Monday, September 28, 2009

இலியட்டும் மகாபாரதமும் - 1


இந்தியா மற்றும் கிரேக்கம் இரண்டும் மிகப் பழமையான நாடுகள். அவற்றின் இதிகாசங்களும் மிகப் பழமையானவைகள். இரண்டு நாடுகளும் அவற்றின் காலங்களில் மிகப் புகழ் வாய்ந்தவைகள். ஹோமரின் இலியட் மற்றும் ஒடிசி, வியாசரின் மகாபாரதம் மற்றும் வால்மீகி ராமாயணத்திற்கு இணையானவைகள். இரண்டு நாடுகளிலும் கடவுள்களின் எண்ணிக்கையும மிக அதிகம். மிகப் பழங்காலத்தில் கிரேக்கத்திற்கும் இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் இடையே வணிகம் மிகச் செழித்து வளர்ந்த்திருந்தது. கிரேக்கர்கள், தமிழகத்தில் யவனர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் (சாண்டில்யன் எழுதிய யவன ராணிப் புத்தகத்தை இங்கு நீங்கள் கவனம் கொள்ளலாம்)்...
.கிரேக்கர்கள் இந்தியாவின் ஒரு பகுதியை ஆண்ட காலமும் உண்டு (கி.மு 2 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வடமேற்கு மற்றும் பாகிஸ்தானின் ஒரு பகுதியை ஆண்டார்கள். அது இந்தோ- கிரேக்கப் பேரரசு என்று அழைக்கப்பட்டது).

நான் இங்கு இந்தியா மற்றும் கிரேக்க வரலாற்றைப் பற்றிக் கூறவரவில்லை. ஆனால் அவற்றின் இதிகாசங்களுக்கு இடையே நான் கண்ட சில ஒற்றுமைகளைப் பற்றியே கூறப் போகிறேன். கிரேக்க மற்றும் இந்திய இதிகாசங்களுக்கு இடையே, குறிப்பாக இலியட் மற்றும் மகாபாரதத்திற்கு இடையே நீங்கள் சில ஒற்றுமைகளைக் காண முடியும். இரண்டு இதிகாசங்களிலும் போரானது மிகப் பெரிய பங்கு வகித்தது. இரண்டு போர்களிலும் கடவுள்கள் பெரும் பங்கு பெற்றார்கள். மகாபாரதத்தில் கண்ணனும், ட்ராய் நகரைக் கைப்பற்றும் போரில்.

ட்ராய் நகர இளவரசன் பாரிஸ், கிரேக்க நாட்டைச் சார்ந்த ஸ்பார்ட்டா மன்னன் மெனிளியசின் மனைவி உலக அழகி ஹெலனைக் கடத்தி (கூட்டி ) வருவதிலிருந்து ஆரம்பம் ஆகிறது. ஹெலனைத் திரும்பக் கைப்பற்றிக் கூட்டி வருவதற்க்காக, கிரேக்கப் படை, கிரேக்க மன்னன் அகமெம்னன் தலைமையில் ட்ராய் நகரை முற்றுகை இடுகிறது. போர் ஆரம்பம் ஆகிறது.

இப்போரில் கடவுள்களோ அல்லது அவர்களின் பிள்ளைகளோ ஈடுபட்டார்கள். கிரேக்க தலைமைக் கடவுள் ஜீயுஸ், அவரின் மனைவி ஹீரா, கடவுள் அப்போல்லோ இப்படிப் பல கடவுள்களும் இரு அணிகளாகப் பிரிந்து கிரேக்கப் படைகளையோ அல்லது ட்ரோஜன்களையோ ஆதரித்தார்கள். கிரேக்க அழகி ஹெலனே, கிரேக்கத் தலைமைக் கடவுள் ஜீயுசின் மகள் தான். இலியட்டின் கதாநாயகன் அக்கிலிஸ், தீட்டிஸ் என்னும் கடல் தேவதையின் மகன். கிரேக்கப் போரில் இரண்டு அணியினர் மோதினார்கள். கிரேக்கர்கள் அகமெம்னன் தலைமையில் போரிட்டார்கள். ட்ராய் நகர மக்கள், ட்ராய் இளவரசன் ஹெக்டரின் தலைமையில் ஈடுபட்டார்கள். அவர்கள் ட்ரோஜன்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.


மகாபாரதப் போரில் பாண்டவர்களும், கௌரவர்களும் போரிட்டனர். மகாபாரதப் போரிலும் கடவுள்களும் அல்லது அவர்களின் மக்களோ போரில் ஈடுபட்டார்கள். கர்ணன்,சூரியனின் ஆசிர்வாதத்தால் பிறந்தவன். தர்மன், எமதர்மனின் ஆசிர்வாதத்தால்் பிறந்தவன். பீமன், வாயுவின் ஆசிர்வாதத்தாலும், அர்ஜுனன், இந்திரனின் ஆசிர்வாதத்தாலும் பிறந்தவர்கள். ஏன் பிதாமகர் பீஸ்மரே, கங்காதேவியின் மகன் தான். எல்லாவற்றிற்கும் மேலாக கண்ணன், பாண்டவர்கள் பக்கம் இருந்தான். இப்படி இரண்டு போர்களிலும் கடவுள்கள் ஈடுபட்டனர்.

Photo Courtesy : http://thecia.com.au/reviews/t/images/troy-3.jpg
http://www.bharatadesam.org/Mahabharata/Mahabharata.jpg

No comments: