Sunday, November 29, 2009

நிலா

நான் உறங்கும் போது சில நேரங்களில் உலகம் என்னுடைய காலடிகளிலிருந்து நழுவி என்னைத் தனியே விட்டு விட்டு நிலவையும், நட்சத்திரங்களையும் களவாடிக் கொண்டு செல்வது போல் தோன்றும். அந்த நேரங்களில் எல்லாம் உறக்கத்திலிர்ந்து சடாரென்று எழுந்து, என்னுடைய காலடிகளை நிலத்தில் அழுத்தமாக ஊன்றிக் கொண்டு என் நிலவும் நட்சத்திரங்களும் பத்திரமாக இருக்கிறதா என்று ஜன்னலின் வழியே எட்டிப் பார்ப்பேன், பின் அவற்றை என் வீட்டின் ஜன்னல் கம்பிகளுக்கிடையே சிறைவைப்பேன். பின்னும் உறக்கம் வரப் பிடிக்காமல் நிலவை ரசித்துக் கொண்டே அதற்க்குக் காவலிருப்பேன் .

பௌர்ணமி நிலவைப் பார்ப்பதென்பதே மிக அழகா இருக்கும். அந்த முழு நிலவில் இருக்கும் பாட்டி சுட்ட வடையையும் (மலைகளையும் , மேடுகளையும் ), அந்த முழு நிலவைச் சுற்றி அமைந்திருக்கும் அழகிய ஆரோவிலும், அந்த நிலவு தரும் குளுர்ச்சியும் மிக அற்புதமாக இருக்கும் .

ஒரு முழு நிலவு நாளன்று, யாருமற்ற கடற்கரையில் தனியாகப் படுத்துக்கொண்டு, நிலவையும் அதைச் சுற்றியுள்ள ஒளி வட்டத்தையும் இரவு முழுவதும் பார்ப்பதென்பது மிக அற்புதமாக இருக்கும். நிலவு அற்ற அமாவாசை இரவு கூட இனிமையாகத்தான் இருக்கும். அன்று வானம் முழுவதும் நட்ச்சத்திரங்களைக் கட்டி தொங்கவிட்டது போன்று மிக அழகாக இருக்கும்.

நீங்கள் கவனித்திருப்பீர்களேயானால், வானத்தில் சூரியனைக் கடக்கும் பறவைகளைக்காட்டிலும் நிலவைக் கடக்கும் பறவைகள் மிக அழகாக இருக்கும்.

எந்த ஒரு அழகிய இயற்கைகாட்சிப் புகைப்பபடங்களிலும் பத்தில் ஒரு புகைப்படமாவது, ஒரு மலைத்தொடரின் இடுக்கிலிருந்து முழு நிலவு வெளிவருவது போலவும் , அது வீசும் பால் போன்ற மென்மையான ஒளியும் ,அழகிய சிற்றோடையும் அதில் ஒரு சிறிய படகும் ,அந்த ஓடையின் இரு புறங்களிலும் ஓங்கி உயர்ந்த தென்னை மரங்களையும் , அப்பொழுது இரண்டு மூன்று பறவைகள் எட்ட முடியாத நிலவைக் கடக்க முயற்சித்துக் கொண்டிருப்பதைக் காணலாம் . அதுதான் இயற்க்கை அதுதான் நிலா.

பலபேர் நிலவை இட்லி , வடை என்று அபத்தமாக எதனெடனோ ஒப்பிடுவார்கள். என்னைப் பொறுத்தவரை நிலவை ஒரு அழகிய புதிய வெள்ளிக் கிண்ணத்தில் ஊற்றி வைத்த பசும் பாலுடன் தான் ஒப்பிட வேண்டும். நிலவின் ஒளியானது பூரணமாக வெண்மையாக இருக்காது. அது போலவே அப்பொழுதுதான் கறந்த பசும் பாலும் பூரண வெண்மையாக இருக்காது. அது ஒரு மஞ்சள் நிறம் கலந்ததாக இருக்கும். அது போல்தான் நிலவின் வெண்மையும். அது எதோ ஒரு மஞ்சள் நிறம் சிறிதளவு கலந்ததாகவோ அல்லது சிறிதளவு சாம்பல் நிறம் கலந்ததாகவோ அல்லது ஏன் சிறிதளவு நீலம் கலந்ததாகவோ இருக்கிறது என்று தோன்றும். என்னால் சரியாக அனுமானிக்க முடியவில்லை. எதுவாக இருந்த போதிலும் அந்த பூரண நிலா அமைதியைக் கொடுக்கும்.

நம் குழந்தைகள் பால்சோறு சாப்பிட்டு வளர்ந்ததைவிட நிலாச் சோறு சாப்பிட்டே வளர்ந்ததே அதிகம் .

சூரியனானது வீரத்தையும், பெருமையையும், வெற்றியையும் குறிக்க பெரியவர்களுக்கு என்று ஆனபோது, குழந்தைகளுக்கு எட்டிப் பிடித்து விளையாடுவதற்கும், மேகங்களில் ஒளிந்துகொண்டு கண்ணாம்பூச்சி விளையாடுவதற்கும் நிலா ஆனது.

நிலா குழந்தைகளுக்கானது என்று மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கான பரிமாணங்களையும் எடுக்கிறது. அக்காலங்களில் காந்தர்வத் திருமணங்கள் பெரும்பானவைகள் நிலவைச் சாட்சியாகக் கொண்டே நிகழ்ந்த்தன. ஏன் இன்றும் கூட பல காதல்களுக்கு தூதுவனாகவும், அந்த காதல்களுக்குச் சாட்ச்சியாகவும், சில நேரங்களின் அந்த காதல்களின் பிரிவிற்க்கும் சாட்ச்சியாகின்றது.

சங்ககாலக் கவிஞர்கள் முதல் இக்காலக் நிலா ரசிகன் வரை நிலவைப் பாடாதவர்கள் கிடையாது.

அவற்றில் ஒன்று கீழே:

நிலவு பாக்கலாம் வா!

நீ விண்ணில் பார்க்க ...
நான் உன்னில் பார்க்க ....
வெண்ணிலா என்று சொல்லாமல் .. உனக்கு
வேறு பெயர் வைத்தவர் யார் ?..நீ
விண்ணிலே இல்லாததால ?..உன்னிலே
களங்கமே இல்லாததாலா ?

ஒவ்வொரு இரவும்
வெண்ணிலா முழிப்பது
என் நிலா தூங்குவதாலா?!

பின் குறிப்பு:

இக்கவிதை என்னுடையதல்ல. பாடலுக்கு நன்றி தயா from forumhub.com . எழுத்துக்கள் என்னுடையவை :)

இக்கவிதை நிலவை பற்றியது அல்லது காதலியைப் பற்றியதா என்பதை உங்களின் அனுமானத்திற்கு விட்டு விட்டு விடுகிறேன் :).

No comments: