Friday, April 30, 2010

உதிரிப் பூக்கள் - 2

Time பத்திரிக்கையின் வருடாந்திர உலகிலேயே அதிகமாக ஆதிக்கம் செலுத்தக்கூடிய 100 நபர்களில் 9 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவற்றில் batting legend சச்சின் டெண்டுல்கரும், பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இடம் பெற்றுள்ளனர். kudos indians ...
***************
இந்தியா பாகிஸ்தானிற்கு இடையேயான அமைதி ஒப்பந்தம் ஆடுகளுக்கு கூட பயன்படுகிறது. காஷ்மீரில் உலகிலேயே பெரிய ஆட்டு இனமான markhor உள்ளது. மிக அரிய இனமான இந்த ஆடுகளின் எண்ணிக்கை இந்தியா பாகிஸ்தானிற்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு அதிகரித்துள்ளது. தற்போது இந்த ஆடுகளின் எண்ணிக்கை Qazinag park கில் 300 ஆக உள்ளது. 2005 இல் இவற்றின் எண்ணிக்கை வெறுமனே 115 ஆக மட்டுமே இருந்தது. இந்தியா பாகிஸ்தானிற்கு இடையே அமைதி ஏற்பட்டால் அது பல வகையிலும் பயன் தரக்கூடியது.
***********************
உலக வங்கியில் இந்தியாவிற்கான voting power அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவிற்கான voting power 2.91% ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் வளரும் நாடுகளின் மொத்த voting power 47% மாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியா, உலக வங்கியில் 7 வது மிகப் பெரிய பங்குதாரராக உள்ளது . சீனா 4.42% வீதத்துடன் 3 வது மிகப் பெரிய பங்குதாரராக உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் குரல் உலக வங்கியில் ஓங்கி ஒலிபதற்க்கான வாய்ப்பு எழுந்துள்ளது.
********************
இன்று வடபழனி 12B பேருந்தில் முதல் தடவையாக ஒரு பெண் நடத்துனரைப் பார்த்தேன். ஏற்கனவே MTC பேருந்தில் பெண் நடத்துனரும், பெண் ஓட்டுனரும் உள்ளனர் என்று கேள்விப்பட்டிருந்தாலும் இப்பொழுதுதான் முதல் தடவையாகப் பார்கிறேன். மிக நன்று.
*******************
அமெரிக்கா, பாகிஸ்தானிற்கு $600 million வழங்க உள்ளது. பாகிஸ்தான் அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்று வருவது அனைவரும் அறிந்ததே. இதற்க்கு அமெரிக்கா பல வகையிலும் பாகிஸ்தானிற்கு உதவி வருகிறது. அந்த வகையில்தான் இந்த $600 million வழங்க உள்ளது. இது அமெரிக்கா பாகிஸ்தானிற்கு வழங்க ஒப்புக்கொண்ட $2 billion ஒரு பகுதியாகும். எனக்கு இந்த நேரத்தில் இந்தியா, அமெரிக்காவிடம் பாகிஸ்தானைப் பற்றி தெரிவித்த கவலை தான் ஞாபகம் வருகிறது. பாகிஸ்தான், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்பதற்காகபெறும் நிதியை இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தக்கூடும் என்ற கவலைதான் அது.
********************
ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்திற்கு பெயர் பெற்ற காசிரங்கா தேசிய புலிகள் காப்பகம், உலகிலேயே புலிகள் நெருக்கமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சராசரியாக 100 ச.கிமீ க்கு 32.64 புலிகள் உள்ளன. இதற்க்கு முன் இத்தகுதியை பெற்றிருந்தது கார்பெட் தேசிய புலிகள் காப்பகம். அங்கு 100 ச.கிமீ க்கு சராசரியாக 19.6 புலிகள் உள்ளன. இது video trap கணக்கெடுப்பு மூலம் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. video trap கணக்கெடுப்பு புலிகளின் வரிகளைக் கொண்டு கணக்கெடுக்கப்படுகிறது. இது தான் உலகிலேயே மிக நம்பகமான கணக்கெடுப்பு முறையாகும்.
********************
இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் உள்ள போதி மரத்தின், இளைய கன்று ஒன்று இந்தியாவிற்கு அளிக்கப்படுகிறது. கௌதம புத்தர், புத்த கயாவில் உள்ள போதி மரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் பெற்றார் என்பது அனைவரும் அறிந்த செய்தியே. அந்த மரத்திலிருந்து பெற்ற இளைய கன்று ஒன்று அனுராதபுரத்தில் நடப்பட்டது. நாளடைவில் புத்த கயாவில் இருந்த போதி மரம் பட்டுவிட்டது. பிறகு அனுராதபுரத்தில் இருந்த போதி மரத்திலிருந்து இளைய கன்று ஒன்று பெறப்பட்டு புத்த கயாவில் நடப்பட்டது. அனுராதபுரத்தில் உள்ள இந்த போதி மரம் தான் உலகிலயே வயதான மரம். மீண்டும் இதிலிருந்து பெறப்படும் இளைய மரமானது பாட்னாவில் நடப்பட இருக்கிறது.
********************

Monday, April 26, 2010

இரவா பகலா

இரவு தனக்கே உரித்தான தன்னியல்பைக் கொண்டது. உலகமானது இரவில் வேறொரு போர்வையைப் போர்த்திக் கொள்கிறது. இரவில் காணும் உலகம் முற்றிலும் மாறுபட்டது.அது இரவில் தனக்கென்று ஒரு முக மூடியைப் போர்த்திக் கொள்கிறது. பகலைச் சார்ந்து பலருடைய வாழ்வு இருப்பது போன்று இரவைச் சார்ந்தும் பலருடைய வாழ்வு இருக்கிறது. அது ஒரு தனி உலகம். அது ஒரு மாய உலகம் கூட. இரவு போர்த்திக் கொள்ளும் போர்வை தன்னிகரற்றது.அது சற்று இரக்கமற்றதும் கூட. பகலில் வாழும் உயிர்களுக்கு இரவு அச்சம் தரக்கூடியது. இரவு உலகம் தனிப்பட்ட உயிர்களுக்கானது அங்கே பகல் உயிரினங்கள் சற்று தயக்கத்துடனேயே வரவேற்க்கப்படுகின்றன அல்லது வரவேற்க்கப்படுவதில்லை .

ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் கொண்டிருந்தாலும் இரவு தனிமையானது. ஒற்றைச் சூரியனைக் கொண்டிருந்தாலும் பகல் தனிமையற்றது.


இரவா பகலா எது அதிகமாக வரவேர்க்கப் படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. இரவு எப்பொழுதும் அமைதியானது . அது பகலைப் போல் எப்பொழுதும் கத்திக் கூச்சலிடுவதில்லை. பகலுக்கு காத்திருக்கும் கடமைகள் அளவிற்கு இரவிருக்கு காத்திருப்பதில்லை. ஏனெனில் பகலைச் சார்ந்த பிராணிகள் அளவிற்கு இரவைச் சார்ந்த பிராணிகள் இல்லை . அதனால்தான் விடிவெள்ளி தெரிந்த அளவிற்கு மற்ற நட்சத்திரங்கள் பெயர்கள் கூட தெரிவதில்லை.

இரவு எப்பொழுதும் ஒய்விர்க்கானதாகவே கருதப்படுகிறது. அதனாலயே பகல் அனுபவிக்கப்பட்ட அளவிற்கு இரவு அனுபவிக்கப்படுவதில்லை. நான் என்பது ஒய்வு எடுப்பதற்கும் தூங்குவதற்கும் ஆனதாகவே உள்ளது.

இரவில் தெரியும் மின்மினிப் பூச்சிகள் பகலில் தெரிவதில்லை . அதற்காக அவை பகலில் இல்லாமலே இருப்பதில்லை என்று அர்த்தம் இல்லை. அவை பகலிலும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் கண்ணுக்குத் தெரிவதில்லை. இப்படி இல்லாமலேயே இருப்பவை உலகில் பல .

எனக்குத் தெரிந்து இரண்டு உலகங்களையும் முழுமையாகத் தன்னுள் கொண்ட நகரம் என்றால் அது மதுரைதான். அதனை தூங்கா நகரம் என்றே விழிப்பார்கள். அது எந்த நேரமும் தூங்குவதில்லை. அது எப்பொழுதும் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டே இருக்கிறது. இல்லையேல் யாரேனும் ஒருவர் அதனைத் தட்டி எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். பகலில் எப்படி அது மக்களை ஏற்றுக்கொள்கிறதோ அதேபோல் இரவிலும் ஏற்றுக்கொள்கிறது.மேலும் அது இரவு வாழ்க்கைக்கென தன்னை தகவமைத்துக்கொள்கிறது .
அந்நகரில் எந்நேரமும் எங்கு சென்றாலும் சுடச்சுட உணவு கிடைக்கும். shift போட்டு கடைகள் அங்கு இயங்கும். சாலையோர இட்லிக் கடைகள் அங்கு பிரபலம். இரவு 6 மணியிலிருந்து 10 மணி வரை சில இட்லிக் கடைகள் இயங்கும், பிறகு இரவு 10 மணியிலிருந்து இரவு 2, 3 மணி வரை சில கடைகள் இயங்கும். வேறு சில கடைகள் இரவு 3,4 லிலிருந்து ஆரம்பித்து காலை 6 மணிவரை மற்றும் சில கடைகள் இயங்கும். இவ்வாறாக மதுரை தன்னை தேடி வருபவர்களை எந்த ஒரு சுழிப்பும் இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும்.


நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்பொழுது தனிமையில் படிப்பதற்காக எங்களுடைய டியுசன் சென்டரிலயே என் நண்பன் மீராவுடன் தங்கி படிப்பதுண்டு. அந்த டியுசன் சென்டரில் பேய் இருப்பதாக ஒரு புரளி உண்டு. அதை எங்கள் அம்மாவிடம் கூறியதிலிருந்து, எங்கள் அம்மா என்னை டியுசன் சென்டரில் இரவு வெகு நேரம் தங்க அனுமதிக்கமாட்டார். எப்படியாகிலும் வீட்டிற்கு வந்து விட வேண்டும் என்பார். அதனால் எனக்கு தூக்கம் வரும்வரை படித்து விட்டு படுக்க சாமத்தில் வீட்டிற்க்குச் செல்வேன். அப்பொழுது அந்த ஊரே நான் பகலில் பார்த்தது போல் இருக்காது. பேருந்து நிறுத்தத்தில் நான்கைந்து ஆட்டோக்கள் நிற்கும். அவையும் இரவிற்கு என்றே ஒட்டப்படும் ஆட்டோக்கள். அந்த ஆட்டோ ஓட்டுனர்களை பகலில் காண முடியாது. இரண்டு மூன்று போலீஸ் காவலர்கள் நிற்பார்கள். பகலில் பார்க்கும் காவலர்களுக்கும் இரவில் பார்க்கும் காவலர்களுக்கும் ஏதோ மிகப் பெரிய வேறுபாடு இருப்பதாகவேத் தோன்றும். இரவில் அவர்கள் எப்பொழுதும் சந்தேகக் கண்கொண்டே பார்ப்பார்கள். நடுச் சாமத்தில் மிதிவண்டியில் செல்லும் என்னைப் போன்ற இரண்டுகெட்டான் வயசுப் பயல்களைக் கண்டாலே நிறுத்தி விசாரிப்பார்கள். அவர்களிடம் புத்தகத்தை காட்டி படித்துவிட்டு வருகிறேன் என்றால் மரியாதையுடன் அனுப்பி வைப்பார்கள்.

அப்படி ஒரு நாள் படித்துவிட்டு இரவில் என் வீட்டிற்கு சென்றேன். செல்லும் வழியில் ஒரு தேநீர்க் கடையில் தேநீர் அருந்தலாம் என்று நினைத்து தேநீர் ஒன்று சொன்னேன். அப்பொழுதான் கவனித்தேன், கடையிலிருந்த பெரும்பான்மையோர் குடித்திருந்தனர். அப்பொழுது அந்த கடையில் நம் ராமாயணம் கதைகளில் வரும் ராட்ட்சசி போன்று 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தலையெல்லாம் விரித்துப் போட்டுக் கொண்டு நின்றிருந்தார். அந்த அகால நேரத்தில் நான் ஒரு பெண்மணியை மற்ற ஆண்களுக்கு நிகராக அங்கு அப்படி எதிர்பார்க்கவில்லை. அத்துடன் அதற்க்கு மேலாக அவர் குடித்திருந்தார். என்னைப் போன்ற ஒரு பையனையும் அந்த நேரத்தில் அவரும் எதிர்பார்க்கவில்லை போலும். அவர் என்னிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். நான் ஏற்க்கனவே சற்று பயந்து தான் இருந்தேன். ஒவ்வொரு கேள்வியையும் கேட்டு விட்டு அட்டகாசமாக சிரிக்க வேறு செய்தார். நான் ரொம்பவே பயந்துவிட்டேன். வீட்டிற்கு வந்த பிறகும் உறக்கம் பிடிக்கவில்லை.
இவ்வாறாக ஒரு சின்னஞ் சிறு பிராணியைக்கூட அந்த மொரட்டு இரவு விட்டுவைக்கவில்லை .

Friday, April 23, 2010

மழை தரும் நாட்கள் அற்புதமானவை !!!

நீரின்றி அமையாது உலகு

எவ்வளவு அருமையான வார்த்தைகள். நீரால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் .

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.


மழை பெய்யாமல் மக்களை வதைப்பதும், அதுவே பெய்து அவர்கள் துன்பம் தீர்ப்பதும் மழையே ஆகும் .

நீரைப் போல் உலகில் வரவேற்க்கப்படுவதும் எதுவும் இல்லை வெறுக்கப் படுவதும் எதுவும் இல்லை.

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.


உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.


உலகில் அளவான அளவில் இருக்கும் போது அது அமிர்தமாக கருதப்படுகிறது. அதுவே அளவுக்கு மீறும் போது வெறுக்கவும்படுகிறது.

மழை தரும் நாட்கள் மிக அலாதியானவை. அதுவும் முதல் மழை மக்களுக்கு அமிர்தம்.
நீருக்கென்று வடிவம்,நிறம்,மணம் எதுவும் கிடையாது . அது தான் தங்கும் இடத்திற்கு ஏற்ப வடிவத்தையோ , நிறத்தையோ , மணத்தையோ பெறுகிறது. இவ்வாறாக மனிதன் தான் தங்கும் இடத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டால் உலகில் பல பிரச்சினைகள் தீரும் .

நீரானது ஒரே இடத்தில் தங்கி விட்டால் கேட்டுப் போய் விடும். அதுபோலவே மனிதனும், ஒரே இடத்தில் தங்கி விட்டால் கேட்டுப் போய் விடுவான்.

நீரானது நம் ஊரில் வளத்திற்கு உரியது மட்டும் அல்ல வழிபாட்டிற்கு உரியதும் கூட . கங்கை நீர் பெறும் அளவிற்கு மதிப்பை இந்த உலகில் எந்த ஒரு நதி நீரும் பெறுவதில்லை. இவ்வாறாக நீரானது இந்தியர்களில் இரண்டறக் கலந்தது.

எனக்குத் தெரிந்து கடலில் மிதக்கும் கப்பல்களை விட மழை நீரில் செல்லும் கப்பல்களே அதிகம். கடலில் ஒரு கப்பல் முதல் முதலில் வெள்ளோட்டம் விடும் போது ஏற்ப்படும் ஆர்ப்பரிப்பை விட மழை நீரில் செல்லும் போது ஏற்ப்படும் ஆர்ப்பரிப்பே அதிகம்.

உலகில் நீரானது தூய்மையானதாக கருதப்படுகிறது . உலகில் எவற்றையும் சுத்தப் படுத்த நீரே பிரதானம். நீர் தன்னுடன் சேரும் அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்கிறது. அதாவது நீரானது தன்னோடு சேரும் அனைத்தையும் தன் இயல்பை ஏற்கச் செய்கிறது அல்லது அவற்றின் இயல்பை ஏற்கிறது.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.

உலகில் தோன்றிய நாகரீகங்கள் அனைத்தும் ஆற்றுப்படுகைகளில்லேயே தோன்றின. மெசபடோமியா நாகரீகம் யூப்ரடிஸ், டைகிரிஸ் என்ற இரண்டு நதிகளுக்கிடையே ஏற்ப்பட்ட நாகரீகம். மெசபடோமியா என்றாலே இரண்டு நதிகளுக்கிடைய அமைந்த பகுதி என்று பொருள். சிந்து சமவெளி நாகரீகம் சிந்து நதிக்கரையிலும், எகிப்திய நாகரீகம் நைல் நதிக்கரையிலும் ஏற்ப்பட்டவை. இவ்வாறாக மனித நாகரீகங்களை வளர்த்தவை நதிகளே.

மழை தரும் நாட்கள் அற்புதமானவை.எனக்கு எவரையும் சட்டை செய்யாமல், ஏன் மழையையே சட்டை செய்யாமல் மழை நீரில் நனையப் பிடிக்கும். எவர் கைபடாத, இன்னும் மண்ணைச் சேராததால் எந்த ஒரு தன்மையையும் ஏற்காத அந்த தூய்மையான மழை நீரில் நனையப் பிடிக்கும்.

மழை தரும் நாட்கள் அற்புதமானவை.மழை எனக்கு அந்நியமாகத் தோன்றவில்லை. அது என்னுடன் ஒன்றோடொன்று கலந்ததைப் போல் பிடிக்கும். மழை தரும் சிநேகம் அற்புதமானது. மழையன்றி வேறு எந்த ஒரு சிநேகமும் அவ்வளவு அன்னியோன்யமாகவோ அல்லது தூய்மையானதாகவோ தெரிவதில்லை.

மழை தரும் நாட்கள் அற்புதமானவை. மழை வீட்டைக் கழுவி விடுகிறது, மாட்டை கழுவி விடுகிறது , ஆட்டைக் கழுவி விடுகிறது , ஏன் சின்னச் சிறு புல் பூண்டைக் கழுவி விடுகிறது. மழைக்கடுத்து அனைத்தும் அழகாய்த் தோன்றுகின்றன.

மழை தரும் நாட்கள் அற்புதமானவை. பெரு மழை பெய்யும் போது வீட்டிற்க்குள் அமர்ந்து கொண்டு அந்த சூறைக் காற்றை சன்னல் வழியெப் பார்க்கப் பிடிக்கும். எவற்றையும் தன்னுடன் அடித்துச் செல்வது போல் பெய்யும் அந்த சூறைக் காற்று பலத்தின் உதாரணம். அந்த சூறைக் காற்று தெருவின் மூலை முடுக்கில் இருக்கும் அனைத்தையும் அடித்துச் செல்கிறது. அந்த மழையானது தன்னியல்பில் மாறி அனைத்தையும் இழுத்துச் செல்ல நினைக்கிறது.

அனைத்து இடங்களிலிருக்கும் நீருக்கும் தோற்றமும் சேர்தலும் ஒரே இடமே . மழையானது கடலில் தோன்றி கடலிலேயே சென்றடைகிறது.
மழை தரும் நாட்கள் அற்புதமானவை.

Monday, April 19, 2010

உதிரிப் பூக்கள்

சில நாட்கள் முன்பு வடபழனிக்கு செல்ல விஜயநகர் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தேன். சோதனையாக, அனைத்து D70 பேருந்துகளும் கூட்டமாக இருந்தன. எப்படியடா இதில் அவ்வளவு தூரம் செல்வது என்று எண்ணியபோதே அயர்ச்சியாக இருந்தது. அப்பொழுது நல்லவேளையாக குளிர்சாதனப் பேருந்து (AC bus பா) வந்தது. இப்பேருந்துக்கு கூட்டம் எப்படியும் குறைவாக இருக்கும் என்று நான் எண்ணியதில் இடி விழுந்தது. அந்த பேருந்துக்கும் ஒரு சனம் கூட்டம் நின்றது. நல்லவேளையாக அடித்து பிடித்து ஏறியதில் சன்னலோர இருக்கை கிடைத்தது. ஒரு வழியாக பேருந்து கிளம்பியபோது இருக்கை முழுக்க ஆட்கள் இருந்தார்கள் இன்னும் சில பேர் நின்று கொண்டுருந்தனர். நடத்துனர் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தார். குளிர்சாதனப் பேருந்தின் டிக்கெட் கட்டணம் சாதாப் பேருந்தைப் போல 5 மடங்கு. எனக்கு இதில் மிக ஆச்சரியமாக இருந்தது நடத்துனர். "சார் உள்ளே வங்க சார்" , "சார் எங்க போகணும் வடபழனியா சார், இந்த வந்துட்டேன் சார் ", "சார் சில்லறை இல்லையா சார் , பரவாயில்லை சார் நான் பாத்துக்கிறேன்." என்று ஒரு சென்னை MTC நடத்துனர் பேசுவது போலவே இல்லை. அத்தனை சார் போட்டார். கொஞ்சம் கூட சிணுங்கவே இல்லை,எரிச்சல் இல்லை ,மரியாதைக் குறைவான பேச்சு இல்லை இப்படி எதுவும் இல்லை. ஆக மொத்தத்தில் அவர் MTC நடத்துனராகவே இல்லை.


அவரை அவ்வாறாக நடக்க வைத்தது எது? கூட்டம் குறைவா, பேருந்தின் குழுமையா, இல்லை பேருந்தில் இருக்கும் அனைவரும் சற்று வசதி படைத்தவர்கள், சற்று படித்தவர்கள் என்ற எண்ணமா?. எதுவோ ஒரு நடத்துனர் எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நடந்துகொண்டார். இதற்காகவே அனைத்துப் பேருந்துகளையும் குழுமை பேருந்துகளாக மாற்றிவிடலாம்.

*********************************

நீங்கள் எங்கேனும் தொலை தூரம் செல்லும் பேருந்துகளைப் பார்த்திருக்குரீர்களா?. அத்தகைய பேருந்துகளின் முதல் இருக்கைகளை பெண்களே ஆக்கிரமித்திருப்பார்கள்.அப்பொழுதெல்லாம் எனக்குத் தோன்றும் ஒன்றுக்கொன்று நேருக்கு நேராய் பேருந்துகள் மோதிக் கொள்ளும் விபத்துகளுக்கும், பெண்கள் இப்படி முதல் வரிசையில் அமர்வதற்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா என்று? தெரிந்தவர்கள் சொல்லவும்.

*****************************

சிறு வயதில் இலையில் மீதம் வைக்காமல் தின்றபோது எங்கள் அப்பா சொன்னார், நீ இலையைத் தூக்கி எரியும் போது அதில் மீதமிருக்கும் உணவைச் சாப்பிட பிச்சைக்காரர்கள், காகம், நாய் அழகில் ஜீவராசிகள் காத்திருக்கும். அவர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது. அதனால் எப்பொழுது சாப்பிட்டாலும சிறிது மீதம் வை என்றார். அன்றிலிருந்து இன்று வரை மீதம் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

வேலை தேடிய நாட்களில் ஒருநாள் நானும், என் நண்பன் ஆனந்தபாபுவும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுகொண்டிருந்தோம், எப்பயும் போல இலையில் சிறிது மீதம் வைத்தேன். அதற்க்கு பாபு சொன்னான் "இவ்வளவு நல்லவனா இருக்க, உனக்கு ஒரு வேலை கிடைக்க மாட்டேங்குதேடா! " என்றான். அன்றைக்கு ஆரம்பித்த குழப்பம் "இந்த உலகம் நல்லவர்களுக்கானதா இல்லை வல்லவர்களுக்கானதா ?" இன்றும் தீரவில்லை.

அப்பாவிற்கு கொள்ளி வைத்துவிட்டு வந்து சாப்பிட நானும் மதுவும் உட்கார்ந்தோம். இலை போட்டு பரிமாறிய சித்தி சொன்னார், இனிமே எப்ப சாப்பிட்டாலும், சாப்பிடுவதற்கு முன்னாடி அப்பாவிற்கு கொஞ்சம் சாதம் எடுத்து வைக்கணும் என்றார். அன்றிலிருந்து இன்றுவரை இலையில் சாதம் வைக்கிறேன் அப்பாவிற்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் சேர்த்து!.

*******************************

அனைத்து வேலைகளையும் மதுவின் தலையில் ஒப்படைத்ததால் சனி, ஞாயிறு எல்லாம் இப்பொழுது உண்டு,உறங்கி,தூங்கி எழுந்திருப்பதக்கென்று ஆகிவிட்டது. இங்கு செல்வேந்திரனின் வரியைக் கூறுகிறேன் "செய்வதற்கு ஒன்றும் இல்லாத - இருந்தாலும் செய்யும் உசிதம் இல்லாத தினங்கள் அலாதி! அலாதி!" . ஆனால் எனக்கு சும்மா இருப்பது அவ்வளவு சௌந்தரியமாய் இல்லை. எப்பொழுதும் செய்யக் கூடிய அல்லது செய்ய வேண்டிய வேலைகள் கழுத்தைப் பிடிக்கின்றன. அப்பொழுதெல்லாம் நான் இன்று அந்த சிவனே வந்து எந்த வேலை செய்யச் சொன்னாலும் சிவனே என்றுதான் கிடப்பேன் என்று உறுதி ஏற்றுக் கொள்வேன் . ஆம் செய்வதற்கு ஒன்றும் இல்லாத - இருந்தாலும் செய்யும் உசிதம் இல்லாத தினங்களின் அலாதியை அனுபவிக்க உறுதி ஏற்றுக்கொள்வேன்.

*******************************

வளைவுகள் அதிகம் இல்லாத மலைவாசஸ்தலத்தில் கூட்டம் குறைவான பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் மலைவாசஸ்தலத்தின் குழுமையை அனுபவித்துக் கொண்டு, நமது இருக்கைக்கு cross ஆக உள்ள இருக்கையில் அமர்ந்த அதிக வளைவுகள் கொண்ட இள மங்கையை ரசித்துக் கொண்டு பயணிப்பது எவ்வளவு அலாதியாக இருக்கும்.
*****************************

8 தடவை மூத்திரம் போயாச்சு, 12 தடவை தண்ணீர் குடித்தாயாச்சு, 4 தடவை காபி குடிக்க எந்திருச்சாயாச்சு, 7 தடவை படித்த blog களையே படித்தாயாச்சு, பிறகு எப்படித்தான் வெள்ளிக் கிழமை மாலையை ஆபீஸில் ஓட்டுவது?

*****************************

IPL ஆரம்பித்ததிலிருந்தே எனக்கு அது பிடித்தமானதாக இல்லை. அதற்க்கு முக்கிய காரணம் அது ICL ஐ முழுங்கி தின்றதுதான்.எத்தனை கிரிக்கெட் வீரர்களின் வாழ்கையை அது விழுங்கியது. நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் "bond" ஐ நியூசிலாந்து அணியில் சேர்க்கவிடாமல் செய்தது. இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு BCCI ஏகபோக அழிச்சாட்டிய உரிமை கொண்டாடுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதிலும் BCCI தன்னுடைய செல்வாக்கை வெளிநாடுகள் வரை செலுத்துகிறது, "தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் " என்பது போல. நான் கிரிக்கெட்டை விட , இந்திய கிரிக்கெட் அணி இந்தியாவிற்காக விளையாடுவதை தான் விரும்புகிறேன். ஆனால் இங்கு ஒவ்வொரு பிராந்தியமாகப் பிரிந்து இந்தியாவை கூறு போடுகிறார்கள்.

******************************

வார்த்தைகளின் அழகில் உண்மையை மறந்து விடாதே என்கிறது ஒரு ஜென் தத்துவம்.

*******************************
இன்று சோதனையாக D70 ரொம்ப கூட்டமாக வந்தது. அதிலும் நான் நின்ற இடத்திற்கு அருகிலிருந்த இருக்கைகள் எதுவும் காலியாவதாக தெரியவில்லை. அப்பாடா என்கிறமாதிரி ஒரு இருக்கை காலியானது. அதற்கும் போட்டியாக ஒருவன் வந்து ஒருக்களித்தவாறு இடத்தைப் பிடித்துவிட்டான். அப்பொழுது இந்தியன் படத்தில் கிரேசி மோகன், செந்தில் தலையில் ஓங்கி கொட்டுவது போல் அவன்தலையில் கொட்டவேண்டும் என்று ஏனோ தோன்றியது.

******************************

துப்பட்டாவைக் கொண்டு கண்கள் மட்டும் தெரியும்படி மூடிக்கொண்டு செல்லும் பெண்கள் எல்லோரும் எப்பொழுதும் அழகாய்த் தெரிவது ஏன்?

Saturday, April 17, 2010

இந்தியாவின் கிரயோஜெனிக் என்ஜின் தாகம்

நேற்று முன்தினம்(15.4.2010) இந்தியா முதல் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரயோஜெனிக் எஞ்சினைக் கொண்டு உருவாக்கப்பட்ட GSLV-D3 ராக்கெட்டை ஏவியது. ஆனால் அது துரதிஷ்டவசமாக தோல்வியில் முடிந்தது. இந்தியா இதுவரை 5 தடவை GSLV ராக்கெட்டை ஏவியுள்ளது ஆனால் அவையெல்லாம் ரஷ்யாவின் கிரயோஜெனிக் எஞ்சினைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது இதுதான் முதல் முறை.

கிரயோஜெனிக் எஞ்சின் மிகப் பெரிய செயற்கை கோள்களை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்த உதவுகிறது. இதில் ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் திரவ நிலையில் எரிபொருளாகப் பயன்படுகின்றன .

கிரயோஜெனிக் எஞ்சின் முதல் முறையாக அமெரிக்காவால் 1961 ஆம் ஆண்டு சோதித்து பார்க்கப்பட்டது . அதன் பிறகு இந்த என்ஜினை சொந்தமாக தயாரித்த நாடுகள் ரஷ்யா, பிரான்சு, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே . அமெரிக்க கடந்த 25 ஆண்டுகளாக கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள மறுத்து வருகிறது. அதனுடைய எண்ணம் நாம் கிரயோஜெனிக் எஞ்சினைக் கொண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தயாரித்து விடுவோம் என்று . அமெரிக்காவின் அழுத்தத்தால் நம்முடைய நீண்ட கால நண்பனான ரஷ்யாவும் கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தை தர மறுத்துவிட்டது.

இதற்கடுத்து தான் இந்தியா தானே கிரயோஜெனிக் என்ஜினை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது. இந்தியா 1993 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. இதனை வெற்றிகரமாக ஏவிவிட்டால் உலகில் இதனைச் சாதித்த 6 வது நாடாக நாம் இருப்போம். இப்பொழுது கிரயோஜெனிக் என்ஜினை சொந்தமாக வைத்திருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

உலக அளவில் இந்திய பெருமைப்படக்கூடிய பல துறைகளில் வானியல் ஆராய்ச்சித் துறையும் ஒன்று. ISRO இதில் மிகப் பெரிய அளவில் முன்னேறியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த ஆரம்ப காலங்களில் நாம் செய்த உருப்படியான காரியங்களில் சில, அணு ஆராய்ச்சித் துறை, ISRO வை ஏற்ப்படுத்தியது போன்றவற்றைக் கூறலாம். உலகின் வானவியல் ஆராய்ச்சி, செயற்கை கோள்களைச் செலுத்துதல் மற்றும் அணு ஆராய்ச்சித் துறையை எடுத்துக் கொண்டால் இந்தியா நிச்சயம் உலக அளவில் 5 அல்லது 6 உள்ளான இடங்களை பெற்றுவிடும். அந்த அளவு நாம் இவற்றில் முன்னேறியுள்ளோம்.

இஸ்ரோவின் மூலம் நாம் பல ஆதாயங்களை அடைந்துள்ளோம். இப்பொழுது PSLV ராக்கெட் மூலம் வெளிநாட்டு செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவது ஒரு சிறந்த வியாபாரமாக ஆகிவிட்டது. 16 முறை PSLV ஏவப்பட்டதில் 14 முறை வெற்றி அடைந்துள்ளது . இது ஒரு மிகச் சிறந்த சாதனை. இதே போன்று நாம் GSLV ராக்கெட் ஏவுவதில் வெற்றி பெறவேண்டும். இதன் மூலம் இச்சாதனையை செய்த ஆறாவது நாடாக நாம் இருப்பதோடல்லாமல் மிகக் குறைந்த செலவில் மிகப் பெரிய செயற்கை கோள்களை விண்ணில் ஏவும் வியாபாரத்தில் இந்தியா மிகப் பெரிய பங்கை பெற முடியும்.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரயோஜெனிக் எஞ்சினைக் கொண்ட ராக்கெட் மூலம்தான் நாம் சந்திராயன் -II விண்ணில் ஏவப் போகிறோம். ஆகவே GSLV ராக்கெட் ஏவுதலில் நாம் வெற்றி பெற வேண்டும். இந்திய விஞ்ஞானிகள் GSLV ராக்கெட் இன்னும் ஒரு வருடத்தில் மீண்டும் ஏவப்படும் என்று கூறியுள்ளனர் . அதில் நாம் வெற்றி பெறவேண்டும். சந்திராயன் வெற்றி வெறுமனே அறிவியல் வெற்றியாக மட்டுமே இருக்கப் போவதில்லை. அதில் அரசியலும் இருக்கிறது .

சந்திரனில் ஹீலியம் அதிக அளவில் இருக்கிறது. இந்த ஹீலியம் தான் வரும் காலத்தில் ஒரு சிறந்த எரிபொருளாக இருக்கப் போகிறது. நாம் சந்திராயனில் வெற்றி பெறுவதன் மூலம் சந்திரனில் இருக்கும் ஹீலியத்தில் நமக்கிருக்கும் பங்கை உறுதி செய்யலாம் .

மேலும் கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தைக் கொண்டு நாம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையும் தயாரிக்கலாம். இதன் மூலம் நாம் ஒரு "Super Power" என்று நிரூபித்து பாதுகாப்பு சபையில் நிரந்தர அந்தஸ்து கோரலாம் .

இவ்வாறாக கிரயோஜெனிக் வெற்றியானது நமக்கு பல வகைகளிலும் வெற்றியைத் தரும் .

Monday, April 12, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே ...

"நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் "

என்று தான் சென்ற வாரம் மனம் கொதித்தது. சென்ற வாரம் 75 CRPF காவலர்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை. இந்தியா எப்பொழுதும் தீவிரவாதிகள் விசயத்தில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைப் போன்று தீவிரமாக நடந்து கொள்வதில்லை. அதுவும் உள்நாட்டு பாதுகாப்பில் காட்டும் மெத்தனம் சொல்லி மாளாது. அந்த மெத்தனம் தான் CRPF காவலர்களின் மீது நடந்த தாக்குதல். மாவோயிஸ்ட்டுகள் எந்த அளவு துணிவு பெற்றிருந்தால் CRPF காவலர்களை தாக்கும் அளவிற்கு அவர்கள் மனம் சென்றிருக்கும். மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை நாம் ரொம்ப தூரம் வளர விட்டு விட்டோம். இந்த அளவிற்கு அவர்களை துணிய விட்டிருக்ககூடாது. இதுவே அமெரிக்க காவலர்களின் மீது தாக்குதல் நடந்திருந்தால் அதன் பிறகு நடக்கும் கதையே வேற. அப்பொழுது அவர்கள் மனிதநேயம் , மண்ணாங்கட்டி நேயம் எல்லாம் பார்த்திருக்க மாட்டார்கள். தீவிரவாதிகளை அழித்து ஒழித்துருப்பார்கள்.

இந்தியா இன்னமும் தீவிரவாதத்திற்கு பாகிஸ்தானையே மட்டும் குறை கூறிக்கொண்டிருக்கக் கூடாது. சொல்லப் போனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்கும் விசயத்தில் நமக்கும் மேலே. அவர்கள் நிசமாகவே தீவிரவாதிகளை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒழிக்கிறார்களா இல்லை அமெரிக்க நிர்பந்த்தத்தின் காரணமாக ஒழிக்கிறார்களா என்பது வேறு விஷயம். அவர்கள் தீவிரவாதிகளை ஒழிக்கிறார்கள். தினமும் DAWN செய்தித்தாளில் வடக்கு வஜிரிஸ்தானில் இத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், தெற்கு வஜிரிஸ்தானில் இத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், ஓரகசையில் இத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், NWFP தீவிரவாதிகளுக்கும் , ராணுவத்திற்கும் சண்டை என்று ஏதேனும் சேதி வந்து கொண்டிருக்கும். உண்மையில் சொல்லப் போனால் தீவிரவாதிகளை ஒழிக்கவேண்டும் என்பதில் பாகிஸ்தானிற்கு இருக்கும் உறுதி கூட நமக்கு கிடையாது.

சொல்லப்போனால் காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்துவிட்டது. பீகார், சட்டிஷ்கர், மேற்கு வங்காளம், போன்ற வடக்கு, மேற்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில்தான் தீவிரவாதம் அதிகரித்துவிட்டது. முதலில் நாம் நம் காலுக்கு கீழே விஷச்செடி முளைத்து விட்டது என்பதை உணர வேண்டும். அப்பொழுதான் அதனை களைய முடியும். உலகில் மூன்றாவது மிகப் பெரிய ராணுவம் வைத்துக் கொண்டு என்ன பிரயோசனம், நம்மால் உள்நாட்டு தீவிரவாதிகளை ஒழிக்க முடியவில்லையே.

மாவோயிஸ்ட்கள் பற்றிய ஒரு அறிக்கை 2050 இல் மாவோயிஸ்ட்டுகள் இந்தியாவைக் கைபற்றிவிடுவார்கள் என்கிறது. அப்படியென்றால் நிலைமை எவ்வளவு மோசமாயிருக்கிறது என்பதை எண்ணுங்கள். நம்மிடம் தீவிரவாதிகளை ஒழிக்க திறமை இல்லாமல் இல்லை. நமக்கு இப்பொழுது உடனடி தேவை தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியான நெஞ்சம் கொண்ட ஒரு தலைமை. இல்லையேல் இந்தியாவை அந்த ஆண்டவனும் காப்பாற்ற முடியாது.