டாடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அது பிறந்ததாக கருதப்பட்ட ஜனவரி மாதத்தில் வந்த எங்க தாத்தாவின் பிறந்தநாளை ராஜுவின் பிறந்தநாளாக வருடாவருடம் கொண்டாடப்பட்டது.

கொஞ்ச நாளுல எங்க அம்மாவுக்கும் ராஜுவ பிடிச்சுப் போச்சு. எல்லாரையும் போல அதுக்கும் ஒரு task ஒதுக்கப்பட்டது. என்னனா ஜோசியம் பாக்குறது. கிளி ஜோசியம். ஒரு திருநாளில் எங்க அம்மா, எனக்கும் மதுக்கும் எப்ப காதுகுத்துறதுனு ராஜுட்ட கேட்க( அது ஒன்னும் இல்ல, ஒரு நாலஞ்சு தேதிய எழுதிப் போட்டு எடுக்கச் சொல்லுறது. அதுவும் ஏதோ ஒரு பேப்பர எடுத்து திங்க ஆரம்பிச்சுரும். சில நேரம் அது முழுசா கடிச்சுறதுனால, மீதி கிடக்குற பேப்பர வச்சுதான் அது என்னா எடுத்துச்சுனு கண்டுபிடிப்போம்), அதுவும் எடுத்துக் குடுக்க, கர்ம சிரத்தையா எங்களுக்கு காதுகுத்த நாள் குறிக்கப்பட்டது. எப்ப, நான் ஆறாவது படிக்கும்போது. காது குத்திட்டு, அந்த தோடோட ஸ்கூலுக்கு போகமாட்டோம்னு நானும் என் தம்பியும் அடம் பிடிக்க, கொஞ்ச நாளுக்கு தோடு போடடலனா, காது தூர்ந்து போய், நீ காது குத்தலனு கல்யாணத்துக்கு முத நாள் திரும்பையும் காது குத்துவாங்கனு பயமுறுத்திப் பார்த்தாங்க. இருந்தாலும் அன்று தான் கொண்ட மானமே பெரிசுனு காது தோட்ட கழட்டிட்டுதான் நானும் மதுவும் ஸ்கூல் போனோம். அதுக்கு அப்புறம் ஏழு கழுத வயசாகி ஆபிஸ் போன பின்னாடி, காது குத்தி ஒத்தக் காதுல தோடு போடலாம்னு யொசிச்சதெல்லாம் வேற கதை

அடுத்து எங்க வீட்டுக்கு வர்றவங்கலாம் உங்க கிளி பேசுமானு கேட்க ஆரம்பிச்சாங்க .  சரி எல்லார் வீட்டிலயும் கிளி பேசுதே , நம்ம ராஜுவையும் பேச வைக்கணும்னு நாங்களும் முயற்சி பண்ண ஆரம்பிச்சோம் . அதுவும் பக்கத்து வீட்டுல இருந்த கிளிலாம் , வீட்டுக்கு யாரு வந்தாலும் ‘திருட்டுப்பய திருட்டுப்பய’ னு கத்துமாம். அந்த அளவுக்குலாம் வேண்டாம் , சிவானு என் பேரையோ , இல்ல மதுனு தம்பி பேரையோ சொன்னாப் போதும்னு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சோம்.  அதுவும் ‘சீட்டி’ அடிக்கிறத கொஞ்சம் இழுத்த மாதிரி சொல்லும் . படத்துல வர்ற மாதிரி மிகச் சரியான உச்சரிப்புடன் எதிர்பார்த்த எங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் . அதுக்கு மேல எந்த முயற்சியும் கை கூடாததால் அந்த சீட்டியே எங்கள் கிளி பேசியதாக எடுத்துக் கொள்ளப்பட்டது.  

இப்படி எங்களில் ஒரு ஆளாக இருந்த ராஜு ஒரு நாள் பறந்து போச்சு. திரும்பி வரவே இல்ல.

அதனுடன் செல்லப் பிராணிகளுக்கும் எங்களுக்குமான தொடர்பு அற்று விட்டது என்று இருந்த போது கிட்டதட்ட , 15 வருடங்கள் பிறகு , கழுகுக்கு பயந்த புறா சிபிச் சக்கரவர்த்தியை தஞ்சமடைந்ததைப் போல , காக்கைகளுக்குப் பயந்த ஒரு கிளியானது , எங்களை தஞ்சமடைந்தது. அதுவும் ராஜுவைப் போல ஒரு வளர்ப்புப் கிளிதான். நிச்சயம் வெளியில் விட்டால் பிழைக்காது என்பது தெரிந்தது. சரினு அத காலியாக இருந்த எங்க வீட்டு ஒரு ரூம்ல விட்டொம். அவ்வளவுதான், அந்த ரூம் முழுசும் அதுவே எடுத்துக்குச்சு. யாரையும் உள்ளுக்குள்ள விடுறதே இல்ல. முழு ரூமுக்குள்ளும் பறந்துகிட்டே இருக்கும். எங்க வீட்டுக்கு வந்த எங்க அண்ணன்லாம், டேய் , கொடுக்குற இந்த வாடகைல ஒரு ரூம் முழுசா ஒரு கிளிக்கு குடுத்துருக்கீங்கனு வேற சொல்லிட்டு போனாங்க. அந்த கிளியும் எங்க வீட்டுல ஒரு ஆறு மாசம் இருந்துச்சு. அப்புறம் அந்த கிளிக்காகவே எங்கே வெளிய போனாலும், ராத்திரியே வீட்டுக்கு வந்துருணும். இது ரொம்ப முடியலனு, ஒரு நாள் blue cross கொண்டு போய் கொடுத்துட்டோம். இப்ப கொஞ்ச நாளா எங்க வீட்டுல எந்த செல்லப் பிராணியும் இல்ல. எங்க அம்மாவும் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க.

Image Courtesy : Spanishdict

Monday, August 10, 2015

சூரிய மின்னாற்றல் : மாற்றம் , முன்னேற்றம்

சென்ற வாரம் ஒபாமா அமெரிக்காவின் Clean Energy கொள்கையை அறிவிச்சிருக்கிறார் . அதன்படி அமெரிக்கா இன்னும் 15 ஆண்டுகளில் 32% கரியமில வாயு வெளியேற்றத்தை தடுத்து நிறுத்தும் . அதாவது நிலக்கரி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை குறைத்து சூரிய ஓளி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் . ஒபாமா தன்னுடைய அறிவிப்பில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் இனிமேலும் அடுத்த தலைமுறைக்கான பிரச்சினையாக இருக்கப்போவதில்லை. மேலும் இதில் அமெரிக்க முன்னெடுக்காமல் வேறு யார் முன்னெடுப்பார்கள் என்றும் சொல்லி இருக்கிறார் . இது மிகச்சிறந்த அறிவிப்பாகும் .  உலகின் கரியமில வாயு வெளியேற்றத்தில் அமெரிக்கா , சீனாவிற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கு . இதுவரை அமெரிக்கா, சீனா  மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளை குறை மட்டும் சொல்லிக்கொண்டு ,  தான் எதுவும் செய்யாமல் இருந்தது . இப்பொழுதான் தன்னுடைய Clean Energy கொள்கையை தெளிவாக அறிவித்துள்ளது .

இதே போன்று சீனாவும் தன்னுடைய Clean Energy கொள்கையை சிலமாதத்திற்கு முன் அறிவித்தது. அதன்படி சீனா வருடத்திற்கு 10 GW சூரிய மின்னாற்றல் என்ற வீதம் 2020 க்குள் 100 GW சூரிய மின்னாற்றல் தயாரிக்கும் ஆலைகளை நிறுவப்போகிறது . அதேபோன்று 2020 க்குள் 200 GW மின்னாற்றலை தயாரிக்க காற்றாலைகளையும் நிறுவப்போகிறது . இது மிகச்சிறந்த மாற்றம் , முன்னேற்றம் . கீழே உள்ள படத்தைப் பார்த்தாலே அமெரிக்காவும் , சீனாவும் எந்த அளவிற்கு கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன என்பது தெரியும் . அதனால் அவற்றின் இந்த அறிவிப்பு எந்த அளவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புரியும்.

Graphic: Estimated emissions by country, 2013

கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியாவும் குறைந்தது அல்ல . இந்தியா இதில் உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளது . அதானால் தான் இந்தியாவும் 2020 க்குள் 20 GW சூரிய மின்னாற்றல் தயாரிக்கும் ஆலைகளை நிறுவப்போவதாக் அறிவித்தது . மோடி பிரதமர் ஆனதும் அதை 100 GW என்று அதிகரித்து இலக்கு நிர்ணயித்தார் . 100 GW  என்பது பெரிய இலக்கு (மார்ச் 2015 இல் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியே 271 GW தான்) . ஆனால்  நிச்சயம் இது சிறப்பான முடிவாகும் .

ஒபாமா ஒவ்வொரு மாநிலத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்போவது போல் மோடியும் மாநிலங்களுக்கு என்று இலக்கு நிர்ணயிக்க வேண்டும் . அப்படி செய்தால்தான் 2020க்குள் 100 GW என்ற இலக்கை அடைய முடியும்.

தற்போது உலக அளவில் சூரிய மின்னாற்றல் தயாரிக்கும் நாடுகளில் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது . சொல்லப்போனால் நாம் தான் இதில் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும் . சூரிய ஆற்றல் அபரிமிதமாக கிடைக்கும் நாடுகளில் உலக அளவில் இந்தியா முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்திய நிலப்பகுதியானது மொத்தம் 5000 ட்ரில்லியன் கிவாட் சூரிய ஆற்றலைப் பெறுகிறது . பெரும்பாலான நிலப்பரப்பானது ஒரு சதுர மீட்டரில் 4-7 கிவாட் சூரிய ஆற்றலை பெறுகிறது . இவ்வளவு ஆற்றலையும் நாம் வீணடித்துக்கொண்டிருக்கிறோம் . 

பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் நாடுகளில், முன்னேறிய நாடுகள் இந்தியாவும் , பிரேசிலும் தான் . மேலும் தன்னுடைய அன்னியச் செலாவணியை மிக அதிகமாக கரியமில வாயு வெளியிடும் ஆற்றல் மூலங்களுக்கு இந்தியா செலவழிக்கிறது . சூரிய ஆற்றலில் மட்டும் நாம் முன்பே இன்னும் அதிகம் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

ஆனால் சூரிய மின் ஆற்றல் தயாரிப்பது குறித்து பல மாற்றுக் கருத்துக்கள் இருக்கத்தான்  செய்கிறது . முக்கியமாக அதை தாயாரிக்க ஆகும் செலவு. சமீபத்தில் தமிழக அரசு அதானி குழுமத்திடம் இருந்து ஒரு யூனிட் 7 ரூபாய்க்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளது . இதனுடன் தொடர்புடைய மற்ற மானியங்களையும் சேர்த்தால் மொத்தம் 9 ரூபாய் வரை செலவாகும் ( சூரிய மின்னாற்றல் தயாரிக்க அடிப்படை தேவையான PV Cell க்கு நாம் நிறைய மானியம் அளிக்கிறோம் ) . ஆனால் நிலக்கரி மூலம் தயாரிக்கப்படும் மின்னாற்றலுக்கு தற்போது 2 ரூபாய் வரை தான் செலவாகிறது . ஆனால் இந்த நிலைமை மாறும். இதுவரை சீனா , அமெரிக்கா , இந்தியா அளவிற்கு யாரும் இவ்வளவு அதிக சூரிய மின்னாற்றல் தயாரிக்க எண்ணவில்லை (தற்போது ஒரு நாட்டின்  மிக அதிகபட்ச சூரிய மின்னாற்றல் தயாரிப்பே 38 GW  தான் ). இப்பொழுது இந்த நாடுகள் களம் இறங்கி உள்ளதால் PV Cell இன் விலை வருங்காலத்தில் மிக அதிகமாக குறையும் அதன் காரணமாக சூரிய மின்னாற்றலின் விலையும் குறையும் .

இந்தியா , இதற்கு தேவையான மூலப் பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும். இல்லையென்றால் இதற்கு ஆகும் இத்தனை லட்சம் கோடிகளும் சீனாவிற்குதான் செல்லும் .மேலும் இதில் பல ஆராய்ச்சிகள் செய்வதன் மூலமாக புதிய தொழில்நுட்பங்களை கொண்டு மேலும் இதன் விலையைக் குறைக்கலாம்

சூரிய மின்னாற்றலுக்கு எதிராக வைக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டு , இது தயாரிக்க தேவைப்படும் நிலப்பரப்பு . தற்போதைய காலகட்டத்தில்  1 MW தயாரிக்க 4.5 - 7.5 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. மக்கள்தொகைப் பெருக்கத்தால் நிலப்பரப்பு அருகி வரும் இந்தியா போன்ற நாடுகளில் இவ்வளவு நிலப்பரப்பை பெறுவது கடினம் .  ஆனால் இதற்கும் வழிகள் உள்ளன .  நகரங்களில் , வீடுகளிலும், அலுவலங்களிலும் மொட்டைமாடி சூரிய மின் ஆலைகளை ஊக்குவிப்பது மூலம் கணிசமான மின்சாரத்தை நாம் தயாரிக்க முடியும். புதிய  பெரிய அடுக்குமாடி குடி இருப்புகளிலும் , தொழிற் சாலைகளிலும் இதனை கட்டாயமாக்கவும் கூட செய்யலாம் . தொழிற்சாலைகளை குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை தாங்களே சூரிய ஆலை , காற்றாலைகளை நிறுவதன் மூலம் பெற வேண்டும் என்று கொண்டு வரலாம் . மேலும் ஒவ்வொரு கிராமத்திற்கு வெளியேயும் ஒரு சூரிய மின் ஆலையை நிறுவலாம் . இதனால் இரண்டு பலன்கள் . 1. கிராமங்களும், வீடுகளும் பெருமளவு மின் தன்னிறைவு பெறும். 2. மின் ஆற்றலை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல புதிய கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டியதில்லை மேலும் அதன் மூலம் ஏற்படும் மின் இழப்பையும் குறைக்கலாம் . கவனிக்கவும், மின்சாரத்தைகொண்டு செல்வதிலும் , விநியோகிப்பதிலும்  2012 இல் மட்டும் இந்தியா 17% இழப்பை சந்தித்துள்ளது . மின்னாற்றலை உபயோகிக்கும் இடத்திலேயே தயாரிப்பதன் மூலம் பெருமளவு இழப்பை நாம் குறைக்கலாம்.

அடுத்து நாம் முக்கியமாக கவனிக்கக் வேண்டிய துறை ரயில்வே . இந்திய அளவில், ஒரு தனி நிறுவனமாக மிக அதிக அளவில் மின்சாரத்தை உபயோகிப்பது ரயில்வேதான் . 2013-14 இல் மட்டும் இந்திய ரயில்வே 4000 MW மின்சாரத்தை உபயோகித்துள்ளது. இத்தனைக்கும் இதில் பயணிகள் ரயிலில் 50% மும் , சரக்கு ரயில்களில் 63% தான் மின்சாரத்தில் இயங்குகின்றன . மீதி டீசலில் இயங்கின்றன.இதற்கு என்று ரயில்வே 260 கோடி லிட்டர் டீசலுக்கு 2013-14 இல் மட்டும் 28,592 கோடி ரூபாய் செலவழித்துள்ளது . அதாவது மொத்த எரிபொருள் செலவில் இது 70% . இந்த டீசல்கட்டமைப்புகளை , மின் கட்டமைப்புகளாக மாற்றுவதன் மூலமும், அவற்றை பெருமளவு சூரிய மின்னாற்றலை கொண்டு இயக்குவதன் மூலம் நாம் நிறைய சேமிக்க முடியும் . இவற்றை ரயில்வேயே செய்யவேண்டும் . கவனிக்கவும் , 2006 கணக்கின்படி பாதுகாப்பு துறைக்கு அடுத்து இந்தியாவில் அதிக அளவு நிலத்தை தன்னகத்தே கொண்டிருப்பது ரயில்வேதான். மொத்தம் 4.32 லட்சம் ஹெக்டேர்  (page 2).  இதில் 44894 ஹெக்டேர் நிலம் சும்மாதான் இருக்கு. இதை உபயோக்கிக்கலாம்

இப்படி படிம எரிபொருளிலிருந்து சூரிய ஆற்றல் உள்ளிட்ட புதிப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதில் பல நன்மைகள் உள்ளன. இதன் மூலம் பசுமை இல்ல விளைவைக் குறைக்கலாம் , நிலக்கரி வெட்டுகிறோம் என்ற பெயரில் காட்டை அழிப்பதைத் தடுக்கலாம் , காற்று மாசு உள்ளிட்ட பல மாசுகளால் ஏற்படும் உடல்நலக் குறைபாட்டைக் குறைக்கலாம். வேறு என்ன வேண்டும்? .

என்னைப் பொறுத்தவரை இதை என்றோ உலக நாடுகள் செய்திருக்க முடியும். ஆனால் உலகில் அதிக அளவு படிம எரிபொருளைப் பயன்படுத்தும் அமெரிக்காவிற்கு அதிலிருந்து வெளியேறும் தேவை இல்லை . ஏனெனில் அதன் பொருளாதாரமே அந்த படிம எரிபொருளில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது . உலக அளவில்  நிலக்கரி உற்பத்தியில் அமெரிக்கா இரண்டாவது இடத்தையும் , பெட்ரோலிய உற்பத்தியில் மூன்றாவது இடத்தையும் வகிக்கிறது .  அதனால் அது இதுவரை பெறுமளவில் புதுப்பித்தக்க ஆற்றலில் கவனம் செலுத்தவில்லை . இப்பொழுதும் கூட ஒபாமாவிற்கு எதிராக பல குடியரசுக் கட்சி ஆளுநர்கள், தாங்கள் ஆளும் மாநிலங்களில் இதை செயல்படுத்த மாட்டோம் என்கின்றனர் . அங்கு உள்ள சுரங்கத்துறை தொழிலாளர்களும் இதை எதிர்க்கின்றனர் ஆனால் உலக அளவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் இந்த காலநிலை மாற்றத்தின் பாதிப்பைக் குறைக்க , பிற நாடுகளைக் கேள்வி கேட்க தனக்கு தார்மீக உரிமை வேண்டுமென்றால் தான் இதில் முன்னிலை வகிக்க வேண்டும்  என்பதை அமெரிக்கா தற்போது உணர்ந்துள்ளது

சீனாவின் நிலையோ வேறு மாதிரி. உலக அளவில் நிலக்கரியை அதிக உற்பத்தி செய்வதும் , அதை அதிக அளவில் நுகர்வதும் சீனாதான் . அதன் பாதிப்பை சீனா இன்று நன்றாகவே உணர்கிறது . உலகப் பெரும் நாடுகளில் உள்ள நகரங்களில் பெய்ஜிங்தான் அதிக காற்று மாசு கொண்ட நகரம். மேலும் சீனா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளையே தன் போட்டியாக எண்ணும் . அதனால் அந்த நாடுகளுக்கு இணையாக தானும் முன்னேறிவிட்டதை அறிவிக்க அது தன் நகரங்களில் உள்ள மாசைக் குறைக்க வேண்டும். அதனாலையே அது புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறிக் கொண்டிருக்கிறது

ஆனால் , முன்னர் நான் சூரிய மின்னாற்றல் உற்பத்தியில் இந்தியாதான் முன்னிலை வகித்திருக்கவேண்டும் என்று சொன்னதற்கு மற்றொரு முக்கிய காரணம் உள்ளது. அது, உலகின் உள்ள  மிக அதிகமாக  காற்று மாசு அடைந்த பத்து நகரங்களில்முதல் நான்கு நகரங்கள் உட்பட மொத்தம் ஆறு நகரங்கள் இந்தியாவில் உள்ளன . இதில் முதல் இடம் வகிப்பது நம் தலைநகராம் டில்லி . இதைவிட வேறு என்ன காரணம் நமக்கு வேண்டும் ?. இதை விட புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற நமக்கு வேறு என்ன காரணம் வேண்டும். 

Photo courtesy : bbc.com